லக்ஷ்மி ராமாயணம் - சுந்தர காண்டம் - 11
இந்திரசித் அநுமனை இராவணனுக்கு அறிமுகப்படுத்துதல்
அரசனை வணங்கிய இந்திரசித் அரக்கன்,
‘ஆடவரிற் சிறந்தோனே! வானரமாம் இவன்தான்
மால் போன்றும், சிவன் போன்றும்
போரிட வல்ல பெரும் வீரன்’ என்ன 210
இராவணன் வினா
'சிவனோ? மாலோ? நான்முகனோ? ஆதிசேடனோ?
யார் நீ? இவண் வந்தது எங்கனமெ'ன
நோக்கிய கண்களால் கனல்பொறி கக்கினான்
மூக்குகள் பத்திலும் வெம்புகை துப்பினான். 211
அநுமன் விடை
அல்லேன் யான் நீ சொல்லிய எவருமே!
அல்லி மலரனைய வில்வீரன் தூதன்தான் – அவனும்
தேவரும், பிறருமல்லன்! களிறும், கயிலாயமுமல்லன்!
பூவலயம் ஆளுகின்ற புரவலனின் புதல்வனவன். 212
முதல், இடை, கடையில்லா காரணன்
முன்பு, நடப்பு. எதிரில்லா வீரியன்.
சூலம், சங்கு, சக்கரம், கமண்டலம்
கயிலை, ஆலிலை, தாமரை துறந்தவன். 213
கையினில் ஏந்திய வில்லுடனே,
இராமனாய்ப் பிறந்தான் அயோத்தியிலே!
அன்னவற் கடிமை செய்கின்றேன்.
அநுமன் என்றே நாமம் கொண்டேன். 214
தேவியைத் தேடியே தென்புலம் வந்த
வானர சேனையின் தலைவன் நான்.
வாலியின் மைந்தன் அங்கதன் தூதனாய்
வந்தேன் நகரினுள் தனியனாய்த் தான். 215
மேலும் இராவணன் அனுமனை வினவுதல்
'நும்குலத் தலைவனாம் வலிமைமிகு வாலியை
அம்பெய்துக் கொன்றானின் அடிமை யென்றும்,
தமையனைக் கொல்வித்த சுக்ரீவனைத் தலைவனென்றும்,
சொல்லுகின்ற நீயிங்கே தூதனாய் ஏன் வந்தாய்?' 216
அநுமன் மறுமொழி
சூரியமைந்தனாம் சுக்ரீவன் தூதனாய்
கூறுகின்றேன் நல் வார்த்தைகளை!
அறம் சிறிதும் நோக்கி டாமல்
பிறன்மாதை துயர் செய்தாய்! – உன்மேல் 217
வெறுப்புகொண்ட தூயவளை
விரும்புதல்தான் அழகாமோ? – உன்
மாதவப் பலன்களையெல்லாம்
சேறாக மாற்றலாமோ? 218
மேலும் இராவாணன் வினாவும், அநுமன் விடையும்
குன்றில் வாழ்ந்திடும் குரங்கின் கூற்றினை
‘நன்றென’ நக்கலாய் நகைத்த இராவணன்
நகர் வந்த தூதுவன் நீயிங்கு
நெறிகடந்து கொன்றதை உரை’யென்றான். 219
உனைக் காட்டுவார் இன்மையால் – மலர்க்
காட்டினை வாட்டினேன்! – எனைத்
தாக்கவந்த அரக்கர்களை வீட்டினேன். – பின்
உனைக் காணும் நோக்கிலே மாட்டினேன்! 220
என்றவன் சொன்னதும், சினந்த இராவணன்
‘கொல்மின் இக்குரங்கை’யென கொக்கரித்தான்.
‘’நின்மின்’ யென்றனன், நீதி நெறி நின்று,
நடு நிலை தவறா வீடணன்! - பின் 221
நீண்ட கைகளால் தொழுது வணங்கியே
‘மூண்ட கோபம் முறையது அன்று!
மாதரைக் கொன்றார் உளரெனினும்,
தூதரைக் கொன்றவர் எவருமிலர்! 222
தகாது நடந்த சூர்ப்பணகையை
வகையாய் வதைத்துக் கொன்றிடாமல்,
தமையனிடம் சொல்லெனச் சொல்லி,
மூக்கினை யுடைத்து உயிருடன் விட்டனர். 223
இத் தூதனைக் கொன்றாயாயின், இவந்தன்
கண்ணினால் கண்ட காட்சிகளை யெல்லாம்
சொல்லாமல் செய்கிறவன் ஆகின்றாய்’ என
உள்ளத்தில் பொருந்திட வீடணன் கூறினான். 224
அநுமன் வாலுக்கு நெருப்பிட இராவணன் கூறுதல்
‘கொல்வது பழுதென நல்லது உரைத்தா’யென
நவின்றான் இராவணன் வீடணிடம் – பின்
தொல்லை தந்திடும் வாலினைக் கொளுத்தி,
எல்லை கடந்திதை துரத்துங்கள்’ ஆணையிட்டான். 225
பிரும்மாத்திரம் கட்டுண் டவன்மேல் தீயிடல்
எம்மாத்திரம்? எனக் கூறிய இந்திரசித்
மந்திர விதிப்படி மீட்டுக்கொண்டதும்
இறுக்கிக் கட்டினர் பாசக் கயிற்றினால். 226
வாலினைக் கொளுத்திட பிறந்த கட்டளை
‘ஊரினை நீ சுடு” எனச்சொன்ன தெளிவுரை!
எனவெண்ணி உவந்தவன் – அரக்கர்கள்
கயிற்றினால் பிணைக்கையில் சிரித்தான். 227
அநுமன் வாலுக்கு தீயிடல்
முட்டி யுதைத்து, கட்டி யிழுத்து,
வெட்ட வெளியினில் நிறுத்தினர் ஏவலர்.
கந்தைத் துணிகளை வாலினில் கட்டியே
எண்ணையில் தோய்த்து கடும்தீ கொளுத்தினர். 228
பிராட்டியின் வேண்டுகோளும், அதன் விளைவும்
‘கருணை கொண்ட அநுமனுக்குத்
துணை புரிவாய் அக்னியே!
எந்தூய்மை மெய்யெனில் அவனை நீ
சுட்டிடாதே’ வெனச் சொல்லி தொழுதெழுந்ததும், 229
ஒளிர்ந்த வெம்கனல் தண்மை யடைந்ததாம்.
கொற்றவன் நெற்றிக்கண் குளிர்ந்து போனதாம்.
அண்டம் கடந்த பிரம்மன் வளர்த்த
அக்னிக் குண்டமும் அணைந்து தணிந்ததாம். 230
to be continued....................
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக