செவ்வாய், 12 ஏப்ரல், 2022

லக்ஷ்மி ராமாயணம் - ஆரண்ய காண்டம் - பகுதி - 5

 

          சூர்ப்பணகை தன்னை ஏற்றுக்கொள்ள வேண்டல்

 

‘மூக்கு அறுபட்டாள் நும் தங்கை’ எனச் சொல்வாரின்

நாக்கையும், நரம்பையும் அறுப்பான் தசமுகன். – உன்

ஊனையும் உயிரையும் காப்பவர் எவருமில்லை- என்

இச்சைக் காக்கின் யான் உன் மூச்சைக் காப்பேன்.

 

போரென்றால் நானுன் புறம் இருப்பேன். – உனை

தோள்மீது சுமந்து செல்ல வல்லேன்.

வாள் வீசி உனக்கு வேண்டியதைத் தருவேன். – இப்

பவளப் பெண்ணாலே பயன் யாதும் உளதோ!

 

வேலேந்திய இராட்சதர்கள் வெகுண்டு வந்தால்

பூலோகம் உன்பொருட்டால் அழிந்து பொகும்.

உயர்குலத்தில் பிறந்து வளர்ந்த நாயகனே - என்னை

உவந்து ஏற்று இனிது இருப்பீர்’ என இறைஞ்சினாள்.

 

                                                 இராமன் மறுத்தல்

 

‘இராட்சதர் எதிரினில் தேவர்கள் தோற்றதால்

இளக்காரமா பெண்ணே யாமிருவர் மானுடரென?

இயக்கரையும், அரக்கரையும் கொணருதி இவ்விடம்

கொன்று குவித்துக் கொடுத்திடுவோம் உன்னிடம்’. என்றான்.

 

                                        சூர்ப்பணகை விடுத்த சூள்

 

‘கொடிமூக்கும், இருகாதும், முலையிரண்டும்

அறுபட்ட பின்னாலும் வாழ்ந்திடத்தான் பொறுப்பேனோ?

காற்றையும், கனலையும் காட்டிலும் கொடியவனாம்

கரனாகிய யமனைக் கொணர்ந்திடுவேன் நானெ’ன்றாள்.

 

                                                      கரன் வதைப் படலம்

 

‘ஜனஸ்தானம்’ என்ற சமஸ்தானத்தின் தலைவன்!

கும்பீனிஸிக்கும், விஸ்வரஸுக்கும் மகனான அரக்கன்!

தூடணனுக்கும், தனக்கும் தமையனான கரன் என்பானின்

கரம்பற்றி கதறி அழுதாள் அரக்கி சூர்ப்பணகை.

 

வழிந்த குருதியைப் பார்த்ததும் நெஞ்சம் துடித்தான்

இழிந்த நிலையைக் கண்டதும் நஞ்சென உமிழ்ந்தான்.

‘பழிச்செயல் இதனை துணிவுடன் புரிந்தவன் எவனெ’

கருவிழி இரண்டும் சிவந்திட உருமிச் சினம் கொண்டான்.

 

‘தவ நியமத்திலிருக்கும் மானிடர் இருவர்

தரும நெறிப்படி நடக்கும் தசரத குமரர்

வரிவில் வாள் கொண்ட வீரக்கையினர்

வடிவினில் மன்மத னையொத்த மேனியர்.

 

சிறிதும் உன் வலிமை நோக்காதார்

அரக்கரை அழித் தொழிக்கும் நோக்கத்தார் - அவரோடு

நேர்கிலா பெண்ணின் நோக்கு உடையவளை

நோக்கினேன் நான் என்னிரு கண்களால்.

 

இலட்சணம் பொருந்திய இலக்ஷ்மியைப் பார்த்ததும்

இலங்கை வேந்தன் இராவணனுக் கென

எடுத்துச் சென்றிட இலட்சியம் கொண்டேன் – அதைத்

தடுத்தென் மூக்கினை அறுத்தான் இலக்குவனெ’ன்றாள்.

 

தோண்டிய பனை நுங்கின் துளைகள் போல்

துண்டான மூக்கினைக் கண்டு ஆத்திரப்பட்டவன்,

‘கேடு செய்தவரை காட்டிடெ’ன ஆவேசப்பட்டான்.

‘எடுத்திடு தேரெ’ன வீறுகொண் டெழுந்தான்.

 

மலையினும் வலிய படைத்தலைவர் பதினால்வரும்,

‘தேவரோடு போரென்றால் வாளினை நீவீர் எடுக்கலாம்.

மாந்தரோடு மோதுதற்கு மதயானை கிளம்பலாமோ?

தருக இப்பணி; தகர்த்திடுவோம் நாங்களினி’ யென்றார்’

 

‘நன்று சொன்னீர்; நானிச் சிறார் மேல்

சென்று போர் செய்தால் தேவரும் நகைப்பர்.

கொன்று நீர் அவரின் குருதியைக் குடிப்பீர்.

வென்று மீள்வீர் மெல்லிடையாளோடெ’ன்றான் கரன்.

 

வெட்கமற்ற சூர்ப்பணகை சுட்டிக்காட்டினாள் பரந்தாமனை!

‘முற்றுவிப்போம் தலைவன் சொல்லிய முறைப்படி’யென

எட்டிப்பிடிக்கும் பந்துபோல் எள்ளிநகையாடிய அசுரர்கள்

வட்டமிட்டு சூழ்ந்தனர் கொசுக்கூட்டமாய் அம்மாமலையை

 

‘தையலைக் காத்தி’யென இளவலை ஏவிய ராமன்,

கயிற்றை அவிழ்த்து, பெருநாண் வாங்கினான்.

எய்தான் அம்புகளை; பாய்ந்தன பதினால்வர் மேல்

கொய்தன கரங்களை; சிதைத்தன அவரின் சிரங்களை.

 

படைத்தலைவர் பதினால்வரும் மடிந்தமை கண்டு

அதிர்ந்து போனாள் தீயவள் சூர்ப்பணகை.

ஒளிரும் வேலேந்திய கரனுக்குத் தெரிவிக்கப்

பிளிறிய படி ஓடினாள் அரண்மனையைப் பார்க்க

 

‘அழையுங்கள் என் தேரை விரைந்து!

முழக்குங்கள் போர் முரசை அதிர்ந்து

‘எழுக சேனை! வருக போர்ப்படை!’ யென

ஏழுலகும் அதிரும்படி வெகுண்டான் அரக்கன்.

 

காலாட்படைகள் கடல் போல் முன்வர

வாட்களும், வேல்களும் சுமந்த வீரரின்

தேர்கள், ரதங்கள், கூட்டமாய் பின்வர

‘புறப்பட்டது பெரும் படை’யென்பது புலப்பட்டது ஐயனுக்கு.

 

அம்புப் புட்டிலை முதுகினில் தரித்து

போர்புரிய ஸ்ரீராமன் ஆயத்த மாகையில்

தாம் போர் புரிய விழைந்த இலக்குவன்

‘யான் செய்நிலை காண்டி இன்றெ’ன்றான்.

.

‘அரக்கர்கள் ஆவியைப் பிடுங்கி எறிவதாய்,

பெருந்தவ முனியிடம் வாக்கினை அளித்ததால்

பொறுப்பேற்று யான் செல்வதே முறைமை

பிராட்டியைக் கனிவுடன் காப்பதுன் கடமை’ யென்றான்.

 

அண்ணல் ஆணையை மறுக்கிலா தம்பியும்,

கண்ணீர் சொரியும் அன்னையின் அருகினில்

உள்ளங் கைகளைக் குவித்துத் துதித்து

குன்றென காவலில் நின்றனன் நம்பியாய்.

(சொல்கிறேன் இன்னும்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக