நாள் தள்ளி போனதுன்னு
நாணத்துடன் நீ சொல்ல,
நாடி பார்த்த மருத்துவச்சி
நல்ல சேதி சொன்னார்.
மூன்று மாதம் முடியும்
வரை மசக்கையினாலே – நீ
முன்னும் பின்னும்
ஓடி ஓடி வாந்தி எடுத்தாயே!
நான்கு, ஐந்து,
ஆறு, ஏழு மாதம் முடிந்ததும் - நீ
மசக்கை தெளிந்து,
வயிறும் தெரிந்து, நடையும் தளர்ந்தாயே!
மேலும், கீழும்
மூச்சு வாங்கி, மெல்ல நடந்தாயே!- உனை
முட்டி உதைக்கும்
பிள்ளைதனை சுமந்து நடந்தாயே!
ஆரிராரோ.. ஆரிராரோ…
ஆரிராராரோ… நாம்
ஆனந்தமாய் பாடிடுவோம்
ஆரிராராரோ!
சொந்தமெல்லாம்
ஒன்று கூடி நல்ல நாள் பார்த்து,
நலங்கு வைத்து,
வளையல் பூட்டி, பூச்சூடல் செய்தோம்.
பச்சை வளை, பவள
வளை, முத்து வளையல்
மஞ்சளுடன், நீல
வளை, பட்டு வளையல்..
கருப்பு வளை, சிவப்பு
வளை கங்கணங்களும்,
தங்க வளை, கல்
பதித்த வைர வளையல்களும்….
ஆரிராரோ… ஆரிராரோ..
ஆரிராராரோ…. நாம்
ஆனந்தமாய் பாடிடுவோம்
ஆரிராராரோ..
மல்லி, முல்லை,
இருவாச்சி, சாதி சம்பங்கி,
மரிக்கொழுந்தும்,
ரோஜாக்களும், செண்பகப்பூவும்,
சரம் சரமாய் கோர்த்து
தலையில் சூட்டிவிடுகின்றோம்.
வேப்பிலையைக் காப்பு
செய்து பூட்டிவிடுகின்றோம்.
கையைத் தட்டி,
கும்மி கொட்டி, பாட்டுக்கள் பாடி,
மஞ்சள் இட்டு,
திருஷ்டி சுற்றி, ஹாரத்தி எடுப்போம்.
என்ன வேணும் ஏது
வேணும்? எங்கள் கண்மணி…
இக்கணமே செய்து
தருவோம் செல்ல பைங்கிளி..
ஆரிராரோ… ஆரிராரோ..
ஆரிராராரோ…. நாம்
ஆனந்தமாய் பாடிடுவோம்
ஆரிராராரோ..
அப்பமுடன் கொழுக்கட்டை,
தேங்குழல் தருவோம்..- உன்
அடி நாக்கு ருசிக்க
ஒரு அதிரசம் தருவோம்..- சிறு
தான்யத்துடன் செய்த
இட்லி, பொங்கலும் தந்து… - உன்
ஆயாசங்கள் தீர்ந்திடவே பாயசம் தருவோம்… நீ
கேட்டதெல்லாம்
வாங்கித் தர தகப்பனார் உள்ளார். – நீ
சொன்னதெல்லாம்
செய்துதர தாயாரும் உள்ளார்.
ஓடி ஓடி வேலை செய்ய
உடன் பிறந்தோரும்,
பாசத்துடன், பாட்டி
மற்றும், அம்மம்மா, தாத்தாவும்,
அத்தை, சித்தி,
மாமன் மாமி, அனைத்து சொந்தமும்
அன்புடனே உன்னைச்
சுற்றி அணைத்திட உள்ளோம்.
ஆரிராரோ.. ஆரிராரோ…
ஆரிராராரோ! நாம்
ஆனந்தமாய் பாடிடுவோம்
ஆரிராராரோ…!
இத்தனையும் ஆனபின்னே
பத்தாம் மாதத்தில் – நீ
முத்து போலே பிள்ளைதனை
பெற்று தந்திடணும்!
ஊரைக் கூட்டி,
பேரைச் சூட்டி, தொட்டில் போடணும்! – உன்
மாமனாரும், மாமியாரும்
பார்த்து மகிழணும்!
இடைவிடாது உனது
கணவன் உங்களிருவரையும்
கண்ணுக்குள்ளே
மணியைப் போலே காத்திடல் வேண்டும்!
ஆரிராரோ.. ஆரிராரோ…
ஆரிராராரோ! நாம்
ஆனந்தமாய் பாடிடுவோம்
ஆரிராராரோ…!
ஆரிராராரோ…! ஆரிராராரோ…!