செவ்வாய், 12 ஏப்ரல், 2022

லக்ஷ்மி ராமாயணம் - ஆரண்ய காண்டம் - பகுதி -6

 

மானிடனின் மகத்துவம் அறிந்திடா கரனரக்கன்,

‘யானே வாகை கொண்டனனெ’ன கர்ச்சித்தான்.

‘தற்சமயம் நிமித்தம் தீயதாய் உள்ளதே’யென

அச்சத்துடன் இயம்பினான் அகம்பனெனும் நிமித்தன்.

 

உரைத்த அகம்பனின் அறிவுரைதனை அவன்,

உரத்துச் சிரித்தே, உதறித் தள்ளினான்.

‘ஈயினைக் கொல்ல ஈட்டி எதற்கெ’ன நகைத்தவன்

தீயெரி விழியுடன் போரிட முனைந்தான்.

 

பிடரி மயிர் கொண்ட ஒற்றை சிங்கத்தை

நெருக்கி வளைத்தன எறிபடை யானைகள்.

செருக்கும், இடக்குமே சிந்தையாய் ஆன

சேனைக்குப் பறந்தன பற்பல ஆணைகள்.

 

வளைந்த கைவிரி வில்லினால் அவ்விடம்

விளைந்த போரினை விளம்புவது எவ்விதம்?

புரண்டு விழுந்தன பாய்ந்து செல்லும் பரிகள்

மருண்டு மாய்ந்தன பேருரு கொண்ட கரிகள்

 

சூலமும், வாளும், தூரமாய்ப் பறந்தன.

தலைகளும் உடல்களைத் துரிதமாய் துறந்தன.

குருதியும் அருவிபோல் பாய்ந்து படர்ந்தன.

நிருதர்கள் தரையினில் புரண்டு இறந்தனர்.

 

அத்தருணம்-

முத்தலைகள் கொண்ட அரக்கன் திரிசிரா

எத்தனித்தான் இராமனை எதிர்த்துப் போரிட

தனியனாய் நின்ற தன்னிகரற்ற வீரனோ

சேனைகளை சிதைத்தான் பிணக் குவியலாய்.

 

அரக்கர்கள் உடல் சுமந்த குருதியாறு

அலங்கல்வேல் இராவணனுக்கு அறிவிக்குமாறு

இலங்கைவரை பாய்ந்து சென்று உய்க்கையிலே

ஆழ்ந்திருந்த தேரேறி ஆகாயத்தில் பறந்தான் திரிசிரா.

 

வான்தொடர் மழையென தோன்றல் மேலவன்,

வெம்கணை சரங்களைத் தொடுக்கத் தொடங்கினான்.

அம்பினை விடுத்த எம்பிரான், துண்டாக்கித் தேரழித்தான்

இருதலை கொய்து, ‘திரிசிரா’ என்னும் பேரழித்தான்.

 

கால்களை ஒடித்து, தோள்களை அரிந்து,

துல்லியமாய் மூன்றாம் தலையையும் அறுத்து,

வெஞ்சின அரக்கர் சிகரத்தை அழித்ததும்

அஞ்சி ஓடினர் எஞ்சிய நிருதர்கள்.

 

‘நிச்சயம்’ யெனும் கவசமணிந்த தூடணன்

‘கொச்சை மாந்தரைக் கண்டா கூச்சமடைந்தீர்?

நின்று காண்பீரென் நெடுஞ்சிலை வலிமையை’ என்று

சென்று தாக்கினான் கருநீல வண்ணனை.

 (நிச்சயம் - துணிவு) 'உடல் நிச்சயம்' என்னும் அரக்கர்களின் எண்ணமே இங்கு கவசமாக உருவகக்கப்பட்டது


கணக்கிடமுடியா பிணம் நிறை காட்டினில்

ஒலிக்கின்ற தேரினை செலுத்திய தூடணனின்

குரைகடல் சேனையோ வறள்பட குறைந்தது.

குறையுடல் அரக்கரின் அரற்றலால் நிறைந்தது.

 

குன்றெனத் தேரினில் வில்லேந்தி வந்த தூடணன்

மூன்று அம்புகளை முறையாகத் தொடுத்தான்.

மூன்றையும் ஒற்றை அம்பால் தகர்த்த வில்லான்.

நெடுந்தலை பிளந்தவன் உயிரையும் மாய்த்தான்

 

‘தலையிழந்தான் தம்பி’யென்பதை அறிந்து

கொலைவெறி கொண்டான் கொடியவன் கரன்.

சந்திரனை மேகக்கூட்டம் வளைத்திருப்பதைப்  போல்

அந்தகனும் அஞ்சும்படி அரங்கனை வளைத்தான்.

(அந்தகன் – யமன்)

 

கடுங்கரனெனும் பெயர்படைத்த கழல் வீரன்

நெடுங்கடலின் இடையே பெருமலையாய் நின்றான். – அவனின்

வாள்படையையும், வேற்படையையும், விற்படையையும் தன்

தோள்பலத்தால் துவைத்தெடுத்தான் தசரத இராமன்.

 

கள்ளமாய்த் தாம்கற்ற கல்வியை செலுத்திய கரன்

வள்ளலின் தோற்றத்தை அம்புகளால் மறைத்தான்.

உள்ளம் வருந்தினர் வானவரும், தேவரும் – வைகுந்தனோ

வெள்ளைப் பற்களைக் கடித்து வெகுண்டான்.

 

‘முடிப்பேனின்று வலிய கணையாலெ’ன்றபடி வில்லான்

தொடுத்திட வில் நுனி தோளுற வளைத்தான்.

பிடித்த திண்சிலையோ அகன்ற ஆகாயத்திடை

இடி முழக்கமாய் இடித்துக் கடிது ஒடிந்துபோனது.

 

மாற்று வெஞ்சிலை இல்லாமை கண்டு

ஏக்கமுற்றுத் தவித்தனர் வானவர் ஆனவர்.

மன்னர் மன்னனோ முன்னம் நிகழ்ந்த மரபொன்றால்

பின்புறமாய்த் தனது பெரும்கரத்தை நீட்டினான்.

(பாலகாண்டம்; பரசுராமப் படலத்தில், 'மழு என்னும் கோடாலியைக் கைக்கொண்டு ஆள்பவனான பரசுராமனிடமிருந்து 'விஷ்ணுவில்'லொன்றை இராமன் கைக்கொண்டு, அதை வருணனிடம் ஒப்புவித்திருந்தான்.)

 

வருணனிடம் இருந்த பரசுராமன் விஷ்ணுவில்லை

நீண்டகரத்தினில் ஒப்படைத்தான் வாயுத் தேவன்

பிடித்த வில்லினை இடக்கையால் எடுத்தவுடன்,

துடித்தன அரக்கரின் இடக்கையும், இடத்தோளும்.

 

நாணேற்றியதும் கரனின் எந்திரத்தடந் தேர்

நுண்ணிய பொடியாய் உதிர்ந்து வீழ்ந்ததும் அவன்

சுந்தர வில்லுடை இராமனின் தோளெனும்

மந்திரமலைமேல் பொழிந்தான் அம்பினை.

 

சரங்களை எதிர்த்து குமரன் வீசிய

சிவந்த சரத்தால், கரனின் வலக்கரம்

வீங்கு தோளொடு பாரிடை வீழ்ந்ததும் – கரன்

ஓங்கி வீசினான் உலக்கையை இடக்கையால்

 

விலக்கினான் இராமனதை வெங்கதிர் வாளினால்.

உலுக்கிப் பெயர்த்தடித்தான் கரன் ஆச்சாமரத்தால்.

ஏவினான் இராமன் ஒப்பற்ற கணைதனை – அது

கூறாக்கிப் பிளந்தது கரனெனும் அரக்கனை,

 

ஆர்த்தெழுந்த வானவர் ஆடினர், பாடினர்.

தூர்த்து மகிழ்ந்தனர் தூவிய மலர்களால்

போர்முடித்த தசரத மைந்தன் புறப்பட்டான்

கார்க்குழல் நங்கையின் குடிலை நோக்கி.

 

இறந்த கரனின் பெருவுடல் தழுவியே

குருதிப் புரண்டாள் கொடியவள் சூர்ப்பணகை.

'இராமனிடம் கொண்ட மோகத்தால் மூக்கிழந்தேன் நான்

‘போக்கினேனே உன் வாழ்க்கையை’யெனப் புலம்பினாள்.

 

ஆழ்ந்த கடலிடை அகப்பட்ட மரக்கலத்தை,

சூழ்ந்த சுழற்காற்று வீசி யழித்திடும் – அதுபோல

அலங்கல் குலமே அழிந்திடும் பயத்தால்

இலங்கை மாநகர் நோக்கி விரைந்தாள்.

(அலங்கல் குலம் – அரக்கர் குலம்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக