சனி, 28 மே, 2016

எறும்பியல்

      "கணேஷ் டியூஷன் க்கு டைம் ஆச்சு பாரு.... எழுந்திரு கண்ணா"!
கணேஷின் அம்மா உரக்கக் குரல் கொடுத்தாள் .

கண்களைக் கசக்கிக் கொண்டு புரண்டு படுத்தான் கணேஷ். அவனால் கண்களைத்  திறக்கவே முடியவில்லை.தூக்கம் அழுத்தியது.

ஏழாம் வகுப்பு படிக்கும் சிறுவன் அவன்.
"தங்கம்..... அஞ்சேமுக்கால் ஆயிடுச்சுப்பா ...எழுந்திரு ராஜா" மீண்டும் அம்மா.

'பச்!' அவனுக்குப் பிடிக்கவேயில்லை. தினமும் இதே கதைதான். பாரதியார் கவிதைக்கு நேர் மாறாக, காலை எழுந்தவுடன் டியூஷன்.... பின்பு கனிவு கொடுக்காத பள்ளி...... மாலை முழுதும் ஹோம் ஒர்க்....! என்பது அன்றாட நிகழ்வானது. பாடம்..... பாடம்.... பாடம்.... டெஸ்ட்... டெஸ்ட்... டெஸ்ட்.....
'ஆ............வ்' கொட்டாவி விட்டபடியே எழுந்தான் கணேஷ்.

அரைத் தூக்கத்துடனேயே பல் தேய்த்தான். முகம் கழுவி துண்டால் துடைத்தான். இன்னும் தூக்கம் தூக்கமாக வந்தது. ஹாலுக்கு வந்து காலை நீட்டியபடி தரையில் உட்கார்ந்தான்.

அப்போதுதான் கவனித்தான்.....
எறும்பு சாரை ஒன்று அவனுக்கு மிக சமீபமாக வந்து கொண்டிருந்தது.
'அட' குட்டி குட்டி எறும்புகள்! எத்தனை சுறுசுறுப்புடன் 'குடு குடு' வென்று ஓடுகின்றன...


அவன் கண்கள் சட்டென்று விரிந்தன.  "ஒரே சமூகமாகத் திரண்டு எங்கே கிளம்பியுள்ளன....? அவன் உள்ளத்தில் ஒருவித உற்சாகம் பிறந்தது. தூக்கம் முற்றிலுமாகக் கலைந்து போனது. கால்களை மடித்து முட்டிக்காலில் அமர்ந்து, குனிந்து எறும்புகளைக் கவனிக்கத் தொடங்கினான்.

"யார் இவர்கள்? உறவினர்களா..? நண்பர்களா...? சுற்றுலா செல்லும் பள்ளி மாணவர்களா...? அல்லது ஏதாவது கிளப் உறுப்பினர்களா....?" போன்ற கேள்விகள் கணேஷின் மனதில் தோன்றின்.

சின்ன சின்ன கால்களை நகர்த்தி - நகர்த்தி முன்னேறிக்கொண்டிருந்த முன்வரிசை எறும்புகளை மற்ற எறும்புகள் பின் தொடர்ந்தது அவனுக்கு ஆச்சர்யமாக இருந்தது.

மெல்ல அவன் அந்த எறும்பு வரிசையின் அருகிலேயே, கன்னத்தைத் தரையில் பதித்தபடி குப்புறப்படுத்து, அவற்றின் அசைவை ஆராயத் தொடங்கினான்.

இதற்குள் அவன் அம்மா மூன்றாவது முறையாக "கணேஷ்" என்று குரல் கொடுத்தாள்.

அவன் எண்ணமெல்லாம் எறும்பைப் பற்றியதாகவே இருந்ததால் அம்மாவின் குரல் அவன் காதில் விழவேயில்லை.

"எங்கே செல்கின்றன இவை?
ஏதோ ஒரு உணவு பதார்த்தத்தின் வாசனையை நுகர்ந்தபடிதான் இவை படையெடுத்துள்ளன. ஆனால் கணேஷின் கண்களுக்கோ, நாசிக்கோ, எதுவுமே புலப்படவில்லை.

எறும்பு சாரி ஒரே சீராக ஓடிக்கொண்டிருந்தது.

"எறும்புகள் ஒலி  எழுப்புமா? தங்களுக்குள் கதை பேசியபடி செல்கின்றனவா...? அல்லது மௌனமாகவா.....? தங்கள் உற்றாரையும், சுற்றாரையும் எப்படி ஒன்றாகத் திரட்டியிருக்கும்?"

இவ்வாறு யோசித்தபடி கணேஷ் கால் விரல்களை சற்று உந்தி, இன்னும் கொஞ்சம் மேலே நகர்ந்து படுத்தபடி எறும்புகளைப் பார்வையிட்டன.

பின் ஒரு மெல்லிய தாளைக் கொண்டுவந்து எறும்பு சாரிக்கு முன்னால் மெதுவாக வைத்தான். அவை அந்த தாளை லட்சியம் செய்யாமல் அதன் மேல் ஏறி தனது அணிவகுப்பைத் தொடர்ந்தன.

உடனே ஓர் ஈர்க்குச்சியை எடுத்து வந்து முதல் வரிசை எறும்புகளின் கால்களில் படுமாறு வைத்தான்.

" "டக்".... எறும்புகள் திடுக்கிட்டன போலும்.
அவற்றின் ஓட்டம் தடைபட்டது.
"தங்களின் முன் விருட்சம் ஒன்று .விழுந்ததைப் போல உணர்ந்திருக்கும்" என்று கணேஷிற்குத் .தோன்றியது.

பின்னால் வந்து கொண்டிருந்த எறும்புகளின் மேல் அவன் பார்வை சென்றது. அவை 'கிச்சு கிச்சு' என்று ஒன்றன்மேல் ஒன்று முட்டி மோதிக்கொண்டு நின்றுவிட்டன.

கணேஷிற்க்கு ஆர்வம் கொப்பளித்தது. உடனே முதல் வரிசை எறும்புகளின் செயல்பாட்டை ஆராயத் தொடங்கினான்.

'அட' முதல் வரிசை எறும்புகள் புரிந்துகொண்டன போலும். இந்த குச்சி நம்மை ஒன்றும் செய்யாது' என்று. எனவே அவை தாங்கள் போய்க்கொண்டிருந்த தடத்தை சற்றே மாற்றி ஈர்க்குச்சியை ஒட்டியபடியே சென்று குச்சி முடிந்ததும் தன தடத்தை மீண்டும் மாற்றி நேராகச் செல்லத் தொடங்கின.

'அப்பப்பா.... இவ்வளவு சிறிய எறும்புக்கு எவ்வளவு அறிவு?" என்று வியந்தான்.

"கணேஷ்... என்னம்மா பண்ற? கிளம்பிட்டியா ட்யுஷனுக்கு?" அம்மா பரபரத்தாள்.

"அம்மம்மா..... இதோ இதோமா  கிளம்பிடறேன்" பதில் கூறியபடி மெல்லத் தன ஆள்காட்டி விரலை எறும்புகளின் முன் நீட்டமாகப் படுக்கவைத்தான்.

"டக்டக்' என்று அவற்றின் கால்கள் விரலில் இடித்தன. குறுகுறுவென்று இருந்தது கணேஷிற்கு. விரலை அசைக்காமல் இருக்கும் வரை முட்டிப்பார்த்தன. லேசாக விரலை அசைத்துப்பார்த்தான். ' எதிரி இது' என்று எண்ணியோ என்னவோ 'சுருக் சுருக்' கென்று கடித்தன. சட்டென விரலை விலக்கினான். விரைந்து தன இலக்கை நோக்கி நகர்ந்தன. மிகவும் ஆச்சர்யப்பட்டான் கணேஷ்.

எறும்புகளைப் பற்றி ஓராயிரம் வினாக்கள் அவன் நெஞ்சில் எழுந்தன. எறும்புகளின் வகை, வாழ்நாள் எண்ணிக்கை, வாழ்க்கை முறை பற்றியெல்லாம் ஆராய்ச்சி செய்யவேண்டும் என்று அவன் மனம் திட்டமிட்டது.

'ஒற்றுமை, ஒழுங்கு, பகிர்ந்து உண்ணுதல், சுறுசுறுப்பு...... இப்படி எத்தனைப் பாடங்கள் எறும்பிடமிருந்து கற்றுக்கொள்ள...?' என்று வியந்தான்.

"கணேஷ்....! என்னடா பண்ற? இங்க நான் கரடியா  கத்தறது காதுல விழல...? பாடம் ஏதோ படிக்கறேன்னு நினைச்சேன். என்ன பண்ணிட்டிருக்கே நீ...? கேட்டுக்கொண்டே ஹாலுக்கு வந்த அம்மா, கணேஷ் படுத்திருந்த நிலையையும், அருகில் செல்லும் எறும்புகளையும் பார்த்துவிட்டு, "எண்டா.....? கவனமமே கிடையாதா உனக்கு,,,? பக்கத்துலே எவ்ளோ எறும்பு....? கடிக்குமே அப்படீங்கற எண்ணம் இருக்கா இல்லையா....? எல்லா பசங்களும் ட்யுஷனுக்குப் போய்.....என்னவெல்லாமோ படிக்கறது, புத்திசாலியா இருக்கு....எதையுமே கவனிக்காம இப்பிடி தண்டமா இருக்கறது தப்புன்னு உனக்கு எப்பதான் தோணுமோ....?

கத்தியபடி உள்ளே சென்ற அம்மா, சாக்பீஸ் போன்ற ஒன்றை  எடுத்து வந்து எறும்பு வரிசையின் மீது 'சரக்  சரக் ' என்று கோடு போட்டாள்.

'அய்யய்யோ ...!
எறும்புகள் எல்லாம் திக்கு திசை தெரியாமல் இங்கொன்றும் அங்கொன்றுமாய் கலைந்து ஓடத்தொடங்கின.

இத்தனை நேரம் ஒரு ஒழுங்குடன் சீராக வந்து கொண்டிருந்த எறும்புகள் விலகி விலகி ஓடுவதையே திக்பிரமை பிடித்தாற் போல பார்த்தான் கணேஷ்.
காப்பாற்றவோ, தடுக்கவோ வழி தெரியாமல் இதயம் கனத்தது. திரும்பி திரும்பி பார்த்தபடி குளிக்கச் சென்றான். பாடம் படிக்க ட்யுஷனுக்கு கிளம்ப வேண்டுமே......!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக