வியாழன், 20 டிசம்பர், 2018

பு(தை)யல்

நவம்பர் 15ம் நாள்....
நள்ளிரவு நேரம்!
மெல்ல வருடிடும் காற்று அன்று
மெள்ளத் துள்ளலைக் கூட்டியதால்
‘கஜா’ என்ற நாமகரணத்துடன்.
கரையைக் கடந்தது கர்வத்துடன்,
பேய்க்காற்று வீசியதால்                                           
படுத்து எழுந்தன தென்னை மரங்கள்.
பக்கம் சாய்ந்தன பலா மரங்கள்.
பறந்து விழுந்தன பற்பல கூரைகள்,
பயந்து மிரண்டனர் பதுங்கிய மக்கள்.
சூறாவளியாய் வீசிய கஜா,
சூறையாடிச் சென்றதால்,
தோப்பும், துரவுமென்றும்,
காடும் கழனியென்றும்
கண்ணியமாய் வாழ்ந்தோரெல்லாம்
கண்ணீர் மயமாய் வீழ்ந்தனர்.
உக்கிரதாண்டவமாடி
உருக்குலைத்த கஜா புயல்,
உழைக்கும் வர்க்கத்தின்
பிழைப்பைப் பிடுங்கிவிட்டுக்
கழுத்தினில் கத்திவைத்துக்
காலனாய் மாறியது.
அடித்து வீசிய பெருங்காற்று,
அப்பாவி மக்களுடன்,
ஆடு மாடென
அனைத்தையும்,
நசுக்கி, துவைத்தெடுத்து,
நடைபிணமாய் ஆக்கியது.
நிர்கதியானோருக்கு
நிவாரணங்கள் வழங்கி,
நாற்புறமும் செயல்பட்டு,
இயல்பாக்க முயன்றது அரசு.
இருப்பினும்…
மனித நேயம் இன்னும்
மரித்துப் போகவில்லை.
கருணையுள்ளம் இன்றும்
காணாமல் போகவில்லை.
எல்லா வயதினருக்கும்,
வயிற்றுப் பசியகற்றி,
மறைக்கத் துணி வழங்கி,
மருத்துவம் கொடுத்துதவி,
மகத்தான பணிபுரிந்த
மாமனிதர் பலருண்டு.
அதற்கான பொருட்களை
அள்ளி அளித்தனர் ஏராளமாய்
உள்ள உவகையுடன்
உதவிட முனைந்தனர் தாராளமாய்..
மயில் கண்ட வானவில் போல்
புயல் கண்ட பு(தை)யல்களாய்,
எத்தனை எத்தனை நல்லுள்ளங்கள்
எத்தனித்தன. ‘நானுள்ளேன்’ என!
அத்தகையோர் அனைவரின்
அடிபற்றித் தொழுகின்றேன்.
தொடரட்டும் அவர்களின்.
தொண்டாற்றல் விண்வரைக்கும்!
படரட்டும் அவர் செய்யும்
பணி முழக்கம் திக்கெங்கும்!

Image result for IMAGE OF GAJA

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக