" இன்னும் கொஞ்சம் கொளம்பு ஊத்தட்டா....?" சாதக் குழிக்குள் குழம்பை ஊற்றியபடி கணவனின் முகத்தைக் கூர்ந்து நோக்கினாள் காமாட்சி.
யோசனையில் ஆழ்ந்தபடி சாப்பிட்டுக் கொண்டிருந்த்தார் கதிரேசன்.
"மருமவப் புள்ள, தங்கமணி, குழந்தைங்க எல்லாரும் சொகம்தானே ....?"
"ம்ம் !"
"அவ மாமியார், மாமனாரெல்லாம் நல்லபடியா இருக்காங்களா...?"
"ம்ம் !"
" புள்ளெங்க ஸ்கூலுக்குப் போய் வாராங்களா....?"
"ம்ம்!"
இப்படி எல்லாக் கேள்விகளுக்கும் ஒற்றை வார்த்தையே பதிலாய் வர, காமாட்சிக்கு கலவரமாயிற்று.
கதிரேசன் சாப்பிட்டதாகப் பேர் பண்ணிவிட்டு கை கழுவ கிணற்றடிக்குச் சென்றார்.
கதிரேசன் காமாட்சியின் ஒரே மகளான தங்கமணி வீட்டிற்குப் போய் நான்கு நாட்கள் தங்கியிருந்துவிட்டு இன்று காலைதான் வீடு திரும்பி இருந்தார் அவர்.. பகலெல்லாம் தூங்கிவிட்டார். களைப்பு போல என்று நினைத்தாள் காமாட்சி. இரவு சாப்பாடு பரிமாறுகையில் பேச்சுக் கொடுத்தாலும் பிடி கொடுத்தே பேசாதது மனதுக்கு சங்கடமாக இருந்தது.
"என்னவாயிற்று இவருக்கு...? ஏதும் மரியாதை கொறைவா நடந்திருக்குமோ...? அவ மாமியார், மாமனார் எதுனாச்சும் சொல்லியிருப்பாங்களோ ..? தங்கமணிக்கு கலியாணமான இந்த பதினஞ்சு வருசத்துல இதா மொதமொற இவரு அவ வீட்டுக்குத் தனியா போயி நாலுநாள் தங்குனது . என்னாச்சோ தெரியலியே! மகமாயி! நா ஒரு ரூவா முடிஞ்சு வைக்கறேன் தாயி....!" பலவாறு குழம்பியபடி வெத்தலை செல்லத்தை எடுத்துக்கொண்டு கேணியடிக்குப் போனாள்.
நிலா வெளிச்சமும், குளு குளு காற்றும் ரம்மியமாய் இருந்த கிணற்றங்கரையில் கயிற்றுக் கட்டிலில், நிலாவை பார்த்தபடி மல்லாக்கப் படுத்திருந்தார் கதிரேசன்.
கட்டிலின் விளிம்பில் அமர்ந்துகொண்டு இள வெற்றிலையைத் துடைத்து, காம்பு நீக்கி, சுண்ணாம்பு, பாக்கு, துளி சர்க்கரை வைத்து மடித்து, கணவனிடம் நீட்டியபடி மீண்டும் பேச்சை எப்படி ஆரம்பிக்கலாம் என்று எண்ணியபடி அவர் முகத்தையே பார்க்கிறாள்.
நீட்டிய வெற்றிலையை வாங்காமல் "நம்ப மக அங்கன எப்பிடியெல்லாம் இருக்கா தெரியுமா காமாட்சி..? அவராக பேச்சை ஆரம்பித்தார்.
"மாமியாருக்கு கஞ்சி வெச்சு தாரா. மாமனாருக்கு கழுத்துவலின்னு வெளெக்கெண்ணை வச்சு உருவிவிடறா, சுடுதண்ணி வெச்சு குடுக்கறா, எந்த சாமானையும் வீணாக்கறதே இல்ல காமாட்சி. சிக்கனமா, அதே நேரம் எல்லாருக்கும் புடிக்கற மாதிரி சமையல் செஞ்சு போடறா. மாப்பிள்ளையையும் கண்ணுக்குள்ள வெச்சு பாத்துக்கறா, புள்ளெங்களுக்கு பாடம் சொல்லித்தரா, அட்டை போட்டு தரா, நன்னெறி, திருக்குறள்ன்னு ஏதாவது சொல்லித்தரா,....."
"ஏங் காமாட்சி.... சமையல்னா வெறும் சோறாக்கி, கொளம்பு செய்யறது மட்டுமில்லே தெரியுமா...? மொத நாளே தயிர உறையூத்தி வெக்கணும், இன்னி கால டிபனுக்கு மொத நாளே அரிசி உளுந்த ஊற வைக்கணும், அப்புறம் பக்குவமா அரைக்கணும். பொறவு ஊறுகா போடணும், பருப்புப் பொடி,இட்லிப்பொடி செஞ்சு வெக்கணும்!
"அது மட்டுமில்ல காமாட்சி.... புள்ளெங்களுக்கு தலைக்கு ஊத்தணும், சாம்பிராணி போட்டு, பேன், பொடுவு வெக்காம பாத்துக்கணும்...."
கூறிக்கொண்டே போனார் கதிரேசன்.
கன்னத்தில் கை வைத்தபடி கணவன் கூறுவதையே இமைக்காமல் கேட்டுக் கொண்டிருந்தாள் காமாட்சி.
"தாயா , மகளா, தாரமா, தோழியா, ஆசிரியையா, மருத்துவச்சியா, நிதியமைச்சரா, மந்திரியா, சமையல்காரியா, தையல்காரியா...... இப்பிடி எத்தனை பதவில இருக்கு தெரியுமா என்தங்கம்......? பெருமூச்சு விட்டார் கதிரேசன்.
"ஆ ......ங் ! இம்புட்டுதானா விசயம்...? நா இத்தினி நாளா செஞ்சது - செஞ்சிகிட்டு இருக்கறது தெரியாலியாக்கும்...? மக செஞ்சா பெரிசா தெரியுதோ...? இட்லிக்கு மொத நாளே நனைக்கணுமாம்.... அரைக்கணுமாம்....
இந்தாங்க.... இந்த வெத்தலையை புடிங்க.... நா என்னமோ ஏதோன்னு பயந்து போனேன்."
என்றவாறு சமயலறைக்குச் சென்று, தான் சாப்பிட உட்கார்ந்தாள் காமாட்சி.
"ரெட்டை சடையும், பட்டுப்பாவாடையுமா வளைய வருவா....பள்ளிக்கூடத்துல பரிசெல்லாம் வாங்கினா, காலேஜ்ல கப்புகூட வாங்கினா. அவங்க அப்பாருக்கு தங்கமணின்னா அப்பிடி ஒரு இஷ்டம். 'தங்கம்... தங்கம்' னு மூச்சுக்கு முன்னூறு தடவ கூப்பிட்டுக்கிட்டே இருப்பாரு.
"சாப்பிட்ட தட்ட கழுவி வை டீ " ன்னா போச்சு " இந்தா ...! தங்கத்தை ஒன்னும் செய்ய சொல்லாதே. அது படிக்கட்டும்" பாரு.
யாரா இருந்தா என்னங்க....? கட்டி குடுத்துட்டா தோசை சுட்டு போட்டுதானெங்க ஆகணும்...?
ஏதேதோ நினைவுகள் அலைமோத சாப்பாடு வேண்டியிருக்காமல் எழுந்து கை கழுவினாள் காமாட்சி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக