திங்கள், 30 மே, 2016

என் 'கதைக்குள்' என் கதை.

நான்....!
ஆம்! என்னைப் பற்றி முதலில்  கூறப்போகிறேன்.
நான் அழகாகப் பேசுகிறேன் என்று கூறியவர்களும் உண்டு! சரியான அறுவை! என்று அலுத்துக்கொண்டவர்களும் உண்டு.
எந்த ஒரு விஷயத்தையும், ஆரம்பம் முதல் இறுதி வரை  ஒரு சிறிய குறிப்பைக் கூட விடாமல் முழுவதுமாகக் கூறுவேன்.
இடைச் செருகலாக அவ்விஷயம் நடந்தபோது சுற்றி நடந்த பலவற்றையும் கூறி சம்பவத்தைக் காட்சி போல காட்ட முற்படுவேன்.

அதோடு கூட, அவ்விஷயம் சம்மந்தமாக  நான் நினைத்தது..... நடந்தது......
இப்படியாக சீரியல் போல் வளர்த்துக்கொண்டே போவேன்.

எத்தனை அழகாக வர்ணிக்கிறாய்...! விவரிக்கிறாய் ....! என்று அதிசயித்துப் போவர் பலர்.

நான் பேசுகையில் கண் பேசும், கை அபிநயிக்கும், குரலோ....அழும் -  சிரிக்கும்,
வருந்தும் - நகைக்கும்,
 நக்கலாய், கோபமாய், சிநேகமாய்,..... என்று பல்வேறாய் வேறுபட்டு ஒலிக்கும்.

என் பேச்சை ரசிக்கும் கும்பல் ஒருபுறம் இருக்க - நான் பேச ஆரம்பிக்கும் முன்னே பயந்து, பாய்ந்து ஓடியவரும் அநேகம் பேர்.

"நான் இன்னிக்கி ஆறு மணிக்கு கோவிலுக்குப் போனேனா......" என்று ஆரம்பித்ததும், "சரி...! கீழ விழுந்தியா....? "எது மேல மோதினே....?" "விஷயத்துக்கு வா.." என்றெல்லாம் கூறி, குறுக்கிட்டுப் போறுமையிழந்தோரும் பலர் உண்டு.

எது எப்படியோ நான் இருந்தாலே அந்த இடம் மிகவும் கலகலப்பாக இருக்கும்.

"மிகச் சரியான வார்த்தைப் பிரயோகத்தால் சொல்லும் விஷயத்தை அழகாகக் கண் முன் நிறுத்துகிறாய்" என்றெல்லாம் கூறி பாராட்டுபவர்கள் நேரிடையாய்க் கூறிவிடுவதால் நானும் புளகாங்கிதம் அடைவேன்.

இப்படி இருக்கையில் திடீரென்று என் தொண்டையில் ஏதோ ஒரு ஒவ்வாமை ஏற்பட்டு, குரல் கம்மிப்  போயிற்று. புழுதியினாலா, தண்ணீரினாலா, பாக்டீரியா, வைரஸ் இவற்றின் தாக்குதலினாலா என்று வகைப்படுத்த முடியாமல் மருத்துவர் மாற்றி மருத்துவர், மருந்து, மாற்றி மருந்து, என்று உட்கொண்டும் குரல் எழும்ப மறுத்து சண்டி செய்தது.

"குரலுக்கு ஓய்வுதான் தீர்வு" என்று மருத்துவர்கள் ஒருமனதாகக் கூற, அதிர்ந்துதான் போனேன். சுய பச்சாதாபம் வேறு தலைதூக்கிக் கண்ணீரை வரவழைத்தது.

தவித்துத்தான் போனேன்.

பற்பல விஷயங்கள் தொண்டை வரை பொங்கி வந்து அடங்கிப் போகும்.
விழிகள் படபடத்து ஓய்ந்து போகும்.
சைகை பாஷையால் விரல்கள்தான்  வீக்கம் கண்டன .
அலை ஓசை இன்றி அமைதியானது  எங்கள் இல்லம் எனும் ஆழி.

பெருகிவரும் எண்ணங்களுக்கு சைகை மொழி போதவில்லை.

என்ன செய்யலாம்? ஏது செய்யலாம்?

நெஞ்சில் நிறைந்திருக்கும் எண்ணங்களை வெளிப்படுத்த வாய் ஒன்றை மட்டுமா இறைவன் படைத்துள்ளான்?

இருக்காது! மாற்று வழி ஒன்றை வைத்திருப்பான்  என்றெண்ணியபடி எடுத்தேன் என் பேனாவை.
'என் "கதைக்குள்" என் கதை' என்று தலைப்பிட்டு கொட்டினேன் என்னைப் பற்றிய எண்ணங்களை.! படித்துப் பார்த்தேன்.

'அட! நன்றாகத்தான் உள்ளது! நல்ல கதை ஒன்று உருவாகிஉள்ளதே !

'சரி சரி! புலம்பிக்கொண்டிருத்தல் இனி கூடாது!
சுய பச்சாதாபத்தைத் தூக்கிப்போட்டேன்.
நம்பிக்கை துளிர் விட்டது என் மனதில்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக