லக்ஷ்மி ராமாயணம் - சுந்தர காண்டம் - 6
இராவணன் பிராட்டியை இரத்தல்
நல்லருள் புரிந்திடுவாய் மெல்லிடையாளே!
நன்னாள் என்னாள் எமைநீ கூடுதற்கு?
பெண்மையும், திண்மையும் நிறைந்தவளே!
அன்பையும் பண்பையும் இறைஞ்சுகிறேன்’ என 102
பாவமோ, பழியோ சிந்திக்க மறந்தான்.
குவித்த கரங்களை சிரம்மேல் தாங்கியே
தரைமேல் வீழ்ந்து வணங்கியே நின்றான்,
மூவுலகையும் ஆள வல்ல இராவணன். 103
பிராட்டியின் மறுமொழிகள்
நெருப்பில் பழுத்த இரும்பு நுழைந்திட,
கருகிப் போயின அவள் செவிகள்;
குருதியைப் பொழிந்தன அவள் விழிகள்’ - சிறு
துரும்பினைப் போட்டு அதனை நோக்கி, 104
‘அறிவிலாதாய்! ஆரியனாம் இராகவனின்
ஆற்றலை நீ அறிய மாட்டாய்.
மேருவைத் துளைத்திடும் அவன்கை வில்லால்
தகர்த்திடுவான் உன் தலை பத்தையுமே! - நீ 105
ஒளித்து வைத்த இடமறிந்தால்
ஒழித்திடுவான் உன் இனமனைத்தும்;
ஆழியும், இலங்கையும் அழிந்திடும்!
ஊழியும் திரிந்து, உலகமே கவிழ்ந்திடும்! 106
இராவணன் சினத்தல்
சீற்றம் கொண்டவன் கர்ச்சித்தான்! – ‘உனைப்
பீய்த்துத் தின்பேனெ’னப் பெருவாய் பிளந்தான்.
காட்டமும், காமமும் நெருக்கித் தாக்கிட,
நெருங்க வந்தவன், சினந்து நின்றான். 107
இராவணன் நிலை கண்ட அநுமன் நினைவு
தம்மை ஆண்டிடும் நாயகன் தேவியைக்,
கண்முன் இழிவாய் நடத்திடும் நீசன்,
கைதொட்டு அவளை வருத்தும் முன்னம்,
மிதித்துக் கொன்றிட உறுதி கொண்டான். 108
‘தனியனாய் யான் இவனைத் தாக்கி,
தலைகள் பத்தையும் கொய்து விட்டு,
இலங்கையைக் கடலினுள் புகுத்தி இவளை -
இனிதின் சுமந்து புறப்படுவேன்’ எண்ணினான், 109
இராவணன் அரக்கியர்க்குக் கட்டளையிடுதல்
‘வஞ்சியிலே பேரழகு கொண்டவளை,
அச்சப்படுத்துவீரோ, அன்றி, அறிவுறுத்துவீரோ,
வசியம் செய்திடணும் நீரெனக்கு; இல்லையேல்
நச்சாவேன் நானுமக்கு! உணர்த்திப் போனான். 110
அரக்கியர் பிராட்டியைக் கனன்றுக் கூறுதலும், பிராட்டி வருந்துதலும்.
கனல் சிந்தும் விழியால் மிரட்டினர் சிலர்;
மனம் மாற்றிட முனைந்தனர் சிலர்;
புத்திமதி சொல்லி அறிவுறுத்தினர் சிலர்;
இழிந்த தன்நிலை எண்ணி நகைத்தனள் தேவி. 111
திரிசடை அரக்கியருக்கு அறிவுறுத்தல்
அவலமாய்ப் போய்விட்ட இந் நிலையிலும்,
அடைக்கலமாய் இருந்தவள் திரிசடை மட்டும்.
உரைத்தாள் தாம்கண்ட கனவின் முடிவை
உணர்ந்த அரக்கியர் உறங்கிடச் சென்றனர். 112
உருக்காட்டு படலம்
அநுமன் அரக்கியரை உறங்கச் செய்தல்
உறங்கச் சென்ற அரக்கிய ரெல்லாம்,
அயர்ந்து உறங்கிட மந்திரம் ஜெபித்தான்;
மாண்டவர் போலவர் சோர்ந்திட, தேவியைக்
காணும் காலம் ஈதென் றுணர்ந்தான். 113
பிராட்டி உயிர் விடத் துணிதல்
கோதண்ட நாணோசைக் கேட்டிடாதோ?
மதியும், இரவுமென் நாயகனை விளித்திடாதோ?
வருடும் வாடையும் இராமனிடம் போய் – நான்
இருக்கும் இடம்சொல்லி அழைத்திடாதோ? 114
வீரக்கழ லணிந்த இராகவனைச்
சேர்ந்திடும் ஆசையால் பொறுத்திருந்தேன்!
‘இல்’ பிரிந்து உயிர் வாழ்ந்தார்,
‘யான்’ அன்றி யார் உள்ளார்? 115
வஞ்சனை மானை வசம்செய்யக் கேட்டேன்!
வைது அனுப்பினேன் இலக்குவ மைந்தனை!
நச்சையொத்த அரக்கனின் அகம் வந்த
நங்கை நானினி இறப்பதே முறைமை! 116
அரக்கர் அழித்து, சிறையின் மீட்டும்
‘இல் புக தக்கவள் இலை’ யென்றால்
எவ்வித முரைப்பேன் என் கற்பை?
இறத்தலே மேலெனப் புதரிடை அடைந்தாள் 117
அநுமன் தன்னை இராமதூதனெனப் பிராட்டியிடம் தெரிவித்தல்
கண்ணுற்ற அநுமன் துணுக்குற்றான்.
‘அண்டர் நாயகன் தூதன் நானென’ அவள்
சேவடி வணங்கியே தொழுது நின்றவன்,
‘ஆரியனின் அடையாளப் பொருளும் உள’தென்றான். 118
குரல் கேட்ட திசை பார்த்த பிராட்டி,
இரக்கமும், வருத்தமும் இழைந்திட உரைப்பவன்.
அரக்கராய் நிச்சயம் இருக்கமாட்டான்’னென
“வீரனே! நீ யாரெ'ன வினவினாள் நயமாய். 119
அநுமன் தன் வரலாறு கூறுதல்
தாயே!
தூயவன் நின்னை பிரிந்த பின்னை
தோழனாய்க் கொண்ட ‘அநுமன்’ நான். – நீ
இராவணன் கவர்கையில் வீசி யெறிந்த
ஆபரணம் வழி தென்புறம்தேடி நான் வந்தேன். 120
இவ்விதம் அநுமன் கூறக் கேட்டதும்,
உவகை பொங்கிட, கரைந்தவள் கேட்டாள்,
‘ஐயனே! அவன்தன் மேனி யெப்படித் தறிவை?
‘அடிமுதல் முடியீறாய் திருமேனி அழகுறைத்தான். 121
to be continued..................
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக