லக்ஷ்மி ராமாயணம் - சுந்தர காண்டம் - 10
இருப்பினும் –
‘வீரத்திலே சிறந்திருக்கும் அக்குரங்கை
பற்றித் தருகுவேன் நொடிப் பொழுதிலெ’ன,
அமரர் கோவை சிறைபிடித்த இந்திரசித்
அமர்க்களமாய்ப் போர் தொடுக்கப் புறப்பட்டான். 192
கண்ணொத்த கைப்படை வீரர்கள் எண்ணற்றோரும்,
எண்ணத்திலே ஊக்கமிகு இராக்கத வீரர்களும்,
மண்மீதில் கிடந்ததைக் கண்டு இரங்குகையில்,
ஆண்தகை அநுமனும் அவனை நோக்கினான். 193
மூவுலகங்களையும் மும்முறை வென்றவன்,
நால்வகைப் படையுடன் போரிட முனையவும்,
ஆச்சா மரத்தினை அநுமன் சுழற்றிட,
அச்சுக்கள் முறிந்து உருண்டன தேர்கள். 194
உதையுண்டு மிதியுண்டன யானைகள்!
சிதையுண்டு, சிரம் நொருங்கின குதிரைகள்!
பிடியுண்டு பிணமானர் வீரர்கள்! - அநுமன் மேல்
பட்டுத்தெரித்த அம்பெல்லாம் எரிந்து கரிந்தன. 195
இந்திரசித்து அநுமனுடன் போரிடுதல்
தேர்களும், யானைகளும், புரவிகளும்
பாரினில் வீழ்ந்ததால், தனித்த இந்திரசித்,
‘வாரும்! வாரும்!’ என்று உரத்தழைத்த
வீரனாம் அநுமனின் மேல் வந்தான். 196
ஆயிரம் அம்புகள் வில்லினிற் பூட்டி,
அநுமன் மேலதை சரமாய் செலுத்தினான்.
கனன்ற அநுமனோ தேரொடு அவனையும்,
சுழற்றி வீசியே தரையினில் ஆர்த்தான். 197
விழுந்தவன், தரை தொடும்முன் எழுந்தான்.
தேரிலான் ஆனதால் மிகச் சினந்தான்!
நிகரற்ற ஆயுதமாம் பிரமதேவனின்,
பிரம்மாத்திரம் தொடுக்கத் துணிந்தான். 198
நீண்ட நாணினில் அம்பினை சேர்த்தவன்,
தூண்டினான் அநுமனின் தோளினை நோக்கியே!
மண்ணுடன் எண்திசைகளும், மதி தாங்கும்,
விண்ணும், பெரும் மலைகளும் மிரண்டனவாம். 199
நான்முகன் ஆயுதம் அநுமனை வருத்திட,
அண்ணலும் மண்மேல் மயங்கிச் சாய்ந்தான்.
‘ஓய்ந்தது குரங்கின் வலிமை’யென்றே
வாய்விட்டு மகிழ்ந்தன அரக்கர் குழாம். 200
பிணிவிடு படலம்
எய்திடுங்கள் இதனுடம்பில் அம்பினை!
கொய்திடுங்கள் உருவிய இதன் குடலினை! – இது
உய்த்திருந்தால் நம் உயிர் இராது. அதனால்
செய்திடுங்கள் இரு துண்டாய் அறுத்தெடுத்து! 201
முழங்கிய அரக்கர்கள் மூர்க்கத்தி னுடனே
சுழற்றிய கயிற்றினால் அழுத்தியே பிணைத்தனர்.
இழுத்தனர் குரங்கினை அரண்மனை நோக்கியே
மொழிந்தனர் அனைவரும் ‘வீரனே இவனெ’ன! 202
தேவரீ ரீந்த வரந் தன்னால் - கயிற்றை
சிதறிடச் செய்தல் அநுமனுக் கெளிதாம் - எனினும்
இலங்கை வேந்தனைக் காண்டல் தானே
நலமென அவனும் பின் தொடர்ந்தான். 203
பிடிபட்ட செய்தியை தூதுவர்கள்
பகன்றிட இராவணன் அக மகிழ்ந்தான்.
‘கொன்றிடாமல் கொணர்ந்திடக் கூறி - முத்து
மாலையைக் கழற்றி பரிசளித்தான். 204
அநுமன் நிலையைப் பிராட்டி கேட்டு வருந்துதல்
ஒடித் தழித்தான் அசோக வனத்தினை!
கொன்று குவித்தான் அரக்கர் குழாத்தினை!
என்றெல்லாம் செவிமடுத் துவந்த பிராட்டி
துன்புற்றாள் அநுமனின் நிலையை யெண்ணி. 204
அநுமன் இராவணன் கோயிலடைதல்
அருந்தவப் பயன்களால் அகிலங்கள் மூன்றையும்,
அரசாளும் இராவணன்தன் அரண்மனையின் ஆசனத்தில்
ஆர்ப்பரிக்கும் கருங்கடல்மேல் மேரு ஒன்று
கவிந்ததைப் போல் கம்பீரமாய் வீற்றிருந்தான். 205
இராவணனைக் கண்ட அநுமனின் சீற்றம்.
கரும்திண் நாகமாய் வருத்திடும் அரசனை
கருடனாய் வெறித்தவன் எதிர்கொண்டான்.
‘உறக்கத்தில் இருக்கையில் உயிர் உண்டல்
அறமாகாதென அன்றொழிந்தேன். – இன்று 206
சிரங்கள் பத்தையும் சிதறிடச் செய்து
சிறையிடை சீதையை மீட்டகல்வேனென
குன்றின் மேலெழும் சிங்கம் ஆனவன்
முனைந்தான் ப்ரும்மாத் திரம் முறிக்க! – பின் 207
எந்தன் காரியம் இதுவன்று.
என்னால் கொல்லல் தரமன்று!
என்னை வெல்வதும் எளிதன்று!
அன்னவன் ஒருவனே ஏற்றவனென்றும், 208
அவன்-
ஏழுயிர் உலகங்கள் இன்புற் றிருக்க
இருபது தோள்களும், பத்துத் தலைகளும்
புழுதியில் புரட்டிட சபதம் ஏற்று
விளம்பிய உரையெண்ணி அமைதியானான். 209
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக