திங்கள், 18 ஏப்ரல், 2022

லக்ஷ்மி ராமாயணம் - ஆரண்ய காண்டம் - பகுதி 9

 

          இலக்குவன் கூற்றும், இராமன் மறுப்பும்

 

'பொன்னுடலும், கால், செவி, வால் என

மாணிக்க மயமாய் இருக்கும் இம்மான்,

பாயும் மானல்ல; பகைவர்களின் மாயமானெ'ன

ஐயமற ஐயனுக்கு இயம்பினான் இளையான்.

 

‘பல்லாயிரம் கோடி மன்னுயிர்கள் பரந்துள்ளதால்

‘இல்லாதன’வென்று எதுவுமில்லை இளங்குமரா’யென்றவன்,

இல்லாளை அழைத்து ‘எங்குள்ளது மான்? சொல்’லென்றதும்,

‘கடக்கவொண்ணா வினையாக’ விழித்தது போலிமான்.

 

          இராம இலக்குவர்க்கிடையே நிகழ்ந்த உரையாடல்

 

‘இளையவ! மனம் கொண்டு நோக்குவாய் இம்மானை.

பொன்னினை ஒத்திருக்கும் சிவந்திருக்கும் மேனி.

முத்துக்கு ஒப்பாகும் இதன் வெண்மைப் பற்கள்.

வெள்ளியை ஒத்திடும் மின்னிடும் புள்ளிகளெ’ன்றான்.

 

‘பொன்மானால் ஆகும் காரியம்தான் என்ன?

மேன்மையது மீள்வதுதானெ’ன இளையவன் முடிக்குமுன்னம்

‘கொற்றவமைந்த! தர்க்கம் நீடித்தால் தப்பிப் போய்விடுமே!

பற்றித்தந்திடுவீர்! பெற்று வளர்ப்பேன் அயோத்தியிலெ’ன்றாள்.

 

‘பாம்புப் படுக்கையைத் தாம் நீங்கிப் பிறந்தது

பாக்கியம் உடைய தேவரின் உடைமை. – அன்னது

பயன்படாது பழுது போக விடலாமோ?’ என்பதாகப்

‘பற்றுவேன் நானெ’ன்றான் சீர் தூக்கிப் பாராமல்.

 

‘தமையனே! வஞ்சகம் விரும்பிடும் நயவஞ்சக அரக்கரின்

வினையிற் விளைந்த தீவினை மானிது’ எச்சரித்தான்.

‘மாயமான் ஆகுமேல் முடிப்பேன் என் அம்பால்.

தூயமான் ஆகுமேல் பிடிப்பேன் என் அன்பால்’ நிச்சயித்தான்.

 

பின்னின்று பாயும் பகைவர் யாரென்றறிகிலோம்’ என்ன

‘பகைவரென்றால் போரிடுதல் சரிதானே! கோமான் சொன்னதும்,

‘அம்பினைத் தொடுத்து நான்,  பகைவரை முடிப்பேன்.

அன்றெனில் அன்புடன் பிடித்துவருவேனெ'ன்றான் பின்னவன்.

 

சிவந்த வாயினால் கொஞ்சுமொழி பேசியவள்,

‘நாயக! நீயே பற்றி நல்கலை போலுமெ’னப் பிணங்கினாள்

நீலோற்பல மலொரொத்த மான் விழியிரண்டில்

நீர் முத்துக்கள் கோர்த்தபடி சிணுங்கினாள்.

 

இளையவன் சொல்வதை மனதுள் கொள்ளாமல்.

வதனத்தாள் சினத்தை சிரம்மேல் கொண்டான்.

‘மானதை பற்றி நான் கொணரும் வரையில்,

மயிலாளின் மானத்தைக் காத்திடு நீ’யென விரைந்தான்.

 

அம்மான் மெல்ல நடந்தது; வெறித்துக் குதித்தது.

அப்பால் சென்று அகன்றது; ஓட்டம் பிடித்தது.

நின்றது போலே இருந்தது; நீங்கிப் போனது.

குன்றிடை தோன்றி மறைந்து. மேகமாய் ஆனது.

 

கூடச் சென்றிடில், தூரமாய்ச் சென்றது.

தாமதித்து நின்றால், தீண்டும் நிலையில் நின்றது.

‘பற்றுவன் அல்லன் இவன்; இனி அம்புகொண்டு

கொல்வான்’ என உணர்ந்து ஓட்டம் பிடித்தது.

 

‘சக்ராயுதத்திற்கு’ ஒப்பான சிவந்த ‘சுதர்சனம்’ அம்பினை

தப்பிப்பாயும் மான்மேல் ஐயன் தப்பாமல் தொடுத்ததும்,

‘ஹே சீதா.! ஹே லக்ஷ்மணா’வென்று அண்ணலின் குரலில்

ஓங்கியழைத்த மான், தன்னுருவெடுத்துத் துவண்டு மடிந்தது.

 

‘இழைத்த மாயையால் என் குரலெடுத்த இம்மான்,

அழைத்தது கேட்டதும் அரற்றுவாளே அப்பெண்மான் – ஆயினும்

எனதாற்றல் அறிந்திடும் இளையான் அவளைத்

தேற்றுவான்' என்றெண்ணித் தேறினான் தமையன்.

 

மாள்வதற்காக மட்டும் வந்தவனல்ல இம்மாரீசன்.

உள்ளது சூழ்ச்சியென்பதை உணர்த்திய காரியஸ்த்தன்.

மூள உள்ள கொடும் செயல் சூழ்வதற்கு முன்னம்

மீள்வதுதான் மேலென்று எழுந்தது மனத் திண்ணம்

 

கொற்றவனின் குரலெடுத்து மாரீசன் கூப்பிட்ட

சொற்செவியில் பாய்ந்ததும், பீதியுற்றாள் பிராட்டி.

குயிலொன்று விழுந்து துடிப்பதைப் போல்

மயக்கம் வருமளவு அழுது அரற்றினாள்.

 

                   இலக்குவனை வெறுத்துக் கூறலும்,

                         இலக்குவன் தேற்றலும்

 

குற்றமற்ற குணத்தினனாம் தம்முயிர் நாயகன்,

மற்றைய அரக்கரின் அளப்பரிய மாயையினால்

இற்று வீழ்ந்தனன் எனத் தெரிந்தும், தன்னயல்

நிற்கும் இலக்குவனைக், கடிந்து நோக்கினாள்.

 

‘மண்ணிலும், விண்ணிலும் இராமனுக் கிணையான

திண்மையார் உளரென்ற எண்ணம்தான் வேண்டுமோ?

பெண்மையின் தன்மையால் உரைசெய்து சொன்னீரோ?'

என்றவன் மேலும் உரைத்தான் உண்மையை உணர்த்திட.

 

‘நீருண்ட மேகமன்ன வீரனை யாரென்று எண்ணினீர்?

மாயம்கொண்ட அரக்கன்மேல் இராமபாணம் பட்டதும்,

அரற்றி அழைத்துள்ளான் அண்ணனின் குரலெடுத்து

இரக்கமுற்று இரங்கலீரெ’ன அடக்கமாய்த் தேற்றினான்.

 

‘தோன்றலின் தீனக்குரல் ஒலித்த பின்னாலும் – நீ

நின்ற நிலையெந்த நீதிமுறையிலும் இல்லை’யென

தேற்றிய இளையானை சீற்றத்துடன் தூற்றியவள்,

எரியிடை புகுந்து இறந்திடத் துணிந்தாள்.

 

நெடுநிலம் வீழ்ந்தவளை தடுத்தவன் சொன்னான்,

‘மறுக்கிலேன் அம்மா. யான் உன் ஆணையை

யான் புறம் செல்லுங்கால் புறத்திருந்து பொறுமையுடன்,

அறம்போல் அரவணைப்பார் சடாயு’வென அகன்றான்.

(அடுத்து வரும்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக