ஞாயிறு, 29 மே, 2016

கிளியம்மா.... என் கிளியம்மா

மணிமணியாய் பொறுக்கி உண்டு
மணிநேரம் ஆக்கிடுவாள்.
காய்கறியைப் புறங்கையால்
ஒதுக்கியே தள்ளிடுவாள்.
வகை வகையாய் செய்தாலும்
தோசையேவா தினமும் என்பாள்.
சோம்பலின் காரணத்தால்
சாப்பிட மறுத்திடுவாள் .

மாலையோ, இரவோ மறந்துவிட்டு
மறுநாளின் காலை வந்து
நோட்டுக்கு அட்டையென்பாள்.
சட்டைக்கு பட்டன் என்பாள்.
கணக்கு புக்கைக் காணோம்
தேடித்தா என அழுவாள்.
பேனாவில் இங்க இல்லை
போட்டுத்தா என அழைப்பாள் .

குளியலறையிலிருந்தபடியே
குரல் கொடுப்பாள் 'ஷிம்மி ' என்று
பூச்சி ஒன்றைப் பார்த்தாலோ
 கத்திடுவாள் "வீச்" என்று
காயம், வலி, வந்துவிட்டால்
காயமே நடுநடுங்கும்
பசி சொல்லத் தெரியாமல்
அழுகை ஒன்று வெடித்துவரும்

இவை எல்லாம் என் மகளின்
அட்டகாசங்கள்,
என் கடந்த கால பிம்பத்தின்
பிரதிபலிப்புகள்
அடடா!
காலம் கடந்து நான் கற்ற
கருத்தான பாடங்கள்
நடைமுறையாவது எப்படி?
எங்கனம்? எப்போது?

ஏ ! காலச்சக்கரமே!
சற்றே பின்னோக்கி சுழலேன்!
என்னில் சில திருத்தங்கள்
செய்துவிட்டு
பின் இவளைத் திருத்துகிறேன்.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக