கங்கை காண் படலம்
யானை, குதிரை, வீரர்கள் கொண்ட
சேனைக் கடலென பின் தொடர,
புனலொடு பொங்கிடும் கங்கை யாற்றின்
வடகரை யடைந்தான் மரவுரி பரதன்.
142
பெரும்படையைக் கண்ணுற்றான்
கருமேக நிறமுடைய குகன்! - அவன்
திடுக்கிட்டுத் துணுக்குற்றான்
கடுப்பாகிக் கனலுமிழ்ந்தான்.
143
அண்ணலை வதம் செய்திட
வந்தனனோ இவெனென சீறினான்.
‘அப்படை எலிப்படை! அரவம் தானெ’ன
ஆரவரக் குரலெடுத்துக் கூவினான்.
144
‘அஞ்சன வண்ணனாம் எம்பிரான் இராமனை
முன்னவனென்றும் நினைந்திலன்
வஞ்சகத்தாலே ஆட்சியைக் கொய்தவன்.
என்னைக் கடந்து போவது எங்கனம்?’
145
வில்லெடுத்து நின்ற குன்றனைய குகன் பற்றி
‘சொல்லெ’ன்று பரதன் கேட்க, சுமந்திரன் சொன்னான்.
‘கங்கையிரு கரைகட்கும் தலைவன்,
உங்கள் குலநாயகனின் துணைவனென்று.
146
இராமனுக்குத் தோழனெனில்
தொழுதிடல்தான் மரபென்று
விரைந்து பணிந்த பரதனைப் பார்த்ததும்
குனிந்து வணங்கித் தொழுதான் குகனும்.
147
‘இவ்விடம் எய்தது எதற்கெ’ன்றான்.
‘அவ்விடம் அயோத்தி ஆள்வாரின்றி
அல்லலுறுவதால் அண்ணனை அழைத்து
அரியணை யேற்றிட வந்தேனெ’ன்றான்.
148
‘தாயுரை ஏற்று இராச்சியம் பெற்றதைத்
‘தீவினை யென்றெண்ணி மரவுரி பூண்டனை!
அண்ணலை யழைத்திட கானகம் வந்தனை!
உன்னை ஆயிரம் இராமரும் ஒப்பரோ’வென்றான்.
149
‘கல்லிடை பரப்பிய புல்லெனும் படுக்கையில்
வில்லான் துயில்வான்’ என்றதும் பரதன்
‘எவ்விடம் உள்ளான் எம்பிரான் இராமன்?
அவனடி சேர்ந்திட துடிக்குதென் உள்ளம்’ பதைத்தான்
150
‘இராமன் இருப்பிடம் காட்டுதற்கென்றே
நாவாய் கொணர்ந்தான் நாயகன் குகனும்.
படகினில் ஏறிய பரிவாரங்கள்
பரத்வாசாஸ்ரமம் அடைந்தனவாம்.
151
திருமுடி சூட்டு படலம்
வினவினராம் முனி,
‘எடுத்த மாமுடி விடுத்ததுடன் நீ
முடித்த வார்சடை தரித்தது ஏன்?’
‘முறைமை நீங்கி முதுநிலம் ஏலேன்.
இறைவனின் சிரம்தனில் சூட்டியே மீள்வேன்’ என்றான்.
152
விருந்துணவளித்தார் பரத்வாசர்
விரும்பியே கனிகளை உபசரித்தார்.
விடிந்ததும் சேனை கிளம்பியது.
விலகிய பாலை மருதமாய் மலர்ந்தது.
153
புரண்ட புழுதியும், எழுந்த இரைச்சலும்,
அகண்ட சேனையின் வரவைச் சொன்னதும்,
கனன்ற சினத்துடன் இளையான் எழுந்தான்.
கனிந்த மனத்துடன் தமையன் தடுத்தான்.
154
நின்றனன் பரதன் தன்நெடும் படையுடன்.
சென்றனன் முன்னம் சத்ருக்ன தம்பியுடன்
‘வந்தனம்’ என்றனன் விழிநீர் பெருக்குடன்.
விழுந்தனன் தரைமேல் திருவடி பற்றியே’
155
‘அறந்தனை நினைந்திலை; அருளும் நீத்தினை;
முறைமையும் துறந்தனை; மரவுரி தரித்தனை; - என
முறையிட்டுக் குறை கண்டான்.
பறைசாற்றி ‘கறை’யென்றான்.
156
வாடி மெலிந்த பரதனைத் தன்னுடன்
வாரியணைத்து நீர் சொறிந்தான்.
வலிய புஜம் கொண்ட மாமன்னர்
‘வலியரோ?’ வென வினவினான்.
157
‘நின் பிரிவென்னும் பிணியாலும்
கரியவளின் வரமென்னும் எமனாலும்,
இறந்துபோனார்’ என்ற சொல்லால்
இடி தாக்கிய அரவமாய் பொருமினான்.
158
தேற்றினார் வசிஷ்ட்டர்.
மறைகளுக்கெல்லாம் வரம்பானவனே!
பிறத்தலும், இறத்தலும் இயற்கையென்பதை
மறந்தனையோ நீ?’ எனச் சொல்லி
இறுதிக்காரியம் இயற்றுவித்தார்.
159
இராமபிரான் பரதனை வினவுதல்
வந்திருந்த அன்னையர்கள் திருவடியில்
வணங்கியெழுந்த பின் பரதனிடம்
‘மன்னரின் ஆணையால் மகுடம் நின்னதே!
மரவுரி தரித்து ஏன் நீ வந்ததே?’ வினவினான்.
160
பரதன் வேண்டினான்;
‘பாவிக்கு மகவான பாவியானேன்.
சாகவும், தவமேற்கவும் தகுதியில்லை.
முடிசூடவும், அரசாளவும் பொருத்தமில்லை.
திரும்பி நீ வந்து அரசனாய் உருமாறு’
161
மறுத்தான் இனியான்:
‘பெற்றோர் ஆணையைத் தட்டுதல் சரியா?
மற்றவர் என்னைத் தூற்றுதல் முறையா?
இம்மையில் பொய்யுரை புனைந்தேனென்று
மறுமையில் நரகத்தில் உழல்வது விதியா?
162
தரணியை ஆள்வது பரதனென்று
தலைவன் சொன்னதை நீ ஏற்பாய்!
தலைமுடி தாங்கியே அரசாண்டு,
நலமுடன் வாழ்ந்திடு பதினான்காண்டு!
163
மன்னன் இருக்கையில் மகுடம் ஈந்ததும்
மறுப்பதற்கஞ்சியே ஒப்புதல் தந்தேன்.
கானகம் சென்றிட அவர் இட்ட
கட்டளை ஏற்பதும் சரிதானே?’ புரியவைத்தான்.
164
பரதனே!
‘நாட்டின் மகுடம் தரித்துடு நீ’யென
வசிட்ட மாமுனி இசைபட சொன்னதும்,
‘ஆள்பவர் ஆள்க! ஆட்சேபணை யில்லை.
வாழ்வேன் இனிமேல் காட்டினிலெ’ன்றான்.
165
‘ஆண்டுகள் பதினான்கும் ஆன பிற்பாடு
மீண்டு நான் வருவேன்! அதுவரையில்
அரியணை அமர்ந்து நீ அரசாள்வாய்.
பொறுப்புடன் குடிகளின் குறை தீர்ப்பாய்’ என்ன
166
‘பெரியோய்!
நின் அடித்தலம் இரண்டையும் தலைமேலே
முடித்தலமாகவே சூடிக்கொள்வேன்.
முறைப்படி குறிப்பிட்ட நாட்கடந்தால்- நான்
இறப்பது உறுதி’ யென புறப்பட்டான்.
167
பாதுகைத் தலையோடு அயோத்திக்குள்
மாதவத்தோருடன் நுழைந்தான் நந்திகிராமத்தினுள்..
தம்பியும், தையலும், பின் தொடர்ந்து வந்திட
தென்திசையில் பயணித்தான் அந்தமிலான்.
168
(அயோத்தியா காண்டம் முற்றும்.)
தொடர்வது ஆரண்ய காண்டம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக