புதன், 4 மே, 2022

லக்ஷ்மி ராமாயணம் - ஆரண்ய காண்டம் நிறைவுப் பகுதி 14.

                                     கவுந்தன் செய்த பேருதவி

 

‘ஐயனே!

தெப்பம் இன்றி பெருங்கடல் கடப்பதை ஒக்கும்

பக்கத்துணையின்றி பகைவரை யழிக்க முயல்வது.

தீயவர் சேர்கிலாது நல்லோரைச் சேர்ந்து வாழ்ந்து

தாயினும் உதவிடும் ‘சவரி’யை அணுகிடுவீர்.

(தீயவர் – வாலி:  நல்லோர் – சுக்ரீவன், அநுமன்.)

சவரி – சபரி என்ற வடசொல்லின் திரிபு)

 

கனகவாள் நிறம் கொண்ட சுக்ரீவன் இருப்பிடத்தை

அறிந்திடுவாள் இவ் வேடர்க்குலத் தவமாது. – அவள்

செப்பிடும் வழிகளை ஏற்றிடுவீர்!

குன்றமாம் ‘ருசியமுகம்’ ஏறிடுவீர்.

(ருசியமுகம் – ருசிய பர்வதம் – சிருங்ககிரி என்று கூறுவாரும் உண்டு. ஆனால்

இது கிட்கிந்தைக்கு அருகில் உள்ள ஒரு குன்று)

 

வானரத் தலைவன் சுக்ரீவன் துணையேற்று

மானனைய பிராட்டியின் மறைவிடத்தைத் தேடுவீரெ’

வானுலகு சென்று வாழ்த்தினான் கவுந்தன். – மதங்க

முனிமலையை யடைந்தான் காகுந்தன்.


               சவரி பிறப்பு நீங்கு படலம்

 

எண்ணிய இன்பமன்றி, துன்பங்கள் ஏதுமற்று,

புண்ணியம் புரிந்தோர் வாழும் ‘மதங்காஸ்ரமம்’ தன்னில்,

தன்னையே நினைத்துவாழும் ‘சவரி’யைக் கண்டுகொண்டான்

‘இன்னது’ என்று இல்லா ஆதிமூலமாம் இராமபிரான்.

(சவரி – வேடர் குல தவமகள். மதங்காஸ்ரமத்தில் சீடர்க்கு உபசாரம் செய்பவள்)

 

அன்பின் மிகுதியினால் அருவிபோல் நீரொழுக,

பூண்டமாதவத்தால் நீங்கியதென் ஈழ்பிறவி’யென

வேண்டிக் கனி கொணர்ந்து விருந்து செய்தாளை

‘தீதின்றிருந்தனை போலுமெ’ன நலம் வினவினான்.

(சவரி விருந்து செய்த தன்மையைப் பற்றி, ‘அவள் உண்டு மீதி வைத்தவற்றை இராமபிரான் உண்டருளினான்’ என்று சிலர் கூறுவர். அதற்கு வான்மீகத்திலோ, அத்யந்த இராமாயனத்திலோ ஆதாரம் இல்லை. கம்ப நாடாருடைய நோக்குக்கும் அது ஏற்றதாகது)

 

  சவரி இராமனைப் புகழ்தலும், இராமன் உபசாரம் கூறுதலும்

 

‘எந்தையே! என்றைக்கு வருவாய் யென்றிருந்தேன்.

இன்றுதான் பூத்ததோ அப்புண்ணியம்’ வியந்தாள்.

‘அன்னையே! வழிநடை தந்த வருத்தம் தீர்த்தாய்

வாழி நீ’யென்று இருகரம் குவித்தான்.

 

சூரியன் மைந்தன் சுக்ரீவன் இருப்பிடமென

‘ருசிய முகமென்னும்’ அசைவற்ற மலைதன்னை,

ஆசிரியைபோல் அன்னவள் விரித்துச் சொன்னாள்.

தாசனாய் இராமனும் இசைந்து தெளிந்தான்.

 

தவநெறியால் தாமடைந்த யோகத்தின் சிறப்பினால்,

உடல் துறந்து மோட்சத்தை அணுகினாள்..

அன்னது கண்ட வீரர்கள் அதிசயப்பட்டனர். - அவள்

சொன்னபடியே ‘பம்பை’ பொய்கையினை யடைந்தனர்.

             (ஆரண்ய காண்டம் முற்றும்)


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக