புதன், 10 ஜூலை, 2024

'அன்பு' எனப்படுவது யாது?

காரில் பயணம் செய்யும்போது FMரேடியோவை ஒலிக்கச்செய்து கேட்டுக்கொண்டே பிரயாணிப்பது எனக்கு மிகவும் பிடிக்கும். சமீபத்தில் நான் FM ல் கேட்ட ஒரு கதை என்னைச் சிந்திக்கச் செய்தது.

அந்தக் கதை என்னவென்றால், 'ராணுவத்தில் இருக்கும் ஒரு மகன் தன் தந்தைக்குப் ஃபோன் செய்கிறார். "அப்பா இன்னும் இரு தினங்களில் நான் ஊருக்கு வருகிறேன். ராணுவப் பணியில் என்னோடு வேலை செய்யும் ஒருவர், சமீபத்தில் எல்லையில் நடந்த ஒரு போரில், ஒரு கையையும் காலையும் இழந்துவிட்டார். அவரை நான் என்னுடன் அழைத்து வருகிறேன்." என்று கூறுகிறார்.  "ஓரு கை ஒரு கால் இழந்தவரை எப்படியப்பா நீ அழைத்து வரமுடியும்?" என்று அப்பா கேட்கிறார். "விவரங்களை நான் பிறகு சொல்கிறேன் அப்பா" என்று மகன் கூறுகிறார். இரு தினங்களுக்குப் பிறகு மீண்டும் மகனிடமிருந்து அப்பாவுக்குத் தொலைபேசியில் அழைப்பு வருகிறது. "அப்பா.... நான் ஊருக்கு வரவில்லை. ஒரு காப்பகத்தில் சேர்ந்துள்ளேன். ஒரு கை ஒரு காலை இழந்தது நான் தான்.  அப்படிப்பட்ட நிலையில் இருக்கும் என் நண்பனை நான் கூட்டிக்கொண்டு வருகிறேன்' என்று சொன்னதும், நீங்கள் 'எப்படியப்பா நீ அழைத்து வர முடியும்?' என்று கேட்டீர்கள். இப்படி அன்பு இல்லாத உங்களோடு கை கால் இழந்த நான் எப்படி என் வாழ் நாள் முழுதும் இருக்க முடியும்?" என்று கேட்கிறார்.

இத்துடன் கதை முடிந்து விடுகிறது. அன்பு என்பது அனைவருக்கும் முக்கியமானது. என்று கூறி கதை நேரத்தை நிறைவு செய்கிறார் நிகழ்ச்சி பங்கேற்பாளர்.

இதைக் கேட்டதும் என் மனதுள் பலவித கேள்விகள். சரி.. அன்பு என்பது என்ன?  

இக் கதையின் அப்பாவை அன்பில்லாதவர் என்று கூறிவிட முடியுமா? ஒருவேளை அவர், 'எப்படியப்பா நீ அவரை அழைத்து வர முடியும்?' என்று கேட்ட கேள்விக்கு முன், 'அச்சச்சோ' என்று இரக்கப் பட்டிருக்க வேண்டுமோ? அது இரக்கம் என்றல்லவா வகைப்படுத்தப் படும்! எப்படி அன்பு என்று அதை வரையறை செய்வது?

ஓரு வேளை அந்த அப்பா, மகன் எடுத்த முடிவை அப்படியே ஏற்றுக்கொண்டு, 'அப்படியாப்பா! அழைத்து வாயேன்' என்று கூறியிருந்தால் அவர் அன்புடையவர் அவாரோ? அதெப்படி?...... அவரைக் கீழ்ப்படிபவர் என்றோ மறுத்துக் கூறாதவர் என்றோ எதிர்த்து சொல்லாதவர் அல்லது எதிர்ப்புக் காட்டாதவர் என்றோ வேண்டுமானால் வகைப்படுத்தலாம். 'அன்பு' என்று எப்படி இதைக் கூறுவது?

இல்லையென்றால் அந்தத் தந்தை, 'அழைத்து வா மகனே! மிக்க சந்தோஷம்' என்று கூறியிருக்கலாம். இது 'இன்சொல் பேசல்' என்றல்லவா வகைப்படுத்தப்படும். இதுதான் 'அன்பு' என்று எப்படி முடிவெடுப்பது? அவர் வாயளவில் இப்படிக் கூறி, மனதளவில் எதிர்மறை எண்ணத்தைக்கூட கொண்டிருக்கலாம்.

மகன், ஒரு கை ஒரு கால் இழந்த நண்பரை அழைத்து வருகிறார் என்றதும் அவர் மனதில் எத்தனையோ கேள்விகள் தோன்றியிருக்கலாம். நண்பரைத் தங்க வைக்க வீட்டில் எப்படி மாற்றங்களையோ, ஏற்பாடுகளையோ  செய்யலாம்? என்ற எண்ணவோட்டம் ஓடியிருக்கலாம்.

அவருக்குத் தனது மற்றும் தன் மனைவியின் வயோதிகம் மனக்கண் முன் தோன்றியிருக்கலாம். மகனுடன் வரும் அவரின், கை கால் இழந்த நண்பரை எப்படிப் பராமரிக்கலாம் என்ற நினைவுகள் அரும்பியிருக்கலாம்.

மகன் தன் நண்பரை, தாம் கூட்டிக்கொண்டு வந்து தாமே கூட்டிச் சென்றுவிடுவாரா அல்லது தன் பெற்றோர்களிடம் விட்டுச் செல்வதாக உள்ளாரா? அல்லது அவர் எந்த ஊரைச் சேர்ந்தவர்? அங்கு அவரை ஒப்படைக்க உள்ளாரா? இது  போன்ற கேள்விகளுக்குப் பதில் தெரியாமல், அந்தத் தந்தை, 'கூட்டி வா! நேரில் பேசிக்கொள்ளலாம்' என்று வேண்டுமானால் சொல்லியிருக்கலாம். அப்படியும் இதை 'அன்பு' என்று வரையறை செய்து விடலாமா? உண்மையில் 'அன்பு' என்பது என்ன?

'அன்புடைமை' என்று ஒரு அதிகாரமே உருவாக்கியிருக்கும் வள்ளுவர் அன்பு பற்றி என்ன கூறுகிறார்?

1.'அன்பு'க்கு அடைக்கும் தாழ்ப்பாள் இல்லை.
 2. அன்போடு இணைந்த வாழ்க்கை என்பது உடலோடு இணைந்த உயிர் போன்றது,
3.  'அன்பு' என்பது எல்லோரிடமும் நட்பைத் தரும், 
4.அன்பு உடையவரின் வாழ்க்கை, இன்பம் உற்றவர் அடைந்திடும் சிறப்பைப் போன்றது.
5.'அன்பு' அறத்திற்கு மட்டும் துணையாகும் என்று கூறுவோர் அறிவில்லாதவர். ஆராய்ந்தால் 'அன்பு'  வீரத்திற்கும் துணையாகும்.
6. எலும்பற்ற புழு பூச்சிகளை வெய்யில் வருத்துவதைப் போல அன்பில்லாதவரை அறம் வருத்தும்.
7. அன்பு இல்லாதவனின் இல்வாழ்க்கை, வறண்ட பாலை நிலத்தில், காய்ந்த மரம் துளிர்ப்பதைப் போன்றது.
8. 'அன்பு' என்னும் அக உறுப்பு இல்லாதவர்க்கு, புற உறுப்புகளால் என்ன பயன்? 
9. 'அன்பின் வழியில் இயங்குவதே இவ்வுடம்பின் உயிர் நிலை. அன்பில்லாதவரின் உடலோ எலும்பைத் தோலால் போர்த்திய வெற்றுடம்பு தான்.

இந்த 9 குறட்களிலும், அன்பினால் ஏற்படுவது, அன்பு இல்லாததால் ஏற்படுவது என்றுதான் கூறுகிறார். 'அன்பு' எனப்படுவது யாது?

அன்பிலார் எல்லாம் தமக்குரியர்; அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு.

இந்தக் குறளில், 'அன்புடையவர்' அன்பில்லாதர்' பற்றிய விளக்கம் கூறியுள்ளார் வள்ளுவர். அது என்னவென்றால், 

என்பு -  (எலும்பு, உடல் )
அன்பு கொண்டிருப்பவர், தன் எலும்பையும் பிறருக்கு உரித்தாக்குவர் என்றும் கொள்ளலாம் தன் உடலையும் பிறருக்கு உரித்தாக்குவர் என்றும் கொள்ளலாம். அன்பு இல்லாதவர் எல்லாவற்றையும் தமக்கே உரித்தாக்கிக் கொள்வர்.  
அப்படியென்றால், எல்லாவற்றையும் மற்றவர்களுக்காகக் கொடுத்தல் தான் 'அன்பு' எனப்படுகிறதா?  எலும்பைக்கூட மற்றவர்களுக்காகக் கொடுத்துவிடுவது என்பதா அன்பு? நாம் உரித்தாக்கும் நபர் யார்? அவர் அதற்குத் தகுதியானவர்தானா என்பதையெல்லாம் ஆராய வேண்டாமா?  அப்படிக் கொடுத்தால் நாம் ஏமாந்த சோணகிரி ஆகிவிட மாட்டோமா? சுயநலமற்ற தன்மை தான் 'அன்பு' எனப்படுகிறதா?


நான் கூறிய கதையில், அந்த அப்பா, தன் மகன் மேல் தாம்  கொண்டிருக்கும் பாசத்தால் கூட, 'எப்படியப்பா நீ ஒரு கை ஒரு கால் இழந்தவரை கூட்டி வரமுடியும்?' என்று கேட்டிருக்கலாம். தன் மகன் ராணுவத்தில்,  ஒரு காலையும் ஒரு கையையும் இழந்து விட்டான்.' என்று தெரிந்திருந்தால் அவர் பதறியிருக்கலாம். அந்தப் பதற்றத்தையும் 'அன்பு' என்று கூறுவதா என்ன?  அதுவும் கூட 'பாசம் தான்!  பெற்ற பாசம்". 

மொத்தத்தில் 'அன்பு' என்பதற்குத் தனியான ஒரு பொருளோ விளக்கமோ இல்லை. இரக்கம், பாசம், மனித நேயம், சுய நலமின்மை, ஈகை,  அக்கறை, நட்பு, போன்ற பல்வித நல்லொழுக்கங்களின்  கூட்டுக் கலவையான ஒரு உணர்வு தான் 'அன்பு!'