சூர்ப்பணகை பஞ்சவடி வருதல்
தேவர்க்கும், முனிவர்க்கும்
இன்னல்கள் இழைத்த,
அரக்கர்க் கரசன்
தசமுக இராவணன்,
வேர் முதலறுந்திடக்
காரண மானவள்.
முறம்போல் நகம்கொண்ட
அறமற்ற ஓர் அரக்கி.- அவள்
உடனுறைக் கடிய
காமநோய்க் கொண்டவள்.
கொடிதான வனத்திடையே
தனியாக வசிப்பவள்.
‘சூர்ப்பணகை’ யென்னும்
பெயர்தரித்த அவ்வரக்கி,
இராகவனைக் குடில்வாயில்
பார்த்தவுடன் மலைத்தாள்.
‘முகமென்ன தாமரையோ,
முழுமதியோ!’ வியந்தாள்;
‘பற்களின் நிறம்தான்
சூரியச்சோதியோ’! மயங்கினாள்.
'உதட்டுச் சிவப்பென்ன
பவழத்தை நிகர்த்ததுவோ’! வென
பதட்டத்துடன் அவனைக்
கவர்ச்சியாய்ப் பார்த்தாள்.
யானை தும்பிக்கப்யொப்ப
அவன் கைகளுக்கு,
ஒப்பாகுமா பனை
மரமும், பாக்கு மரமும்?
வில்லெடுத்துப்
போரிடும் வீரத் தோள்களுக்கு,
ஒப்பாகுமா கல்மலையும்,
பொன்மலையும்?
.
ஐயனைக் கண்டதும்
அவனழகில் கிறங்கினாள்.
‘சிவனோ, மாலோ,
காமனோ, இந்திரனோ’வென
ஐயுற்றுத் தெளிவடைந்தாள்
மானுடன்தானென - பின்
அரக்கியுறு நீக்கிவிட்டு
அழகாக வெளிப்பட்டாள்.
வியப்பு பெருகிட
வீரனின் எதிர் வந்து
நயந்து நின்றவள்
முயங்கிப் பார்த்தாள்.
நிமிர்ந்து நோக்கினான்
நீதி நெறியாளன். – அவளோ
குனிந்து சிரித்தாள்
கனிந்த காமத்தால்.
அந்நியளாய் அவ்விடம்
வந்து அடைந்தவளை
அந்தமிலான் வினவினான்.
‘யார் நீ அபலை?’
'நான்முகனின் மகன்
வயிற்றுப் பெயற்றி நான்
கன்னி ‘காமவல்லி’,
இராவணனின் பின்னை'யென்றாள்.
(
‘இமையவர் தலைவன்,
வானவர்க்கரசன் இந்திரனையே
இழிநிலைப்படுத்தி
ஏவல்கள் செய்திட ஏவியபடியே
மூவுலகாளும் செங்கண்
இராவணன் தங்கையெனில்
இவ்விடம் தனியே
வந்தது எங்கனமெ’ன வினவினான்.
'’சீர்மைகெட்ட அரக்கரோடு நானென்றும் சேர்கிலேன்.
ஆர்ய முனிவரோடு
நன்னெறியில் வாழ்கிறேன். – ஒரு
காரியத்தின் பொருட்டாக
இன்று உன்னைக்
காண்பதற்கு இவ்விடமே
வந்தேனெ’ன்றாள்.
‘கூறுதி! பொருத்தமென்றால்
வருத்தமில்லை’ என்ன
‘காமனவன் என்மேல்
விடுக்கும் கூரியபாணத்தால்
காமம் மிகக் கொண்டுள்ளேன்
அதன் பாரத்தால்’ என்றதும்,
'நாணமில்லா நல்லள்
அல்லள் இவளெ'ன்றுணர்ந்தான்.
நீதி நிலையற்ற
நிந்தனை அரக்கிதான்
தீவினைப் புரிவதற்கே
வந்தனளென அறிந்தான்.
‘அந்தணர் குடியில்
பிறந்த பாவை நீ - நானோ
அரசர்குலம்! வழக்கத்திற்கு
உகந்ததன்று’ என்றான்
‘நான்மறைகள் நமக்காக
வகுத்து வைத்த
மணமுறையை மனதாற
மேற்கொள்வோம்.
கந்தர்வக் கல்யாணம்
நிகழ்ந்துவிட்டால் – நின்
கட்டுக்குள் வந்துவிடும்
விண்ணும், மண்ணும்
முனிவர்களும்,
தமையனாரும் நாளும் கொள்ளும்
முதிர்பகை முற்றிலும்
முறிந்து போகும்.
விருப்பொடு அரக்கர்கள்
இணக்கமாயிருப்பர்.
சுணக்கமின்றி ஏவல்கள்
புரிந்தபடி இருப்பர்’ என்றாள்.
‘அரக்கர்தம் அருளும்
பெற்றேன் – நின்னை
அடைந்திடும் பெரும்பேறும்
பெற்றுவிட்டேன்.
திருநகர் நீங்கி
யான் வனத்திடை வந்தபின்
செய்தவம் பயத்ததெ’ன
பரிகாசமாய் நகைத்தான்.
அவ்வமையம் –
வான்சுடர் சோதிவெள்ளம்
தளர்நடைபயின்றாற் போல்
அன்னம்போல் மெல்ல
வந்தாள் வஞ்சிக்கொடியாள்.
'பொன்னைப்போல் ஒளிர்ந்திடும்
இந்தப் பெண்ணும்
தன்னைப்போல் வந்தனளோ'வென
சூர்ப்பணகை வியந்தாள்.
விளைவன தீமையென்றுணர்ந்து
கொண்ட வீரன்
‘இளையான் வருமுன்
போகுதி விரைந்தெ’ன்று எச்சரித்து,
மின்னல் தொடரும்
மேகமன்ன மிதிலைப்பெண்ணை
மெல்ல அணைத்து
பண்ணசாலைக்குள் சென்றான்.
‘விரும்பிய நாதனையே
தழுவிடணும் மடக்கி’யென
பொருமிய சினத்தீயால்
புழுங்கினாள் அரக்கி.
வழிந்த காமக்கனல்
மிகுந்து எரிந்ததால்
அழிந்த சிந்தனையால்
உறக்கமும் துறந்தாள்.
விடியல் கண்டதும்
ஓர் முடிவுக்கு வந்தாள்
‘சடுதியில் அப்பெண்ணைக்
கவர்ந்து எடுத்து,
தனித்த இடத்தினில்
ஒளித்து வைத்தபின் – அவளின்
நல்லுரு கொண்டு
நாம் வாழ்ந்திட வேண்டும்’
(தொடரும்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக