செவ்வாய், 4 டிசம்பர், 2018

பாரதியாரின் இறுதி நாட்கள்


Image result for image of bharathiyar


முன்னுரை:
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் வாழ்ந்து வந்த சின்னசாமி ஐயர் மற்றும் லக்ஷ்மி அம்மையாருக்கு 1882ம் வருடம் டிசம்பர் மாதம் 11 ம் நாளன்று பிறந்தவர் தான், பிற்காலத்தில், பாரதியார் என்றும் மகாகவி என்றும் அழைக்கப்பட்ட சுப்ரமணிய பாரதியார்.  தமிழில் ஆர்வமும், புலமையும் பெற்றிருந்த  இவர், தேசிய உணர்வு மிக்க கவிதைகள் மட்டுமின்றி, கட்டுரைகள், கதைகள், வசனக் கவிதைகள், நாடகங்கள் போன்றவற்றால், நாட்டுப்பற்றையும், சமூக சீர்திருத்த எழுச்சியையும் உண்டாக்கி, ‘தேசிய கவியாக’ போற்றப்பட்டவர். குறுகிய வாழ் நாட்களே கொண்டிருந்த பாரதியாரின் இறுதி நாட்கள் எவ்விதம் இருந்தன என்று இக் கட்டுரையில் காண்போம்.
பாரதியின் மரணம்:
‘நிமிர்ந்த நன்னடை; நேர்கொண்ட பார்வை;; முண்டாசுத் தலை; நெருப்பு விழிகள், முறுக்கு மீசை; விறைப்பான மேனி; வீரியமிக்க முகம்; எலுமிச்சை நிறம்; எடுப்பான உடை, இடியென குரல், துடிப்பான செயல்; இப்படிப்பட்ட அடையாளச் சின்னங்களைக் கொண்டிருந்த பாரதியார் 1921ம் ஆண்டு செப்டம்பர் 11ம் நாள் தனது 39ம் வயதில் இயற்கை எய்தினார்.
மரணம் குறித்த செய்தியும், நிகழ்ந்ததும்
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் யானை, அவரைத் தன் துதிக்கையால் தூக்கிப் போட்டு காலால் மிதித்ததால் இறந்தார் என்ற செய்தி பரவலாக எல்லோராலும் சொல்லப்பட்டுவருகிறது. ஆனால் இச் செய்தி முற்றிலும் தவறானது.
1921ம் ஆண்டு திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் யானை தாக்கியது உண்மைதான். ஆனால் பாரதியார் அப்போது உயிரிழக்கவில்லை. ஜூலை மாதத்தில் யானை தாக்கியபோது, அவர் தலையிலும், மார்பிலும் பலத்த காயங்கள் ஏற்பட்டன அதிலிருந்து மீண்ட அவர் கடும் வயிற்றுக்கடுப்பு ஏற்பட்டதனால், 2 மாதங்கள் கழித்து, செப்டம்பர் மாதம்தான் இறந்தார்.
கடைசி மூன்று வருடங்கள்:
1949ம் ஆண்டு அவரது படைப்புகள் அனைத்தையும் நாட்டுடமை ஆக்கியது தமிழ்நாடு அரசு. இந்தியாவிலேயே முதன் முதலில் நாட்டுடமையான இலக்கியவாதி என்ற பெருமையைப் பெற்ற பாரதியாரின் இறுதி மூன்று வருடங்கள் துயரமும், சோதனைகளும், ஏமாற்றங்களும், அவமானங்களும் நிறைந்ததாகவே இருந்தது. தூற்றுவார் தூற்றட்டும் என்ற மன உறுதியுடன், தன் கருத்தினின்றும், கொள்கையினின்றும், சிறிதும் வழுவாமல் அனைத்தையும் எதிர்கொண்டார்.
கடையத்தில் பாரதியார்:
இறுதி மூன்றாண்டுகளில் முதல் இரண்டாண்டுகள் தன் மனைவி செல்லம்மாவின் ஊரான கடையத்திற்கு குடிபெயர்ந்தார். என்றென்றும் தாம் ஒரு ‘கவிஞன்’ என்ற தன்னம்பிக்கையுடன்  தலை நிமிர்ந்து வாழ்ந்தார். கடையத்தில் இருந்தபடியே ‘சுதேசமித்ரன்’ பத்திரைகைக்குக் கட்டுரைகள் எழுதுவார். தன் கருத்தில் உறுதியுடன் சீர்திருத்த பணிகளை அவர் செய்து வந்ததை கடையம் மக்கள் வரவேற்கவில்லை. அவரை சரிவர புரிந்துகொள்ளாமல், எதிர்த்தபடி இருந்தனர். அங்கிருந்தபடியே ‘கலா நிலையம்’ என்ற அமைப்பை ஏற்படுத்தி, அதன் மூலம் தமிழ்பணிகள் புரியத் தொடங்கினார். அதைத் தவிர, தனிமனித உரிமை, சமதர்மம், பெண்கல்வி, பெண்விடுதலை, ஆணுக்குப் பெண் சமம் போன்ற தனது முற்போக்கான சிந்தனைகளை மக்கள் புரிந்து கொள்ளவும், அதை நடைமுறைப்படுத்தவும் முயன்றார். ஆனால் கடையம் மக்கள் அவரை ஏற்காமல் தூற்றினர். இதனால் மிகவும் மனவேதனைப்பட்டார்.
பாரதி எழுதிய சீட்டுக்கவி:
கடையத்தில் வறுமையும், மன சலிப்பும் வாட்டியதால் அங்கேயே தொடர்ந்து இருக்க அவர் விரும்பவில்லை. அதனால், திருவனந்தபுரம், எட்டயபுரம் ஆகிய ஊர்களுக்குச் சென்று வாழ்ந்தார். பணமின்மையால், பல நாட்கள் பட்டினி கிடந்தார். அப்போது அவருடைய தம்பி சு.விஸ்வநாதன் போன்றோர் வற்புறுத்தியதால் 1919ம் ஆண்டு மே மாதம் 2 ம் நாளன்று வெங்கடேச எட்டப்ப பூபதி ஜமீன்தாருக்கு சீட்டுக்கவி அனுப்பியிருக்கிறார்.
சீட்டுக்கவி என்பது 96 வகை சிற்றிலக்கியங்களில் ஒன்றாகும். இது, ஒரு கவியரசர்,  தனக்கோ அல்லது பிறருக்கோ உதவி செய்யுமாறு கேட்டு முடியரசர் அல்லது வள்ளல்ஒருவருக்கு அனுப்பும் விண்ணப்பக்கவி ஆகும். இதில் கவிஞர் அந்த முடியரசரையோ அல்லது வள்ளலையோ வானளாவ புகழுவார்கள். அதற்கிடையில் தங்களின் பெருமையையும் சிறிதளவு காட்டி எழுதியிருப்பர்.
ஆனால் பாரதியின் சீட்டுக்கவி முற்றிலும் வேறுபட்டதாக இருந்தது. அவர் எட்டயபுர மன்னரைப் பாராட்டுவதை விட, தன்னைப் பற்றிய அறிமுக செய்திகளுக்கே முதலிடம் கொடுத்திருந்தார். இந்த அளவு மன்னனையும், தன்னையும் சமமாக வைத்து எந்த புலவரும் இதுவரை சீட்டுக்கவி எழுதியதில்லை.
அதில், ‘கவியரசனை, புவியரசன் தக்கபடி ஆதரிக்கவேண்டும்’ என்று குறிப்பிட்டிருந்தார். ஆனால் ஜமீந்தாரிடமிருந்து பாரதியாருக்கு உதவி எதுவும் கிடைக்கவில்லை. சோதனைகள் தொடர்ந்து வந்தன. சமய சொற்பொழிவு ஆற்றவும், கவிதைகள் பாடவும், சந்தர்ப்பம் கிடைத்ததால், அதில் தனது மனதை ஈடுபடுத்தி, கவலைகளை மறக்க முயற்சித்தார்.
மீண்டும் சென்னைவாசம்:
இரண்டாண்டுகளுக்குப் பிறகு கடையத்திலிருந்து, சென்னைக்கே வந்து குடியமர்ந்த பாரதியார், ராஜாஜி இல்லத்தில், காந்தியடிகளை சந்தித்து, அவரின் இயக்கத்திற்கு தன் வாழ்த்துக்களைத் தெரிவித்துகொண்டதுடன், அன்று மாலை திருவல்லிக்கேணி கடற்கரையில் தாம் ஆற்றிய சொற்பொழிவில் ‘வாழ்க நீ எம்மான்’ என்று காந்தியடிகள் மேல் ஒரு பாட்டெழுதிப் பாடினார்.
1920ம் ஆண்டு முதல் மீண்டும் ‘சுதேசமித்திரன்’ பத்திரிகையில் பணியாற்றவருமாறு, ரெங்கசாமி ஐயங்கார் அழைப்பு விடுத்ததை ஏற்று, அதன் துணையாசிரியராகப் பணியில் அமர்ந்தார். அப்போது தன் இயற்பெயரில் மட்டுமல்லாது, ‘சக்திதாசன்’ ‘காளிதாசன்’ போன்ற புனைப்பெயர்களில் நிறைய எழுதியுள்ளார்.
1920 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 2ஆம் நாள் பொட்டல்புதூரில் 'இஸ்லாம் மார்க்கத்தின் மகிமை' என்ற பொருள் பற்றி உரையாற்றினார்
சென்னையில் பாரதியார் முதலில் தம்புச்செட்டித் தெருவிலும் பின்னர் திருவல்லிக்கேணியில் துளசிங்கப் பெருமாள் கோயில் தெருவிலும் வாழ்ந்து வந்தார். இக்காலகட்டத்தில் பாரதியாருக்கு வ.வே.சுப்பிரமணிய ஐயர், குவளைக் கிருஷ்ணமாச்சாரியார், சுரேந்திர நாத் ஆர்யா, துரைசாமி ஐயர், ஆகியோருடன் மீண்டும் கலந்து உறவாடும் வாய்ப்பு கிடைத்தது. இவர்களுடன் உரையாடிப் பொழுது போக்குவது பாரதியாரின் அன்றாடத் தொழில் ஆயிற்று. பத்திரிகையில் பணியாற்றிய நேரம் போக, மீதியுள்ள நேரத்தில் அவர் வெளியீர்களுக்குச் சென்று சொற்பொழிவுகள் ஆற்றினார். கூட்டங்களில் உணர்ச்சி மிக்க குரலில் பாடினார். 1921ம் ஆண்டு மார்ச் மாதம் 25ம் நாள் அவர் கடலூர் சென்று பேசினார். 


கோயில் யானையால் நிகழ்ந்த கோரம்:

பாரதியார் சென்னையில் வாழ்ந்த காலகட்டத்தில் இறை வழிபாட்டில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார். நாள்தோறும் பார்த்தசாரதி கோயில் சென்று வழிபாடு செய்துவந்தார். அக்கோயில் யானையுடன் மிக நெருங்கிப் பழகினார்; யானைக்குத் தேங்காய், பழம் முதலியன கொடுப்பதை வாடிக்கையாகக் கொண்டார். அந்த யானைக்கு ஒரு நாள் திடீரென்று மதம் பிடித்துக் கொண்டது. வழக்கம்போல் பாரதியார் யானையிடம் சென்றார்; அங்கே இருந்தவர்கள் எச்சரித்தும் கேளாமல் அதற்குத் தின்பண்டம் அளித்தார். கோயில் யானை பாரதியாரைத் துதிக்கையால் தூக்கிப் போட்டுவிட்டது. காயமுற்று, உணர்விழந்த நிலையில் யானைக்குச் சற்றுத் தொலைவிலேயே விழுந்த பாரதியாரை, குவளையூர் கிருஷ்ணமாச்சாரியாரே துணிவுடன் வந்து காப்பாற்றினார்.
பாரதியாருக்குத் தலையிலும் உடம்பிலும் காயம் ஏற்பட்டதால், உடனடியாக இராயப்பேட்டை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப் பெற்றது.

சிகிச்சைக்குப் பின் பாரதியார்
சில நாட்களில் பாரதியார் உடல்நலம் தேறினார்.  என்றாலும், முன்பு போல் உடம்பு அவ்வளவு தெம்பாக இல்லை. வழக்கம் போல் 'சுதேசமித்திரன்' அலுவலகம் சென்று அவர் தமது பத்திரிகைப் பணிகளைக் கவனித்து வந்தார்; வெளியூர்களுக்குச்சென்று அவ்வப்போது சொற்பொழிவுகள் நிகழ்த்தியும் வந்தார்.

பாரதியின் இறுதி சொற்பொழிவு:
1921 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்  1ம் நாள்  ஈரோட்டை அடுத்த கருங்கல்பாளையத்தில் இருந்த வாசகசாலை ஆண்டு விழாவில், பாரதியார் பேசிய சொற்பொழிவின் தலைப்பு என்ன தெரியுமா? 'மனிதனுக்கு மரணமில்லை' இதுவே அவரின் கடைசி சொற்பொழிவு ஆயிற்று.
அக் கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தவர் அப்போதைய காங்கிரஸ்காரர் ஒருவர். அவர் ஒரு வழக்கறிஞர். சென்னையிலிருந்து ஈரோட்டிற்கு ரயிலில் வரும் பாரதியை அழைத்து வருவதற்கு, அந்த வழக்கறிஞர் ஒரு இளைஞரை ரயில் நிலையத்திற்கு அனுப்பினார். நெடு நேரம் காத்திருந்த அந்த இளைஞர், பாரதியை அந்த ரயிலில் காணாமல், அவர் வரவில்லை என்று நினைத்து வக்கீல் வீட்டிற்கு திரும்பிவிட்டார்.
அங்கே அப்போது வக்கீலுடன் வேறு ஒருவரும் அமர்ந்திருந்தார். ‘பாரதி ரயிலில் வரவில்லை’ என்று அந்த இளைஞர் சொன்னதும், ‘அப்படியா! இவரை கூர்ந்து பாருங்கள். யாரென்று தெரிகிறதா?’ என்று கேட்டதும்தான் அவருக்கு பாரதி முன்னமே அங்கு வந்து சேர்ந்தது தெரிந்தது. தம்மை அழைக்க ஒருவர் வந்திருப்பர் என்றே உணராமல் ஒரு வண்டி பிடித்து கருங்கல்பாளையம் வந்து சேர்ந்துவிட்டர் பாரதி. பாரதி என்றாலே கருப்பு கோட்டும், முண்டாசும்தான் அனைவரின் நினைவுக்கும் வரும். உடல் நலம் சற்றே தேறியிருந்த நிலையிலிருந்த பாரதியார், தனது வழக்கமான கருப்பு கோட்டையும், முண்டாசையும் தவிர்த்திருந்தார். அதனால்தான் அந்த இளைஞருக்கு அவரை அடையாளம் தெரியவில்லை.
ஆகஸ்ட் 2ம் நாள் அதே ஈரோட்டில் 'இந்தியாவின் எதிகால நிலை' என்பது பற்றி உரையாற்றினார். முதல் நாள் 'மனிதனுக்கு மரணமில்லை' என்ற தலைப்பில் ஆன்மீகச் சொற்பொழிவு, அடுத்த நாள் அரசியல் சொற்பொழிவு. ஆன்மீகத்தையும், அரசியலையும் உயிர் மூச்சாகக் கொண்டிருந்த பாரதியாரின் இறுதி சொற்பொழிவுகள் இவை இரண்டும் தான். 


மகாகவியின் மரணம்
யானையால் தாக்குண்ட அதிர்ச்சியினின்றும் பாரதியார் ஓரளவு நலம் பெற்றார் என்றாலும், உடல் மட்டும் முழுவதும் தேறவில்லை. 1921 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் மீண்டும் அவரது உடல்நிலை சீர்கெட்டது; வயிற்றுக் கடுப்பு நோய் அவரை வாட்டியது. ஏற்கனவே உடல் நலிவுற்றிருந்த நிலையில் நோயை எதிர்த்து நிற்பதற்கு உரிய ஆற்றல் பாரதியாரின் உடலில் இல்லை. மருந்து உண்ணுமாறு நண்பர்களும் உறவினர்களும் வற்புறுத்திக் கூறியதைப் பாரதியார் பொருட்படுத்தவில்லை. இந்நிலையில் 1921 ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் நாள் நோயின் கடுமையால் பாரதியார் பெரிதும் துன்புற்றார்; அன்று நள்ளிரவு தாண்டி ஒரு மணியளவில், அவர் உயிர் பிரிந்தது ஆம்; தமது முப்பத்தொன்பதாம் வயது முடியும் முன்னரே மரணமடைந்தார்.
அந்த மகாகவி மரணித்திருக்கலாம். ஆனால் அவர் எழுத்தின் வீரியம் இன்னும் கனன்று கொண்டேதான் இருக்கிறது.
வாழ்க பாரதி! வாழ்க அவர் புகழ்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக