செல் ஃபோனின் அலார்மை
ஆஃப் செய்துவிட்டு அரக்க பரக்க எழுந்தேன். நான் விமலாவோ, கமலாவோ, தர்ஷினியோ, வர்ஷினியோ…..
யாராய் இருந்தால் என்ன? உங்களைப் போன்ற ஒரு இல்லத்தரசி. போதுமா!
பல் தேய்க்கும்
போதே.. இன்னிக்கு என்ன டிஃபன் பண்ணலாம் என்ற எண்ண ஓட்டம் மெல்ல தோன்றி, பூதாகாரமாய்
மனதை ஆக்ரமித்துக்கொண்டது. என்னதான் டிஃபன் இருக்கு ஒலகத்துல…! இட்லி, தோசை, பூரி,
சப்பாத்தி, உப்புமா, அடை, பொங்கல்….. இதுல ஒண்ணுதானே எல்லார் வீடுகள்லயும் பிரேக்ஃபாஸ்ட்டுக்கு
இருக்கும்!
எங்க வீட்டுல 3
வித ஜெனெரேஷன்ஸ்! என் மாமியார், மாமனார், என்ற ஓல்டர் ஜெனெரேஷன், நான், என் கணவர் என்ற
மிடில் ஜெனெரேஷன், யெங்கர் ஜெனெரேஷனில் பிரைமரி ஸ்கூலில் இருக்கும் சின்ன பெண், 11
ம் க்ளாஸ் படிக்கும் பெரிய பையன் என்ற இரண்டு கிளை ஜெனெரேஷன்ஸும் உண்டு. எல்லாருக்கும்
பிடிக்கற மாதிரி ஏதாவது பண்ணியாகணுமே!
என்ன டிஃபன் பண்ணலாம்…..?
மொதல்ல இட்லி!
நேத்திக்குத்தான் அரைச்சுருக்கேன். ஓல்டெர் ஜெனெரேஷனுக்கு ‘தொட்டுக்க’ எதுவும் இல்லைன்னாலும்,
இட்லிக்கு மிளகாய் பொடி இருந்தாலே தேவாமிர்தம்தான். சட்னி, சாம்பார் இல்லைன்னா இந்த
மிடில் ஜெனெரேஷன் கொஞ்சம் சண்டித்தனம் பண்ணும். ஆனா ஸ்ருதியும், ஸ்ரேயஸும் இட்லியைத்
தொடவே மாட்டார்கள். என்னை விடுங்கள்! நான் சமயத்துக்கு ஏத்த ஜெனெரேஷன்ல சேர்ந்துப்பேன்.
பூரி சப்பாத்தின்னா….
‘ம்ம்ம்ம்ம்ம்’ பெரிசா தலைய ஆட்டுவார்கள் யெங்க்ஸ்டர்ஸ். அதுலயும் ஸைட் டிஷ் தான் இடிக்கும்.
சவுத் இண்டியன் குருமா ஸ்ருதிக்கு பிடிச்சா, சன்னா, ராஜ்மாதான் ஸ்ரேயஸுக்குப் பிடிக்கும்.
ஆனா மாமனார், மாமியாருக்கோ, பூரியும் சப்பாத்தியும் கடிச்சு, மென்னு சாப்பிட முடியறதே
இல்ல. என் கணவர் சவுத் இண்டியன் ஃபுட் பிரியர். ‘காலை வேளல யாராலயாவது சப்பாத்தி சாப்பிட
முடியுமா என்ன?’ என்று எல்லாரையும் சேர்த்துக்கொண்டு கூட்டணி அமைப்பார். பூரி அவருக்குப்
பிடிக்கும்தான். ஆனாலும் நாற்பதைக் கடந்துவிட்டவர்களுக்கு வரும் ஹெல்த் கான்ஷியஸ்னால
‘ஆயில் ஃபுட் வேண்டாமே’ என்பார்.
ஆச்சா… பூரியும்,
சப்பாத்தியும் மட்டும் பண்ணி காலக்ஷேபம் பண்ண முடியாது.
ரவா உப்புமா… !
நானும் எண்ணையை
ஊத்தி, இஞ்சி, பச்சமிளகாய், வெங்காயம், காரட், கறிவேப்பிலை எல்லாம் போட்டு ‘கமகம’ ன்னு
‘பொலபொல’ ன்னு உப்புமா கிளறுவேன். ‘அய்யய்ய….. இன்னிக்கும் உப்புமாவா!’ இது ஒருமித்த
எக்ஸ்பிரஷன். இதுல……. நான் மாமியார், மாமனாருக்காக வெங்காயம் போடாம……ஸ்ரேயஸுக்காக இஞ்சி
போடாம, வெங்காயம் போட்டு…….. ரவா உப்புமா, கோதுமை ரவா உப்புமா, சேமியா உப்புமா, சோள
ரவை உப்புமா, அவுல் உப்புமா, அரிசி உப்புமா ன்னு மாத்தி மாத்தி யோசிச்சு யோசிச்சு,
பயத்தம் பருப்பையும், மஞ்சள் தூளையும் சேர்த்து போட்டு ரவா கிச்சடி ஆக்கின்னு ஏதேதோ
தகிடுதத்தம் பண்ணினாலும் ஏகோபித்த கருத்து மாறவே மாறாது. எத்தனை பேர் இருந்தாலும்
10 நிமிஷத்துலும் கிளறி பரிமாரிடலாம்ங்கிற அந்த உப்புமாவை ஏன்தான் இப்பிடி நிஷித்தமா
நினைக்கிறார்களோ தெரியவில்லை.
சரி… அடை பண்ணலாம்னா….
காலை வேளைல ஹெவியாகி விடுவதாக கணவர் கூற, அவியல்தான் காம்பினேஷன் என்று கூறும் மாமியாரும்,
மாமனாரும், அவியல் இல்லையென்றால் நிராகரித்து விட, இந்த பசங்களும் ‘அடையா…. எனக்கு
கார்ன் ஃப்ளேக்ஸ்…. எனக்கு மேகி’ என்று குரல் கொடுத்தால்…. எனக்கு என்ன ஆச்சு….? அடை
மாவைத் தூக்கி ஃப்ரிஜ்ஜில வைக்கவேண்டியது தான்.
அப்பாடா… குக்கரில்
வைத்து, குழைய வேகவிட்டு மிளகு, சீரகம், இஞ்சி, முந்திரி போட்டு நிமிஷமா பொங்கல் பண்ணிடலாம்.
மாமனார், மாமியாருக்கு மென்று கஷ்டப்பட வேண்டியதில்லை என்றால், ‘வடை இல்லையா?’ என்பார்
என் அருமை கணவர். மிளகு போடாதே என்பாள் ஸ்ருதி. ‘இஞ்சி ஏன் போட்ட?’ என்பான் ஸ்ரேயஸ்.
என்னதான் பண்ணலாம்?
இடியாப்பம், குழி ஆப்பம் எல்லாம் பண்ணினாலும், அதை முழு டிஃபனாக ஒத்துக்கொள்ளமாட்டார்கள்.
ஒரு கல்லை போட்டு தோசை வார்க்க வேண்டும்.
அட…. தோசையை மறந்தே
போனேனே! ஆபத்பாந்தவன், அனாதரக்ஷகன் தோசை தான். ஒரு தோசை கல், தோசை திருப்பி, மாவு மட்டும்
இருந்துட்டா, என்னென்னெல்லாம் பண்ணி அசத்திடலாம்! கல்லு நடுவில் குண்டா ஊத்தினா ஊத்தப்பம்,
அது மேல ஆனியன் போட்டா ஆனியன் ஊத்தப்பம், காரட் தூவினா, காரட் ஊத்தப்பம், மிக்சட் வெஜிடெபிள்ஸ்
தூவினா வெஜிடெபிள் ஊத்தப்பம், பட்டர் ஊத்தினா….. பட்டர் தோசை, நெய் ஊத்தி மெல்லிசா
வார்த்தா…. கீ ரோஸ்ட், பொடி தூவினா…. பொடி கீ தோசை, மசால் வைச்சு மூடினா மசால் தோசை,
பனீர் தூவினா பனீர் தோசை…… அப்பா………டி! எவ்ளோ வெரைட்டீஸ் பண்ணிடலாம்.
அதோட இன்னொரு சீக்ரெட்
சொல்றேன் காதோட…. இந்த தோசை எவ்ளோ ஃப்ரெண்ட்லி தெரியுமா…? தோசையை கல்லுல ஊத்திட்டு
ஆனியன்ஸ் கட் பண்ணிக்கலாம். காரட் துருவிக்கலாம். இன்னொரு தோசை ஊத்திட்டு, எல்லா காய்கறி
குப்பையையும் க்ளியர் பண்ணிடலாம். ஃப்ரிஜ்ஜில் வைக்கவேண்டியதெல்லாம் வச்சு, வேலையை
முடிச்சுக்கலாம். ஒண்ணொண்ணா வார்த்து, சூடா போடலாம். போதும்னா வாக்கறத நிறுத்திடலாம்.
இட்லியோ, உப்புமாவோ, பொங்கலோ…. தோராயமா கொஞ்சம் ஜாஸ்தியாத்தான் பண்ணமுடியும். தோசை
ரொம்ப வேஸ்ட் ஆகாம பண்ணிடலாம். என்ன… தோசை கல்ல கொஞ்சம் பழக்கிக்கணும். இல்லன்னா கல்ல
விட்டு எடுக்கவே முடியாம சண்டி பண்ணி… உப்புமாவா சுரண்டி எடுக்க வச்சுடும். இப்போதான்
நான் ஸ்டிக் தோசைக்கல்லெல்லாம் வந்திருக்கே! இப்படிப்பட்ட வசதிகள் இந்த தோசைல இருக்குங்கறத
ரகசியமா வச்சுக்கணும். நமக்கு ஈஸியா இருக்குன்னு தெரிஞ்சா அந்த டிஃபனுக்கும் ஆப்பு
வந்துடும். எல்லாருக்கும் பிடிச்ச மாதிரி ஒரே கல்ல வச்சுண்டு 4 மாங்கா அடிச்சுடலாம்.
இன்னி பாடு ஆச்சு!
தோசையம்மா தோசை!
அம்மா சுட்ட தோசை!
அரிசி மாவும்,
உளுந்து மாவும்
கலந்து சுட்ட தோசை!
அப்பாவுக்கு நாலு!
அம்மாவுக்கு மூணு!
அண்ணனுக்கு ரெண்டு!
பாப்பாவுக்கு ஒண்ணு!
ஆக மொத்தம் பத்து….
தின்ன தின்ன ஆசை!
இன்னும் கேட்டால்
பூசை!