வெள்ளி, 22 செப்டம்பர், 2017

தமிழனே! தலை நிமிர்!


தமிழனே! தலை நிமிர்!
தலைகனத்தைத் தவிர்!
தன்மானத்தையும், தன்னம்பிக்கையையும்
தனதாக்கிக்கொள்ளென்றால் நீ
தன்னலத்தையே தஞ்சமடைகிறாயே?


அஹிம்சா வழி சென்று, அற நெறியில் போராடி,
அன்னியனை விரட்டி அடித்த
அண்ணலுக்குத் தெரியாது,
நீ புரியும் 'போராட்டங்களின்' பொருள்.
புரிந்தால் அந்த
பொக்கைவாய் மாமனிதர்
விக்கித்துப் போய்விடுவார்.

'கற்கை நன்றே! கற்கை நன்றே!
பிச்சைப் புகினும் கற்கை நன்றே!'
என்ற வரிகள் இன்று..
'கற்பது வேண்டாம்! கற்பது வேண்டாம்!
இலவச பொருட்கள் கிடைக்குது நன்றாய்!'
என்றான நிலைகண்டு
எள்ளி நகையாடுவாள்
ஒளவை இன்றிருந்தால்.

'செப்பு மொழி பதினெட்டுடையாள் - அவள்
சிந்தனை ஒன்றுடையாள்'
என்றான் பாரதி...
தாய்மொழியை துண்டு துண்டாக்கி,
வேண்டவே வேண்டாம் வேற்று மொழி
என்று நீ சொல்வது தெரிந்தால்
மூர்ச்சையாகி விடுவான் அந்த
முண்டாசுக் கவிஞன்.


தமிழனே!
கடமை, நேர்மை,
உண்மை, திண்மை யெனும்
'மை' அனைத்தையும்
மெள்ள மெள்ள நீ
ஆங்கில 'MY' ல்
ஆழ அமிழ்த்துகிறாய்.


இலவசங்களை ஏற்றுக்கொண்டு நீ
இளிச்சவாயன் ஆகிறாய்!
'அன்பளிப்பு' பெற்றுக்கொண்டு நீ
அற்பப் பதராய் போகிறாய்!


நன்னெறிகளும், நீதிபோதனைகளும்
நிறைந்த நம் தேசம் - உன்
'சுய நலம்' என்ற சுள்ளியின்
சூடு தாங்க முடியாமல்
சுருங்கி - சிதைந்து போய்
சின்னாபின்னமாய் உள்ளது.
தெரியுமா உனக்கு?
புரிந்துகொள்ள முயற்சிப்பாயா?

'வாழ்க்கை' யென்பது
எப்படி வேண்டுமானாலும் வாழ்வதல்ல!
இப்படித்தான் வாழவேண்டும்!
மனிதனாகத்தான்!
ஆறறிவு கொண்ட மனிதனாகத்தான்!
அற்பப் புழுவாய் நெளிவதற்கல்ல!

நீ... நீயாக இரு
நிமிர்ந்து நட!
'நீ' தான் '
'நீ மட்டும்தான்' என்ற
நினைவை மட்டும்
நெஞ்சினின்று
நிரந்தரமாய் நீக்கு!
நெறிஞ்சி முள்ளாய் குத்தாமல்
நித்திய கல்யாணியாய்
நிதம் மணக்கும் நம் தேசம்.





                                                       
                                           


Image result for free cartoon image of bharat mata standing with a man






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக