சூர்ப்பணகை
சூழ்ச்சிப்படலம்
‘விசுவகர்மனெ’னும் தெய்வத்தச்சன் படைத்த இலங்கையில்,
தசமுக
இராவணன் அதிபதியாய் ஆண்டுவந்தான். - அவன்
தோள்கள்
இருபதிலும் அணிகலன்கள் அணிந்தவன்
கோள்கள்
அனைத்தையும் பணியாற்றப் பணித்தவன்.
(விசுவகருமன் மனதில் நினைத்தவாறே படைக்குமாற்றல் அமைந்தவன். அதனால் தெய்வத் தச்சன் எனப்பட்டான்)
‘திக்கயங்களெ’னும்
யானைகளைப் பிடித்த வீரன்!
கயிலை
மலையைப் பெயர்த்த அசகாய சூரன்!
இந்திரனை
வென்று வானுலகை அடக்கிய தீரன்! - இன்று
இரத்தினம்
பதித்த கொலுமண்டபத்தில் வீற்றிருந்தான்
கொங்கைகள்
இரண்டும், மூக்கும், காதும் இழந்த
தங்கையாம்
‘சூர்ப்பணகை’ வெறிகொண்ட வேங்கையாய்
செங்
கைகளைத் தலையில் தாங்கிய வண்ணம்
வடதிசை
வாயிலில் வந்து தோன்றினாள்.
மூவுலகையும்
ஆள்பவனின் ஆருயிர் தங்கையின்
மூக்கறுந்ததை
யறிந்த அரக்கரும், மகளிரும்
தரிக்கவல்லாமல்
தவித்துக் குழம்பினர். – இதைப்
புரிந்தவர்
எவரென புரியாமல் பொருமினர்.
‘போரிலானாகி
ஏவல்கள் புரியும் இந்திரன் அல்லன்.
தோற்றுப்போய்
நீர்புகுந்த திருமாலும் அல்லன்.
எதிர்நில்லாது
மலைமீது நின்ற சிவனும் அல்லன்’.
இவ்வாறெல்லாம்
எண்ணிச் சோர்ந்தனர் நிருதர்கள்.
குன்றெனத்
திகழும் இலங்கேஸ்வரனின் வீரக்கழலை
நன்றென
நினைத்து, நைந்து கதறினாள் சூர்ப்பணகை.
நிகழ்ந்ததொன்றும்
விளங்கிடாமல் நெஞ்சம் பதைத்தவன்
வழிந்து
ஓடும் குருதி கண்டு வாயடைத்து நின்றான்.
மடித்த
வாய்கள் பத்தும் கோபப்புகை கக்க
துடித்த
தொடர் மீசைகள் தீப்பற்றி உயிர்ப்ப,
கடித்த
பற்கள் இடியென ஒலி யெழுப்ப,
வெடித்தான்,
‘யாவர் செயல் இஃதென்று’
‘காட்டிடை
வந்து புவி காவல் புரிகின்றார்.
மீனுடைக்
கொடிகொண்ட மன்மதனை ஒத்தார்.
ஊனுடை
உடம்பு கொண்டார்; உவமையில்லா
மானிடர்
இருவர், வாளுருவித் துண்டித்தார்’ என்றாள்.
கிள்ளியெறிந்தவர்
‘மானிடர்’ என்பதை ஏற்காமல்,
எள்ளி
நகையாடி ஏளனத்துடன் சொன்னான்,
‘பிள்ளாய்!
உன் கூற்றுக்குப் பொருந்தார் மானிடர்,
பொய்
தவிர், பயத்தையொழி, நடந்ததைக் கூறிடு.
‘மரவுரி
தரித்து, பிரிசடை பூண்ட அழகர்கள்.
முப்புரி
நூலினை மார்பினில் அணிந்த குமரர்கள்.
அரக்கர்
குலம் அழித்திட சூளுரைத்த சீலர்கள்
தசரத
மைந்தர்கள் இராம, இலக்குவர்கள்.’என்றாள்.
‘அரிதான
என் தங்கையின் நாசிகளை வாட்கொண்டு
அரிந்துவிட்ட
மானுடர் வாழ்கின்றாரா இப்புவியில்?
ஆளும்
உள; வாளும் உள; வாழ்நாளும் உள;
தோளும்
உள; அண்ணனாம் நானும் உளனன்றோ?’ என்றவன்,
‘குன்றுடைக்
காட்டினில் காவலாய் உனக்கிருந்த
கரன்
முதலானோர் கொன்றிலரோ மானிடரை?’ வினவினான்.
‘சுற்றமுற்றமும்
தொலைந்து மடிந்தது எளிதிலெ’ன
உற்றது
உற்றபடி உரைக்கலுற்றாள் சூர்ப்பணகை.
‘வாயிடை
இதழும், மூக்கும், கொங்கைகளும்
வலிந்து
கொய்து, குருதி பெருக்கிடும் வண்ணம்
நீயிடை
இழைத்த குற்றம்தான் என்ன?’ வென்று
தீயிடை
புகுந்த நெய்யாகச் சீறினான்.
‘சித்திரக்
கலை வல்லுனரும் வடிக்கவொண்ணா
அத்தனை
அழகும் அமையப்பெற்ற இராமனோடு
முத்திரை
பதிக்கவல்ல முகவடிவு கொண்டிருந்த
உத்தமப்
பாவையால் நிகழ்ந்தது ஈதெ’ன்றாள்.
‘பெண்ணினால்
நிகழ்ந்த பாதகமா?’ வினவியவன்
‘புதிரவிழ்த்துப்
புரியவை யார் அவளென?’ சினந்தான்.
‘தேன்சுவையுடன்
கனிந்த கனியாம் அவளுக்கு
யாமுரை
வழங்கல் அறிவின்மை சார்வதாகும்.
பூமித்தாய்
பெற்றளித்த தனிப்பெருமை பெற்றவள்.
மூத்தவனாம்
இராமனின் மனம் கவர்ந்த பெண்ணவள்.
தன்னிருப்பிடமாம்
தாமரையை விட்டுவந்த தன்மையள்.
‘சீதை’யெனும் பெயர் கொண்ட கோலமயிலவள் - அப்
பெண்ணை
உன்பால் உய்ப்ப அணுகிய என்னை
முன்னை
மூக்கரிந்து முடித்தான் இவன் தம்பி.
மானொத்த
அப்பெண்ணை நீ கொண்டு கொண்டாடு
யான்கொண்டு
ஊடாட இராமனையே தந்துவிடு’ என்றாள்
சினம்,
வீரம், மானமெனும் ஆடவர் குணமெலாம்
காமம்
மிகுந்திட காணாமல் போயினவாம்,
மயிலுடைய
சாயலாளை மனதுள்ளே சிறை வைத்தான்.
வெய்யிலிலே
வைக்கப்பட்ட வெண்ணையாக உருகினான்.
சிங்காதனம்
விட்டு எழுந்தான் சிந்தனைவயப்பட்டவன்.
சங்கம்
முழக்கினர் அங்கிருந்த அவையோர்
சிதைந்த
அவன்மனம் சஞ்சல மிகப்பட்டதால் - பொன்
பொதிந்த
அரண்மனைக்குள் விரகத்துடன் நுழைந்தான்.
காதலால்
அவனுடல் வெந்து எரிந்தது.
காமத்தால்
மனமுழுதும் காய்ந்து கருகியது.
கொல்லனின்
வலிய உலைத் துருத்தியைப்போலே
மேல்மூச்சும்,
கீழ்மூச்சுமாய் பெருமூச்சு விட்டான்.
இன்னவாறு
செய்வதென்று எண்ணமற்று உடல்தளர்ந்தான்.
வண்ணமிகு
சோலையினுள் அங்குமிங்கும் நடைபயின்றான்.
மண்டபத்தின்
மஞ்சத்தில் மல்லாந்து கிடந்தவனின் - விரகப்
புண்மீது
குத்தித் துளைத்துப் படுத்தியதாம் பின்பனி.
‘என்ன
பருவமடா இது?’வென பெருங்குரலில் கத்தினான்.
பின்பனி
பின்னடைந்து வேனில் வந்து நின்றது.
வேனிலும்
வெதுப்பியதும் கூதிரைக் கூவியழைத்தான்.
கூதிரின்
குளிர்காற்றால் இருபது தோள்களும் மருகின.
(பின் பனி – மாசி, பங்குனி - சிசிர ருது.
வேனில்
– சித்திரை, வைகாசி – வசந்த ருது.
கூதிர்
- ஐப்பசி கார்த்திகை - ஷரத் ருது)
பருவங்கள்
அனைத்துமே பகையாய்த் தோன்றிட
அகன்றிடு
அத்தனையும்; உதித்திடு நிலவென்றான்
வான்வெள்ளி
வெம்மையைக் கக்கியதும் ‘போ’வென்றான்.
கதிரையும்
தாளாமல் இளம்பிறையை ‘வா’வென்றான்.
முன்செய்த
தவப்பயனால் கோள்க ளெல்லாம்
முன்வந்தன
அவனிட்ட ஏவல்களைப் புரிவதற்கு
பத்துத்
தலையோனைப் பதம்பார்த்தது ஒருதலைக் காதல்
பித்துப்
பிடித்தவனாய் பிம்பத்தை வடித்தான் மனக்கண்ணில்.
‘உலகுக்குக்
கோமான் நீ! சிறுமையுடன் வருந்தலாமோ?
மலரணிந்த
குழலாளை அபகரிக்கத் தயங்கலாமோ?’
நிலைதடுமாறிய
அண்ணனைத் தூண்டினாள் சூர்ப்பணகை.
கலைவடிவான
மண்டபம் கட்டிட ஏவினான் காவலரை.
சிந்தையில்
விளைந்ததைச் செய்திடும் செய்கையாய்
மந்திரி
மார்களுடன் கலந்துரையாடினான் தந்திரமாய்
அந்தரத்தில்
பறக்கும் புஷ்பகவிமானத்தில் ஏறியபடி
இந்தியம்
அடக்கி வாழும் மாரீசன் வசம் வந்தான்.
(தொடர்ந்து வரும்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக