புதன், 3 மார்ச், 2021

ரெட்டை மாமரத்தான் (21.2.2015 ம் ஆண்டு தினமலர் வாரமலரில் வெளியானது)

 செல்ஃபோன் அடித்தது. அம்மாதான்.

'சொல்லுமா?" என்றேன்.

'வேணி.... ரோடு அகலப்படுத்தறதுக்காக நம்ப ரெட்டை மாமரத்தனை வேற எடத்துக்கு மாத்தப் போறாங்களாம்மா' படபடப்போடு சொனாள் அம்மா.

"நீ ஒரு தடவை ஊருக்கு வந்துட்டுப் போயிடறியா?' எதிர்பார்ப்போடு கேட்டாள்.

என் எண்ண ஓட்டம் நாற்பது, நாற்பத்தியிரண்டு வருடங்கள் பின்னோக்கிச் சென்றது.

எங்கள் ஊரில் இருக்கும் காவல் தெய்வம் தான் 'ரெட்டை மாமரத்தான்'. காவல் தெய்வம் என்றெல்லாம் நான் பின்னாட்களில் தெரிந்து கொண்ட ஒரு வார்த்தை அவ்வளவே!

இரண்டு மா மரங்களுக்கு இடையில் ஒரு செவ்வக வடிவ கருங்கல் ஊன்றப்பட்டிருக்கும். உடல் முழுவதும் கருப்பாகவும், நெற்றியில் சந்தனப் பொட்டும், குங்குமப்பொட்டும் சார்த்தப்பட்டிருக்கும்.

எனக்கு மூன்று வயதாக இருக்கும் போதிலிருந்தே ரெட்டை மா மரத்தானைத் தெரியும். 

'பொய் சொல்லாதே...! ரெட்டை மாமரத்தான் பார்த்துகிட்டிருப்பார்' என்று சொல்லிதான் அம்மா எனக்கு உண்மையையே பேசப்பழக்கினார்.

இடி இடிக்கும்போது பயம் வந்தாலோ, ஃப்ரெண்ட்ஸ்கூட சண்டை வந்தாலோ எனக்குத் துணை ரெட்டை மாமரத்தான் தான்.

'பாட்டுப் போட்டிக்குச் செல்லும் போது, 'ரெட்டை மாமரத்தானே! நான் நல்லா பாடறேன். ஃபர்ஸ்ட் பிரைஸ் கிடைக்க வழி பண்ணு' என்று வேண்டிக்கொள்வேன்.

பிரைஸ் கிடைத்தால் 'நன்றி ரெட்டை மாமரத்தானே நன்றி' என்று உருகுவேன்.

பிரைஸ் கிடைக்கவில்லையென்றால் 'லதா என்னைவிட நல்லா பாடிட்டாள்' என்று கூறிகொள்வேன்.

நான் தப்பே பண்ணாத போது யாராவது என்னை ஏதாவது சொல்லிவிட்டால் ரெட்டை மாமரத்தான் கிட்ட, 'நீ பாத்துகிட்டுதானே இருக்க...?' என்று கேட்பேன். சண்டை போடுவேன். அழுவேன். அப்புறம் எங்களுக்குள் சமாதானம் நடக்கும்.

என் வேண்டுதலில் காணிக்கையோ, நேர்த்திக்கடனோ கிடையவே கிடையாது.

இப்பொது திருமணமாகி இங்கு வந்துவிட்டாலும், ரெட்டை மாமரத்தானே என் கண்கண்ட தெய்வம். எந்தக் கோவிலுக்குப் போனாலும் சரி, எந்த சாமிக்குப் பூஜையானாலும் சரி     அதது செய்யும் முறைப்படி செய்தாலும், என் மனம் மட்டும் 'ரெட்டை மாமரத்தானே' என்றுதான் வேண்டிக்கொள்ளும்.

"வேணி... வேணி.... லைன்ல இருக்கியா?' அம்மா குரல் காதில் கேட்டவுடன் நிகழ்காலத்துக்கு வந்தேன்.

'ரெண்டு மாமரத்தையும் வெட்டிட்டு சாமியை வேற இடத்துல பிரதிஷ்டை பண்ணப் போறாங்களாம். அதுக்குள்ள நீ வந்து பார்த்துட்டுப் போறியா?' அம்மா கேட்டாள்.

"இல்லை மா நான் இப்போ ஊருக்கு வரலை. ரெட்டை மாமரத்தான் எங்கையும் போயிடலமா.. என் கூடவேதான் இருக்கார். இருப்பார். உங்களையெல்லாம் பாக்க அடுத்த மாசம் வர முயற்சி பண்றேம்மா" தீர்மானமாகக் கூறினேன் நான். 




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக