வெள்ளி, 4 நவம்பர், 2016

என் இரண்டாவது பெண் சௌரபியின் ஆண்டுநிறைவு பாடல் - .வெண்ணிலவே! வெண்ணிலவே!..

கண்மணியே, பொன்மணியே......
கட்டித்தங்க ராஜாவே.....
பட்டுத் தாமரைப் பூச்செண்டே! - அந்த
ஆகாயத்தில் மின்னும் நட்சத்திரம் கொண்டு
பிரம்மன் உன்னைப் படைத்தான்!
                                                            (கண்மணியே! பொன்மணியே!)

இந்தப் பொன்னாளில் உங்கள் அன்னை நான்
எந்தன் முத்தான ஆசைகள் சொல்லிடுவேன்!
ரெண்டு ரோஜாக்கள் தந்த இறைவனுக்கு
ஆயிரம் நன்றிகள் சொல்லிடுவேன்!
கண்ணே! பொன்னே!
பாடங்கள் படித்தே நீ                    
பட்டங்கள் பெற வேண்டும்..  
பாட்டுக்கள், ஆட்டங்கள்
பரிசுகள் பெறவேண்டும்!
உலகத்து கலைகள் அனைத்திலும் தேர்ந்து
ஜோராய் நீ விளங்கவேண்டும்!
                                                            (கண்மணியே, பொன்மணியே!)

பாரெங்கும் பறந்தே நீ
பூவாய் சிரிக்க வேண்டும்!
பேரோடும் புகழோடும்
பண்பாய் இருக்க வேண்டும்!
அதை எண்ணி எண்ணி...
கனவினில் மிதக்கிறேன்.
                         (பாரெங்கும்)
கண்ணே!.... பொன்னே!.....
பூலோகம் எங்கெங்கும்
தேடித் பார்த்த பின்னும்
கும்பகோணம் sisters போல்
எங்கும் இல்லை என்றே
உலகினில் அனைவரும்
உங்களை என்றும் பாராட்ட வேண்டும் அம்மா!
                                                                (கண்மணியே, பொன்மணியே)

வியாழன், 28 ஜூலை, 2016

தரங்கிணி நாத்தனார் தீபாவின் பையன்கள் வ்யோம், ரித்விக் பூணலுக்கு 'அழகே.. அழகு' மெட்டில் எழுதிய பாடல்.

அழகோ... அழகு...!
எல்லாம் அழகு..!
வ்யோமும், ரித்வியும்
அழகோ... அழகு...!
வேஷ்டி மட்டுமா பட்டில்...? - துண்டும்
பட்டில் இடையில் கட்டி...
நெற்றி நிறைய வெள்ளை - விபூதி
பட்டை பட்டையாய் தீட்டி....
புதுவிதமாகவே மேக்கப் போட்டு...
விதவிதமாகவே மாலைகள் சூட்டி...
பூணல் கல்யாண வைபோகம் இங்கே...
வ்யோமும், ரித்விக்கும் ஹீரோக்கள் இங்கே...!
கமதநிஸா.. கரிசா.....
கமதநிஸா... நிரிஸா ...

வேதமந்திரங்கள் ஒலித்திட....
ஹோமதூபமும் சூழ்ந்திட...
நாதஸ்வரமும் கேட்டிட...
மேளசத்தமும்  முழங்கிட....
சிறுவர்கள் கூடிக்களித்திட
அனைவரும் பேசி மகிழ்ந்திட
உறவினர்களும் கூடிட
பெரியோர்கள் ஆசி வழங்கிட
மகிழ்ச்சி வெள்ளம் எங்கும்
பெருகி பாய்ந்து ஓட....
ரித்விக் வ்யோமும் வாழ்க!
வாழ்க! வாழ்க! வாழ்க!

கமதநிஸா கரிஸா..
கமதநிஸா  நிரிஸா !
                    (அழகோ! அழகு!)

அபி - சித்தார்த், தங்கள் பையன்கள் ஸ்ரீவத்சனுக்கும், ஸ்ரீசரணுக்கும், மற்றும், சித்தார்த்தின் அண்ணா தன் பையன் ஸ்ரீநிகேதனுக்கும் ஜூன் 9, 10 தேதிகளில் நிகழ்த்திய உபநயனத்தில் பாடிய பாடல்.'மாலை சாற்றினார்' மெட்டு.

பூணல் கல்யாணம்! - மும்மூர்த்தி
பூணல் கல்யாணம்!
ஸ்ரீநிகேதன், ஸ்ரீவத்சன், ஸ்ரீசரணின் கல்யாணம்...
                                             (பூணல் கல்யாணம்)

வேத மந்த்ரமும், -சூழும்
ஹோம தூபமும்,
பாதுகாத்து, பேணிகாத்து
பக்கபலமாய் நின்றிடும்...(வேத)
மார்பினை சுற்றிவரும்
முப்புரிநூல் தாத்பர்யம்.
                                      (பூணல் கல்யாணம்)

காயத்ரி மந்த்ரம் - நித்ய
சந்தியாவந்தனம்!
பாரம்பரிய சின்னம் - இதை
பெருமையோடு நோக்கணும் (காயத்ரி)
தேவர்கள் ஆசியும்,
உறவுகளின் வாழ்த்துடனும்
                                     (பூணல் கல்யாணம்)



திங்கள், 4 ஜூலை, 2016

மகுடாபிஷேகத்திற்கு ஒரு மகிழமலர்ச்செண்டு. - திரு.வெ .கோபாலனின் 80 ம் ஆண்டு பிறந்த நாள் விழாவில் வாசித்தது.

அரங்கிலுள்ளோர் அனைவரையும்
அடக்கத்துடன் வணங்குகின்றேன்!  

கலைத்துறைகள் பலவற்றில்
காலூன்றி சேவையாற்றும்
மகத்தான மாமனிதனுக்கு -
மகுடம் சூட்டி மகிழ்ந்திருக்கும்
ஆன்றோர்கள் அவைதனிலே,
அணில்குஞ்சு நான் வந்து,
இயன்றவரை என் முதுகில்
மணல் சுமக்க விழைகின்றேன்!

தமிழ் பணிகள் செய்துவரும்
தலைசிறந்த குடிமகனின்
அறிமுகம் கிடைத்ததற்கே - நான்
முகம் மலர்ந்து போகின்றேன்! - அவரின்
தொண்டினைப் பற்றியெல்லாம் இதுகாறும்
துல்லியமாய் எடுத்துரைத்தீர் - நான் அவரின்
பண்பினைப் பற்றி மட்டும்
பணிவாகக் கூறுகின்றேன்!

பதவி ஓய்வு பெற்றபின்
சாய்வு, தொய்வு ஏதுமின்றி
கலைப்பணியே கடமையென
கண்ணியமாய் வாழுகின்றார்.
எழுத்துச் சரத்துக்குள் எண்ணிலடங்கா
எண்ணங்களை ஏற்றிவைத்து
வலைத்தளத்தை வடிகாலாய்
வடிவமைத்துக் கொண்டுள்ளார்.

அவரோடு உரையாடுகையில்,
கருத்துச் செறிவோடு
கணக்கற்ற செய்திகளும்,
வருடக் குறிப்போடு
வரலாற்று நிகழ்வுகளும்,
உணர்ச்சிப் பெருக்கோடு
உதிரும் கவிதைகளும் - என்
சிற்றறிவுக்குள்  செல்லமுடியாமல்
சிக்கித் தவித்ததே உண்மை!

எளிமையின் உருவமவர்!
எளிதில் பிறர்க்கு உதவுபவர்!
சிந்தனை செய்வதில் செம்மல்!
சமூக சீர்திருத்த ஆர்வலர்!
அறிவுச் சுரங்கம்!
அள்ளக் குறையா அட்சயபாத்திரம்!
கற்பனையின் உச்சம்!
காருண்யத்தின் விருட்சம்!

கதை, கட்டுரை, நாடகங்கள்
இலக்கியம், வரலாறு, நாட்டியங்கள்
இவையெல்லாம் அவரின் சுவாசங்கள்!
அவற்றிற்கெல்லாம் நேசமாய் என் வந்தனங்கள்!
விழா நாயகனாம் திரு.கோபாலனின்
வானுயர்ந்த செயல்திறனை,
கார்மேகம் சூழ்ந்துவந்து
நீர்துளியால் வாழ்த்தட்டும்!
வான் மீதிருந்து தேவர்கள்
வாழ்த்துப்பா பாடட்டும்!

ஒரு மலருக்குச் சிறப்பு - அதன்
நிறமும், மணமும்.
கடலுக்குச் சிறப்பு - அதன்
அலையும், ஆழமும்.
மலையின் சிறப்பு - அதன்
உயரமும், சிகரமும்.
தஞ்சையின்  சிறப்பு - அதன்
பெரியகோவிலும்,
வெ.கோபாலனின் அரும்பெரும் தோண்டும்! - ஆம்
தஞ்சையின்  சிறப்பு - அதன்
பெரியகோவிலும்,
வெ.கோபாலனின் அரும்பெரும் தோண்டும்!

வாழ்க அவரின் பணி!
வளர்க அவரின் தொண்டு!

நன்றி வணக்கம்!







வியாழன், 30 ஜூன், 2016

வலையில் சிக்கி........ (sowrabhi's idea and written by me)

     நான் இப்போது எங்கோ ஒரு இருட்டு அறையில் அடைக்கப்பட்டுள்ளேன். கண் சிமிட்டும் நேரத்திற்குள் அந்தக் கடத்தல் நடந்து விட்டது. எனக்கு ஒன்றுமே புரியவில்லை. எப்படி நடந்தது..? 'ஸ்கூலிலிருந்து வீட்டிற்கு நடந்து போய்க் கொண்டிருந்தேன்.....! அருகில், மிக அருகில் அந்த கார் வந்து நின்றது. அதிலிருந்து இறங்கிய முரட்டு ஆள் ஒருவன் என்னை லாகவமாக காருக்குள் தள்ள..... மற்றொரு கடா மீசை ஆள் என் வாயைப் பொத்த...அப்பப்பா... இப்போது கூட என் இதயம் 'படபட' வென அடித்துக்கொண்டிருக்கிறது. என்னால் பிரமிப்பிலிருந்து மீள முடியவில்லை.
     அப்பா, அம்மாவுக்குத் தெரியுமா..? என் பிரண்ட்ஸ் பூஜா, சுமா, பிரேம், கௌஷிக், மாலினிக்கெல்லாம் நான் இங்கே வலையில் சிக்கிய மான் குட்டிபோல அடைத்துவைக்கப்பட்டுள்ளது தெரியுமா...?
    அய்யய்யோ..! என்ன செய்வேன்..? கடவுளே! ஒரு வழிகாட்ட மாட்டாயா...?என்று மனதிற்குள் புலம்பியபடி சுற்றும் முற்றும் பார்க்கிறேன். இப்போது இருட்டு கண்களுக்கு சற்று பழகிவிட்டது.
    நிழல் போல் ஒரு உருவம் நகர்வது அங்கிருந்த ஜன்னல் வழியே தெரிகிறது. மூச்சை அடக்கிக் கொண்டு ஜன்னலையே பார்க்கிறேன். ஆம்! யாரோ ஒருவன் இப்படியும், அப்படியும் நடந்து கொண்டிருக்கிறான். எனக்கு காவலுக்கு இருக்கிறான் போலுள்ளது.
     ஏதாவது ஐடியா தோன்றுகிறதா என்று அவனையே பார்த்துக்கொண்டிருக்கிறேன்.
     அட! அது என்ன அவன் கையில் பளபளப்பாக ஏதோ தெரிகிறதே! ஆமாம்! நான் நினைப்பது சரிதான். அது செல்போன் தான்! என் மூளை படு வேகமாக செயல்பட ஆரம்பிக்கிறது. எப்படியாவது அந்த போனைக் கைப்பற்றவேண்டுமே...! என்ன செய்யலாம்?
     உடனே! 'தண்ணீர், தண்ணீர்.... ஒரே தாகமாக இருக்கிறதே.... ப்ளீஸ் யாராவது தண்ணீர் கொடுங்களேன்...!" என்று குரல் கொடுக்கிறேன்.
     திடுக்கிட்ட அவன் ஜன்னல் வழியே உள்ளே பார்த்து, "என்ன...? எதற்காக சத்தம் போடுகிறாய்..? என்று அதட்டுகிறான்.
     "குடிக்க கொஞ்சம் தண்ணீர் வேண்டும்" என்று அழுவது போன்ற பரிதாபத் குரலில் கேட்கிறேன்.
    "இரு" என்று சொல்கிறான்.
    நான் அவனையே பார்த்துக்கொண்டிருக்கிறேன்.
   "இதோ! இதோ! நான் எதிர்பார்த்தபடியே கையிலிருந்த போனை ஜன்னலில் வைத்துவிட்டு தண்ணீர் எடுக்கப் போகிறான்.
    நான்--
    ஒரு நொடிகூட தாமதிக்காமல் - மிக வேகமாக - சடாரென்று பாய்ந்து சென்று - ஜன்னல் கம்பிகளுக்கிடையில் கையை நுழைத்து - கஷ்டப்பட்டு போனை எடுத்து facebook - ல் என் அகௌண்டை login செய்து 'got kidnapped, excited' என்று என் ஸ்டேட்டஸைக் கொடுத்துவிடுகிறேன்.
     அப்பாடா...! திருப்தியாக உள்ளது... கண்டிப்பாக ஆயிரத்திற்கு மேல் 'லைக்' கிடைக்கும்.
     நல்லவேளை! நெட் பூஸ்டர் போட்டிருக்கிறான்.
    அப்போது அடக்கிய மூச்சு, இப்போது நிம்மதி பெருமூச்சாக வெளிவருகிறது.
     

அறிவுப் புதிர் - 2

    கண், தலை, வாய், பல், கை ஆகிய ஐந்து சொற்களில் துவங்கும் தமிழ் வார்த்தைகளைக் கூறவேண்டும்.
   'கண்'  எனில்  உடல் உறுப்பான கண்ணுடன் தொடர்பில்லாத வார்த்தைகளாக அவை இருக்க வேண்டும்.
   (எ .கா) கண் - கண்ணாடி என்றால் முகம் பார்க்கும் கண்ணாடி என்று கொள்ளலாம். கண்ணில் அணியப்படும் 'ஆடி' என்ற பொருளைக் கொண்டதாக இருக்கக் கூடாது. கண்ணிமை, கண்ணீர் போன்ற சொற்கள் எடுத்துக்கொள்ளப்படமாட்டாது.
    ஒவ்வொரு சொல்லுக்கும்  குறைந்தது ஐந்து வார்த்தைகளாவது கூறவேண்டும்.
    முயற்சித்துப் பாருங்களேன்!




உதாரணத்திற்கு சில வார்த்தைகள். 

கண்   -    கண்டம் (continent) கண்டம் (பிரச்சனை)
                  கண்டங்கத்திரி (முட்ச்செடி)
                  கண்டதிப்பிலி (கொடிவகை நீண்ட மிளகு))
                  கண்டனம்
                  கண்டிப்பு
                  கண்டாங்கி ( புடவைக்கட்டு)
                  கண்டாமணி
                  கண்ணாடி விரியன்
                  கண்ணி
                  கண்மாய்
                  கண்ணன்
                  கண்ணமுது
                  கணவர் ரிஷி.

தலை   -  தலைப்படு (தொடங்கு)
                   தலைப்பறை ( யானை முதலியவற்றின் முன் கொட்டும் பறை)
                   தலைப்பிரட்டை ( தவளைமீன்)
                   தலைப்பு (புடவை தலைப்பு)
                   கதை தலைப்பு என்பது வராது (heading)
                   தலைமுறை (பரம்பரை)
                   தலையாரி (village watchman)
                  தலைவரிசை (உயர்ந்த சன்மானம்)

வாய்  -   வாய்ப்பு
                  வாய்மை
                  வாய்க்கால்
                  வாய்தா (due date)
                  வாய்த்தல்
                  வாய்ப்பாடு
                  வாய்வு (gas)

பல்    -     பல்கலைக்கழகம்
                  பல்லக்கு
                  பல்லாங்குழி
                  பல்லாண்டு  
                  பல்சுவை
                  பல்வேறு
                  பல்லவர்
                  பல்லவி
                  பல்லி

கை   -    கைக்கிளை (ஒரு தலைக் காமம்)
                கைங்கர்யம்  (தொண்டு, service)
                கைசிகம் (ராகம்)
                கைடவன் (அசுரன்)
                கைதி
                கைது
                கைந்தலை (widow)
                கைம்பெண் (widow)
                கைலி
                கைலாயம்
                கைம்மாறு ( பிரதி, exchange)
         

               




திங்கள், 27 ஜூன், 2016

அறிவுப் புதிர் - 1

சில உயிரினங்கள் கடவுளின் வாகனமாக இருக்கும், சில கடவுளோடு தொடர்புடையவையாக இருக்கும். கடவுளையும், அக் கடவுளோடு சம்மந்தமுள்ள உயிரினத்தையும், பொருத்துங்களேன்.

1.     சிவன்                                                                       நாய்

2.     ரங்கநாதர்                                                               அன்னம்

3.     முருகன்                                                                  காகம்

4.     விநாயகர்                                                               பசுவும், கன்றும்

5.     கிருஷ்ணர்                                                             மயில்

6.     அய்யப்பன்                                                             சிங்கம்

7.     ஏசு                                                                              எருமை

8.     சனீஸ்வரன்                                                           கிளி

9.     கஜலக்ஷ்மி                                                             காளைமாடு

10.    சரஸ்வதி                                                                மூஞ்சூறு

11.    ராஜராஜேஸ்வரி                                                 கருடன்

12.    மீனாக்ஷி                                                                 புலி

13.    விஷ்ணு                                                                  யானை

14.    பிரும்மா                                                                 ஆடு

15.    எமதர்மராஜா                                                       ஆதிசேஷன்




விடைகள்.

(1  -  9)  (2  -  15)  (3  -  5)  (4  -  10)  (5  -  4)  (6  -  12)  (7  -  14)  (8  -  3)  (9  -  13)  (10  -  2)
(11  -  6)  (12  -  8)  (13  -  11)  (14  -  1)  (15  -  7)

தாயும், மகளும்

         "இந்த அம்மாவை புரியவும் இல்ல.... புடிக்கவும் இல்ல....." ராதாவின் மனதில் கோபம் கொப்பளித்தது.
          திருமணம் ஆகி 6 மாதங்களுக்குப் பிறகு இப்போதுதான் அம்மா வீட்டிற்க்கு தான் மட்டும் போய் 2 நாட்கள் இருந்துவிட்டு தன் கணவன் வீடு திரும்பி இருந்தாள்  ராதா. 2 நாட்களுமே  ராதாவுக்குப் பிடித்த சமையலாக -  வாய்க்கு ருசியாக செய்து போட்டிருந்தாள் அம்மா.
           இன்று தன் வீட்டில் புதினா சட்னி செய்து - அது அம்மா செய்திருந்ததைப் போலவே இருந்ததால், மகிழ்ச்சியோடு அம்மாவுக்குப் போன் செய்தால்..... அம்மா துளி கூட பாராட்டாமல், "அச்சச்சோ!!! ராதா.... புதினா உன் மாமியாருக்கு அலர்ஜியாச்சே....! உளுத்தம்பருப்பு தாளித்தால் உன் கணவருக்குப் பிடிக்காதே! என்கிறாள்.
            இந்த அம்மாவை புரியவும் இல்ல...... புடிக்கவும் இல்ல....!

விடுமுறைக் கொண்டாட்டம்!

         Image result for image of a family working in the garden

          இந்த சண்டே எப்படி செலிபரேட் பண்ணலாம்..? கேட்டாள் என் சின்னப்பெண்.
         ஒவ்வொரு வாரமும் ஞாயிறன்று ஏதாவது புதுமையாக செய்யவேண்டும் என் இரண்டு மகள்களுக்கும், கணவருக்கும்.  இவர்களுக்கு அன்று  ஹாலிடே! ஆனால் எனக்கு அன்று ஓவர்டைம்.
         ஒரு வாரம் பிக்னிக் போனோம். ஒரு வாரம் அவர்கள் மூவரும் சமைப்பதாகக் கூறி, சமையலறையைப் போர்க்களம் ஆக்கினார்கள். ஒரு வாரம் கோவிலுக்கு சென்றோம். ஒரு வாரம் லஞ்சுக்கு ஆர்டர் செய்து டீவி பார்த்துக்கொண்டே நால்வரும் சேர்ந்து சாப்பிட்டோம்.
        இந்த வாரம் என்ன செய்யலாம்? யோசித்துக்கொண்டிருக்கையில் பொறி தட்டியது போல் அந்த ஐடியா தோன்றியது. கணவரிடம் நான் கூற, அவருக்கும் பிடித்துப் போனதால் மகள்களுடன் குஷியாக கொல்லைப்புறத்திற்குப் போனார்.
         கொல்லையில் இரண்டு தென்னை மரங்கள் மட்டுமே உள்ளன. மீதி 10"10 இடம் சும்மா தான் இருந்தது. ரமாவுக்கும், சுமாவுக்கும் உற்சாகம் கரைபுரண்டு ஓடியது. முதலில், மண்ணில் கிடந்த கற்கள், பிளாஸ்டிக் கவர்கள், மட்டை இவற்றை அப்புறப்படுத்தினோம்.
          ரமா வாளியில் நீர் கொண்டு வந்து தெளிக்க - சுமா  உள்ளே இருந்து மண் வெட்டி கொண்டு வந்து அப்பாவிடம் கொடுத்தாள். அவர் சூரியஒளி நன்கு விழும் இடங்க்ளில் பாத்தி வெட்ட - அதற்குள் நான் வீட்டிலிருந்த மிளகாய் விதை, கீரை விதை, வெண்டை, கத்தரி, அவரை போன்ற விதைகளை எடுத்து வந்தேன். ரமாவுக்கும், சுமாவுக்கும் கொண்டாட்டம் தாங்க முடியவில்லை.
           முதலில், கீரையைத் தூவச் சொன்னேன். அதற்கு அருகில் இருந்த பாத்தியில், வெண்டையையும், அதற்கு அடுத்து கத்திரியையும், சிறு குழி செயது அதில் விதைகளை போட்டு மூடச் சொன்னேன். அவரையை பந்தலமைக்க ஏதுவான இடத்தில் ஊன்றினோம். அதற்கு அருகில் இருந்த சதுரத்தில் மிளகாயைத் தூவினோம்.
             மீண்டும் நீர் எடுத்து வந்து எல்லா விதைகளிலும் படுமாறு தெளிக்கச் சொன்னேன்.
               இதற்குள் மணி 11 ஆகியிருந்தது. பசிவேறு வந்துவிட்டது. டிபனோ, சமையலோ செயது சாப்பிடும்வரை பொறுமையில்லை. பழைய சாதம் இருந்தது அதில் சீரகத்தைக் கசக்கிப் போட்டு,சின்ன வெங்காயத்தையும், பச்சை மிளகாயையும், பொடியாக நறுக்கிப் போட்டு., தயிரையும், உப்பையும் போட்டு நன்கு தளர பிசைந்து நான் தோட்டத்திற்கு எடுத்து வந்தேன். அதற்குள் கை கழுவி விட்டு வந்த மூவரும் கையை நீட்ட, நான் ஒவ்வொருவர் கையிலும், ஒரு ஸ்பூன் சாதத்தை வைக்க..... அடடா.....அமிர்தமாக இருந்தது பழைய சோறு.
             இன்றைய ஞாயிறு இப்படிக் கழிய.... இனி எல்லா ஞாயிறும் களையெடுத்தல், நீர்பாய்ச்சுதல், நீராகாரம் உண்ணுதல் என்று கொண்டாடுவோம் என்ற தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.
         

மங்கையர் மலர் உல்லாச ஊஞ்சலில் பங்குகொண்டு எழுதிய நன்றி நவிலல்

மங்கையர் மலர் - இது
மயக்கும் மலர்!
மங்கைகள் மனம் கவர்
மணம் கமழ் மலர்!

மாலையானால் வாடிடும்
மகரந்த மலரல்ல இது!
மாதம் ஒருமுறை மலரும்
மகத்தான மலர்! மங்காத மலர்!
ஆம்!
நாள்பட நாள்பட
மணம்  கூட்டும் மகிழ மலர்!

மலரே! உனக்கு என்
சிரம்  தாழ்ந்த வணக்கங்கள்!
மலர் சார்ந்த ஆன்றோரே!
மனம் நிறைந்த வணக்கங்கள்!
ஒரு சில வார்த்தை உங்களோடு
உரையாட விழைகின்றேன்!

கோவில் நகரமாம் கும்பகோணத்திற்கு
குடி பெயர்ந்தாற்போல் குழுமி வந்தீர்!
பூஞ்சாரல் தெளித்து எம்மை
பூரிக்க வைத்திட்டீர்.!
உல்லாச ஊஞ்சல் கட்டி
உவகையாய் அமர்த்திட்டீர்!
உற்சாகப்படுத்தி  எங்கள்
உள்ளத்தை மகிழ்வித்தீர்!

அடுப்பங்கரையையும், அகமுடையானையும்
அடம் பிடிக்கும் பிள்ளையையும், அத்தனை பொறுப்புகளையும்
பாடம், படிப்பு, புத்தகத்தையும்
வியாதி, மூப்பு, வலைப்பளுவையும்
அறவே மறக்கடித்தீர்!
ஆஹா ஆஹா என
ஐம்பது முறை கூவவைத்தீர்!

colourfull கல்லூரி யின்
சிறகு முளைத்திட்ட சிட்டுப்போல
சட்டென்று மாற்றிவிட்டீர்! - எம்மை
சந்தோஷப்படுத்திவிட்டீர்!

பஞ்சாமிர்தம் போன்ற நல்ல
பல்சுவை நிகழ்ச்சி மூலம்
புதைந்துபோன எம் திறமைகளை
போற்றி வெளிக்கொணர்ந்தீர்!

அன்புவட்டம் அமைத்துத் தந்து
அரவணைத்துக் கொண்டுள்ளீர்!
நட்புவட்டம் பெருகியதால்
நன்மதிப்புப் பெறுகின்றீர்!

நன்றி!நன்றி! நன்றி! - என
உரத்துக் கூவுகின்றோம்.
உயர்த்திக் கூவுகின்றோம்.

வருக!வருக! மீண்டும் வருக என
விரும்பி அழைக்கின்றோம்!
வேண்டி அழைக்கின்றோம்!







ஞாயிறு, 26 ஜூன், 2016

'கரண்டி யுத்தம்' - சண்டித்தனம் பண்ணுவது மைசூர் பாகா, ரவா லாடுவா....? மங்கையார் மலர்.

முறுக்கிக் கொண்டு முருகன் சேர்ந்த இடம் தான் பழனி!
முறுகிப்போன இப்பதார்த்தம் சேரும் இடமோ கழுநீர்!
வாயில் போட்டால் மெல்லக் கரைந்திடும் இப்பண்டம்,
பாகு முறிந்து போனாலோ பரிகாசம்தான் பண்ணும்.
பல்லை பதம் பார்த்து 'பாறாங்கல்' பட்டம் பெரும்.
கைதவறி காலில் விழ 'கருங்கல்' என்றே கரிக்கப்படும்.
வீடுகட்ட வாங்கப்பட்ட 'செங்கல்' என்றும் சித்தரிக்கப்படும்.
நெய்யை நிறைய குடித்துவிட்டு நைய்யாண்டிதான்  செய்யும்.
அன்று முதல் இன்று வரை.......
தண்ணி (தண்ணீர்) காட்டி சண்டி பண்ணும்
ராங்கிக்காரி மைசூர்பாகு தான்.!  


யானை

இந்துக்களின் முதன்மை தெய்வமான 'விநாயகர்' யானை முகம் கொண்டவர்.

          'ஐந்து கரத்தனை, யானை முகத்தனை
          இந்தின் இளம்பிறை போலும் எயிற்றினை
          நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினைப்
          புந்தியில் வைத்தடி போற்றுகின்றேனே!
என்று விநாயகர் துதி பாடி வழிபடுகின்றோம்.


யானை ஒருமுறை குளத்து நீரில் குளிக்க இறங்குகையில் அதன் காலை முதலை ஒன்று கவ்வ 'ஆதிமூலமே' என்று கூவி யானை  இறைவனை உதவிக்கு அழைக்க, உடனே மகாவிஷ்ணு,  விரைந்து வந்து தன் சக்கரத்தால் முதலையை இரு துண்டுகளாக்கினார் என்று ஒரு புராணக் கதை உள்ளது.


குறத்தியான வள்ளியை மணம்  முடிக்க விரும்பிய முருகன், கிழ வேடமிட்டு வள்ளி இருந்த வனத்திற்குப்  போய் அவளிடமிருந்த திணை மாவை உண்ணும்போது விக்கல் ஏற்படுகிறது. உடனே வள்ளி, முருகனை ஒரு நீர்ச்சுனைக்கு அழைத்துச் செல்கிறாள். காட்டில் வாழும் வள்ளிக்கு யானை மட்டுமே பயப்படுத்தும் மிருகம் என்பதை அறிந்துகொண்டு 'யானை அண்ணா' என்று பெருங்குரலெடுத்து அழைக்க, உடனே, பிள்ளையார் யானை உரு கொண்டு அவ்விடம் வந்து, வள்ளி முருகன் திருமணத்தை நிகழ்த்தினார்.

பழமொழிகள்.

1. யானை வரும் பின்னே! மணி ஓசை வரும் முன்னே!

2. வெண்கல கடைக்குள் யானை புகுந்தார் போல

3. யானை இருந்தாலும் ஆயிரம் பொன்!   இறந்தாலும் ஆயிரம் பொன்!

4. யானையும், எறும்பும் போல.... (உருவத்திற்கு ஒப்பிடுதல்)

5. கோயில் யானை போல....( அசைந்து  மெதுவாக வருவதற்கு ஒப்பிடுதல்)

6. யானைக்கு அர்ரம்! குதிரைக்கு குர்ரம் !

7. யானை தன் தலை மேலே தானே மண்ணை அள்ளி போட்டுக்கொள்வது போல .

8. யானை கறுத்தால் ஆயிரம் பொன் பெரும்; பூனை கறுத்தால்......

9. யானை தொட்டாலும் மரணம் வரும்.

10.யானை முன்னே முயல் முக்கியது போல!

11.யானையை ஆயிரம் பொன்னுக்கு வாங்கி, இரும்பு அங்குசத்திற்கு ஏமாந்தது போல!

12. யானை வாய்க்  கரும்பும்,பாம்பின் வாய்த் தேரையும், யமன் கைக்கொண்ட உயிரும் திரும்ப வராது.

13. யானை விற்றால் யானை லாபம்! பானை விற்றால் பானை லாபம்.!

14. யானை மேல் போகிறவனை சுண்ணாம்பு கேட்பதுபோல்.

15. யானை வாய்க் கரும்பு போல

16. காட்டிலே யானையைக் காட்டி, வீட்டிலே பெண்ணைக் கொடுப்பது போல!

கடலைப் பருவம்

                       மனிதர்களின் வாழ்நாள் பருவங்களில் ' விடலைப் பருவம்' என்பதைப் பற்றிய வ்யாக்யானங்கள் அநேகம் உண்டு. உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் மாற்றங்களை சந்திக்கும் இப்பருவம், சம்மந்தப்பட்டவர்களை படாதபாடுபடுத்தும் என்பதும் எல்லோரும் அறிந்ததே! அதனால், இப்பருவம் பற்றி நான் இப்போது பேசப் போவது இல்லை.
                     
                        ஆனால், நான் பேசவிருக்கும் 'இப்பருவமும்'  விடலைப்  பருவம் போன்றே அதி முக்கியத்துவம் வாய்ந்தது என்றே நான் உணர்கிறேன். முதலில் அத்தகு முக்கியத்துவம் நிறைந்த பருவத்திற்கு ஒரு பெயர் வைத்தாக வேண்டுமே...! என்னவென்று வைக்கலாம்...? "சுடலைப் பருவம்' என்று வைப்போமா..? அல்லது 'கடலைப்  பருவம்' என்றா..? சரி... சரி.... காலம் ஓடிக்கொண்டிருக்கிறது. காலம் கடத்தாமல் 'கடலைப் பருவம்' என்றே இப்பருவத்திற்கு பெயர் வைத்துவிடுவோம்.

                      என்ன தோழிகளே...! 'கடலைப் பருவம்' நாம் இருக்கும் இப்பருவம் பற்றியதுதான்.

                     சிறு வயது முதலே, ஆடிப் பாடி, கற்பனைக் கோட்டைகள் கட்டியவாறு எதிர்காலம் என்பதை - என்னவோ எட்டிப் பிடிக்க முடியாத - ஆனால் எதிர்பார்ப்புகள் நிறைந்த பட்டாம்பூச்சியாய் பாவித்து - எட்டி எட்டிப் பிடிக்க எத்தனித்தபடி என்னென்னவோ செய்துகொண்டிருக்கிறோம்.

                    முதலில், படித்தோம்    -     பரிசுகள் பெற்றோம்!
                     பின்னர் தோழியரோடு களித்தோம்  - கதை பேசி சிரித்தோம்!
                     பிறகு மணம் முடித்தோம்  -  மகிழ்ச்சிக் கடலில் திளைத்தோம்.!

படிப்பிற்கும், திருமணத்திற்கும் இடையில்  ஒரு சிலர் பணியில் அமர்கின்றனர். பதவிப் பொறுப்பைப் பெறுகின்றனர். பணியினுடனே மணம் முடிக்கின்றனர்.

                   எப்படியோ.... மணம்  ஆனபின், புது புது உறவுகள்...! மக்கட்ச்செல்வம்...!

                    மழலைப் பேச்சு, விஷமம், விளையாட்டு என்று, கண்ணெதிரே உயிர் ஒன்று உருவாகி, வளர்வதில் பெருமிதம் கொள்கிறோம்.

                     அடுத்து, பிள்ளைகளின் பள்ளிப் பருவம் ! அப்போது நம் பள்ளிப் பருவம் மனத் திரையில் நிழலாட, நாமும் பிள்ளையோடு - பிள்ளையாய் பள்ளிப்பருவத்தில் பயணிப்பதுபோல உணர்கிறோம்.  மகனோ.... மகளோ..... அவர்களை நம் வாழ்க்கையின் பிரதிபலிப்பாக நினைக்கிறோம். அவர்களோடு சேர்ந்து மீண்டும் ஆடிப்பாடி, கற்பனைக் கோட்டைகள் கட்டியபடி..........

                     இருங்கள்! இருங்கள்!            

                   நாம் இத்தனைக் காலமாய் ஒரு விஷயத்தை மறந்தே போனோமே...!நாம் ஏறெடுத்தும் பார்க்காத 'அது' என்னவோ எட்ட எட்ட அடிவைத்து, ஏறிக்கொண்டே இருந்திருக்கிறது. ஆம்! நம் வயதைத்த்த்தான் சொல்கிறேன். அதற்குள் நாற்பதைக் கடந்துவிட்டோமே...! விருப்பமே இல்லாமல் பற்பல மாற்றங்களுக்கு ஆட்பட்டுக்கொண்டிருக்கிறோமே...!

                  இன்று நம் மகள் இளமைப் பொலிவுடன், அழகுச் சிலையாய் பரிமளிக்கையில், நம் கல்லூரி நாட்கள் நம் கண் முன்னே வந்து, 'நாம் தான் நம் எதிரில் இருக்கும் நம் மகள்' என்ற மாய எண்ணத்தை ஏற்படுத்தி விடுகிறது.

                 ஆனால்.... ஆனால்........ கண்ணாடி பிரதிபலிக்கும் நம் பிம்பமோ, பீதியளிப்பதாய் உள்ளது.

                காதோரம் வெள்ளி முடிகள் வெளிப்பட்டு மெல்ல சிரிக்கின்றன.
                கொத்துக் கொத்தாய் தலைமுடி கொட்டி ஆங்காங்கே வழுக்கை விழத்தொடங்கியுள்ளது.
                 தரையில் அமர்ந்து எழுகையில் சிரமம் தெரிகிறது.
                 மாடிப் படி ஏறி இறங்கினாலோ...... மேல்மூச்சு, கீழ்மூச்சு வாங்குகிறது.
                 வெய்யில் தகிக்கிறது...... குளிர் நடுக்குகிறது....

                ஜுரம்,தலைசுற்றல் என்று மருத்துவரிடம் போனால்....... உப்பைக் குறை! உரைப்பைக் குறை! சர்க்கரையைத் தவிர்! எண்ணையில் பொறித்ததை எந்நாளும் உண்ணாதே! உடற்பயிற்ச்சி செய்! நடை பழகு! என்ற  எண்ணற்ற கட்டளைகளை இயல்பாக அடுக்குகிறார்.

              தலைவலி என்று கண் டாக்டரிடம் போனால், 'அ, ஆ, இ,ஈ, A,B,C,D என்று படிக்கச்சொல்கிறார். நாமும் நம் பள்ளி ஆசிரியர்களை நினைவு கூர்ந்தபடி படித்தால்... அல்லது படிக்க முயற்சி செய்தால்... கிட்டப்பார்வை, தூரப்பார்வை, வெள்ளெழுத்து, புறையென்று ஏதாவது சொல்லி கண் கவசமாய் கண்ணாடியைப் பரிந்துரைக்கிறார்.

                இவை உடல் ரீதியான பிரச்சனைகள் என்றால் மன ரீதியான பிரச்சனைகளோ மிக பிரும்மாண்டமாக இருக்கின்றன.

                நம்மைவிட சற்றே மூத்த நம் கணவர்களுக்கும்  இதே பிரச்சனைகள் இருக்கிறது என்பது தெள்ளத்தெளிவாகப் புரிந்தாலும், மனம்  என்னவோ மணம்  ஆன புதிதில் இருந்தவரோடு நிகழ்கால கணவனை ஒப்பிட்டு - ஒப்பிட்டு . நிதர்சனத்தை ஏற்க மறுக்கிறது.

                குழந்தைகள் என்னடா என்றால்... நவீன விஞ்ஞான வளர்ச்சியின் ஞானம் கிடைக்கப் பெற்றதாலோ என்னவோ, 'அம்மா, உனக்கு இதெல்லாம் புரியாது' என்று கூறி நம்மை சென்ற தலைமுறையின் சின்னமாக்குகின்றனர்.

                நாம் அவர்களின் நல்ல தோழிகளாக இருப்பதாக கர்வத்தோடு நினைத்துக்கொண்டிருக்கையில் அவர்களோ......' அம்மா, என் friends முன்னாடி நீ இப்படி நடந்துக்கணும், அப்படி பேசணும், இப்படியெல்லாம் பேசக்கூடாது'
என்றெல்லாம் கூறி நம்மைத் தனிமைப்படுத்தி விடுகின்றனர்.

                ஜிமிக்கி, கொலுசு போன்ற நகைகளைப்  போட்டுக்கொள்ளலாமா? கூடாதா.....?  நாயகன் கமல் கூறுவது போல நாம் 'சின்னவளா...? பெரியவளா ...? என்ற கேள்வி அடிக்கடி அடிமனதில் எழும்பிக்கொண்டே இருக்கிறதே...!


                என்ன தோழிகளே! நான் சொல்லும் 'கடலைப் பருவம்' உங்களுக்குப் புரிகிறது தானே...? நீங்களும் இப்பருவக் கோளாறுகளை அனுபவிக்கிறீர்கள்தானே...?

                 ஒன்றும் பெரிய விஷயம் இல்லைங்க....! நாற்பதை கடந்திருக்கிறோம் அவ்வளவுதான். இருப்பினும் ' எதிர்காலம்' எதிர்காலம்'  என்றோமே அந்த எதிர்காலமே நிகழ்காலமானது புரியத்தொடங்கி நடுக்கத்தை ஏற்படுத்துகிறது.

               காலச் சக்கரம் ஏன் இப்படி குடு குடு வென்று ஓடி கலக்கத்தை ஏற்படுத்துகிறது....?

              'ஏ காலச்சக்கரமே......! கொஞ்சம் மெதுவாக சுழலமாட்டாயா....? அல்லது நீ சுழலும்படி சுழலேன் ! எங்களிடம் ஏன் உன் தாக்கத்தை ஏற்படுத்துகின்றாய்...?

Image result for free image of a wheel




Image result for images of ageing as the time passesImage result for images of ageing as the time passes
     

       

             

                  

வெள்ளி, 24 ஜூன், 2016

நெல் நாற்று

         Related image
Image result for image of a village lady with herImage result for image of a village lady with her

இன்னும் கொஞ்சம் கொளம்பு ஊத்தட்டா....?" சாதக்  குழிக்குள் குழம்பை ஊற்றியபடி கணவனின் முகத்தைக் கூர்ந்து நோக்கினாள் காமாட்சி.
              யோசனையில் ஆழ்ந்தபடி சாப்பிட்டுக் கொண்டிருந்த்தார் கதிரேசன்.
              "மருமவப் புள்ள, தங்கமணி, குழந்தைங்க எல்லாரும் சொகம்தானே ....?"
              "ம்ம் !"
              "அவ மாமியார், மாமனாரெல்லாம் நல்லபடியா இருக்காங்களா...?"
              "ம்ம் !"
              " புள்ளெங்க ஸ்கூலுக்குப் போய் வாராங்களா....?"
              "ம்ம்!"
இப்படி எல்லாக் கேள்விகளுக்கும் ஒற்றை வார்த்தையே பதிலாய் வர, காமாட்சிக்கு கலவரமாயிற்று.
கதிரேசன் சாப்பிட்டதாகப் பேர் பண்ணிவிட்டு கை கழுவ கிணற்றடிக்குச் சென்றார். 

கதிரேசன் காமாட்சியின் ஒரே மகளான தங்கமணி வீட்டிற்குப் போய் நான்கு நாட்கள் தங்கியிருந்துவிட்டு  இன்று காலைதான் வீடு திரும்பி இருந்தார் அவர்.. பகலெல்லாம் தூங்கிவிட்டார். களைப்பு போல என்று நினைத்தாள் காமாட்சி. இரவு சாப்பாடு பரிமாறுகையில் பேச்சுக் கொடுத்தாலும் பிடி கொடுத்தே பேசாதது மனதுக்கு சங்கடமாக இருந்தது. 

     "என்னவாயிற்று இவருக்கு...? ஏதும் மரியாதை கொறைவா நடந்திருக்குமோ...? அவ மாமியார், மாமனார் எதுனாச்சும் சொல்லியிருப்பாங்களோ ..? தங்கமணிக்கு கலியாணமான இந்த பதினஞ்சு வருசத்துல இதா மொதமொற  இவரு அவ வீட்டுக்குத் தனியா போயி நாலுநாள் தங்குனது . என்னாச்சோ தெரியலியே! மகமாயி! நா ஒரு ரூவா முடிஞ்சு வைக்கறேன் தாயி....!" பலவாறு குழம்பியபடி வெத்தலை செல்லத்தை எடுத்துக்கொண்டு கேணியடிக்குப் போனாள்.

     நிலா வெளிச்சமும், குளு குளு  காற்றும் ரம்மியமாய் இருந்த கிணற்றங்கரையில் கயிற்றுக் கட்டிலில், நிலாவை பார்த்தபடி மல்லாக்கப் படுத்திருந்தார் கதிரேசன். 

     கட்டிலின் விளிம்பில் அமர்ந்துகொண்டு இள வெற்றிலையைத் துடைத்து, காம்பு நீக்கி, சுண்ணாம்பு, பாக்கு, துளி சர்க்கரை வைத்து மடித்து, கணவனிடம் நீட்டியபடி மீண்டும் பேச்சை எப்படி ஆரம்பிக்கலாம் என்று எண்ணியபடி அவர் முகத்தையே பார்க்கிறாள்.

     நீட்டிய வெற்றிலையை வாங்காமல் "நம்ப மக அங்கன  எப்பிடியெல்லாம் இருக்கா தெரியுமா காமாட்சி..? அவராக பேச்சை ஆரம்பித்தார்.

    "மாமியாருக்கு கஞ்சி வெச்சு தாரா. மாமனாருக்கு கழுத்துவலின்னு வெளெக்கெண்ணை வச்சு உருவிவிடறா,  சுடுதண்ணி வெச்சு குடுக்கறா, எந்த சாமானையும் வீணாக்கறதே இல்ல காமாட்சி. சிக்கனமா, அதே நேரம் எல்லாருக்கும் புடிக்கற மாதிரி சமையல் செஞ்சு போடறா. மாப்பிள்ளையையும்  கண்ணுக்குள்ள வெச்சு பாத்துக்கறா, புள்ளெங்களுக்கு பாடம் சொல்லித்தரா, அட்டை போட்டு தரா, நன்னெறி, திருக்குறள்ன்னு ஏதாவது சொல்லித்தரா,....."

    "ஏங் காமாட்சி.... சமையல்னா வெறும் சோறாக்கி, கொளம்பு செய்யறது மட்டுமில்லே தெரியுமா...? மொத நாளே  தயிர உறையூத்தி வெக்கணும், இன்னி கால டிபனுக்கு மொத நாளே அரிசி உளுந்த ஊற வைக்கணும், அப்புறம் பக்குவமா அரைக்கணும். பொறவு ஊறுகா போடணும், பருப்புப் பொடி,இட்லிப்பொடி செஞ்சு வெக்கணும்!

    "அது மட்டுமில்ல காமாட்சி.... புள்ளெங்களுக்கு தலைக்கு ஊத்தணும், சாம்பிராணி போட்டு, பேன், பொடுவு  வெக்காம பாத்துக்கணும்...."

      கூறிக்கொண்டே போனார் கதிரேசன். 
      கன்னத்தில் கை வைத்தபடி கணவன் கூறுவதையே இமைக்காமல் கேட்டுக் கொண்டிருந்தாள் காமாட்சி.

     "தாயா , மகளா, தாரமா, தோழியா, ஆசிரியையா, மருத்துவச்சியா, நிதியமைச்சரா, மந்திரியா, சமையல்காரியா, தையல்காரியா...... இப்பிடி எத்தனை பதவில இருக்கு தெரியுமா என்தங்கம்......? பெருமூச்சு விட்டார் கதிரேசன். 

     "ஆ ......ங் ! இம்புட்டுதானா  விசயம்...? நா இத்தினி நாளா செஞ்சது - செஞ்சிகிட்டு இருக்கறது தெரியாலியாக்கும்...? மக செஞ்சா பெரிசா தெரியுதோ...? இட்லிக்கு மொத நாளே நனைக்கணுமாம்.... அரைக்கணுமாம்....
இந்தாங்க.... இந்த வெத்தலையை புடிங்க.... நா என்னமோ ஏதோன்னு பயந்து போனேன்." 
   
    என்றவாறு சமயலறைக்குச் சென்று, தான் சாப்பிட உட்கார்ந்தாள் காமாட்சி.

    "ரெட்டை சடையும், பட்டுப்பாவாடையுமா வளைய வருவா....பள்ளிக்கூடத்துல பரிசெல்லாம் வாங்கினா, காலேஜ்ல கப்புகூட வாங்கினா. அவங்க அப்பாருக்கு தங்கமணின்னா அப்பிடி ஒரு இஷ்டம். 'தங்கம்... தங்கம்'  னு மூச்சுக்கு முன்னூறு தடவ கூப்பிட்டுக்கிட்டே இருப்பாரு.

"சாப்பிட்ட தட்ட கழுவி வை டீ " ன்னா  போச்சு " இந்தா ...! தங்கத்தை ஒன்னும் செய்ய சொல்லாதே. அது படிக்கட்டும்" பாரு. 

யாரா இருந்தா என்னங்க....? கட்டி குடுத்துட்டா தோசை சுட்டு போட்டுதானெங்க ஆகணும்...?
ஏதேதோ நினைவுகள் அலைமோத சாப்பாடு வேண்டியிருக்காமல் எழுந்து கை கழுவினாள் காமாட்சி.  

சனி, 4 ஜூன், 2016

உயிர் - மெய்

   
Image result for free image of a wounded dog

"வ்ஊ ....!' "வ் ஊ ...! என்று ஊளையிடுவது போல் அரை மணி நேரமாக அழுது கொண்டிருந்தது அந்த தெரு நாய். அந்த மாலை நேரத்தில், அச்சத்தம் நாராசமாக ஒலித்தது. வீட்டினின்று வெளியில் வந்து வாசலில் நின்று பார்த்தார் ராகவன் .

    சாலையின் எதிர் சாரியில் ஒரு வெள்ளை நிற நாய் உட்கார்ந்திருந்தது. உடல் முழுவதும் புழுதிப்படலம். வெள்ளை நிறம் மங்கி ஆங்காங்கே பழுப்புத் திட்டுக்களுடன் இருந்தது.

    ஊளையிடுகையில், முகத்தை கீழிருந்து மேல் நோக்கி உயர்த்தியபடி உச்சஸ்தாயியில் "வ் ஊ .....!" என்று ஒலியெழுப்பியது. பின்னர் 'தஸ்.... , புஸ் .." என்று மூச்சு வாங்கிக்கொண்டது. முக்கியது, முனகியது, பின் மீண்டும் வானை நோக்கிப் பார்த்து, வாயை பிளந்தபடி கத்தியது.

    "தெருவில நாய் இப்பிடி கத்தக்கூடதுன்னு சொல்லுவாங்களே...!"
    "ச்சை..! கொஞ்சம் கூட நிறுத்தாம கத்திகிட்டே இருக்கு பாருங்க..!
    " விரட்டு அந்த சனியனை...!"
 
    இப்படி பல விதமாய் விமர்சித்தபடி அத தெருவாசிகள் பலரும் அங்கு சூழ்ந்தனர்.

     "ச்சூ...ச்சூ..." என்றபடி கல் ஒன்றை அந்த நாயின் மீது வீசி விரட்டினான் ஒரு சிறுவன். பயந்து போன நாய், ஓட முயற்ச்சித்து எழ முற்பட்டது. முடியாமல் மீண்டும் அழுதபடி கீழே சரிந்து 'தொப்' என்று விழுந்தது.

    அப்போதுதான் தெரிந்தது, காலில் நல்ல ரத்தக்காயம் என்று. முன்னங்கால்கள் இரண்டும் வயிற்றுப்பகுதியோடு இணையும் இடத்திலிருந்து ரத்தம் கசிந்துகொண்டிருந்தது.

    "ஐயோ.. பாவம் அடிபட்டிருக்கு.!'
    "எவனோ இடிச்சிட்டுப் போய்ட்டான் போலிருக்கு சார்"
    "வலி பொறுக்காமத் தான் கத்தியிருக்கு"
    "அச்சச்சோ...! அச்சச்சோ...!

     இப்படி பலரும் பல விதமாக அனுதாபப்பட்டனர்.
     அப்போது சிலு சிலுவென்ற குளிர் காற்றுடன் லேசாக தூற  வேறு ஆரம்பித்தது.

   "அய்யய்யோ... மழை வருதே! காய்ந்த துணியை எடுக்க வேண்டுமே!"
   "காத்து வேற வீசுது, கரண்ட் போறதுக்குள்ள வேலையை முடிக்கணும்."
   "கடைக்குப் போகணும்! கிளாசுக்குப் போகணும்!"

    இப்படி கூறி, அனைவரும் அவரவர் வேலையை கவனிக்கச் சென்றுவிட,
ராகவன் மட்டும் நாயைப் பார்த்துக்கொண்டே நின்றிருந்தார்.

   இதற்குள்  நாய் வேறு விதமாக முனக ஆரம்பித்தது. தலையை சிலிர்த்துக்கொண்டது. உடலை குலுக்கிக் கொண்டது. மீண்டும் கதறியது.

  'அடடா...! நாய்க்குக் குளிருகிறது போலிருக்கு" என்று எண்ணியபடி தன்  வீட்டிலிருந்து  பழைய போர்வை ஒன்றை எடுத்தார் ராகவன்"
     இதற்குள் மழை வலுக்க ஆரம்பித்தது.
     "சாரதா! இந்தக் குடையைப் பிடித்துக்கொண்டு என்னோடு வா" என்று 8ம் வகுப்பு படிக்கும் தன்  மகள் சாரதாவையும் அழைத்துக் கொண்டு நாயருகில் விரைந்தார்,.
      சாரதா குடையை விரித்தபடி பிடிக்க, போர்வையால் நாயை மூடி அப்படியே சுருட்டி, லாகவமாக தூக்கி, அருகில் இருந்த டீக்கடை வண்டியின் அடியில் உட்கார்த்திவிட்டார். சற்று நேரம் அங்கேயே நின்றிருந்தார். நாயின் முக்கல் சற்று குறைந்தாற் போலிருந்தது.

     "வா..! அதுக்கு பால், பிஸ்கெட்  ஏதாவது சாப்பிட எடுத்துவருவோம்" என்று கூறிக்கொண்டே இருவரும் வீடு நோக்கித் திரும்பி நடக்க எத்தனிக்கயில்தான் அந்த விபரீதம் நடந்தது.

    வேகமாக வந்த பைக் ஒன்று சாரதா மீது மோதிவிட்டு, சீறிப்பாய்ந்தபடி நிறுத்தாமல் கூடச் சென்றுவிட்டது. கொட்டும் மழையில் 'வீ ல்'லென்று கத்தியபடி நிலைதடுமாறி விழுந்த சாரதா துடித்தாள் - தவித்தாள். செய்வதறியாது விழித்தார் ராகவன். நிமிட நேரத்தில் நிகழ்ந்தது என்ன என்றே புரியாமல் சற்று நேரம் திகைத்துப்போனார். உடனே, சுதாரித்துக்கொண்டு அந்த வழியே வந்த ஆட்டோவை நிறுத்தி, குழந்தையை ஆட்டோவில் அமர்த்தினார்.

      இதற்குள் இருட்டத் துவங்கியிருந்தது.
      மீண்டும் தெருவாசிகள் பலரும் குழுமிவிட்டனர் .
ராகவன் வீட்டிற்குள் ஓடி, தன் மனைவியையும் அழைத்துக்கொண்டு, பீரோவிலிருந்து பண நோட்டுக்கள் சிலவற்றை பர்சில் திணித்துக்கொண்டு, வீட்டைப் பூட்டிவிட்டு ஆஸ்பத்திரிக்கு விரைந்தார்.

       சாரதாவின் உடலில் பல இடங்களில் அடி பட்டிருந்தது. நல்லவேளையாக முகத்திலோ, தலையிலோ அடியேதும் படவில்லை. இருந்தாலும், மூன்று இடங்களில் தையல் போடும்படி இருந்தது. ஆஸ்பத்திரிக்கும் வீட்டுக்குமாக அலைந்துகொண்டிருந்ததில் ராகவன் நாயை பற்றி மறந்தே போய்விட்டார்.

      மூன்று நாட்களுக்குப் பிறகு டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு வந்த உடனேயே நாயின் நினைவு வந்துவிட்டது அவருக்கு.

     "அடாடா...! நாயை மறந்தே போய்விட்டோமே! எப்படி இருக்கிறதோ" என்று எண்ணியபடி வாசலூக்குப் போனார்.

      பக்கத்துவீட்டு அருண் நண்பர்களுடன் வாசலில் விளையாடிக்கொண்டிருந்தான்.

      "அருண்! நாய் எங்கே.... காணோமே இங்க....! சரியாயிடுச்சா அதுக்கு?" என்று பதட்டத்துடன் சரமாரியாக வினவினார்.

      "இல்ல சார்! செத்துபோச்சு   அதால நடக்கவும் முடியலே. கத்தி கத்தியே களைச்சுப் போய்டும். டீ கடைக்காரங்க கடை போடணும்னு வண்டிய நகர்த்திப் போட்டுகிட்டாங்க. கடைக்கு வரவங்க பன்னோ, பிஸ்கட்டோ போட்டாலும் அதால சாப்பிட முடியலே. பலர் அதோட கத்தல் தாங்காம விரட்டிகிட்டே இருந்தாங்க. ரெண்டு நாள் உயிரோட இருந்தது, நேத்து காலையிலதான் செத்துபோச்சு. முனிசிபாலிட்டில எடுத்துட்டுப் போய்ட்டாங்க" என்றான் அருண்.

     "சொரேர்" என்றது ராகவனுக்கு.
      இதே இடத்துல சாரதா அடிபட்ட உடனே, - கொட்டுற மழையிலேயும் டாக்டர் கிட்ட கூட்டிட்டுப் போனோமே! அந்த அக்கறையை நாய்க்குக் காட்டலியே....! சுயநலமாய் இருந்திருக்கிறோமே....! குற்ற உணர்ச்சி .குறுகுறுத்தது

      'நாய் டக்டர் கிட்ட தூக்கிட்டுப் போயிருக்கலாமோ! லயன்ஸ் க்ளப், ரோட்டரி க்ளப், முனிசிபாலிட்டி இப்படி யாருக்காவது போன் பண்ணியிருக்காலமோ...?  இப்படியான எண்ணங்கள் ராகவனின் மனதில் பொங்கி எழுந்தது.

     வெவ்வேறு  'மெய்'யில் உயிர் இருந்தாலும் உயிர் என்பதன் மதிப்பு 'மெய்'யாலும் சமம் தானே. 'சமமல்ல' என்பதுபோல் நடந்துகொண்டதற்கு வெட்கப்பட்டார்  - வேதனைப்பட்டார் ராகவன்.






 

புதன், 1 ஜூன், 2016

இல்லத்தரசியின் ஒருநாள் பொழுது!

என்னனு சொல்றது..?
ஏதுனு  சொல்றது...?

அதிகாலை கண்முளிச்சு,
அடுப்படில நொளஞ்சேன்னா,
நடுசாமம் ஆகும்வர
நடந்துகிட்டே தா இருப்பேன்.

காப்பித்தண்ணீ வச்சுகிட்டே
காய்கறிய வெட்டிபுட்டு
காலப் பணியாரம்
கலர்கலரா செஞ்சுடுவேன்.

ஏத்தி, இறக்கி வச்சு
போட்டுப் பரிமாறி,
தொடைச்சு சுத்தம் செஞ்சா,
சுளுவா மணி எட்டாவும்.

விடிஞ்சது தெரியாம
ஒறங்கும்  பிள்ளைகள
எழுப்பிக் குளிப்பாட்டி,
உடுப்ப மாட்டிவிட்டு,

எழுதிப் படிக்கவச்சு,
எததையோ ஊட்டிவிட்டு
ஏட்டுபைய மாட்டிவிட்டு
பள்ளிக்குக் கிளப்போணும் .

மாசத்துல பத்துநா
புதுபேனா வாங்கிடுங்க!- ஆனா
எழுதி கிறுக்கணும்னா,
எதொன்னும் அம்படாது

மூடி தொலஞ்சிருக்கும்
மொன ஒடஞ்சிருக்கும்
தேடித் தாரங்குள்ள
தாவு தண்ணி தீந்துபோவும்.

ஆட்டோ கிளம்புச்சின்னா
அப்பாடான்னு ஆகிப்போகும்
வீட்டை சரி செய்ய
ஒன்னேகா மனிவேணும்.

வீடு முச்சூடும்
போர் நடந்த களமாட்டம்
வாரி எறஞ்சிருக்கும்
வகை வகையா சாமாங்க!

பொறவு...

குளிச்சு தலைமுழுகி
தொவச்சு ஒலரவச்சு
பெருக்கித் தொடச்சேன்னா,
பிற்பகலும் நெருங்கியிருக்கும்.

சோத்த வடிச்சுவச்சு,
கொழம்பு, பொறியல் செஞ்சு,
மொராக் கடஞ்சுகிட்டு,
தொவையல் ஒண்ணும் அரச்சுடுவேன்,

பக்குவமா பரிமாறி,
பாத்திரத்த ஒழிச்சுபோட்டு,
ஒருவா சாப்ட்டேன்னா...
அப்படியே ஒறங்கிடுவேன்.

அஞ்சு நிமிச ஒறக்கம்தான்
ஆனந்தமா எனக்குப்படும்
அரக்க, பரக்க எந்திரிச்சு,
டிக்காசன் வைக்க ஓடுவேன் .

படிச்சு, களைக்கும் புள்ளேங்க
பசியோட திரும்பி வரும்.
புடிச்ச டிபன் ஒண்ண
படபடன்னு செஞ்சிடணும்.

பள்ளிக்கூட உடுப்பு மாத்தி,
தல சீவி பொட்டிட்டு,
தங்கமான ஸ்கூல் நிகழ்வ
தலையோடந்தம் கேட்டிடுவேன்,

ஓடி விளையாட,
ஓரிடமும் இங்கில்ல
கேரம் ஆடிடுவோம்,
தாயம் ஆடிடுவோம்.

நா படிச்ச ஹிந்திய
நாடு பூரா  பரப்பிடவோ,
வெட்டியா நானில்லைன்னு
வெவரம் வெளக்கிடவோ,

ஆழ்ந்து அனுபவிச்சு
அழகா நா சொல்லித்தர...
அற்புத நேரமிது,
ஆனந்த போதது.

அதுக்கடுத்து வீட்டுப்பாடம்!
முடிக்க வக்குங்குள்ள
அடியும்,  திட்டும் விழும்
படிக்க சொல்லிட்டு அடுக்களைக்கு ஓடுவேன்

ரவைக்கு சோறுதண்ணி
நிறைவா செய்யோணும்
நிரவியும் செய்யோணும்.
நேரமும் கொஞ்சமில்லை - நிக்கவும் நேரமில்லை!

ஆக்கி முடிச்சாச்சு
சாப்டு படுத்தாச்சு
கண்ணு சொருகி நிக்கும் - கணவன்
என் மொகம் பாத்து சிரிக்கும்.

அப்பாடியோய்....!
அசந்து கண் மூடினா,
அலாரம் சத்தம் போடும்
அஞ்சு மணி ஆயிடிச்சுன்னு !




Image result for images of busy village housewife free download







செவ்வாய், 31 மே, 2016

'மாற்றம்' ஒரு குற்றமா.....?

       நானா இது...? எனக்கே என்னை அடையாளம் தெரியவில்லையே! என்ன ஆயிற்று எனக்கு? நான் ஏன் இப்படி மாறிவிட்டேன்?

     அச்சச்சோ ! விஜி...... எனக்கு உன் ஞாபகம் வருகிறதே! நீ என்னைப் பார்த்துவிட்டாயா  என்று தெரியவில்லை! என்னைப் பார்த்தால் நீ என்ன நினைப்பாய்? என்ன செய்வாய் என்ற எண்ணமே எனக்கு உதறலாக இருக்கிறதே!.

     'விஜி, என்னை வெறுத்துவிடதே! நான் உனக்கே சொந்தம். என்னை நம்பு விஜி. இது என் தவறல்ல.' என்று உள்ளம் உரத்துக் கூவுகிறது.

    சுற்றுமுற்றும் பார்க்கிறேன். என்னைச் சுற்றி உள்ளவர்கள் எல்லோருமே எப்பொழுதும் போலவே இருக்கிறார்கள். எனக்கு மட்டும் ஏன் இந்த மாற்றம்? நான் என்ன செய்வேன்?

      எத்தனை அழகானவள் விஜி! தன அழகின் மேல்தான் அவளுக்கு எத்தனை கர்வம்.! 'விஜி...! விஜி....! எனக்கு துக்கம் பீறிடுகிறது.

      அவள் இன்னும் என்னைப் பார்க்கவில்லை. பார்த்தபின்...... அப்படியே என்னை ஏற்றுக்கொள்வாளா ? அல்லது என் இந்த மாற்றத்தை சரி செய்ய முயற்சி செய்வாளா..? என்று எனக்குத் தெரியவில்லை.

      இப்படி நான் யோசித்துக்கொண்டிருக்கும்போது, கண்ணாடி முன் நின்று தன்  அழகை ரசிக்கத் தொடங்கிய விஜியின் பார்வை என் மீது பட்டது. ஆம்... நான் எந்த தருணத்தைப் பீதியுடன் எதிர்பார்த்துக்கொண்டிருந்தேனோ அந்த தருணம் நிகழ்ந்துவிட்டது.

      அதிர்ச்சி அவளை ஆட்கொண்டது!
      கண்களை அகல விரித்து - பதற்றமாய் என்னைப் பார்த்தாள்.
     முகம் பேயறைந்ததைப் போல ஆனது.

கார் மேகம் போன்ற அவளின் அடர்ந்த கூந்தலில் வெள்ளி கம்பி போல், காதருகில் உருமாறிவிட்ட - என்னை - ஒற்றை நரை முடியை தன்  விரல்களால் உயர்த்திப் பார்த்தாள் .

      அவள் இதயம் விம்மத் தொடங்கியது.

      உடனே சுதாரித்துக்கொண்டு , சட்டென எழுந்து கத்திரிக்கோல் கொண்டுவந்து என்னை - என்னை அடியோடு கத்தரித்து அப்படியே குப்பைத்தொட்டியில் போட்டுவிட்டாள்.

       நீங்களே சொல்லுங்கள்! அவள் செய்தது சரியா...? இந்த மாற்றம் என் குற்றமா என்ன...? எவ்வளவு வழி முறைகள் உள்ளன உலகத்தில்! இப்படி வெட்டி எடுத்து விலக்கலாமா..? யாராவது சொல்லுங்களேன்...!




நானும், ஹெல்மெட்டுடன் என் முதல் பயணமும் - 'சௌரபி' - என் இரண்டாவது பெண் எழுதிய கதை.

           தமிழ்நாட்டில் உள்ள சின்ன நகரமான கும்பகோணத்தில்தான் இரு சக்கர வாகனம் ஓட்டக் கற்றுக்கொண்டேன். வண்டி ஓட்டக் கற்றுக்கொள்வதற்குள் ஒரு வாட்டியாவது கீழே விழுவது இயற்கை என்று பெரியவர்கள் கூறினர். இதை மாற்றி, வண்டி ஓட்டுபவர்களின் இலக்கணத்திற்ககே விதிவிலக்காய் இருக்க விரும்பினேன். அதைப் போலவே ஒரு கீறல் கூட என் மேலேயும் சரி, என் வண்டி மீதும் சரி இல்லாமல் மூன்று ஆண்டுகளாகப் பார்த்துக்கொண்டேன்.

       ஜூலை 1,  2015 முதல் ஹெல்மெட் அவசியம் அணியவேண்டும் என்ற கட்டளையை அரசாங்கம் அறிவித்த பின்னர். என் கற்பனைக்கு அளவே இல்லை. அனுஷ்கா ஷர்மா ஒரு விளம்பரத்தில் அணிந்த மாதிரி என் ஹெல்மெட் இருக்குமா...? அல்லது நண்பன் படத்தில் இலியானா அணிந்த ஹெல்மெட் மாதிரி இருக்குமா என்று  கனவு கண்டபடியே, ஒன்றாம் தேதி காலையில் என் வண்டியோடு ஹெல்மெட் கிடைக்கும் கடைக்குச் சென்றேன்.

       கடையின் வெளியே  ' HELLMATE AVAILABLE' என்ற போர்டைப் பார்த்து 'HELMET' க்கு ஸ்பெல்லிங் கூட தெரியவில்லை என்று சிரித்தபடி, ஒரு ஹெல்மெட்டை வாங்கிக்கொண்டேன். அதை அணிந்தபடி, என் வீட்டை நோக்கி வந்து கொண்டிருந்தேன்.

       ஹெல்மெட் கொஞ்சம் கூட சௌகர்யமாக இல்லை. மண்டை முழுக்க ஒரே வியர்வை. பின்னே வரும் வண்டி அடிக்கும் ஹார்ன் சத்தம் சரியாகக் கேட்கவில்லை. சாலையை கடப்பதற்கு முன், அருகில் வேறு வண்டி வருகிறதா என்று கடைக்கண்ணால் பார்ப்பது என் வழக்கம். குதிரைக்குக் கடிவாளம் போட்ட மாதிரி என் தலை கவசம் இருந்ததால், கடைக்கண்ணால் எவ்வளவுதான் எக்கி எக்கி பார்த்தாலும், ஹெல்மெட்டைத் தாண்டி ஒன்றும் தெரியவில்லை.

        அதனால் என் கழுத்து ஒரு 'U' TURN போட்டு திரும்பிப் பார்த்தது. எனக்குப் பின்னால் ஒன்றும் வரவில்லைதான். ஆனால் முன்னால் வந்த ஆட்டோவை நான் பார்க்கவில்லை.

        ஆட்டோ ஓட்டுனர் அடித்த ஹார்ன் எனக்குக் கேட்கவில்லை. நேராகப் போய், வேகத்தோடு ஆட்டோ மீது இடித்தேன். நான் அடித்த வேகத்தில் ஆட்டோவே கவிழ்ந்து விட்டது.   நானும் என் வண்டியோடு கீழே விழுந்து விட்டேன்.

       சவாரி எதுவுமின்றி வந்த அந்த ஆட்டோ ஓட்டுனருக்கு கண்ணாடி உடைந்து தலையில் பட்டு பலத்த காயம் ஏற்பட்டது. எனக்கு கை, காலில் சரியான அடி.

      நான் ஹெல்மெட் அணிந்திருந்ததால் என் தலை தப்பித்தது. ஹெல்மெட் அணியாத ஆட்டோ ஓட்டுனருக்கு தலையில் அடி!   பாவம்.!

       ஹெல்மெட் கடையில் எழுதியிருந்த 'HELLMATE' என்ற பலகை  இப்போது என் நினைவில் வந்தது.. ஆனால் அது எனக்கு சிரிப்பாகத் தெரியவில்லை.
Image result for free image of a helmet

திங்கள், 30 மே, 2016

என் 'கதைக்குள்' என் கதை.

நான்....!
ஆம்! என்னைப் பற்றி முதலில்  கூறப்போகிறேன்.
நான் அழகாகப் பேசுகிறேன் என்று கூறியவர்களும் உண்டு! சரியான அறுவை! என்று அலுத்துக்கொண்டவர்களும் உண்டு.
எந்த ஒரு விஷயத்தையும், ஆரம்பம் முதல் இறுதி வரை  ஒரு சிறிய குறிப்பைக் கூட விடாமல் முழுவதுமாகக் கூறுவேன்.
இடைச் செருகலாக அவ்விஷயம் நடந்தபோது சுற்றி நடந்த பலவற்றையும் கூறி சம்பவத்தைக் காட்சி போல காட்ட முற்படுவேன்.

அதோடு கூட, அவ்விஷயம் சம்மந்தமாக  நான் நினைத்தது..... நடந்தது......
இப்படியாக சீரியல் போல் வளர்த்துக்கொண்டே போவேன்.

எத்தனை அழகாக வர்ணிக்கிறாய்...! விவரிக்கிறாய் ....! என்று அதிசயித்துப் போவர் பலர்.

நான் பேசுகையில் கண் பேசும், கை அபிநயிக்கும், குரலோ....அழும் -  சிரிக்கும்,
வருந்தும் - நகைக்கும்,
 நக்கலாய், கோபமாய், சிநேகமாய்,..... என்று பல்வேறாய் வேறுபட்டு ஒலிக்கும்.

என் பேச்சை ரசிக்கும் கும்பல் ஒருபுறம் இருக்க - நான் பேச ஆரம்பிக்கும் முன்னே பயந்து, பாய்ந்து ஓடியவரும் அநேகம் பேர்.

"நான் இன்னிக்கி ஆறு மணிக்கு கோவிலுக்குப் போனேனா......" என்று ஆரம்பித்ததும், "சரி...! கீழ விழுந்தியா....? "எது மேல மோதினே....?" "விஷயத்துக்கு வா.." என்றெல்லாம் கூறி, குறுக்கிட்டுப் போறுமையிழந்தோரும் பலர் உண்டு.

எது எப்படியோ நான் இருந்தாலே அந்த இடம் மிகவும் கலகலப்பாக இருக்கும்.

"மிகச் சரியான வார்த்தைப் பிரயோகத்தால் சொல்லும் விஷயத்தை அழகாகக் கண் முன் நிறுத்துகிறாய்" என்றெல்லாம் கூறி பாராட்டுபவர்கள் நேரிடையாய்க் கூறிவிடுவதால் நானும் புளகாங்கிதம் அடைவேன்.

இப்படி இருக்கையில் திடீரென்று என் தொண்டையில் ஏதோ ஒரு ஒவ்வாமை ஏற்பட்டு, குரல் கம்மிப்  போயிற்று. புழுதியினாலா, தண்ணீரினாலா, பாக்டீரியா, வைரஸ் இவற்றின் தாக்குதலினாலா என்று வகைப்படுத்த முடியாமல் மருத்துவர் மாற்றி மருத்துவர், மருந்து, மாற்றி மருந்து, என்று உட்கொண்டும் குரல் எழும்ப மறுத்து சண்டி செய்தது.

"குரலுக்கு ஓய்வுதான் தீர்வு" என்று மருத்துவர்கள் ஒருமனதாகக் கூற, அதிர்ந்துதான் போனேன். சுய பச்சாதாபம் வேறு தலைதூக்கிக் கண்ணீரை வரவழைத்தது.

தவித்துத்தான் போனேன்.

பற்பல விஷயங்கள் தொண்டை வரை பொங்கி வந்து அடங்கிப் போகும்.
விழிகள் படபடத்து ஓய்ந்து போகும்.
சைகை பாஷையால் விரல்கள்தான்  வீக்கம் கண்டன .
அலை ஓசை இன்றி அமைதியானது  எங்கள் இல்லம் எனும் ஆழி.

பெருகிவரும் எண்ணங்களுக்கு சைகை மொழி போதவில்லை.

என்ன செய்யலாம்? ஏது செய்யலாம்?

நெஞ்சில் நிறைந்திருக்கும் எண்ணங்களை வெளிப்படுத்த வாய் ஒன்றை மட்டுமா இறைவன் படைத்துள்ளான்?

இருக்காது! மாற்று வழி ஒன்றை வைத்திருப்பான்  என்றெண்ணியபடி எடுத்தேன் என் பேனாவை.
'என் "கதைக்குள்" என் கதை' என்று தலைப்பிட்டு கொட்டினேன் என்னைப் பற்றிய எண்ணங்களை.! படித்துப் பார்த்தேன்.

'அட! நன்றாகத்தான் உள்ளது! நல்ல கதை ஒன்று உருவாகிஉள்ளதே !

'சரி சரி! புலம்பிக்கொண்டிருத்தல் இனி கூடாது!
சுய பச்சாதாபத்தைத் தூக்கிப்போட்டேன்.
நம்பிக்கை துளிர் விட்டது என் மனதில்.

வாழ்க்கைக் கவிதை

கட்டிய புடவையுடன்
கரம் பிடித்துச் செல்லுங்கள்.
கஞ்சிதான் உணவென்றாலும்,
கூரைதான் நிழலென்றாலும் ,
கலங்கிடவேண்டாம்.
கவிதையாய் வாழ்ந்திருக்க
காசு மட்டுமா அவசியம்?
அல்ல! அல்ல!
காதல்தான் பொக்கிஷம்!
நன்றி! வணக்கம்!
என்று கூறி இருக்கையில் சிவநேசன் அமர்ந்ததும்,.கரகோஷம் வானைப் பிளந்தது. "கைகொடுங்க சிவா! வரதக்ஷணை வந்காதீங்கன்னு நீங்க சொல்லும் முறையே தனிதான்." "அருமை சிவநேசன்" இப்படியாக பாராட்டு மழையில் நனைந்தபடி தன வீட்டுக்கு வந்து அழைப்பு மணியை அடித்தான். கதவைத் திறந்த அவன் அன்பு மனைவி லதா, "விழா நல்லா  நடந்ததாங்க....?"
என்று கேட்டாள்.
       அவளது கேள்விக்கு பதிலேதும் கூறாமல்,  உங்க அப்பாகிட்டேயிருந்து  தகவல் ஏதாவது உண்டா..? என்று கேட்டு அவள் முகத்தைப் பார்த்தான். "ஒண்ணும் இல்லீங்க" பயந்தபடி கூறினாள் லதா.
"பொங்கலுக்கு இன்னும் 3 நாள் தானே இருக்கு? இந்த வருஷாமாவது முன்கூட்டியே பொங்கல் சீர் செய்யலாம்னு தோணுதா உங்கப்பனுக்கு? என்ன நெனைச்சிட்டிருக்கரு மனசுல? என்று சரமாரியாக சாடத் தொடங்கினான் சிவநேசன்.
    "கவிதைக்குப் பொய் அழகு' என்பது இதுதானோ....!



ஞாயிறு, 29 மே, 2016

கிளியம்மா.... என் கிளியம்மா

மணிமணியாய் பொறுக்கி உண்டு
மணிநேரம் ஆக்கிடுவாள்.
காய்கறியைப் புறங்கையால்
ஒதுக்கியே தள்ளிடுவாள்.
வகை வகையாய் செய்தாலும்
தோசையேவா தினமும் என்பாள்.
சோம்பலின் காரணத்தால்
சாப்பிட மறுத்திடுவாள் .

மாலையோ, இரவோ மறந்துவிட்டு
மறுநாளின் காலை வந்து
நோட்டுக்கு அட்டையென்பாள்.
சட்டைக்கு பட்டன் என்பாள்.
கணக்கு புக்கைக் காணோம்
தேடித்தா என அழுவாள்.
பேனாவில் இங்க இல்லை
போட்டுத்தா என அழைப்பாள் .

குளியலறையிலிருந்தபடியே
குரல் கொடுப்பாள் 'ஷிம்மி ' என்று
பூச்சி ஒன்றைப் பார்த்தாலோ
 கத்திடுவாள் "வீச்" என்று
காயம், வலி, வந்துவிட்டால்
காயமே நடுநடுங்கும்
பசி சொல்லத் தெரியாமல்
அழுகை ஒன்று வெடித்துவரும்

இவை எல்லாம் என் மகளின்
அட்டகாசங்கள்,
என் கடந்த கால பிம்பத்தின்
பிரதிபலிப்புகள்
அடடா!
காலம் கடந்து நான் கற்ற
கருத்தான பாடங்கள்
நடைமுறையாவது எப்படி?
எங்கனம்? எப்போது?

ஏ ! காலச்சக்கரமே!
சற்றே பின்னோக்கி சுழலேன்!
என்னில் சில திருத்தங்கள்
செய்துவிட்டு
பின் இவளைத் திருத்துகிறேன்.




மகாத்மாவிற்கு ஒரு கவிதாஞ்சலி.

தேசம் காக்க-
தேகம் தந்து - உயிர்த்
தியாகம் செய்த
உயர்ந்தோனே...!

நாடும் வீடும்
உனக்களித்த
வீரவணக்கம்
வந்து சேர்ந்ததா...?

பெற்றோரும், உற்றோரும்
கதறிய கதறல் - உன்
காதில் விழுந்ததா...?

பனி மழையில்,
குகை இருளில்,
மலைச் சரிவில்,
புதர் மறைவில் - என
எத்தனை முறை
போராடியிருப்பாய்....?

இன்றும் கூட
புற முதுகிட்டு ஓடவில்லை நீ!
போர்க்களத்திலே,
மார்பிலே குண்டு பாய்ந்து
வீரமாய் அன்றோ
மாண்டு போனாய்!

நாட்டுக்காக பலர் செய்த
நற்செயல் பற்றியெல்லாம்
ஏட்டினில் மட்டுமே
கண்டதுண்டு! - அதை நம்
வீட்டினில் கண்டதும்
இறுமாந்து போகிறோம்
இதயத்து வேதனையை
இயல்பாக மறைத்துவிட்டு!

பெற்ற தாய் தந்தை
பற்றற்று பரிதவிக்க,
கட்டிய இளம் மனைவி
கண்ணீரில் தத்தளிக்க,
பால் மணம் மாறா
பச்சிளம் பிஞ்சு
பரிதாபமாய் தனித்திருக்க,
நீயோ....
கடமையை கருத்துடனே
கண்ணியமாய் செய்துவிட்டு,
கற்பூரமாய் காற்றில் கலந்து
காலமாகிப் போனாயே...!

அன்று...!
ஆங்கிலேயன் போட்ட விலங்கை
அகற்றி எறிந்துவிட
தன் நலனைத் தள்ளி வைத்து
தள்ளாத வயதிலும்
துவளாமல் போராடி
'மகாத்மா' ஆனார்
பொக்கைவாய் காந்தி!

இன்றோ....
வாழ்ந்து களிக்க
வயதும், வருடமும்
ஏராளம் எஞ்சியிருக்க-
சின்னஞ்சிறு வயதில்
தீவிரவாதியுடன்
போராடி மறைந்த
 'ஷ்யாம் சுந்தர்'
நீயும் ஒரு மகாத்மா தான்!
ஆம்!
நீயும் ஒரு மகாத்மாதான்!


'என்னைக் காதலி!'

என்னைக் காதலிப்பதாகக்
கூறிக்கொள்ளும் நீ- அதை
வெளிப்படுத்தத் தவறுகிறாய்.
அல்லது மறந்து போகிறாய்.

உன் சாப்பாட்டு மேஜையின்      
உணவு முழுதுக்கும்
பொறுப்பாளி நான்தானே...!

உன் குடும்பத்தினர்
உடுக்கும் உடை முதல் - அவர்களின்
உடல் நலம் பேணல் வரை
நான்தானே பொறுப்பாளி!

பொறுப்பாளியான நான்
பொறுமையுடன் காத்திருக்கிறேன்.
எந்த அளவுக்கு நானுனக்கு அவசியம்?
என்றந்த உண்மையையை
என்றாவது நீ உணருவாயா  என!

என்ன செய்யவேண்டும் நீ...?
'என் நலனே உன் நலன்' என்றுணர வேண்டும்.
என்னை மகிழ்வித்து திருப்தி செய்தால்
உன் திருப்தி உனக்கே சொந்தமாகும்!

நான் யாரென்று தெரிகிறது அல்லவா...?
நான்தான் ....
உன் வருமானத்திற்குக்
காரணமாய் இருக்கும்
நீ செய்துவரும்
'தொழில்' அல்லது 'பணி'!



நல்லதோர் வீணை செய்தே!

மூட்டைத் தூக்கி, பொதியும் சுமந்து
முன்னுக்கு வந்தவன் முனியப்பன்.!
தன்  போல் பிள்ளையும் தவிக்கா திருக்கப்
பள்ளியில் சேர்த்திட முடிவு செய்தான்.

நோட்டுப் புத்தகம், பேனா என்று,
 பார்த்துப் பார்த்து வாங்கித் தந்தான்!
'புத்தக மூட்டை' தூக்கிய மகனை,
பார்த்தே ரத்தக் கண்ணீர் விட்டான்.

'நல்லதொரு வீணை செய்ய எண்ணி
நலங்கெட புழுதியில் எறிந்தேனோ...?
புலம்பித் திரிந்தான்! வருந்தி அழுதான்!
படிப்பறிவில்லா அறிவிலி முனியன்!.  

சனி, 28 மே, 2016

அவள் - என் அவள்

    இரண்டு நாட்களாக அவள் ஞாபகமாகவே இருக்கிறது. இதே போன்ற பிரிவு சமீப காலமாக பல முறை ஏற்பட்ட போதிலும், இம்முறை மனம் அலை பாய்கிறது. அதே நேரம் அவளும் என்னைப் பற்றி நினைத்துக்கொண்டிருப்பாளா ..? அல்லது என் நினைவே அவளுக்குத் தோன்றாததுபோல் நடந்து கொள்வாளா..? தெரியவில்லை.
  ஆனால் நான் ஒவ்வொரு நிமிடமும் , இப்போது அவள் என்ன செய்துகொண்டிருப்பாள்? என்ன நிற உடை உடுத்திக்கொண்டிருப்பாள், என்ன சாப்பிட்டிருப்பாள், என்று நினைத்துக்கொண்டே இருக்கிறேன்.
தொலைபேசியோ, கைபேசியோ ஒலித்தால், அவளோ, அவளோ என்று ஆவலுடன் பார்க்கிறேன். இதோ.... இதோ.... என் கைபேசி ஒலிக்கிறது. 'ஹலோ' என்று படபடப்புடன் கூறும் என்னை இவர் கேலியாகப் பார்க்கிறார்.
"ஹலோ அம்மா, சாரி மா ரெண்டு நாளா போன் பண்ணவேயில்ல. ரூம்ல திங்க்ஸ்லாம் அடிக்கிவேச்சுட்டேன்.  ம்ம் அம்மா எங்க மெஸ்ல கேடரர்ஸ் மாறியாச்சும்மா. சாப்பாடு செம டேஸ்டியா இருக்கு.. என்னம்மா பேசவே மாட்டேங்கறே .அழறியா என்ன....?" பேசிக்கொண்டேயிருந்தாள்  என் செல்ல மகள்.

எறும்பியல்

      "கணேஷ் டியூஷன் க்கு டைம் ஆச்சு பாரு.... எழுந்திரு கண்ணா"!
கணேஷின் அம்மா உரக்கக் குரல் கொடுத்தாள் .

கண்களைக் கசக்கிக் கொண்டு புரண்டு படுத்தான் கணேஷ். அவனால் கண்களைத்  திறக்கவே முடியவில்லை.தூக்கம் அழுத்தியது.

ஏழாம் வகுப்பு படிக்கும் சிறுவன் அவன்.
"தங்கம்..... அஞ்சேமுக்கால் ஆயிடுச்சுப்பா ...எழுந்திரு ராஜா" மீண்டும் அம்மா.

'பச்!' அவனுக்குப் பிடிக்கவேயில்லை. தினமும் இதே கதைதான். பாரதியார் கவிதைக்கு நேர் மாறாக, காலை எழுந்தவுடன் டியூஷன்.... பின்பு கனிவு கொடுக்காத பள்ளி...... மாலை முழுதும் ஹோம் ஒர்க்....! என்பது அன்றாட நிகழ்வானது. பாடம்..... பாடம்.... பாடம்.... டெஸ்ட்... டெஸ்ட்... டெஸ்ட்.....
'ஆ............வ்' கொட்டாவி விட்டபடியே எழுந்தான் கணேஷ்.

அரைத் தூக்கத்துடனேயே பல் தேய்த்தான். முகம் கழுவி துண்டால் துடைத்தான். இன்னும் தூக்கம் தூக்கமாக வந்தது. ஹாலுக்கு வந்து காலை நீட்டியபடி தரையில் உட்கார்ந்தான்.

அப்போதுதான் கவனித்தான்.....
எறும்பு சாரை ஒன்று அவனுக்கு மிக சமீபமாக வந்து கொண்டிருந்தது.
'அட' குட்டி குட்டி எறும்புகள்! எத்தனை சுறுசுறுப்புடன் 'குடு குடு' வென்று ஓடுகின்றன...


அவன் கண்கள் சட்டென்று விரிந்தன.  "ஒரே சமூகமாகத் திரண்டு எங்கே கிளம்பியுள்ளன....? அவன் உள்ளத்தில் ஒருவித உற்சாகம் பிறந்தது. தூக்கம் முற்றிலுமாகக் கலைந்து போனது. கால்களை மடித்து முட்டிக்காலில் அமர்ந்து, குனிந்து எறும்புகளைக் கவனிக்கத் தொடங்கினான்.

"யார் இவர்கள்? உறவினர்களா..? நண்பர்களா...? சுற்றுலா செல்லும் பள்ளி மாணவர்களா...? அல்லது ஏதாவது கிளப் உறுப்பினர்களா....?" போன்ற கேள்விகள் கணேஷின் மனதில் தோன்றின்.

சின்ன சின்ன கால்களை நகர்த்தி - நகர்த்தி முன்னேறிக்கொண்டிருந்த முன்வரிசை எறும்புகளை மற்ற எறும்புகள் பின் தொடர்ந்தது அவனுக்கு ஆச்சர்யமாக இருந்தது.

மெல்ல அவன் அந்த எறும்பு வரிசையின் அருகிலேயே, கன்னத்தைத் தரையில் பதித்தபடி குப்புறப்படுத்து, அவற்றின் அசைவை ஆராயத் தொடங்கினான்.

இதற்குள் அவன் அம்மா மூன்றாவது முறையாக "கணேஷ்" என்று குரல் கொடுத்தாள்.

அவன் எண்ணமெல்லாம் எறும்பைப் பற்றியதாகவே இருந்ததால் அம்மாவின் குரல் அவன் காதில் விழவேயில்லை.

"எங்கே செல்கின்றன இவை?
ஏதோ ஒரு உணவு பதார்த்தத்தின் வாசனையை நுகர்ந்தபடிதான் இவை படையெடுத்துள்ளன. ஆனால் கணேஷின் கண்களுக்கோ, நாசிக்கோ, எதுவுமே புலப்படவில்லை.

எறும்பு சாரி ஒரே சீராக ஓடிக்கொண்டிருந்தது.

"எறும்புகள் ஒலி  எழுப்புமா? தங்களுக்குள் கதை பேசியபடி செல்கின்றனவா...? அல்லது மௌனமாகவா.....? தங்கள் உற்றாரையும், சுற்றாரையும் எப்படி ஒன்றாகத் திரட்டியிருக்கும்?"

இவ்வாறு யோசித்தபடி கணேஷ் கால் விரல்களை சற்று உந்தி, இன்னும் கொஞ்சம் மேலே நகர்ந்து படுத்தபடி எறும்புகளைப் பார்வையிட்டன.

பின் ஒரு மெல்லிய தாளைக் கொண்டுவந்து எறும்பு சாரிக்கு முன்னால் மெதுவாக வைத்தான். அவை அந்த தாளை லட்சியம் செய்யாமல் அதன் மேல் ஏறி தனது அணிவகுப்பைத் தொடர்ந்தன.

உடனே ஓர் ஈர்க்குச்சியை எடுத்து வந்து முதல் வரிசை எறும்புகளின் கால்களில் படுமாறு வைத்தான்.

" "டக்".... எறும்புகள் திடுக்கிட்டன போலும்.
அவற்றின் ஓட்டம் தடைபட்டது.
"தங்களின் முன் விருட்சம் ஒன்று .விழுந்ததைப் போல உணர்ந்திருக்கும்" என்று கணேஷிற்குத் .தோன்றியது.

பின்னால் வந்து கொண்டிருந்த எறும்புகளின் மேல் அவன் பார்வை சென்றது. அவை 'கிச்சு கிச்சு' என்று ஒன்றன்மேல் ஒன்று முட்டி மோதிக்கொண்டு நின்றுவிட்டன.

கணேஷிற்க்கு ஆர்வம் கொப்பளித்தது. உடனே முதல் வரிசை எறும்புகளின் செயல்பாட்டை ஆராயத் தொடங்கினான்.

'அட' முதல் வரிசை எறும்புகள் புரிந்துகொண்டன போலும். இந்த குச்சி நம்மை ஒன்றும் செய்யாது' என்று. எனவே அவை தாங்கள் போய்க்கொண்டிருந்த தடத்தை சற்றே மாற்றி ஈர்க்குச்சியை ஒட்டியபடியே சென்று குச்சி முடிந்ததும் தன தடத்தை மீண்டும் மாற்றி நேராகச் செல்லத் தொடங்கின.

'அப்பப்பா.... இவ்வளவு சிறிய எறும்புக்கு எவ்வளவு அறிவு?" என்று வியந்தான்.

"கணேஷ்... என்னம்மா பண்ற? கிளம்பிட்டியா ட்யுஷனுக்கு?" அம்மா பரபரத்தாள்.

"அம்மம்மா..... இதோ இதோமா  கிளம்பிடறேன்" பதில் கூறியபடி மெல்லத் தன ஆள்காட்டி விரலை எறும்புகளின் முன் நீட்டமாகப் படுக்கவைத்தான்.

"டக்டக்' என்று அவற்றின் கால்கள் விரலில் இடித்தன. குறுகுறுவென்று இருந்தது கணேஷிற்கு. விரலை அசைக்காமல் இருக்கும் வரை முட்டிப்பார்த்தன. லேசாக விரலை அசைத்துப்பார்த்தான். ' எதிரி இது' என்று எண்ணியோ என்னவோ 'சுருக் சுருக்' கென்று கடித்தன. சட்டென விரலை விலக்கினான். விரைந்து தன இலக்கை நோக்கி நகர்ந்தன. மிகவும் ஆச்சர்யப்பட்டான் கணேஷ்.

எறும்புகளைப் பற்றி ஓராயிரம் வினாக்கள் அவன் நெஞ்சில் எழுந்தன. எறும்புகளின் வகை, வாழ்நாள் எண்ணிக்கை, வாழ்க்கை முறை பற்றியெல்லாம் ஆராய்ச்சி செய்யவேண்டும் என்று அவன் மனம் திட்டமிட்டது.

'ஒற்றுமை, ஒழுங்கு, பகிர்ந்து உண்ணுதல், சுறுசுறுப்பு...... இப்படி எத்தனைப் பாடங்கள் எறும்பிடமிருந்து கற்றுக்கொள்ள...?' என்று வியந்தான்.

"கணேஷ்....! என்னடா பண்ற? இங்க நான் கரடியா  கத்தறது காதுல விழல...? பாடம் ஏதோ படிக்கறேன்னு நினைச்சேன். என்ன பண்ணிட்டிருக்கே நீ...? கேட்டுக்கொண்டே ஹாலுக்கு வந்த அம்மா, கணேஷ் படுத்திருந்த நிலையையும், அருகில் செல்லும் எறும்புகளையும் பார்த்துவிட்டு, "எண்டா.....? கவனமமே கிடையாதா உனக்கு,,,? பக்கத்துலே எவ்ளோ எறும்பு....? கடிக்குமே அப்படீங்கற எண்ணம் இருக்கா இல்லையா....? எல்லா பசங்களும் ட்யுஷனுக்குப் போய்.....என்னவெல்லாமோ படிக்கறது, புத்திசாலியா இருக்கு....எதையுமே கவனிக்காம இப்பிடி தண்டமா இருக்கறது தப்புன்னு உனக்கு எப்பதான் தோணுமோ....?

கத்தியபடி உள்ளே சென்ற அம்மா, சாக்பீஸ் போன்ற ஒன்றை  எடுத்து வந்து எறும்பு வரிசையின் மீது 'சரக்  சரக் ' என்று கோடு போட்டாள்.

'அய்யய்யோ ...!
எறும்புகள் எல்லாம் திக்கு திசை தெரியாமல் இங்கொன்றும் அங்கொன்றுமாய் கலைந்து ஓடத்தொடங்கின.

இத்தனை நேரம் ஒரு ஒழுங்குடன் சீராக வந்து கொண்டிருந்த எறும்புகள் விலகி விலகி ஓடுவதையே திக்பிரமை பிடித்தாற் போல பார்த்தான் கணேஷ்.
காப்பாற்றவோ, தடுக்கவோ வழி தெரியாமல் இதயம் கனத்தது. திரும்பி திரும்பி பார்த்தபடி குளிக்கச் சென்றான். பாடம் படிக்க ட்யுஷனுக்கு கிளம்ப வேண்டுமே......!


வெள்ளி, 27 மே, 2016

10 நொடி கதைகள்


                10 நொடி கதைகள் - ஆனந்த விகடன்                    

தந்தை பாசம்  

மாமனார் வீட்டோடு சென்றுவிட்ட மகன் வாங்கிவந்த ஜாங்கிரியை ஆசையோடு சாப்பிட்டார் அப்பா, போன வாரம் சுகர் அதிகரித்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றதை சொல்லாமலேயே.



மாமியார் 


ஏழெட்டு தரம் புருசனிடம் மன்னாடி, கூத்தாடி, அத்தைக்கு, இந்த தீவளிக்கு  ஒரு பட்டுப் புடவை எடுக்க வச்சா.
'எம் புள்ள வங்கியாந்ததுன்னு பீற்றிக்கொண்டாளாம் அவள் அத்தை. 



ஸ்டேடஸ்  

கடத்தப்பட்ட காவ்யாவின் கண்ணில் பட்டது காவலாளியின் கைபேசி.
பாய்ந்து சென்று பிடுங்கியவள் facebook  இல் status  தந்தாள் 'GOT KIDNAPPED. EXCITTED '  என்று. LIKES நிறைய வரும். ஆனந்தப்பட்டாள் காவ்யா.



இடைவெளி 


பொடிப்பய  அவனுக்கு என்ன தெரியும்?
என்றது அந்தக்கால பெருசு.
பெருசுக்கு சொன்னாலும் புரியாது,
தானாவும் தெரியாது என்றது
இந்தக் கால இளசு. 

வெள்ளி, 6 மே, 2016

அம்மா என்றொரு அட்சய பாத்திரம்

மான் கூட்டம்  ஒன்றை
நோட்டம்விட்ட வேடன்,
மறைந்து நின்று அம்புவிட
மருண்டு ஓடின மான்கள்

குறி சிறிதும் தப்பாமல்
குட்டி மானை அம்பு தாக்க....
மற்ற மான்கள் ஓடுகையில்
பெற்ற மான் பின்னடைந்ததாம்
கண்ணீருடன்!

அம்மா...!
அன்பைப் பொழிபவள்
அரவணைத்துச் செல்பவள்!
புத்திமதி சொல்பவள்
பொத்தி பொத்தி  வளர்ப்பவள்!


கருவறையில் சுமந்தவள்!
குருதி தந்து வளர்த்தவள்.
பாசத்தைச் சொரிபவள்
பாராட்டி மகிழ்பவள்.

இவை மட்டும் போதுமா என்ன...?
'அட்சய பாத்திரம் ' அவள் என்ன..!
சான்றுக் கதையொன்று கூறுகின்றேன்
கட்டுக் கதையல்ல உணர்வீர்.

பெற்றவளின் இதயத்தைப்
பகீரங்கமாய் பிய்த்தெடுத்து
படையலாய்த்  தரச்சொன்னாள்
பேய் மனம் கொண்ட காதலிஒருத்தி

இனியவளைத் திருப்திக்க - பெற்றவள்
இதயத்தைப் பெயர்த்தெடுத்தான்
இரு கரங்களில் ஏந்திய  அவன் - அதை
இயல்பாக எடுத்துவந்தான்

வருகின்ற வழிதனிலே
கருங்கல்லில் கால்பட்டுத்
தெரியாமல் இடறியதால்
தடுமாறி விழப்போனான்

'பார்த்துப் போப்பா மகனே'- என்ற
வார்த்தைகள் விம்மி விழ,
பரிதவித்துப் போனதாம்
விதிர் விதிர்த்துப் போனதாம்
'தாயிதயம்'

அள்ள அள்ளக் குறையாதாம் 'அட்சயபாத்திரம்'
கிள்ளி  எறிந்தாலும், தள்ளி வைத்தாலும்
வெள்ளை மனத்தினளாம் அம்மா
முல்லை மணத்தினளாம் அம்மா

ஆம்! உண்மை!
அம்மா ஒரு அட்சயபாத்திரம்.

ஞாயிறு, 1 மே, 2016

வெளிநாட்டில் வேலை பார்க்க விரும்பும் இந்திய மாணவர்களுக்கு - 'நெஞ்சுக்கு நீதியும் ' மெட்டு.

STUDENTS - ஏ  கேளுங்க! PARENTS -ஏ  கேளுங்க!
ஏன் இந்த FOREIGN மோகம்?
தாயக உணர்வினைத் தாரையே வார்த்திட்டு 
அயலகம் செல்லும் தாகம்?
அறிவையும், திறனையும் வளர்த்த நம் தேசத்தை
உயர்த்திட மறுப்பது சரிதானா...?
வாய்ப்புகள் வகையாய் இருக்குது  இங்கு   
உணர்வீர்!உணர்வீர்! உணர்வீர்!


கல்வியைக் கொடுத்திட GOVERNMENT SPEND 
                                                                      பண்ணுது 
பல்லாயிரம் ரூபாய் 
EARNINGS - ஐ DOLLER -இல் செய்திடத் துடிப்பது 
தோன்றலியா CHEAP  - ஆய் ?
கை கட்டி சேவகம் செய்வதை விடுத்து 
கட்டளையிடத் துவங்கு...
உற்பத்தித் துறையை வளர்த்திடச் செய்து 
ஊதியம் தரவும் துவங்கு.

மூளையை அடகு வைத்தபின் வசதியாய் 
வாழ்கிறீர் முறைதானா...?
நாசாவை இயக்குது இந்திய மூளைதான்
நமக்கிது பெருமைதானா ...?
corruption -ம் pollution -ம்  மிகுதிதான் இங்கென..
மறுக்கலை, மறுக்கவில்லை 
உனையன்றி வேறு யார் இதை மீட்பர் 
நீதான்! நீதான்! நீதான்!

உனக்கென அடித்தளம் நிறையவே இருக்குது  
உனக்கது புரியலியா..?                                                    
சி.வி.ராமனும், அப்துல் கலாமும்  
சாதனை  நிகழ்தலியா..?                                                      சுயநலப் போர்வையைச் 'சுதந்திரம்' என நீ 
சொல்வது உறைக்கலியா...?
உலகினில் இந்தியா முதல் இடம் என்றே 
முழங்கு! முழங்கு! முழங்கு!

தாய் திரு நாட்டின்  citizen  ஆய்  வாழவே  
கர்வப்படல் வேண்டும்.
அந்நிய நாட்டினில் third rate citizen ஆய் 
தாழ்ந்திடவா  வேண்டும்....?
பெட்ரோல் விலையை நிர்ணயம் செய்வது 
அமெரிக்கன் தானென்றால்
Golden Cage -இல் அடைபட்ட tigers நாம் 
விழிப்போம்! எழுவோம்! உழைப்போம்!



Star, Abstract, Colorful, Fireworks


Image result for free image of indian patriotism