புதன், 4 மே, 2022

லக்ஷ்மி ராமாயணம் - ஆரண்ய காண்டம் - பகுதி 12

 

                                              அயோமுகி படலம்

(இரும்பு போல் வலிமையும், கருமை நிறமும் கொண்ட அரக்கி அயோமுகி பற்றிய விவரங்களை சுருங்கச் சொன்னார் வால்மீகி. கம்பரோ சகோதர பாசம் வெளிப்படும்படி விரித்துச் சொல்லியுள்ளார்)


அந்தி மாலையும் அணுகிய வேளையில்

சிவந்த மலையினை அடைந்தனர் இருவரும்.

வருத்தமும், துயரமும், இருளெனச் சூழ்ந்தது.

இரவுப் பொழுதோ விழிப்புடன் கழிந்தது.

 

வதனத்தாள் பொன்முகம்தான்  வானத்திடை பொலிந்தது.

ஒளிவிட்ட வெண்மதியோ கடுங்கனலாய் எரிந்தது.

இதமாய் வீசும்  தென்றலும் அரவமாய்த் தெரிந்தது.

இதயத்தின் வலியெல்லாம் உடலெங்கும் படர்ந்தது.

 

‘நாண்பூட்டி வளைத்த வில்லெடுத்து வந்து

நாயகன் தன்னை மீட்பான்’ என்பாளோ?

வெஞ்சின அரக்கரின் வீரத்தைக் கண்டு

அஞ்சினனோ’வென ஐயுறுவாளோ?’ கலங்கினான்.

 

அர்த்தராத்திரியில் நீர்வேட்கை கொண்டான் தமையன்.

தீர்க்கதரிசியின் வேட்கை தீர்க்கத் தீர்மானித்தான் இளையன்.

காரிருளில் தீர்த்தம்தேடி கானகத்துள் அலைந்தவன்மேல்

காதல் கொண்டாள் கடுமரக்கி ‘அயோமுகி’யென்பாள்.

 

‘புழுங்கும் காமநோய்க்கெட தழுவிடுவேன். - அன்றி

விழுங்கிடுவேன்’ என்று விம்மலுடன் எதிர்ப்பட்டாள்.

யாளிகளைத் தொடுத்துத் தாலியாக அணிந்தவள்.

புலிகளை முடிந்து மாலைகளாய்ப் புனைந்தவள்.

 

‘கடிதான இருள் கவியும் இராப்பொழுதில்

கொடிதான மோகினியாம் யாரடீ நீ?’யென்றான்.

‘நின்பால் ஆசைகொண்ட கன்னி ‘அயோமுகி’

நின்னைப் புணர வந்த ‘காமுகி’யென்றாள்.

 

‘இவ்வுரை தன்னை மீண்டும் நீ கூறிடின்

வார்க்கணை நின்னுடலைத் தாக்கிக் கூறிடும்’ சினந்தான்.

‘நீர்தேடி வந்த நீர் எனை விட்டு நீங்கேல்.

ஊர்த்தேடி கங்கைநீர் நான் கொணர்வேன் விரைந்தே’.

 

‘காதோடு, நாசியினைக் கூறாக்கி எடுப்பதற்குள்,

காததூரம் ஓடிடெ’ன இவன் முடிப்பதற்குள்,

பாதகியாம் அயோமுகியோ மன்மதனைப் பற்றினாள்.

மாயையினால் சுமந்தபடி வான்வழியே சுற்றினாள்.

(மன்மதன் – இலக்குவன்)

 

மந்திரகிரி கொண்ட மாபெரும் கடல்போலும்

இந்திரன் ஊர்ந்து போகும் வானத்து மேகம்போலும்

அந்தரத்தில் பறந்துசென்ற அயோமுகியின் கைகளுக்குள்

பந்துபோல் அடங்கிப்போனான் பரந்தாமனின் பின்னவன்.

 

‘விரைந்து வருவேன் நீருடன்’ என்று சென்றவனின்

விதியறியாத வில்லானோ விதிர்த்துப் போனான்.

சதிசெய்த அரக்கரோடு சல்லாபம் செய்தானோ? - அன்றி

மதிகூர்மை கொண்டவனை வில்லங்கம் செய்தாரோ?

 

அன்பான தந்தையுடன் அன்னையர் மூவரையும்

பொன்னான தையலையும் பிரிந்துவிட்ட பின்னாலும்

பொய்யான இவ்வுலகில் பொலிவுடன் நான் உலவுவது,

கண்ணான நின்னைப் பின்னவனாய்க் கொண்டதுதான்.

 

அசைந்தாடும் களிறொத்த கார்வண்ண எம்பிரான்

திசையறியா வனத்திடையே குரலெழுப்பி விம்மினான்,

‘அறமும், குணமும் அகிலத்தில் உளதென்றால்

அரிதான இலக்குவனே தமையனாய் பிறக்கட்டும்.’யென்றபடி,

 

கூரிய வாளால் குத்திக்கொள்ளத் துணிந்தவன்,

அரற்றியதோர் அரக்கியின் அலறலால் நிமிர்ந்தான்.

இலக்குவன் அறுத்தெரிந்த நாசியினால் ஊறுபட்டு

சோர்வுற்ற அயோமுகியின் பேரொலியென அறிந்தான்.

 

பிரஸ்தாபித்தான் ‘ஆக்நேயாஸ்திரம்’ எனும் மந்திரத்தை.

பிரயோகித்தான் தன் அம்பெனும் எந்திரத்தை.

அற்றை இரவகன்று பகலாக மலர்ந்தது. - அம்பு

அப்பாலுள்ள உலகில் சென்று விழுந்தது.

 

பெரும் மலைகள் பொடிபட; உயர்ந்த மரங்களும் ஒடிபட,

குரல்வந்த திசைநோக்கி, ‘சடசட’வென ஓடினான்.

‘வருந்தாதே! வந்தனென் அடியனன்’யென்றபடி

சார்ந்தனன் பின்னவன் தமையனை அணைத்தபடி.

 

ஊற்றென சொரிந்தன கண்கள் நான்கும்.

ஈற்று இளங்கன்றினைப் பிரிந்த ஏக்கத்தை

ஆற்றாது வாய்விட்டுக் கதறியழுதிடும்

பால் நிறைந்த பசுவானான் பட்டாபிராமன்.

 

‘அமரர் மூவரும், மூவுலகும் எதிர்ப்பினும்,

குமரன் நீயிருக்க எமை வெல்வார் யாருள்ளார்?’ என்ற

அண்ணனைப் பலமுறை அன்போடு தழுவினான்;- அவன்

கனகமேனியைக் கண்ணீர் கொண்டு கழுவினான்.

 

உவகையும், இன்னலும் ஒருசேர எய்திட,

இயம்பினான் தம்பி, நிகழ்ந்த தனைத்தையும்.

‘கடலிடை யகப்பட்டால் அலைகண்டு அஞ்சுவதா? – பிறவிக்

கடலிடை ஏற்படும் மலைகண்டு துஞ்சுவதா?’

 

அரக்கியை வென்ற பின் மீண்டேனென்றாய்.

கொன்றிலையோ அவளை நீ கூறெ’ன்றான்.

‘மூக்கோடு, செவியையும், வாயையும் எந்தன்

வாளால் அறுத்து விரட்டியடித்தேன்’ பதிலளித்தான்..

 

பளிங்கு மறைவுக்குத் திரும்பிய பின்னால்,

உறங்க முடியாமல் தவித்தார் அண்ணார்.

விரும்பியவள் உருவம்தான் விரிந்தது கண்ணில்.

கிரணங்களுடன் கதிரவன் உதித்தது விண்ணில்.

 

                 கவந்தன் வதைப் படலம்

 

ஐம்பது யோசனை தூரங்கள் அக்கானகத்தில்

தம்பியுடன் இணந்து எம்பெருமான் அலைந்தார்.

தவமுனி சபித்ததால் அரக்கனாய் உருவடைந்த

‘கவுந்தனி’ன் வனத்திடை பகல்பொழுதில் அடைந்தார்.

 

கவுந்தன்-

சிரமற்ற உடலுடன் அவலக்ஷண மானவன்.

கரங்கள் பல யோசனை நீண்டிடும் தன்மையன்.

வயிற்றிடையே வாய், மூக்கு கண்களெனும்

அவயங்கள் அனைத்தும் அமையப் பெற்றவன்.

 

அவன் வரவால்-

எறும்பு முதல் யானை வரையிலான

உறுப்புள்ள உயிர்களெல்லாம் உலைந்து குலைந்தன.

உருண்டு பிரண்டன மலைகளும், குகைகளும்.

சுருண்டு விழுந்தன மரங்களும், மேகங்களும்.

 

சக்ரவாள மலையே நெருக்கி அமுக்கினாற்போல்

வக்ரமான நீள்கையில் அகப்பட்டனர் சோதரர்கள்.

‘வளைத்தது அரக்கரின் பெரும்படையோ’வென

மலைப்புடன் திகைத்தனர் தசரத புதல்வர்கள்.

 

நடந்தனர் கரத்தினில் சில யோசனை தூரங்கள்.

நின்று நோக்கினர் ‘கவுந்தனி’ன் நேரெதிரினில் – அவன்

பஞ்ச பூதங்களால் அமைந்தவ னல்லன்.

பஞ்ச பாதகங்களால் அமைந்திடப் பெற்றவன்.

           

           இராம, இலக்குவர் ‘கவுந்தனை’க் கண்டு வியத்தல்

 

கனலையும், புகையையும் கக்கிடும் மூக்குடன்

குகையென வாயுடன், விழிகளும் சுழன்றிடும்

பிறையென இருபுறம் கூராய் ஒளிர்ந்திடும்

கோரைப்பல்லுடன் இருந்தான் கவுந்தன்.

 

சிகரமற்ற மேருமலைபோல் சிரமற்று இருந்தான்

கரம் நீட்டிப் பிராணிகளைக் கவர்ந்து பிடிப்பான். -பிடித்ததை

கொல்லனின் உலை துருத்திபோல், கனலினைக்

கக்கிடும் வாய்க்குள் இட்டு நிரப்பி முடிப்பான்.

 

தந்தையும் இறந்திட, தோகையும் பிரிந்திட,

துக்கத்தின் பெரும்பிடியில் சிக்கிய சீதாராமன்

பூதத்திற்கு இரையாகி இறக்க விழைந்தான்.

‘திரும்பி நீ செல்லெ’ன தம்பியை மொழிந்தான்.

 

வனத்திடை உன்பின் பணிசெய்து வருகையில்

மூண்ட இடர்கண்டு மீண்டு நான் செல்வதா?

வென்றவர் அன்றோ வீரர்கள் என்பர்.

சென்றவர் என்றும் வீரர்கள் அல்லர்.’ தொடர்ந்தான்.

 

‘இன்னல் வருங்கால் அண்ணனை நீ காத்திடு

இறக்கும் நிலை வந்தால் முன்னம் நீ இறந்திடு’வென

என்தாய் விடுத்திருந்த கட்டளையை

மெய்யாக்க முயலுவேன்’ யென்றபடி,

 

முன்னம் விரைந்து சென்றான் பின்னவன்.

முன்னவனோ அவனை முந்திச் சென்றான்.

‘வினையில் எய்திய வீரர் நீர் யாவர்?’ கவுந்தன் வினவ

வினாவுக்குப் பதிலாய் விழித்தனர் இருவரும்.

 

அழிந்தவர் அல்லராய்த் தம்மை இகழ்ந்தவர் நோக்கி,

விழி வழி வழிந்த சினத்தைக் கனன்று,

‘விழுங்கிடுவேன் உமை’யென எழுந்த கவுந்தனின்

தோள்களை வாளால் அறுத்தான் காகுந்தன்.

 

ஆளும் நாயகனின் அருள் கரம் பட்டதும்,

மூளும் சாபத்தின் முந்தைய வினை முடித்தான்.

துண்டான தோளுடைய பாவ உடல் துறந்து,

விண்மீது வெளிப்பட்டான் திவ்ய உருகொண்டு.

 

‘அண்டசராசரங்களின் ஆட்சி நாயகனே!

நல்ல தர்மத்தின் சாட்சி யானவனே!

என்னெதிர் தோன்றி நீ சாபத்துயர் துடைத்தனை.

இவ்வருளை நான் ஏற்க எவ்வருளைப் புரிந்தேனோ?’

  (தொடர்ந்து வரும்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக