சனி, 18 மே, 2019

ஹயக்ரீவா


ஹயக்ரீவா.
நாங்கள் சமீபத்தில் கர்னாடகாவில் பெங்களூர், மைசூருக்கு சுற்றுலா சென்றிருந்தோம். பெங்களூருவில் காய்கறிகாரர்கள், ஹோட்டல்காரர்கள் என அனைவருமே தமிழிலும் பேசியதால் எளிதாக உணர்ந்த நாங்கள், மைசூரில் நிறையபேர் கன்னடத்தில் மட்டும் பேசியதையும் பார்த்தோம். நமக்கு, கன்னடம் துளியும் தெரியாத அதே வேளையில், நமக்குத் தெரிந்த ஹிந்தியும், ஆங்கிலமும் அங்கு செல்லுபடியாகவில்லை.
கர்னாடக பாரம்பரிய உணவுகளை சாப்பிடவிரும்பி, மைசூரில் ஒரு சிறிய மெஸ் போன்ற ஒரு உணவு விடுதிக்குள் இரவு உணவு சாப்பிடச் சென்றோம். அங்கு ஆங்கிலத்தில் உணவுப் பெயர்களை எழுதியிருந்தனர்.

HAYAGRIVA, KHARA PONGAL, PADDU, TATTE IDLI, NEER DOSA, MASALA DOSA

ஹயக்ரீவா என்று ஒரு ஸ்வாமி பெயர் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் இது என்ன பதார்த்தம் என்று தெரியவில்லை. கார பொங்கல் என்பது உப்புமாவா, பொங்கலா என்று புரியவில்லை. ‘பட்டு’ என்பது என்னவென்றே விளங்கவில்லை. டாட்டி இட்லி. ஏதோ ஒரு வகை இட்லி என்று மட்டும்  புரிந்தது. நீர் தோசை, மசால் தோசை கேள்விப்பட்ட வகைகளாக இருந்தன. நான் எப்போதும் வித்தியாசமாக சாப்பிட விரும்புவேன். என் கணவரோ, எனக்கு ‘KNOWN DEVIL. மசால் தோசை’ என்றார். அது மெஸ் போல இருந்ததால் கவுண்டரில் டோக்கன் பெற்று, உள்ளே டோக்கனைக் கொடுத்து நமது ஆர்டரை வாங்கிக் கொண்டு, அங்கங்கே இருக்கும் உயரமான டேபிளில் வைத்துக்கொண்டு நின்று கொண்டே சாப்பிட வேண்டும்.
எனக்கோ கர்னாடக பாரம்பரிய உணவைத் தான் சாப்பிட ஆசை. கூட்டம் அதிகமாக இருந்தது. இருந்தாலும் நான் மெள்ள உள்ளே போய், ‘ஹயக்ரீவா’ ன்னா என்னமா’ என்றேன். அங்கே இரண்டு பெண்கள் சர்வ் செய்து கொண்டிருந்தனர். அந்தப் பெண் எதோ விளக்கினாள். அது எனக்குப் புரியவில்லை. ‘ஏம்மா, அது மெயின் டிஷ்ஷா, ஸயிட் டிஷ்ஷா, என்று நான் கேட்டது அப்பெண்ணிற்குப் புரியவில்லை. அவள் அந்த ‘ஹயக்ரீவா’ வை கரண்டியில் எடுத்து எனக்குக் காண்பித்தாள். அது கொஞ்சம் செமி சாலிட்டாக இருந்தது. அத்தனைக் கூட்டத்திலும் அவள் எனக்குப் பொறுமையாக புரியவைக்க முயன்றது எனக்குப் பிடித்திருந்தது. ஏதாவது களி அல்லது கூழாக இருக்கலாம் என்று நினைத்தேன். ‘பட்டு’ எதும்மா?’ என்றேன். அவள் காட்டியது குழிப்பணியாரம். ‘சரி, டாட்டி இட்லி? என்றேன். அவள் அதையும் பொறுமையாகக் காட்டினாள். அது ‘தட்டு இட்லி’. எல்லாவற்றையும் பார்த்துவிட்டு நான் ‘ஹயக்ரீவா’வையே முயற்சிக்கலாம் என்று முடிவெடுத்தேன். மீண்டும் க்யூக்கு வந்து, ஒரு ஹயக்ரீவா, ஒரு மசால் தோசை, ஒரு நீர் தோசை’ க்கு டோக்கன் வாங்கிக்கொண்டு ஃபுட் கவுண்டருக்கு வந்த என்னைப் பார்த்து அந்தப் பெண் ஸ்னேகமாக சிரித்தது கூட எனக்குப் பிடித்திருந்தது.
நான் என் கணவருடன் டேபிளுக்கு வந்து சாப்பிட ஆரம்பித்தேன். முதலில் ஆர்வமாக ஹயக்ரீவாவைத்தான் சுவைத்தேன். அது சக்கரைப்பொங்கல், அக்காரஅடிசல் போன்றதொரு ஒரு இனிப்புப் பதார்த்தம். என் கணவரோ ‘இதுதான் உனக்கு டின்னரா…? மறுபடியும் க்யூல போய் ஏதாவது தோசை வாங்கிக்கொள்’ என்றார். எனக்கு அதன் சுவை மிகவும் பிடித்திருந்தது. ‘இல்லை… எனக்கு இன்று இதுதான் டின்னர்’ என்று கூறிவிட்டு, மீண்டும் ஃபுட் கவுண்டருக்குச் சென்று, அந்தப் பெண்ணிடம், ‘நல்லா இருந்தது’ என்றேன். அவள் ஸ்னேகமாய் சிரித்தாள்.

பின்னர் ஊருக்கு வந்ததும், கூகுக்ளில் நான் தேடிப்பார்த்தது, ‘ஹயக்ரீவா’ வைத்தான். விஷ்ணுவின் அவதாரமான ‘ஹயக்ரீவா’ என்ற கடவுள் குதிரை முகமும், மனித உடலும் கொண்டவர். அவர், அறிவு மற்றும் புத்திகூர்மையின் அதிபதியாகக் கருதப்படுகிறார். குதிரை முகம் கொண்ட இவரை ‘வேகமும், விவேகமும்’ வேண்டி மக்கள் வழிபடுகின்றனர்.
’ஹயக்ரீவா’ என்று இந்த இனிப்பிற்குப் பெயர் வரவும் ஒரு கதை கூறப்படுகிறது. உடுப்பி ஸ்ரீ வடி வடிராஜா மடத்தில் ஸ்ரீ வடிராஜதீர்தா’ என்ற பக்தர் தினமும் கடலைப்பருப்பைக் கொண்டு தயாரித்த ஒரு இனிப்பைத் தன் தலைமேல் வைத்துக்கொண்டு, பகவான் ஹயக்ரீவரின் ஸ்லோகங்களை சொல்லிக்கொண்டு, நைவேத்யம் செய்து வந்தாராம். ஹயக்ரீவர், வெள்ளைக் குதிரையின் உருகொண்டு வந்து அந்தப் பிரசாதத்தை உண்பாராம். அதனால் இன்றும் அந்த மடத்தில் கடலைப்பருப்பையும், வெல்லத்தையும் கொண்டு தயாரிக்கப்படும் ‘ஹயக்ரீவா’ பிரசாதமாகத் தயாரிக்கப்படுகிறது.
ஹயக்ரீவா தயாரிக்க தேவையான பொருட்கள்:

கடலை பருப்பு       -  1 cup
பொடித்த வெல்லம்   -  ¾ - 1 cup
துருவிய தேங்காய்   -  ½ மூடி
ஏலப்பொடி           -  சிறிதளவு
நெய்                -  ¼ cup
முந்திரி, பாதாம்,     -  15 – 20
உலர் திராட்சை      -  தேவையான அளவு
செய்முறை :
கடலைப் பருப்பை நன்கு களைந்து, pressure pan ல் 5 whistle வரும் வரை வேகவிடவேண்டும்.
வெந்த பருப்பை, கரண்டி அல்லது மத்தால் நன்கு மசிக்க வேண்டும்.(ஹயக்ரீவாவை மசித்தும் செய்யலாம். மசிக்காமல், வெந்த முழு பருப்பைக் கொண்டும் செய்யலாம்.)
மசித்த பருப்பில், பொடித்த வெல்லத்தை சேர்த்து, அடிபிடிக்காமல் கிளற,கிளற வெல்லம் கரைந்து ஒன்று சேர்ந்து, கெட்டிப்படும்.
வெல்லம் நன்கு கரைந்ததும், பாதி அளவு நெய்யை சேர்க்கவேண்டும்.
மற்றொரு அடுப்பில் இலுப்பக்கரண்டியை ஏற்றி, நெய்யில், முந்திரி, பாதாம், திராட்சையை வறுத்து பருப்பு, வெல்லக் கரைசலில் சேர்க்கவேண்டும்.
ஏலப்பொடி, துருவிய தேங்காய், மீதமுள்ள நெய்யை சேர்த்து இறக்கினால் சுவையான ‘ஹயக்ரீவா’ தயார்.

கடலைப்பருப்பை மசிக்காமல் இருந்தால், முழு முழு வெந்த கடலைபருப்பு, கடிபட்டு, சுவையில் வேறுபடும்.