பரத்தும், பார்கவியும், கொல்லைப்புறம் தோட்டத்தில் விளையாடிக்கொண்டிருந்தனர். செல்லம்மா பாட்டியின் மகள் வயிற்றுப் பேரப்பிள்ளைகள் அவர்கள். ஹைதராபாத்திலிருந்து நேற்றுதான் அவர்கள் வந்தார்கள். மகளும், மருமகனும் ஒரு கல்யாணத்திற்காக மதுரை வரை போயிருக்கின்றனர். பிள்ளைகள் இருவரும் கிணற்றங்கரையிலும் சுற்றி உள்ள தென்னை, மா மரங்கள் இருக்கும் தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருக்கின்றனர். செல்லம்மா கிச்சனில் குழந்தைகளுக்குப் பிடித்த சமையல் செய்துகொண்டிருந்தாள்.
திடீரென தோட்டத்திலிருந்து 'ஆ.. அம்மா' என்ற அலறல் கேட்டதும் பயந்து போய் கொல்லைப்புறம் ஓடினாள் செல்லம்மா பாட்டி. பரத்தின் காலில் சீதமுள் குத்தியிருந்தது. பார்கவி செய்வதறியாமல் 'பாட்டி... பாட்டி' என்று அழுகையுடன் அழைத்தாள். பரத் காலைப் பிடித்தபடி உட்கார்ந்திருந்தான். முள் செடியின் குச்சியிலிருக்கும் ஒரு முள் காலில் ஏறியிருந்தது. பாட்டி அதை லாகவமாக காலிலிருந்து உருவினாள்.
'ஐ வில் கால் அம்மா அண்ட் டெல்' என்று பரபரத்தாள் பார்கவி.
'அம்மாடி... இப்போ ஃபோன் பண்ண வேண்டாம். அம்மா பயந்துடுவா. வந்ததும் சொல்லிக்கலாம்' என்றாள் செல்லம்மா.
'மருந்து ஏதாவது தரணுமே பாட்டி.. அண்டிபயாடிக் குடுக்கலாமா? டாக்டர்கிட்ட போலாமா பாட்டி' பெரியமனிஷி போல பார்கவி கேள்விகளை அடுக்கினாள்.
பேத்தி பேசுவதைப் பெருமையுடன் பார்த்த பாட்டி, 'இதுக்கு மருந்து இங்கேயே இருக்கு தங்கம்' என்றாள். '
'பத்துரதன், புத்திரனின், மித்திரனின், சத்துருவின், பத்தினியின் காலை வாங்கித் தேய்' என்றாள்.
'பாட்டி... என்ன பாட்டி...மருந்து இருக்குன்ன.. அப்புறம் ஸ்லோகம் மாதிரி ஏதோ சொல்ற..!' சிணுங்கினான் பரத்.
'ஒது ஒண்ணும் இல்லடா கண்ணு...முள்ளு உள்ள போகல... முள்ளு குத்தின வலிக்கு இதுதான் மருந்து' என்று பாட்டி சொன்னதும் புரியாமல் பாட்டியைப் பார்த்தனர் பரத்தும், பார்கவியும்.
'என்ன பாட்டி சொல்ற.. ஒண்ணுமே புரியலியே!' என்றாள் பார்கவி.
பாட்டி அந்த பட்டை மறுபடியும் சொன்னாள்.
'பத்துரதன்,
புத்திரனின்,
மித்திரனின்,
சத்துருவின்,
பத்தினியின்
காலை வாங்கித் தேய்'
பத்துரதன் யாரு? தசரதன்
தசரதனின் புத்திரன் யாரு? பாட்டி கேட்டதும், 'ராமன்' என்றனர் இருவரும்.
'ம்ம்.. ஆமாம்.' என்ற பாட்டி,
'ராமனின் மித்திரன் யாரு? கேட்டாள் பாட்டி.
'மித்திரன்' ன்னா என்ன பாட்டி?' என்றான் பரத்.
'டேய்.. மித்திரன்னா ஃப்ரண்ட் டா' என்றாள் பார்கவி.
'கரெக்ட்.. ராமனோட ஃப்ரெண்ட் சுக்கிரீவன்' என்றாள் பாட்டி.
அதற்குள் பரத்... 'பாட்டி மருந்து சொல்றன்னு சொன்ன.. ராமாயணம் சொல்ற' என்றான்.
சிரித்த பாட்டி... 'இரு பரதா... ராமாயணத்துக்குள்ள தான் மருந்து இருக்கு.' என்றபடி,
'பார்கவி... எங்க விட்டோம்?' என்று கேட்டாள்.
'ராமனோட ஃப்ரெண்ட் சுக்கிரீவன்' என்றாள்.
'ஹ்ம்.. மித்திரனின் சத்ரு யாரு?' என்று நிறுத்தினாள்.
'பாட்டி.. சத்ருன்னா எனிமி.. சுக்கிரீவனின் எனிமி வாலி' நீதான் எனக்கு ராமாயணக் கதை சொல்லியிருக்கியே!' என்று சிரித்தாள்.
'ஆமாண்டி செல்லம்...' என்று பாட்டி, பேத்தியை. கட்டிக்கொண்டு.
சுக்கிரீவனின் சத்ரு வாலி. வாலியோட பத்தினி யாரு?' என்றதும். 'தாரை' என்றான் பரத். ' அட.. சரியா சொல்லிட்டியே' என்ற பாட்டி. 'தாரையின் காலை வாங்கித் தேய். 'தாரை'ல இருக்கற கால எடுத்தா என்ன.. தர.. தரையில தேச்சா முள்ளு குத்தின வலி போயிடும்' என்றதும். 'ஏமாற்றம் ஒருபக்கம் இருந்தாலும், 'இந்த பாட்டுக்குள்ள இவ்ளோ அர்த்தம் இருக்கா பாட்டி' என்ற பரத். முள் குத்தின இடத்த தோய்க்கற கல்லுல நன்கு தேய்த்தான். வலி போயே போச்.
மீண்டும் விளையாட ஓடிவிட்டனர் பிள்ளைகள். புன்சிரிப்புடன் செல்லம்மா பாட்டி சமையல் கட்டுக்குள் சென்றாள்.