ஞாயிறு, 3 ஜூன், 2018

‘தஞ்சாவூர் மராட்டியர் வரலாறு’ (புத்தக விமர்சனம்)


 'காண்டீபம்' இதழில் 'புத்தக விமர்சனம் போட்டியில் 5வது பரிசு பெற்ற விமர்சனம்.   

புத்தகத்தின் பெயர்: ‘தஞ்சாவூர் மராட்டியர் வரலாறு
ஆசிரியர்:தஞ்சை.வெ.கோபாலன்


'தஞ்சாவூர், அனன்யா பதிப்பகத்தா'ரால் அச்சடிக்கப்பட்ட'தஞ்சாவூர் மராட்டியர் வரலாறு' என்ற இந் நூலின் அட்டைப்படத்தை 'கால ஓட்டம்' அல்லது 'கால சுழற்சி'யை வெளிப்படுத்தும் விதமாக புதுமையாக அமைத்திருக்கிறார் இதன் ஆசிரியர் தஞ்சை வெ.கோபாலன் அவர்கள்.
திரு கோபாலன் அவர்கள், சென்னை அரசினர் கிழக்கியல் சுவடிகள் நூலகத்தில் (GOVERNMENT ORIENTAL MANUSCRIPTS LIBRARY)  பராமரிக்கப்பட்டு வரும் மெக்கன்சி சுவடிகளிலிருந்தும், பல வரலாற்று நூல்களிலிருந்தும் நல்ல தகவல்களை சேகரித்து, சுவை குன்றாமல் இந் நூலைப் படைத்திருக்கிறார்.

பொதுவாக தஞ்சாவூர் என்றாலேநம் நினைவுக்கு முதலில் வருவது ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட பெரிய கோவிலும், ஒரே கல்லில் செதுக்கப்பட்ட பெரிய நந்தியும் தான். அதனால் தஞ்சாவூர், சோழர்கள் ஆண்ட பகுதி  - அது  ஒரு சோழ மண்டலம் என்றுதான் பரவலாக எல்லோருக்கும் தோன்றும்ஆனால் தமிழர்கள் அல்லாத மராட்டிய மன்னர்கள் 178 ஆண்டு காலம் இத் தஞ்சையை ஆண்டு வந்திருக்கின்றனர்.


1535
லிருந்து 1676 வரை 31 ஆண்டுகள் தஞ்சையை ஆண்ட நாயக்கர் ஆட்சி முறையினை விவரித்தபடி இந் நூல் துவங்குகிறது. மதுரை நாயக்க மன்னர்கள் தஞ்சையை ஆக்கிரமித்ததால் ஏற்பட்ட அரசாங்க குழப்பத்தை சீர் செய்ய வெங்கண்ணா என்பவர் பீஜப்பூர் சுல்தான் அலி அடில்ஷாவிடம் உதவி கேட்டார் என்றும், அதற்கு ஒப்புக்கொண்ட சுல்தான், மதுரை நாயக்க மன்னர்களை தஞ்சாவூரிலிருந்து விரட்டிவிட்டு, விஜயராகவ நாயக்கரிடம் தஞ்சையை ஒப்படைத்துவிட்டு வரும்படி பெரும் படையுடன் ஏகோஜியை தஞ்சாவூருக்கு அனுப்பியிருக்கிறார் என்றும், அந்த ஆணையை ஏற்று தஞ்சைக்கு வந்த சத்ரபதி சிவாஜியின் மாற்றாந்தாயின் மகனான ஏகோஜி  1676 ம் ஆண்டில்,முதல் மராட்டிய மன்னராக முடி சூட்டப்பட்டது எப்படி என்பதிலிருந்து, மராட்டியர்களின் ஆட்சி முறைகள் விரிவாக அலசப்பட்டு, 1855ம்  ஆண்டு சத்ரபஜி சிவாஜியின் வம்சத்தின், 8 வது தலைமுறையில் பிறந்த சிவாஜி II, கடைசி மராட்டிய மன்னராக இருந்ததுவரை விரிவாக எழுதியுள்ளார் இதன் ஆசிரியர்.
வீரத்தில் மட்டுமின்றி அரச நிர்வாகத்திலும் சிறந்து விளங்கிய மராட்டிய மன்னர் பிரதாபசிம்ம ராஜாவின் சாகசங்களை, ஆசிரியர் விளக்கமாக எழுதியுள்ளார். மராட்டிய மன்னர்களிலேயே திறமைசாலியான மன்னர் இவர்தான் என்பது ஆசிரியரின் கருத்தாக உள்ளது.


இவர்களின் ஆட்சி காலத்தில் கர்னாட இசை, லாவணி என்கிற கிராமப் புற கலை, ஹரிகதை, இலக்கியம், மருத்துவம், ஆலயப் பணிகள், கட்டிடக் கலை, நீராதாரங்களைப் பெருக்குதல், மதச் சார்பின்றி, எல்லா சமயத்தினரையும் அரவணைத்தல், அன்னசத்திரங்கள் ஆங்காங்கே அமைத்தல் போன்றவற்றில் மராட்டியர்களின் பங்கை தெளிவுபட எழுதியிருக்கிறார் திரு.கோபாலன் அவர்கள்.

இவை தவிர, மராட்டிய ஆட்சிக்காலத்தில் எழுந்த உட்பகை, போர், பல ராஜ தந்திரங்கள், பல பெண்டிரை மணத்தல், அப்போதிருந்த சாதிப் பெயர்கள், அரசாங்க அமைப்பு, அரசு அலுவலர்கள், நாணயங்கள், போன்றவற்றையும் அழகாக விவரித்துள்ளார் இதன் ஆசிரியர்.

சரபோஜி II மன்னரின் ஆட்சிக் காலத்திலேயே தஞ்சாவூர் ஆங்கில கம்பெனியார் வசம் எவ்விதம் போனது என்றும், ஆட்சி அதிகாரம் இல்லாமல் பெயருக்கு ராஜாவாக இருந்த மன்னர் எவ்விதம் மற்ற பணிகளில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டிருந்தார் என்றும் ஆசிரியர் நன்றாக விளக்கியிருக்கிறார்.  பல மொழிகளிலிருக்கும் சுவடிகளும் பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்ட ''சரஸ்வதி மஹால் நூல் நிலையம்' இன்று நாடு புகழும் ஒரு ஆவணக் காப்பகமாகத் திகழ்கிறது என்றும், மருத்துவத்திற்காக மன்னர் வெளியிட்ட 'சரபேந்திரராஜ வைத்திய முறைகள் நூல்' காலத்தால் அழியாத பொக்கிஷம்  என்றும், 'தன்வந்திரி மஹால்' எனும் மருத்துவசாலையில், ஆங்கில முறை வைத்தியம் தவிர, சித்த வைத்தியம், ஆயுர்வேதம், யுனானி ஆகிய மருத்துவ முறைகளும் வழங்கப்பட்டதையும், பறவைகள், விலங்குகள் போன்றவற்றிற்கும் வைத்தியம் பார்க்கப்பட்டதையும் திரு.கோபாலன் கூறியுள்ளார்.

இந்த சரபோஜி மன்னர், துளஜா ராஜாவின் ஸ்வீகாரப் புத்திரன் என்றும், இவர், சத்ரபஜி சிவாஜியின் வம்சத்தில், 7 வது தலைமுறையில் பிறந்தவர் என்றும் இந்நூல் ஆசிரியர் ஒரு 'குடும்ப மரம்' வரைந்து விளக்கியுள்ளார்.

சில சுய நலக்காரர்கள், திட்டம் போட்டு, சரபோஜிக்கு அரசாளும் உரிமை இல்லை என்று பொய்யாக நிரூபித்து செய்த சதி வேலைகளையும், அதனால் ஏற்பட்ட நிகழ்வுகளையும் படிக்கையில் விறுவிறுப்பான திரைப்படம் பார்க்கும் உணர்வு ஏற்படுவது உறுதி.

இப் புத்தகத்தில் ஆங்காங்கே மராட்டிய ஆட்சிக்காலத்தில், அரண்மனையின் அமைப்பு, தஞ்சாவூர் தெருக்கள்,  ஸ்வாமி புறப்பாடு, பெரிய கோவிலின் தோற்றம், அணிவகுத்துச் செல்லும் வீரர்கள், நாணயங்கள், பல மராட்டிய மன்னர்கள் போன்ற அரிய  புகைப்படங்களை வெளியிட்டிருப்பதும் நமது ஆர்வத்தைத் தூண்டுவதாக இருக்கிறது. மராட்டியர்களின் பெயரில் இன்றும் தஞ்சாவூரிலிருக்கும் பல தெருக்கள் மற்றும் சந்துகளின் பெயர்களைப் பற்றி இந்நூல் ஆசிரியர்  குறிப்பிட்டுள்ளார்.


நாயக்கர் ஆட்சியிலிருந்து தொடங்கி, மராட்டியர்களிடமிருந்து, கிழக்கிந்திய கம்பெனியின் வசம் தஞ்சாவூர் சென்றது வரை காட்சிகளைக் கண்முன் நிறுத்தியபடி, தொடர்ச்சியாக இவர் எழுதியிருக்கும் பாங்கு பாராட்டுக்குரியது. திருச்சி நாயக்கர் ராணி.மீனாக்ஷி பற்றிய விவரங்களை வரலாற்றுப் போக்குக்குத் தக்கவறு 8ம் பகுதியில், கதை ஓட்டம் தடைபடாமல், அனைவருக்கும் தெளிவாகப் புரியும்படி தந்திருப்பதும், பாராட்டும்படி உள்ளது.

வரலாற்று ஆய்வாளர்களுக்கு இந்நூல் மிகவும் உபயோகமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

தற்போது மூத்த இளவரசராக இருக்கும் சி.பாபாஜிராஜா பான்ஸ்லே அவர்கள் குடும்பம் இன்னமும்  ஆற்றிவரும் ஆலயப் பணிகள் பற்றி குறிப்பிட்டது மட்டுமல்லாமல் அவருடைய அணிந்துரையை இந்நூலில் வெளியிட்டிருப்பதும் சிறப்பு.

மெக்கன்சி சுவடிகளிலிருந்து தகவல்களை சேகரித்த திரு.கோபாலன் அவர்கள் கர்னல் காலின் மெக்கன்சி பற்றி பகுதி27 ல் வழங்கியிருப்பதும் குறிப்பிடத்தக்கதாக உள்ளது.


ஆயுள் காப்பீட்டு நிறுவனத்திலிருந்து ஓய்வு பெற்ற திரு.தஞ்சை. வெ.கோபாலன் அவர்கள் இலக்கியத் துறைக்கு ஆற்றிவரும் தொண்டு அளவிடற்கரியது. வரலாற்று நூலான 'தஞ்சாவூர் மராட்டியர் வரலாறு' அவரின் மொழிப்புலமையை பறைசாற்றுகிறது. மிக எளிய வாக்கியங்களாக அமைத்து அவர் இந் நூலைக் கொண்டு செல்லும் விதம்  இடைவெளியின்றி, தொடர்ந்து படிக்கும் ஆவலை ஊட்டும் என்பது திண்ணம்.
சிங்க மராட்டியரின் கர்ச்சனையை ஒத்தது ‘தஞ்சாவூர் மராட்டியர் வரலாறு’ என்னும் இந்நூல்.
மதிப்பீடு : * * * * *



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக