செவ்வாய், 3 மே, 2022

லக்ஷ்மி ராமாயணம் - ஆரண்ய காண்டம் - பகுதி 12

 

        அசோகவனத்தில் சீதையை சிறைவைத்தல்

 

வஞ்சியைத் தீண்டிட அஞ்சிய நிருதனும்,

நஞ்சியல் அரக்கியர் சூழ் அசோகவனத்தினுள்,

சிஞ்சுப மரத்திடை சிறைவைத்தான்!. -  நாமினி

சின்னவன் நிலை யினை நோக்கிடுவோம்.

(சிஞ்சுப மரம் : இரவெரி மரம், தோதகத்தி மரம், நூக்கமரம் என்றும் கூறுவர்)

 

அண்ணியிட்ட ஆணைப்படி கானகத்தில் அலைந்தவன்.

அண்ணன் குரல்வந்த திக்கில் தவித்தபடி விரைந்தனன்.

கண்டுவிட்ட தமையனையும் களிப்புடனே அணைத்தனன்.

எம்பிரானும் பிரியத்துடன் தம்பியோடு பிணைந்தனன்.

 

தழுவியவனை வினவினான், ‘இவ்விடம் வந்தது ஏனோ?’

‘அழைத்த நும்குரலால் அன்னையவள் கலங்கினள்.

‘வல்வாய் அரக்கனின் உரையிது’யென்பதை விலக்கினள்.

“செல்வாய் விவரமறிந்துவர நில்லாது” துரத்தினள்.

 

போகாதிருந்தால் தீயிடை வீழ்ந்திட துணிந்தனள்.

இருதலைக் கொள்ளி எறும்பாய் துடித்த நான்,

மறுத்தலை விடுத்து இவ்விடத்திடை நடந்தேன்.

உருக்கமாய் உரைத்து,  இறுக்கமாய் அணைத்தான்.

 

             இராம இலக்குவர் பண்ணசாலை திரும்பல்

 

ஆசையாய்க் கேட்டமான் அரக்கர்களின் மாயமான். - அது

மோசமாய் குரல்கொடுத்து மறைந்தது மாயமாய்.

நேசமிகு நங்கையோ நெடுநேரமாய்த் தனித்திருப்பாள்.

பாசமிகு மங்கையாய் நாயகனை நினைத்திருப்பாள்.

 

கூடு பிரிந்த உயிராம் பொற்கொடியாளைத்

தேடி வந்தவர்கள் திகைத்துப் போயினர்.

கோடிப்பொன்னாம் பிராட்டியுடன், அவளிருந்த

பண்ணசாலையே காணாமல் பதைத்தனர்..

 

மண் சுழன்றது; மலை சுழன்றது.

விண் சுழன்றது; வேதமுஞ் சுழன்றது.

கண் சுழன்றது; கதிரொடு, மதியும் சுழன்றது.

எண்ணம் சுழன்றது; ஏழ் கடலும் சுழன்றது.

 

தீண்டுதல் தவிர்த்து நிலத்தோடு பெயர்த்ததைக்

கண்டுபிடித்து விட்ட  இளையவன் இலக்குவன்,

‘அன்னவன் சென்றிடும் முன் பின்தொடர வேணும்’ என்ன

‘ஆமெ’ன இளவலை ஆமோத்தித்தான் ராமனும்.

 

மண்மேல் ஓடிப் பின் நீங்கிய தேர்ச்சுவடு

விண்ணின் ஓங்கியதைப் பார்த்த பிற்பாடு,

‘திண்தேர் சென்றிருக்கும் தென்திசை’ யென்று

பின்னவன் புகன்றான் மண்மிசை நின்று..

 

காணக்கிடைக்காது அலைகையில் அவ்விடத்தே

வீணைக் கொடியொன்று கிடந்ததைக் கண்டார்.

சந்திரனின் எட்டாம் நாள்பிறை விழுந்தாற்போல்

குத்திட்டிருந்த கூர் வில்லையும் கடந்தார்.

 

தேவருக்குக் கொடியோருடன் கடும்போரோ’வென

வியந்து, ஐயங்கொண்ட அமலானிடம்,

‘பட்சிராஜன் போராடிப் பிய்த்தக் கொடியிது’வென

நயந்தான் நயமுடன் நல்லான் இளையான்.

 

முத்தலை சூலமும், அம்புப் புட்டிலும்,.

வித்தக அரக்கனின் நெஞ்சக் கவசமும்,

இறந்து விழுந்த குதிரைகள் குவியலும்,

இறைந்து கிடந்தன கானகம் முழுவதும்.

 

சூரிய மண்டலமே புவிமேல் விழுந்தாற்போல்

சிதறியிருந்தன இரத்தினமும், குண்டலமும்.

இரத்தமும், சதையும் பீய்ந்து வழிந்திட

இறந்து கிடந்தான் இரதத்தின் சாரதியும்.

 

‘யாளிபோல் பகைவர் ஆயிரமாய்த் தோன்றினும்,

தோள்கள் இருபதுடன், பத்துத் தலைகள் கொண்ட

தென்னிலங்கை வேந்தன்தான் போர்புரிந்தவனெ’

தெளிவாக விளக்கினான் சுமித்திரைப் புதல்வன்.

 

கடலில் நிறுத்திய மந்திர மலையாய் - குருதியில்

கிடந்த சடாயு கண்டு அதிர்ந்தனர்.

‘எம்தந்தை என் பொருட்டாய் இறந்தாற்போல்

எந்தாய் சடாயுவே! நீயும் இறந்தனையோ!

 

சான்றோய்! எம்தாரம் காக்கவெண்ணி

ஏற்றாயோ இப்பெரும் பொறுப்பை? - உனைக்

கொன்றானும் உன் எதிரே நின்றானோ – நானும்

நின்றேனே நெடுமரமாய் என் விதியே!’

 

துணிவு கொண்ட சடாயு சிரம் அசைத்தான்.

உணர்வு பெற்று சற்றே உயிர்த்தெழுந்தான்.

‘பாக்கியத்தால் நானும்மைக் கண்ணுற்றேனெ’

மூக்கினால் முறைமுறையே உச்சிமோந்தான்.

 

‘ஆற்றலுடை இருவருமே அருந்ததியைத் தனித்துவிட்டு

அகன்றது எதனாலெ’ன முனகலுடன் வினவினான்.

வஞ்சக மானைத் தொடர்ந்தது முதலாக

நின்றது, நிகழ்ந்ததை நிரப்பினான் இளையான்.

 

நிலத்தோடு நிருதன் பெயர்த்தது முதல் தாம்

எதிர்த்துத் தடுத்ததுவரை இயம்பினான் சடாயு.

புருவங்கள் உயர்ந்தேற உதிரமும் சூடேற,

நெருப்புச் சுடர்கள் நிலைகெட்டன இராகவனுக்கு.

 

‘எட்டுத்திக்கினின்றும் எட்டிப்பார்த்த தேவரும் முனிவரும்

கட்டுண்டு வாளாயிருந்தனரே’யெனக் கடிந்துகொண்டான்..

‘நின்னால் வெல்வோம் அரக்கனை’ யென மகிழ்ந்த தேவர்,

எத்துணை கொண்டு வெல்வர் இனி’யென இகழ்ந்தான்.

 

‘மனையாளைத் வனத்திடையே தனியாகத் தவிக்கவிட்டு,

மானைப் பின்தொடர்ந்து மாறாப்பழி கொண்டீர்!

உம்பிழை என்பதல்லால் இது இவ்

உலகத்தின் பிழையா?' கடிந்தான் சடாயு.

 

கோபம் குறைந்த ஸ்ரீராமன் வினவினான்,

‘பாபம் புரிந்தவன் போன இடம் புகலுதி!’

ஓய்ந்து போன புள்ளின் வேந்தன்,

மெள்ள உரைத்து, பின் உயிரும் நீத்தான்.

 

‘இறந்தனனே நாம் உரிமை பெற்ற தாதை!

இருந்து உளேனே நான்! என் செய்வேன்?

துறந்தினி ஏற்பேனோ தவத்தினை! அன்றி

துறப்பேனோ என் உயிரை இளங்கோவே!’யென்றான்.

 

எந்தையே! இனி நின்று நினைவது என்னே!

நெருக்கி அவ்வரக்கர் தம்மை நொறுக்குவோம்.

நொறுக்கிப் பிடித்து உயிரையும் எடுப்போம்.

எடுத்தபின் கொடுந்துயர் கடப்போம்’தேற்றினான்.

 

‘சிறுவ! பெற்றெடுத்த தந்தைக்குப் பித்ருகடன் புரியவில்லை.

மறைந்த இப்பறவைக்குப் புரிபவர்யார் தெரியவில்லை'யென

பரந்த தன் கைகளால் பூதவுடலைத் தூக்கினான்.

ஈமத்தின் மேல் ஏற்றிவைத்து எரியூட்டினான்.

 

கனல் மூட்டியவன் காட்டாற்றில் குளித்து,

தருப்பைகளைத் திருத்தி, தருப்பணம் செய்தான்.

நேர்த்தியாய் பூர்த்தி செய்தான் நீர்க்கடனை.

சேர்ப்பித்தான் மோட்சத்தில் பட்சிராஜனை.

(தொடர்ந்து வரும்)

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக