செவ்வாய், 3 மே, 2022

லக்ஷ்மி ராமாயணம் - ஆரண்ய காண்டம் - பகுதி 11

 

                   இராவணன் தன் வேடம் நீங்கல்

 

கொப்பளித்த கோபத்துடன் கிழவனுரு களைந்தவன்.

பத்துத்தலையுடன் இருபது தோளுமாய் எதிர் நின்றான்.

இருபது கண்களும் இரத்தநிறத்தில் சிவந்து எரிந்தன.

திரண்தோள் இருபதும் பருத்துப் பெரிதாய் விரிந்தன.

 

‘விண்ணவரின் ஏவலேற்போர் வீரத்தை நீ ஏற்றிடாமல்,

மண்ணின் புழுவாம் மானிடரைப் போற்றுகின்றா’யென்று

வெகுண்டு யெழுந்தவன் பின் குழைந்து பேசினான்.

நடுக்க முற்றவள் பின் கலங்கிக் கூசினாள்.

.

‘முன்னம் எவரையும் கும்பிடக் குனியா

தங்கமகுடமாய் உனைத் தலைமேல் உயர்த்துவேன்.

இதயத்தில் உனை நான் இனிது இருத்துவேனெ’

கண்ணில் வழியும் காமத்துடன் சொன்னான்.

 

தளிர்க்கரங்களால் செவிப்பறைகளை அழுந்த அறைந்தாள்.

‘புவியொழுக்கம் அறிந்திடாத அரக்கரக் கரசனே!

காகுந்தனின் வெம்சரம் உன்மேல் வீழ்வதற்குள்

காக்கும் துணிவிருந்தால் ஓடி ஒளிந்திடெ’ன்றாள்.

 

‘வெம்சரம்’ என்றா சொன்னாய்?’ வெடித்துச் சிரித்தான்.

‘மலைமேல் தொடுக்கும் ‘பூம்கணை’ அது’வென்றான்.

'ஏற்றுக்கொள்வாயாயெனை' ஏங்கித் தொழுதான்.

திருவடி வணங்கிட மறுபடியும் விழுந்தான்.

 

‘பெருமானே! மானை வேண்டி நான் நாசமானேனோ?

இளையோனை விரட்டி நான் மோசமானேனோ?' என

பருந்தின் பிடியில் அகப்பட்ட குஞ்சுபோல்

வருத்தம் மிகுந்திட சுருங்கினாள் பஞ்சுபோல்.

 

‘விரும்பாத பெண்மீது உன் விரல்பட்டால்

சிரங்கள் பத்தும் சிதறி விழுந்திடும்’ என்று

முன்னம் பிரம்மன் விடுத்த சாபத்தால்

இப்பெண்ணைக் கரத்தால் தீண்டலைத் தவிர்த்தான்.

 

பெயர்த்தெடுத்தான் பண்ணசாலையை தரையோடு.

விரைந்தான் விண்வழி நிலம் வைத்த தேரோடு.

வியர்த்த பிராட்டியோ அயர்ந்தாள் வியப்போடு.

மயக்கமுற்று விழுந்தாள் பயத்தோடு.

 

'அறமே, தர்மமே, நியாயமே, நேர்மையே

அறிவீரோ எனக்கிழைத்த அவ நிலையை?

மேகமே, சோலையே, காடுறை தெய்வமே

ராகவனிடம் புகல்வீரோ என் கதையை?

 

மலையே, மரமே, மயிலே, குயிலே – என்

மன்னவனை அழைத்து வருவீரோ?’என

தண்ணீரைவிட்டு எடுத்த மீனாய்த் துடித்தாள்.

துடித்து எழுந்தவள் மீண்டும் விழுந்தாள்.

 

‘கள்வன் போலென்னைக் கவர்ந்து செல்கிறாயே!

வல்லவனாயின் என் மன்னவனின் வில்லுக்கு முன் நில்’என்ன

‘கொன்றென்னை அம்மானிடர் உன்னைக் கொள்வாராயின்

கொள்ளட்டும்’ என்று கொக்கரித்தான் அரக்கன்.

 

                சடாயு உயிர் நீத்த படலம்

 

                  சடாயுவின் வருகை

 

நிந்தித்த அவள் நெஞ்சம் நீரோடையாய் சலசலக்க,

‘நில்லடா! எங்கே நீ செல்கிறாய்? சொல்’என்றபடி,

பொன்மலையாம் மேருமலைபோல் பறந்து வந்தான்,

மின்னிடும் மூக்குடைய ‘சடாயு’யெனும் புள்.

 

பருத்த மரங்கள் பெயர்ந்து உடைந்தாற்போல்

பரந்த கடலும், பொங்கி யெழுந்தாற்போல்

பெருங்காற்று புயலாக வீசி யடித்தாற்போல்,

சிறகுகள் இரண்டையும் விரித்துப் பறந்தான்.

 

‘கேடுற்றவனே! என்ன தொடங்கினை நீ இன்று.

சுற்றத்தோடு நின் வாழ்வு சுட்டொழிந்திடும் திரும்பு.

பேதாய்! பேருலகப் பிராணிகளின் மாதா அனையாளை

யாதாக மனம் கொண்டு நினைந்தனை? இயம்பு.

 

உத்தமியைத் தந்திரமாய் நீ சிறையெடுத்தால்,

அத்தனை திசைகளையும் நான் மறைத்திடுவேன்.

பத்துத் தலைகளையும் பறித்து எடுப்பேன். - உன்

எந்திரத் தேரையும் எதிர்த்துத் தடுப்பேன்.

 

முத்தேவருள் மூலமுதற் பொருளாம் பரப்பிரும்மம்,

இத்தரை மேல் மானிடராய் பிறப்பெடுத்தது உன் கர்மம்.

பித்தான உன் சிந்தனையை சிதைப்பதே என் சித்தம்.

அப்பாவி அன்னையை நீ அபகரிப்பதா தர்மம்?' சீறினான்...

 

                       இராவணனின் சினம்

 

‘சுட்ட இரும்புண்ட நீர் கூட வெளிப்பட்டிடலாம்

கரும்புண்ட சொல்லுடையாள் கட்டாயம் மீள்கிலள்.

அடக்கிப் பேசி கடிது காட்டு அம்மானிடரை!’யென

சந்திரஹாச வாளினின்றும் நெருப்பு உக சிரித்தான்.

 

அன்னமன்ன அனையாளோ முன்னைவிட பயந்தாள்.

‘அஞ்சேல் அன்னையே! அரக்கரின் கருவுடல் முழுதும்

மிஞ்சாமல் பிய்ந்திடும்! வருந்தேல் இனிமேல்.’

வாஞ்சையுடன் பேசினான் தசரதனின் நண்பன்,

(இன்னும் இருக்கிறது)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக