ஆரண்ய காண்டம்
கடுந்தவம் ஆற்றியே
காட்டினில் வசிப்பவர்
அத்திரி முனியும்
ரிஷி பத்தினியும்! – அவர்
ஸப்த ரிஷிகளுள்
மூத்தவராம்.
முப்பெரும் தோஷங்கள்
நீத்தவராம்.
கற்பு நெறிகளில்
முறைப்படி மின்னும்,
பத்தினித் தெய்வமாம்
அனுசூயை அன்னை,
அன்பொழுக மூவரையும்
வரவேற்றாள் ஆஸ்ரமத்துள்
அன்னமிட்டுப் பசியகற்றி
உபசரித்தாள் நிமிடத்துள்.
சோர்வகல அக்குடிலில்
உறங்கிய மூவரும்.
சூரியன் உதித்ததும்
கிளம்பினர் *தண்டகாரண்யம்.
சீதையை அனுசூயை
ஆரத் தழுவினாள்.
ஆரத்தி எடுத்து
ஆடைகள் நல்கினாள்.
(*தண்டகாரண்யம்
– சட்டீஸ்கர் மாவட்டத்தில் அமைந்துள்ள அடர் காட்டுப்பகுதி)
விராதன் வருகை
(விராதன் என்னும்
அரக்கனை வதைத்து அவனுக்கு அருள் புரிந்த படலம்)
மதங்கொண்ட பதினாறு யானைகளும்,
சினங்கொண்ட சிங்கங்கள்
இருமடங்கும்,
திண்தோள் வலிமையாய்க்
கொண்ட கிராதகன்
திரண்ட மார்புடை
அரக்கன் விராதன். – அவன்
மண்ணும், நிலமும்
அதிர்ந்து, அசைந்திட,
விண்ணும், மலையும்
நடுங்கி குலுங்கிட,
ஒன்றாய் குன்றுகள்
சேர்ந்ததைப் போலவே,
நின்றவன், கண்களால்
கனன்றான் கனலையே!
மாமிசம் உண்ணும்
வாயினைக் குகையாய்
தாமதம் இன்றியே
விரியப் பிளந்தான். - பின்
தாமரை மலர் மேல்
அன்னப்பறவையாம்
மாமகள் சீதையைக்
கவர்ந்து பறந்தான்.
காளை மைந்தர்கள்
குழம்பிப் போயினர்.
தோளினில் தொங்கிடும்
வில்லை யெடுத்தனர்
வளைத்ததில் அம்பினை
செலுத்திட, பேரொலி
ஏழுல கெங்கிலும்
படர்ந்ததன் எதிரொலி.
அம்புகள் தெறித்திட
சிலிர்த்த விராதன்,
‘ஆதி நான்முகன்
பிரம்மனிடம் நான்
ஆவி அகலா வரத்தினைப்
பெற்றவன் – அதனால்
ஆயுதம் இன்றியே
போரிட நோற்றவன். – உறுமினான்.
உடலினில் குருதி
வழிந்திடும் நிலையிலும்,
‘மடந்தையைப் பசிக்கென
புசிப்பேன் கடித்து,
விடுத்து நீவீர்
விரைக!’ன விரட்டிய அரக்கனின்
புடைத்த புயத்தைப்
பிடித்தனர் குமரர்கள்.
நெஞ்சம் நடுங்கிய
விராதக் கிராதகன்
வஞ்சகப் பூனையின்
வாயினில் மறுகும்
பஞ்சரக் கிளியைத்
தள்ளினான் தரையில் - பின்
நஞ்செனப் பாய்ந்தான்
நாயகர் தலையில்.
சேவல் பிடிபட கேவிடும்
கோழி! - அதுபோல்,
காவலன் பிடிபட
சோர்ந்தாள் குலதேவி.
‘பெருந்துயரில்
அன்னையவள் மனம் வருந்த
முறையாமோ விளையாட்டய்
இதை நீ கருத!’
முறையிட்டுக் கடிந்தான்
இளையான் இலக்குவன்.
முறுவலித்தான்
முக்காலமுணர்ந்த பரந்தாமன் .- பின்
இராக்கதனின் இடுப்பினில்
இலகுவாய் உதைத்தான்.
இரண்டு கரங்களையும்,
இருகூறாக்கிப் புதைத்தான்.
பெற்ற சாபத்தினின்று
விராதன் உயிர்த்தெழுந்தான்.
புத்தி சீர்மைகொண்டு,
கரம்குவித்துத் தொழுதான், – பின்
‘பரப்ரும்மம் நீவீரெ’ன
உரத்து உரைத்தான்.
திருவடி பற்றி
தன் தீவினைகள் அறுத்தான்.
இராமன் வினவினான்:
இவ்விதம் அரக்கனாய்
ஆனது எவ்விதம்?
‘கந்தர்வ லோகத்தில்
‘தும்புரு’வாய் நான் பிறந்தேன்.
அரம்பையரைக் காதலித்து
அறிவெல்லாம் துறந்தேன்.
நிரம்பிய காமத்தால்
பாவங்கள் பல புரிந்தேன்.
சபித்தான் குபேரன்.
அரக்கனாய் ஆக்கினான்.
ராமனின் திருவடியால்
விலகிடும் சாபமெனும்
அருள் பெற்றேன்.
அவ்வாறே என்னுருப் பெற்றேன்’ சொன்னதும்,
வானுலகெய்தான்
விராதன்; சோலையடைந்தனர் மூவரும்.
சரபங்கர் பிறப்பு நீங்கு படலம்
குற்றங்களின் பிறப்பிடமாம்
காமத்தை வென்றவர்,
மற்றை வெகுளி,
மயக்கங்கள் அனைத்தையும் கொன்றவர்
‘சரபங்கர்’ பெயர்கொண்ட
தவமுனியின் ஆஸ்ரமத்துள்
பரப்பிரும்மம்
இருந்தார் இருள் கவிந்த நேரத்தில்
இந்திரன் முனிவரை பிரமலோகத்திற்கு அழைத்தலும் அவர்
மறுத்தலும்
சிறந்த தவசியின்
முடிவுற்ற தவநாளில்
தேவரில் ஒருவர்
எதிர்கொண்டழைப்பது இயல்பே!
சரபங்கர் தவநாளின்
முடிவறிந்த நான்முகன்,
இந்திரனை அனுப்பினான்
தவத்தோனின் எதிரினில்.
‘எல்லா உலகினும்
உயர்ந்தது எதுவென
சொல்லா விடினும்
நீர் அறிவீர்! – அங்கு
நல்லாளுடனே வருவீர்
இன்றெ’ன அழைத்தான் இந்திரன்.
‘அல்லேன்’ என்றே
மறுத்தவர் மொழிந்தார்.
‘சொற்பொங்கு பெரும்
புகழோய்! - நான்
அருந்தவம் ஆற்றி
ஆயுளைக் கடந்தவன்
மறுகா நெறியாம்
மோட்சத்தை விடுத்து - வெறும்
அற்பப் பதவியை
விழைந்திடுவேனோ?’ யென்றார்.
இந்திரன் வருகையை
அறிந்த அவ்வமையம்
திருவவதாரப் ராமனும்
அடைந்தனன் அவ்விடம்.
நான்மறைக் கனியைத்
தொழுத தேவேந்திரன்.
தன்னிகர் முனியிடம்
விடைபெற் றகன்றனன்.
தன்னைத் வணங்கிய
இந்திரனிடம் – இராமன்
ஒன்றுமே குறிப்பாய்க்
கூறவில்லை - இருந்தும்
தன்னுயிர் விட்டுப்
புரந்தரன் அகன்றதை
புலமையால் சரபங்கர்
புரிந்துகொண்டார்.
கிரணங்கள் பரப்பிய
கதிரவன் மறுதினம்
நிறையிருள் உறையினை
உரித்த அக்கணம்,
எரியிடைப் புகுந்திட
முனைந்தார் முனிவர்.
‘விடை நீ தருகெ’ன
திருமாலைப் பணிந்தார்.
‘யான் வரும் பொழுதினில்
இது ஏனோ?’ வினவினான்.
‘நீயிவண் வரும்
நிலை நிகழ்ந்ததினாலே – எந்தன்
தீவினை, நல்வினை
இரண்டும் அழிந்தன
இனி ஒரு வினை இலை
வேந்தே’ யென்றார். - பின்
‘வந்தது இறுதி
நாளெ’ன அழைத்த இந்திரன்;
தந்த வையகத்தைத்
தவிர்த்து விட்டேன்.
அந்தமற்றதும் அரியதுமான
பரமபதத்தினை
அடைந்திட அருளுதி
எனக்கெ’ன துதித்தார்.
‘இராமனின் நாமத்தை
ஜபித்தால் போதும்
பேரருள் கிட்டிடும்
எப்போதும்’ என்றிருக்க,
உயிரின் இறுதியில்
தரிசனம் செய்த
சரபங்கரின் பெருமையை
என்சொல்ல?
(இன்னும் வரும்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக