கதிரவன் உதிக்குமுன்
அதிகாலையிலே - அண்ணல்
சந்தியா வந்தனம்
செய்கையிலே
இந்துவை ஒத்த நுதலுடைத்
தேவியை
இளையவர் காவல்
காத்திருந்தார்.
அறியவில்லை அரக்கி
இளையானின் இருப்பை
குறிப்புடன் பார்த்தாள்
பிராட்டியின் பின்னுருவை
‘தனித்திருக்கிறாள்.
சமைந்ததென் கருத்தெ’ன கருதினாள்.
வன்மனத்துடன் வளைத்திட
வகையாய் நெருங்கினாள்.
‘நில்லடீ’ யென
விரைந்து வந்தான் இளையான்.
வில்லெடுக்கவில்லை
அவள் பெண்ணானதால் – மாறாய்
விரித்த கூந்தலை
விரல்களால் பற்றினான்.
இடையினில் உதைத்து
உடைவாள் உருவினான்.
முகலட்சணம் மாறி
அவலட்சண மாக்குதற்கு - அவளின்
மூக்கையும், காதுகள்
இரண்டையும் அறுத்தெறிந்தான்.
பெண்மைக்குக் குறைவைக்க
அவளின் முரண்முலைக்
கண்களை அகற்றி,
பின் கூந்தலைத் தளர்த்தினான்
அக்கணத்தில் அவளெழுப்பிய
அரற்றல் ஒலியோ
திக்கனைத்தும்
மேலெழும்பிப் பரந்து ஒலித்தது.
மூக்கின்வழி பெருகிய
குருதியின் அளவினால்
மூவுலகும் நிலைகுலைந்து
தளும்பித் தளர்ந்தது.
அவளோ-
வானம் வரை உயர்ந்து
எழுந்தாள்
மண்மேல் விழுந்து
அழுது புரண்டாள்.
மூக்கின் செம்மையை
ஆடையால் துடைத்தாள்
கயிலை மலையெடுத்த
தமையனைக் கூவியழைத்தாள்.
(கயிலை மலையெடுத்த தமையன் இராவணன்)
'ஊழிக்காலத்தும்
தன் நிலையினின்றும் நழுவாமல்
தேவர்கட்க்கும்,
அசுரர்கட்க்கும், மூர்த்திகள் மூவருக்கும்
தேவையாய் இருந்த
இராவணனே! – எந்தன்
வேதனையைக் காண
வேகமாய் வருவாயோ?
இந்திரனை எதிர்த்துப்
போர் புரிகையிலே – உடல்
வியர்க்க அவனை
விரட்டி யடித்தவனே!
வாயு, வருணன்,
அக்னி, யமன் மற்றும்
வானத்துக் கோள்களை
ஏவலராக்கிய தசமுகனே!
சிவனோ, அரியோ,
அயனோ இவனென
எவருமே வியந்திடும்
அண்ணனாம் கரனே!
விரைந்து வாராய்.
திண்தோள் வீரனே – என்
அவதியைத் தீராய்.
தமையனாம் தீரனே!
(விஸ்வரஸின்
முதல் மனைவியான கேசகியின் மகன் இராவணன்.
மற்றும்
கும்பகர்ணன்.
விஸ்வரஸின்
இரண்டாம் மனைவியான, கேசகியின் தங்கை கும்பினஸிக்குப்
பிறந்தவர்கள்
கரன், தூடணன் மற்றும் சூர்ப்பணகை. தாய் வழி, தந்தை வழி,
இரண்டு
வழிகளிலும் இவர்கள் சகோதரர்கள்.
திரிசிரா
என்பவன் மூன்று தலைகளை உடையவன்.
இவன் கரனின்
படைத்தலைவன்.
வியாசரின்
மஹாபாரதப் படி புலஸ்தியருக்கு இரண்டு மகன்கள்.
வைஸ்ரவணன்
என்கிற குபேரன்,
மற்றும் விஸ்வரஸ்
விஸ்வரஸுக்கு
மூன்று மனைவிகள். புஷ்போத்கடையின் மகன்கள் ; இராவணன், கும்பகர்ணன்
இராகையின்
மகன் கரன்; மகள் சூர்ப்பணகை.
மாலினியின்
மகன் விடணன்)
‘இந்திராணியே
‘பல்லாண்டு’ எனும் வாழ்த்துப்பா பாடிட -
சந்திரனே வெண்
கொற்றக்குடையாய் பறந்து ஆடிட
இமையோரெல்லாம்
அடங்கி நடக்கும் அவைதனில்
நசுங்கிய முகத்துடன்
எவ்விதம் நான் நுழைந்திட?
இந்திரனை சிறைபிடித்த
இந்திரஜித் மருமகனே!
மதயானைக் கொம்பொடித்த
மாவீரன் இராவணனே!
ஆயுதக் கரம் கொண்ட
கரனே! தூடணனே!
செவிமூடி உறங்குதிரோ
கும்பகர்ணன் போலே!'
அழுது புரண்டவள்
அரற்றிய ஒலி கேட்டு
விரைந்தங்கு எய்தினான்
வில்லாளன் இராமன்.
‘தவவனத்தினில்
என்செய்ய நீ வந்தாய்? அவளை அதட்டினான்.
‘விடுகாதும், நெடுமூக்கும் ஏன் நீ அரிந்தாய்? அவனை
வினவினான்.
‘இவள், கருதிவந்த
காரியத்தை அறிந்திலேன் நான்
புறத்திருந்து
தாக்கும் அரக்கர் கூட்டம்’ என்னும்படி
பிராட்டிதன் உயிரைப்
பறித்திடும் கருத்துகொண்டு,
எரிஉமிழ் கண்ணினாள்
பாய்ந்து வந்தாள்’ என-
இளையான் சொல்லிமுடிக்குமுன்
செங்கண் அரக்கி,
‘மாற்றாளைக் கண்டக்கால்
மனம் எரியாதோ? என்றதும் – ‘
'குற்றம் செய்யவல்ல
கொடும்அரக்கி இவளென்றும்
முற்றிலும் சரியே! மூக்கரிந்ததென்று'ணர்ந்தான்.
‘உன்
அன்னைதனை ஈன்றெடுத்த
நவையரக்கி ‘தாடகை’யின்
தலையெடுத்து வதம்செய்த
வில்லும் அம்பும் உண்டு.
புலனடக்கித் தவம்செய்து
பெருமையுடன் யான்பெற்ற
பலவகையாய் வாளுண்டு
உனைப் பதம்பார்க்க.
மணமான என்பால்கொண்ட
மோகத்தைக் கொன்றுவிடு.
வீணான மையலையும்
வேருடனே அழித்திடு.
எரிசொல்லை விட்டொழித்து
எதிரினின்று சென்றிடு.
பெரும்குலமாம்
அரக்கர்களை அறுப்பதற்கு வழிவிடு’ என்றான்.
(இன்னும் இருக்கிறது)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக