கிஷ்கிந்தா காண்டம்
பம்பைப் படலம்
பம்பைப் பொய்கையில்
மீன்விழியாள் நினைவு
வந்து வாட்டலாமோ! என்பதால்
தன்னுடலை தண்ணீருள்
ஒளித்தனவாம் வாளைமீன்கள்.
‘திருமகளைத் தேடியளிக்க
வல்லோம் அல்லோமே!’யெனத்
திருநடைக் காட்டினவாம்
வெண்ணன்னப் பறவைகள்.
குமுதமும், கமலமும்,
அன்னமும், அல்லியும்
அமுத நாயகியின்
வதனத்தை ஒத்ததுவாம்.
நீரோற்பல மலர்களெல்லாம்
நீலநிற நாயகனை
நீரிற்றோய்த்த
உலை இரும்பாய்த் தகித்ததுதாம்.
இரவுக்கால வருணனை
பூவும், பருந்தும்,
ஓய்ந்து படுத்தன.
மாவும், மரமும்,
சாய்ந்து ஒடுங்கின.
விண்ணும், மண்ணும்
கண்ணுறங்கய பின்னும்
கண்ணகல விழித்திருந்தான்
கார்முகில்வண்ணன்.
அநுமப் படலம்
விடிந்ததும்-
கடிது, நெடிது
நடந்த காளைய ரடைந்தனர்
வேடமாது விளித்த
மலையின் அடியினை.
‘வருபவர் எவரோ?
எதிரியோ?’வென வியர்த்தான்
வானரத் தலைவன்
‘சுக்ரீவனெ’ன்பான்.
.
‘நீல மால்வரை போலிருந்த வரிசிலையார்
வாலி ஏவிட வந்த
காளையரோ?’ இதை
‘நீதிநெறியுடன்,
உணர்ந்து தெளிந்து வா’வென
வாயுபுத்திரனை
ஏவினான் ‘விரைந்து போ’வென.
‘பாற்கடல் கடைகையில்
வெளிவந்த விடத்தைப்
பாராளும் பரமனே
விழுங்கிக் காத்தான்’ அதுபோல
‘இவ்விடத்து இனிது
இருமின்! அஞ்சலேன்’ என
இடையுதவி புரிந்த
அநுமன் அவ்விடம் அகன்றான்.
பிரம்மச்சாரி மாணவனாய்
வேடம் தரித்தான்,
மேருமலையன்ன புஜம்கொண்ட
ஆஞ்சநேயன்.
வெஞ்சினத்தோடு
இருந்த தவமெய்யர் இருவரையும்
அஞ்சிடாமல் வியந்து
பார்த்தான் கால்வரையில்.
'தேவரோ இவரெ'ன்று
ஐயுற்று ஆராய்ந்தான்.
‘மூவரன்றி இருவர்’
ஆதலால் தேவரல்லர்.
துயருற்று சோர்ந்துள்ள
வரிசிலையர் இருவரும்,
நோவுற்று வருந்திக்
கலங்கும் சிறியருமல்லர்.
இந்திரனை விஞ்சிடும்
அழகுடையார். - இவர்
தருமனை மிஞ்சிடும்
ஒழுக்க நெறியுடையார்
மன்மதனும் மருண்டிடும்
பொலிவுடையார் - இவர்
யமனும் அஞ்சிடும்
வீரமுடையார் – ஆதலால்
அந்தரத்து அமரர்தான்
மானிடரின் வேடமிட்டார்.
சிந்தனைக்குரிய
பொருளொன்றைத் தேடலுற்றார்.
அருமருந்தனையது
இழந்தமை நிகழ்ந்ததால்,
இருமருங்கிலும்
துலவியபடி அலைகின்றார்.
என்பவை யுணர்ந்த
அஞ்சனை மைந்தன்
அன்பினால் உருகிடும்
நெஞ்சம் கொண்டான்.
முன்னம் பிரிந்த
அனையர் தம்மை
பின்னம் கண்டதும்
மகிழ்வுடன் நின்றான்.
அநுமன் இராம இலக்ஷ்மணர்களை அணுகிப் பேசுதல்
‘நல்வரவாகுக’ வென்று
கரம்குவித்து அணுகினான்.
நல்வழியைப் பின்பற்றும்
வாயுபெற்ற நன்மகன்.
‘எவ்வழி வந்தவன்
நீ?’ யார் நீ?’ யென
இன்மொழியால் வினவினான்
தசரதனின் நன்மகன்.
‘காற்றின் வேந்தனும்,
அஞ்சனா தேவியும்,
பெற்றெடுத்த மைந்தன்,
நாமமோ ‘அநுமன்’
பரிதிச்செல்வன்
சுக்ரீவனின் காவலனாய்,
‘நீவீர் எவரெ’ன
அறியவந்த ஏவலன் நான்’
‘புலமிக்கவரைப்
புலமை தெரிதல்
புலமிக்கவர்க்கே
புலனாம்’ அதுபோல்
‘ஆற்றல், அறிவு,
அடக்கம் அனைத்தையும்
ஏற்றவன் இவனென்பது
பரந்தாமனுக்குப் புரிந்தது.
இராமபிரான் அநுமனைப் பாராட்டி, இலக்குவனிடம்
கூறுதல்
‘வில்லார்தோள்
இளைய வீர! - தாம்
கல்லாத கலையும்,
வேதமும் இல்லையென
சொல்லாலே சொல்லவல்ல
– இச்
‘சொல்லின் வேந்தன்’
யார்? பிரம்மனோ சிவனோ?
இளையோனே!
சாதாரண பிரம்மச்சர்யமன்று
இவன் உருவம்.
அச்சாணி இவனென்று
இவ்வுலகுக்குப் புரியும்.
சிக்குறத் தெளிந்தேன்
நானின்று; இன்னமும்
காணுதி மெய்ம்மை’
என்றுரைத்தான் கண்ணன்.
பின்னர் வினவினான்
‘எவ்வழி உள்ளான்
வானரத் தலைவன்?
அவ்வழி யவனை யணுகிடவே
வந்தோம்.
இவ்வழி எம்மை யெதிர்கொண்ட
ழைத்த நீ
செவ்வழி மனத்தான்
சுக்ரீவனைக் காட்டுதி’
அநுமன் இராம இலக்ஷ்மணர்களிடம் கூறிய உபசார மொழிகள்
‘ஆதரித்து எமைக்
காண அணுகினீ ரென்றால்
தீதகன்ற யாம் செய்த
தவப்பேறன்றி வேறென்ன?
வரிசிலை வீரர்காள்!
எம் தலைவன் இந்நாளில்
ருசியமலைக் குகையில்
மறைந்தபடி வாழுகின்றான்.
இந்திரப் புதல்வனாம்
இரக்கமற்ற வாலியென்பான்,
இரவிதன் புதல்வனாம்
சுக்ரீவனைப் பகைத்தான்.
மும்மை உலகையும்
காத்திடும் மூத்தோரே!
உம்மைச் சரணடைந்தோம்
நீ யெம்மைக் காத்தருள்க!
மஞ்சுநாதனே!
எம்குலத் தலைவர்க்கும்மை
யாரென்று விளம்புகேன்?’
விளக்கிடுவீரென
வினவினான் சொல்லின் செல்வன்.
இராமனின் தோற்றமுதல்
இராவண வஞ்சம் வரை
மாற்றமின்றி விவரித்தான்
வார்க்கழல் இளையவீரன்.
ஒளிவின்றி இளவல்
உரைத்ததும், நெடும்புகழினான்
நெடிது உவந்து
திருவடியில் சிரம் தாழ்ந்தான்.
‘மறைவல்ல அந்தணர்
மடிவீழ்ந்து பணிவது
மரபன்று, தருமமன்று’
பதறினான் புருஷோத்தமன்.
‘சங்குச்சக்கரம்
தரித்த திருமாலை யொத்தவனே!
கற்றுத் தெளிந்த
அந்தணர்க் குலமல்ல நான்.
சற்றுப் பருத்த
தாடையுடை வாநரர் குலத்தவனெ’ன
குற்றமற குரங்கு
வுருகொண்டு எதிர் நின்றான்.
வியந்தான் அண்ணல்
‘நாள்படா மறைகளும்,
நவைபடா ஞானமும்,
கோள்படா நிலையுமே
‘குரங்காக’ உள்ளதெனின், - இவன்
காவலனாய் பணியாற்றும்
கவிக்குலத் தரசனின்
கேண்மையை நாம்
என்னென்று சொல்ல?’
அகமலர்ந்து இவ்விதம்
சொன்ன குன்றின் சிகரத்தை
முகமலந்து நோக்கினான்
வாநரச் சிங்கம்.
‘சென்று எம்தலைவனைக்
கொணர்கிறேன் வென்றியீர்!’
என்று சொல்லி விடைபெற்றவன்
விரைந்து சென்றான்.
(தொடர்கிறது)