"வ்ஊ ....!' "வ் ஊ ...! என்று ஊளையிடுவது போல் அரை மணி நேரமாக அழுது கொண்டிருந்தது அந்த தெரு நாய். அந்த மாலை நேரத்தில், அச்சத்தம் நாராசமாக ஒலித்தது. வீட்டினின்று வெளியில் வந்து வாசலில் நின்று பார்த்தார் ராகவன் .
சாலையின் எதிர் சாரியில் ஒரு வெள்ளை நிற நாய் உட்கார்ந்திருந்தது. உடல் முழுவதும் புழுதிப்படலம். வெள்ளை நிறம் மங்கி ஆங்காங்கே பழுப்புத் திட்டுக்களுடன் இருந்தது.
ஊளையிடுகையில், முகத்தை கீழிருந்து மேல் நோக்கி உயர்த்தியபடி உச்சஸ்தாயியில் "வ் ஊ .....!" என்று ஒலியெழுப்பியது. பின்னர் 'தஸ்.... , புஸ் .." என்று மூச்சு வாங்கிக்கொண்டது. முக்கியது, முனகியது, பின் மீண்டும் வானை நோக்கிப் பார்த்து, வாயை பிளந்தபடி கத்தியது.
"தெருவில நாய் இப்பிடி கத்தக்கூடதுன்னு சொல்லுவாங்களே...!"
"ச்சை..! கொஞ்சம் கூட நிறுத்தாம கத்திகிட்டே இருக்கு பாருங்க..!
" விரட்டு அந்த சனியனை...!"
இப்படி பல விதமாய் விமர்சித்தபடி அத தெருவாசிகள் பலரும் அங்கு சூழ்ந்தனர்.
"ச்சூ...ச்சூ..." என்றபடி கல் ஒன்றை அந்த நாயின் மீது வீசி விரட்டினான் ஒரு சிறுவன். பயந்து போன நாய், ஓட முயற்ச்சித்து எழ முற்பட்டது. முடியாமல் மீண்டும் அழுதபடி கீழே சரிந்து 'தொப்' என்று விழுந்தது.
அப்போதுதான் தெரிந்தது, காலில் நல்ல ரத்தக்காயம் என்று. முன்னங்கால்கள் இரண்டும் வயிற்றுப்பகுதியோடு இணையும் இடத்திலிருந்து ரத்தம் கசிந்துகொண்டிருந்தது.
"ஐயோ.. பாவம் அடிபட்டிருக்கு.!'
"எவனோ இடிச்சிட்டுப் போய்ட்டான் போலிருக்கு சார்"
"வலி பொறுக்காமத் தான் கத்தியிருக்கு"
"அச்சச்சோ...! அச்சச்சோ...!
இப்படி பலரும் பல விதமாக அனுதாபப்பட்டனர்.
அப்போது சிலு சிலுவென்ற குளிர் காற்றுடன் லேசாக தூற வேறு ஆரம்பித்தது.
"அய்யய்யோ... மழை வருதே! காய்ந்த துணியை எடுக்க வேண்டுமே!"
"காத்து வேற வீசுது, கரண்ட் போறதுக்குள்ள வேலையை முடிக்கணும்."
"கடைக்குப் போகணும்! கிளாசுக்குப் போகணும்!"
இப்படி கூறி, அனைவரும் அவரவர் வேலையை கவனிக்கச் சென்றுவிட,
ராகவன் மட்டும் நாயைப் பார்த்துக்கொண்டே நின்றிருந்தார்.
இதற்குள் நாய் வேறு விதமாக முனக ஆரம்பித்தது. தலையை சிலிர்த்துக்கொண்டது. உடலை குலுக்கிக் கொண்டது. மீண்டும் கதறியது.
'அடடா...! நாய்க்குக் குளிருகிறது போலிருக்கு" என்று எண்ணியபடி தன் வீட்டிலிருந்து பழைய போர்வை ஒன்றை எடுத்தார் ராகவன்"
இதற்குள் மழை வலுக்க ஆரம்பித்தது.
"சாரதா! இந்தக் குடையைப் பிடித்துக்கொண்டு என்னோடு வா" என்று 8ம் வகுப்பு படிக்கும் தன் மகள் சாரதாவையும் அழைத்துக் கொண்டு நாயருகில் விரைந்தார்,.
சாரதா குடையை விரித்தபடி பிடிக்க, போர்வையால் நாயை மூடி அப்படியே சுருட்டி, லாகவமாக தூக்கி, அருகில் இருந்த டீக்கடை வண்டியின் அடியில் உட்கார்த்திவிட்டார். சற்று நேரம் அங்கேயே நின்றிருந்தார். நாயின் முக்கல் சற்று குறைந்தாற் போலிருந்தது.
"வா..! அதுக்கு பால், பிஸ்கெட் ஏதாவது சாப்பிட எடுத்துவருவோம்" என்று கூறிக்கொண்டே இருவரும் வீடு நோக்கித் திரும்பி நடக்க எத்தனிக்கயில்தான் அந்த விபரீதம் நடந்தது.
வேகமாக வந்த பைக் ஒன்று சாரதா மீது மோதிவிட்டு, சீறிப்பாய்ந்தபடி நிறுத்தாமல் கூடச் சென்றுவிட்டது. கொட்டும் மழையில் 'வீ ல்'லென்று கத்தியபடி நிலைதடுமாறி விழுந்த சாரதா துடித்தாள் - தவித்தாள். செய்வதறியாது விழித்தார் ராகவன். நிமிட நேரத்தில் நிகழ்ந்தது என்ன என்றே புரியாமல் சற்று நேரம் திகைத்துப்போனார். உடனே, சுதாரித்துக்கொண்டு அந்த வழியே வந்த ஆட்டோவை நிறுத்தி, குழந்தையை ஆட்டோவில் அமர்த்தினார்.
இதற்குள் இருட்டத் துவங்கியிருந்தது.
மீண்டும் தெருவாசிகள் பலரும் குழுமிவிட்டனர் .
ராகவன் வீட்டிற்குள் ஓடி, தன் மனைவியையும் அழைத்துக்கொண்டு, பீரோவிலிருந்து பண நோட்டுக்கள் சிலவற்றை பர்சில் திணித்துக்கொண்டு, வீட்டைப் பூட்டிவிட்டு ஆஸ்பத்திரிக்கு விரைந்தார்.
சாரதாவின் உடலில் பல இடங்களில் அடி பட்டிருந்தது. நல்லவேளையாக முகத்திலோ, தலையிலோ அடியேதும் படவில்லை. இருந்தாலும், மூன்று இடங்களில் தையல் போடும்படி இருந்தது. ஆஸ்பத்திரிக்கும் வீட்டுக்குமாக அலைந்துகொண்டிருந்ததில் ராகவன் நாயை பற்றி மறந்தே போய்விட்டார்.
மூன்று நாட்களுக்குப் பிறகு டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு வந்த உடனேயே நாயின் நினைவு வந்துவிட்டது அவருக்கு.
"அடாடா...! நாயை மறந்தே போய்விட்டோமே! எப்படி இருக்கிறதோ" என்று எண்ணியபடி வாசலூக்குப் போனார்.
பக்கத்துவீட்டு அருண் நண்பர்களுடன் வாசலில் விளையாடிக்கொண்டிருந்தான்.
"அருண்! நாய் எங்கே.... காணோமே இங்க....! சரியாயிடுச்சா அதுக்கு?" என்று பதட்டத்துடன் சரமாரியாக வினவினார்.
"இல்ல சார்! செத்துபோச்சு அதால நடக்கவும் முடியலே. கத்தி கத்தியே களைச்சுப் போய்டும். டீ கடைக்காரங்க கடை போடணும்னு வண்டிய நகர்த்திப் போட்டுகிட்டாங்க. கடைக்கு வரவங்க பன்னோ, பிஸ்கட்டோ போட்டாலும் அதால சாப்பிட முடியலே. பலர் அதோட கத்தல் தாங்காம விரட்டிகிட்டே இருந்தாங்க. ரெண்டு நாள் உயிரோட இருந்தது, நேத்து காலையிலதான் செத்துபோச்சு. முனிசிபாலிட்டில எடுத்துட்டுப் போய்ட்டாங்க" என்றான் அருண்.
"சொரேர்" என்றது ராகவனுக்கு.
இதே இடத்துல சாரதா அடிபட்ட உடனே, - கொட்டுற மழையிலேயும் டாக்டர் கிட்ட கூட்டிட்டுப் போனோமே! அந்த அக்கறையை நாய்க்குக் காட்டலியே....! சுயநலமாய் இருந்திருக்கிறோமே....! குற்ற உணர்ச்சி .குறுகுறுத்தது
'நாய் டக்டர் கிட்ட தூக்கிட்டுப் போயிருக்கலாமோ! லயன்ஸ் க்ளப், ரோட்டரி க்ளப், முனிசிபாலிட்டி இப்படி யாருக்காவது போன் பண்ணியிருக்காலமோ...? இப்படியான எண்ணங்கள் ராகவனின் மனதில் பொங்கி எழுந்தது.
வெவ்வேறு 'மெய்'யில் உயிர் இருந்தாலும் உயிர் என்பதன் மதிப்பு 'மெய்'யாலும் சமம் தானே. 'சமமல்ல' என்பதுபோல் நடந்துகொண்டதற்கு வெட்கப்பட்டார் - வேதனைப்பட்டார் ராகவன்.