1882ம்
ஆண்டு டிசம்பர் மாதம் 11 ம் நாள் பிறந்த, சுப்ரமணிய பாரதியார் தமிழுக்கும், தமிழருக்கும்
கிடைத்த ஒரு புதையல். மொழி என்பது, ஒருவரோடு ஒருவர் உரையாடப் பிறந்ததுதான். அம் மொழியை
லாகவமாகக் கையாண்டு, மாபெரும் சமூகப் புரட்சியை உருவாக்கமுடியும் என்பதற்கு எடுத்துக்காட்டானவர்
சுப்ரமணிய பாரதியார். அவருடைய வாழ்க்கைக் காலம் முடிந்து, ஒரு நூற்றாண்டு கடந்து விட்ட
நிலையில் அவருடைய மொழிப் புலமையின் பெருமையைப் பற்றி அவ்வப்போது நினைவு கூர்ந்தால்தான்
இன்றைய தலைமுறையினர் ஒரு உத்வேகம் பெறுவர்.
முன்னுரை:
சுப்ரமணியன்
என்ற இயற்பெயரோடு சுப்பையா என்று அழைக்கப்பட்ட இவர் மிகவும் குறுகிய காலம்தான் உயிர்
வாழ்ந்தார். அதற்குள் ஆழ்கடலாம் தமிழுக்குள் மூழ்கித் திளைத்து முத்துக்களெடுத்து நமக்குக்
கொடுத்திருக்கிறார். முண்டாசுக் கவிஞன் என்று அழைக்கப்பட்ட அவர்,தனது முண்டாசுக்குள்
மூளையின் அளவை மறைத்து வைத்திருந்தாரோ என்னவோ? 39 ஆண்டுக்காலமே வாழ்ந்த அவரால் எண்ணற்ற
படைப்புகளை எவ்விதம் படைக்கமுடிந்தது? தமிழ் மொழியின் விடிவெள்ளியாம் அவரின் மொழிப்புலமை
பற்றி இக்கட்டுரையில் காண்போம்.
இளமையில் சாதனை:
ஏழு வயதிலேயே தமிழில் பாடல்கள் புனையும் ஆற்றல் பெற்றிருந்தார் சுப்பையா. பதினொன்று வயது இருக்கும்போது, எட்டயபுர மன்னர் வைத்த
போட்டி ஒன்றில் வெற்றி பெற்றதனால், இவருடைய கவிப்புலமையைப் பாராட்டிய மன்னர் இவருக்கு
‘பாரதி’ என்று பட்டத்தை வழங்கினார்.
பாரதி என்றால் ‘சரஸ்வதி’ என்பது பொருள். அன்றிலிருந்து சுப்ரமணிய பாரதி
என்று அழைக்கப்பட்டார்.
எட்டயபுரம் ஜமீன் அரண்மனையில் பல புலவர்களுடன் பழகும் சந்தர்ப்பம் சுப்பையாவுக்குக் கிடைத்தது. அங்கு இவர் இயற்கையாகக் கவி இயற்றி, அனைவரின் மனங்களையும் கொள்ளை கொண்டார். அப்போது, காந்திமதிநாதன் என்பவர் பாரதியின் கவிபாடும் ஆற்றலைச் சோதிக்க எண்ணி, "பாரதி சின்னப்பயல்" எனும் ஈற்றடி கொடுத்து ஒரு வெண்பா பாடச் சொன்னார். இவரும் "காந்திமதி நாதனைப் பார், அதி சின்னப்பயல்" எனும் பொருள்படும்படியாக வெண்பா பாடி அவரைத் தலை குனியச் செய்தார்.
பன்மொழி பாவலர்.
தாய்
மொழியாம் தமிழ் மொழி தவிர, பல மொழிகள் அறிந்த பன்மொழிப் பாவலர் பாரதியார்.
அவரின்
தந்தை கொண்டிருந்த ஆங்கில மோகத்தால் ஆங்கில வழி கல்வி பயின்றார். அதனால் ஆங்கிலத்தில்
நல்ல புலமை பெற்றவர்.
காசிக்குச்
சென்றதனால், சம்ஸ்கிருதம், ஹிந்தி, ஆகிய மொழிகளைக் கற்றிருக்கிறார்.
புதுவையில்
சிலகாலம் இருந்ததினால், ஃப்ரஞ்ச், வங்காளம் ஆகிய மொழிகளையும், முதல் உலக யுத்தம் தொடங்கியதும்,
ஜெர்மன், லத்தீன், உருது ஆகிய மொழிகளையும், சென்னையில் இருந்த போது, தெலுங்கு மொழியையும்
கற்றிருக்கிறார். இவருக்கு அரபி, மலையாளம் போன்ற மொழிகள் என 12 மொழிகளின் பரிச்சியம்
இருந்திருக்கிறது. இவற்றுள் எழுதப் படிக்கத் தெரிந்தவை 7 மொழிகள் என்றும், மற்றவை பேசினால்
அறிந்து கொள்ளக் கூடியவை என்றும் தெரிகிறது.
பைரன்,
கீட்ஸ், ஷெல்லி போன்றோரின் ஆங்கிலக் கவிதைகளையும் ரசித்து படிப்பார்.. முதன் முதலில்,
‘ஷெல்லி’ என்னும் ஆங்கிலக் கவிஞனின் கவிதைகளில் வழியும் சுதந்திர வேட்கையால் தாமும்
விடுதலை உணர்வை உணர்ந்தார்.
இத்தனை மொழிகளின் புலமை இருப்பினும்,
“யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
இனிதாவதெங்கும் காணோம்” என்று பாடியுள்ளது
நமக்கெல்லாம் பெருமை அளிப்பதாய் உள்ளது.
தெலுங்கு பாரதிக்கு மிகவும் பிடித்தமான
மொழியாய் இருந்திருக்கிறது.
அதனால்தான் ,’சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்து’ என்று, தாம் எழுதிய ‘சிந்து
நதியின் மிசை நிலவினிலே’ என்ற பாடலில் கூறியுள்ளார்.
‘சந்திரிகையின் கதை’ என்ற அவருடைய கதை ஒன்றில், வீரேசலிங்கம் பந்துலுவும், சந்திரிகையும்
தெலுங்கில் பேசிக்கொள்ளும் பகுதியில் தெலுங்கிலேயே வசனங்கள் எழுதியுள்ளார் பாரதியார்.
இது அவர் அம் மொழியில் கொண்டிருந்த அபிமானத்தை மட்டுமல்ல, அவரின் மொழிப் புலமையையும்
எடுத்துரைக்கிறது. ஆனால் இக்கதை நிறைவு பெறாமல் உள்ளது.
மொழி பெயர்ப்பு:
இறவாத புகழுடைய புதுநூல்கள்
தமிழ்மொழியில் இயற்றல் வேண்டும்;
மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள்
சொல்வதிலோர் மகிமை இல்லை;
திறமான புலமையெனில் வெளிநாட்டோர்
அதை வணக்கஞ்செய்தல் வேண்டும்.
என்ற அறிவுறுத்தலோடு கவிதை எழுதியுள்ள பாரதியார் 1904ம் ஆண்டு மொழிபெயர்ப்பாளராக சுதேசமித்திரன் இதழில் வேலைக்கு அமர்ந்துள்ளார். அதைத் தவிர தனிப்பட்ட முறையில் பல நூல்களை தமிழில் மொழி பெயர்த்துள்ளார்.
இவர் சம்ஸ்கிருதத்திலிருந்து,
பகவத் கீதை, பதஞ்சலி யோக சூத்திரம், வியாச பாரதம் ஆகியவற்றை தமிழில் மொழி பெயர்த்துள்ளார்.
ஜான்ஸ்கர், ஷெர்மன் போன்றோரின்
ஆங்கிலக் கவிதைகளையும், விவேகானந்தரின் ஆங்கில சொற்பொழிவுகள், கடிதங்கள் போன்றவற்றையும்
தமிழில் மொழி பெயர்த்துள்ளார்.
பாண்டிச்சேரியில் இருந்த போது,
ஃப்ரஞ்சு தேசிய கீதத்தைத் தமிழில் மொழி பெயர்த்துள்ளார்.
வங்காள மொழியிலிருந்த தாகூரின்
சிறுகதைகளையும், கவிதைகளையும் தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.
இவற்றை தவிர, ஒரு மொழி தெரியாவிட்டாலும்,
அம் மொழியின், வழி நூலிலிருந்து அந்த மொழியிலிருக்கும் நல்ல படைப்புகளைத் தமிழில் மொழிபெயர்க்கும்
வழக்கத்தையும் பாரதி கொண்டிருக்கிறார். அவருக்கு ஜப்பானிய மொழியும் சீன மொழியும் தெரியாது
ஆனாலும், ஜப்பானிய மொழியிலிருக்கும், ஹைக்கூ கவிதைகளையும், சியூசூனி என்ற சீனக் கவிஞரின்
படைப்புகளையும், தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.
தமிழிலிருந்து ஆங்கில மொழிபெயர்ப்பு:
நம்மாழ்வார் பாசுரங்கள், நாச்சியார்
பாசுரங்கள், திருப்புகழ் போன்ற சிறந்த தமிழ் இலக்கியங்களையும், ‘காங்கிரஸ் மகாசபை சரித்திரம்’
என்ற நூலையும் தமிழிலிருந்து ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார்.
‘பிற நாட்டு நல்லறிஞர்
சாத்திரமெல்லாம்
தமிழ் மொழியில் மொழி
பெயர்த்தல் வேண்டும்’ என்று
கேட்டுக்கொண்டுள்ளார் பாரதியார்.
பாரதியின் சொல்லாட்சி:
அவருடைய கையெழுத்துப் பிரதிகள்
கிடைக்கப் பெற்ற ஒரு திரைப்பட இயக்குனர் அதைத் தான் வாசிக்க நேர்ந்த விவரத்தை குறிப்பிடும்போது,
‘அடித்தல் திருத்தலே அந்த கையெழுத்து பிரதியில் இல்லை. வெகு நேர தேடலுக்குப் பிறகு
‘நல்லதோர் வீணை செய்தே’ என்ற பாடலில் ‘முதலில் வல்லமை தாராயோ இந்த மாநிலம் புகழ்ந்திட
வாழ்வதற்கே’ என்று எழுதியிருக்கிறார். பின்னர் ‘புகழ்ந்திட’
என்பதை அடித்து விட்டு ‘மாநிலம் பயனுற’ என்று மாற்றியுள்ளார்’. என்று கூறியுள்ளார்.
அதைத் தவிர வேறு அடித்தலே இல்லை என்பதை மிகவும் சிலாகித்து கூறியிருக்கிறார். பாரதியின்
மொழியறிவையும், சொல்லாட்சியையும், இச் செய்தி விளக்குகிறது.
போட்டியும், பரிசும்:
‘செந்தமிழ் நாடென்னும் போதினிலே’
என்ற பாடல் இன்று வரை எல்லா பள்ளிகளிலும் பாடப்பட்டு வரும் ஒரு தேச பக்திப் பாடல்.
அப்பாடல் பிறந்த கதையைப் பற்றி சில மாறுபட்ட கருத்துக்கள் இருந்த போதிலும், பரவலாக
எல்லோராலும் பேசப்படுவது யாதெனில், போட்டிக்காக எழுதப்பட்ட அப் பாட்டிற்கு மூன்றாம்
பரிசுதான் கிடைத்திருக்கிறது. ஆனால் முதல், இரண்டாம் இடத்தைப் பிடித்த பாடல்கள் இருக்கும்
இடம் தெரியாமல் இருக்கையில் மக்கள் மனதில் முதல் இடத்தைப் பிடித்து வெற்றி பெற்றுள்ளது
இப் பாடல். இச்செய்தி இன்றைய மாணவர்களுக்கு ஒரு அறிவுரையாக உள்ளது. ‘போட்டி’ என்றால்
அதில் பங்களிப்புக்குத்தான் முதலிடம் தரவேண்டும் ‘பரிசு’ என்பது இரண்டாம் பட்சமாகத்தான்
எண்ணவேண்டும்.
வளரும் பிள்ளைகளுக்கு பாரதியின் அறிவுரை:
தாம் பாடிய ‘பாப்பா பாட்டு’ என்னும்
பாட்டில் பாரதியார், எதிர்காலத் தூண்களாம் இன்றைய மாணவச் செல்வங்களுக்குப் பலவிதமான
அறிவுரைகள் கூறியுள்ளார்.
அதில், தாய் நாட்டின் பெருமை,
தாய் மொழியின் பெருமை ஆகியவற்றை அறிவுறுத்தும் போது, தமிழ் சொற்களின் பெருமையினை எடுத்துரைத்துள்ளார்.
‘சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே – அதைத்
தொழுது படித்திடடி பாப்பா’ என்றும்,
‘ஊருக்கு நல்லது சொல்வேன்’ என்ற பாட்டில்
‘தேமதுர தமிழோசை உலகமெலாம்
பரவும் வகை செய்தல் வேண்டும்’
‘சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம்
தமிழ் முழக்கம் செழிக்கச் செய்வீர்’ என்றும் பாடியுள்ளார்.
போகின்ற பாரதமும், வருகின்ற பாரதமும்’
என்ற தேசிய கவிதையில் நம் நாட்டிற்குத் தேவையானவற்றை வா, வா என்றும் தேவையில்லாத வற்றை
போ போ என்றும் பாடி மாணவர்களை வழி நடத்துகிறார். தமிழ் மொழி இனிமை உணராமல் அந்நிய மொழி
மோகம் கொண்டுள்ள இளைஞர்களிடம்,
‘வேறு வேறு பாஷைகள் கற்பாய் நீ
வீட்டு வார்த்தை கற்கிலாய் போ, போ’ என்ற பாரதியின் வரிகள் இக்காலத்திற்கு
மிகவும் தேவையானது.
இதைத் தவிர,
‘மெல்லத் தமிழினிச் சாகும் – அந்த
மேற்கு மொழிகள் புவிமிசை யோங்கும்.
சென்றிடுவீர் எட்டுத் திக்கும் – கலைச்
செல்வங்கள் யாவுங் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்!’ என இன்றைய
இளம் மாணவச் செல்வங்களுக்கு அறைக்கூவல் விடுத்திருக்கிறார் பாரதி.
புதுக்கவிதைக்குப் புத்துயிர்:
‘பாட்டுக்கொரு தலைவன்’ என்று கவிமணியால்
போற்றப்பட்ட பாரதியார் ‘நாட்டுக்கொரு தலைவன்’ ஆக வீறு நடை போட்டவர். தொல்காப்பியத்
தமிழில் கவிதைகள் எழுதப்பட்டுக்கொண்டிருந்த காலத்தில் இலக்கணக் கட்டுக்களைத் தகர்த்தெறிந்து,
எளிய மொழியில், எதுகையும், மோனையும் மின்னிட, ராகமும், தாளமும் கொடுத்துப் பாட்டெடுத்த
பாட்டாளர். தமிழ்க் கவிதகளை பாமரனும் எளிதில் படித்து
இன்புறும் வகையில் செய்த மாமேதை.
பாரதியின் முதலும், கடைசியுமான படைப்புகள்:
1902ம் ஆண்டு பாரதியார் எழுதிய
‘தனிமை இரக்கம்’ என்ற கவிதை ‘விவேக பாநு’ என்ற இதழில் முதன்முதலில் அச்சேறி வெளிவந்தது.
அப்போது அவருக்கு வயது 20.
‘பாரத சமுதாயம் வாழ்கவே’ என்ற
கவிதைதான் அவர் எழுதிய கடைசி கவிதை. இதற்கிடையில் அவர் எழுதிய கவிதைகள் எத்தனை என்பதை எண்ணிச் சாத்தியமில்லை.
‘ஸ்வதேச கீதங்கள்’ என்ற புத்தகத்தைத்
தான் இவர் முதன் முதலில் வெளியிட்டுள்ளார்.
முடிவுரை:
சமூக சிந்தனை மிக்க சீர்திருத்தவாதியான இவர் உலகத்தைக்
கூர்ந்து நோக்கியவர். மனித குலத்தின் அத்தனை
வயதினருக்கும் ஆண்,பெண் பேதமின்றி, ஏற்றத் தாழ்வுகளின்றி, ஜாதி பாகுபாடின்றி கவிதைகள்
புனைந்தவர். தம் எழுத்தின் வாயிலாக புரட்சி செய்த புரட்சியாளர். தமிழ், தமிழர் நலன்,
இந்திய விடுதலை, பெண் விடுதலை, சாதி மறுப்பு, போன்ற பற்பல விஷயங்களைக் கையிலெடுத்து,
தன் வார்த்தை ஜாலத்தால், கவிதை, கட்டுரை, கதை, வசனக் கவிதை, நாடகம் போன்றவற்றால், அவற்றிற்கெல்லாம்
தீர்வு காண முயன்றவர். தீர்வு கண்டவர். அவர் படைப்புகளை படித்து, உலகெங்கும் பரப்பி,
இன்புறுவோமாக!