மாரீசன்
வதைப் படலம்
(சுகேது என்ற யக்ஷணின் பெண்ணான தடைகைக்கும், சுந்தன் என்னும் யக்ஷர் தலைவனுக்கும் பிறந்தவர்கள் சுவாகுவும், மாரீசனும், அகத்தியர் சாபத்தால் தாடகையும், அவள் மக்களும் அரக்கர்களாகி இராவணனின் தாய்வழிப் பாட்டனான சுமாலியால் போற்றப்பட்டதால் இவர்கள் இராவணனுக்கு மாமன்மார்கள் என்பதை பாலகாண்டத்தில் பார்த்தோம்.)
தவமியற்றி
தகவாய் வாழும் மாரீசன் முன்
தனியனாக
வந்து நின்றான் தசமுகன். - அவனை
வணங்கித்
தொழுதவன் பயத்துடன் வினவினான்;
‘வனத்திடை
வருகையின் காரியம் யாது? சொல்லுதி’
‘நின்
மருமகளின் நாசியறுத்த மானிடர் இருவர்.
உன்
மருகர்கள் கர தூடணனையும் கொன்று அழித்தார்.
வன்மைமிக்கவர்
தண்டகாரண்யத்தில் தவசியாய் இருக்கிறார்.
என்மரபுக்கும்,
நின்மரபுக்கும் இழுக்கன்றோ இவையெல்லாம்?
ஒப்பில்லா
மாந்தருடன் போர்புரிய தன்மானம் ஒப்பவில்லை.
செப்புமொழி
கொஞ்சிப்பேசும் வஞ்சியைவிடவும் மனமில்லை.
உடனவளைக்
கவர்ந்துவர முடிவெடுத்த பிற்பாடு
கடத்திவர
உனைநாடி கானகத்துள் வந்தேன். நீ புறப்படு’
மாரீசன் நல்லுரைக் கூறல்
எரிகின்ற
நெருப்பினில் இரும்பினை உருக்கித்தான்
செவிப்பறைவரை
ஊற்றினாற்போல் உடல்சிலிர்த்தான் மாரீசன்.
‘அறத்திறனால்
தவஞ்செய்து பெருஞ்செல்வம் பெற்றாயே
புறத்திறனால்
பெற்றவற்றை இழந்திடத்தான் புகுவியோ?
அகலிகைபால்
மோகம் கொண்ட தேவேந்திரன்
அகம்திருந்த,
அவன் அழிவுற்றதை அறிந்திலையோ நீ?
நீரையும்,
நாட்டையும், பிறர் தாரத்தையும் கவர்கின்ற
யாரையும்
தருமமழிப்பதை மறந்தனையோ நீ?
என்னையும்,
தம்பியையும், தாடகைத் தாயையும்
தண்டித்த
வில்லான் இன்றுனக்கு விரோதியானானோ!
நன்று
உண்டெனில் இழிசெயலை நீ மறப்பதுதான்’
என்று
நல்கினான் பல்விதமாய் நல்லுரைகள்.
இராவணன் கொண்ட சினம்
‘நங்கை
முகமெங்கும் அகழ்ந்தவனைப் புகழ்ந்தனை! – என்
நெஞ்சின்
நிலையையும் அஞ்சாமல் இகழ்ந்தனை!
கொஞ்சமும்
உனக்கு உரைக்கவில்லையோ நிகழ்ந்தவை! – என
வெம்கண்
இருபதும் புருவங்களும் உயர விடைத்தான்.
மாரீசனின் உபதேசம்
‘எடுத்தேன்
கயிலை மலையையென இயம்பினையே! – ஈசன்
வடித்த
மாமலையையே வளைத்தவனன்றோ இராமன்?
விடம்
உண்கின்றாய் என்பதையறிந்தும் உன்னைத்
தடுக்காமல்
விடுவது தர்மமாகுமா சொல்?’
இராவணன் மேலும் சினந்து கூறல்
'காமபாணத்தால்
மடிவதை நான் விரும்பிலேன்.
ராமபாணத்தை
எதிர்த்திடத்தான் விழைகிறேன்.
மானிடரை
எதிர்க்கொள்ள சேனைதான் வேண்டுமோ - என்
பெருங்கரத்து
‘சந்திரஹாஸ வாளொ’ன்றே போதுமே!
அன்னையினைக்
கொன்றவனை அஞ்சி நீ உறையலாமோ?
உன்னை
ஒரு வீரனென மதித்திடல்தாம் சிறப்பாமோ?
ஆணை
வழி ஏவல் செய்து அனுசரித்துப் போவாய்!
வீணான
விளக்கத்தால் முடித்திடுவேன் என் வாளால்.
மாரீசன் உடன்பாடு
‘நன்மையும்
தீமையன்றோ நாசம் வந்த நாளில்’
என்றவன்
கேட்டான் ‘செய்வது புகலுதி’
'காமக்கனலால்
எரித்துவாட்டும் சீதையெனும் தென்றலை
கவர்ந்து
கொணருதி மாயையினாலே’ யென்றான்.
விதிவிளைவை
முன்னறிய வல்லார் எவருமில்லை.
ஏவிய
செய்தலல்லால் வழியேதும் இங்கில்லை. - அதனால்
‘இயம்புக!
என்ன மாயம் நான் இயற்றுவதெ’ன்றதும்,
‘பொன்மானாகிப்
போய் அப்பெண்மானைக் கவரெ’ன்றான்.
விடம்
கலந்த நீரில் விழுந்த மீனாகத் துடித்தவன்.
அவமானம்
கருதாமல் பொன்மானின் உருவெடுத்தான்.
நன்மானொத்த
நங்கையை நாடிச் சென்றவனைக்
கலைமான்கள்
களிப்புடன் நெருங்கி, விருப்புடன் பார்த்தன.
கொய்யாமலர்களைக்
கொய்யும் தையலாள் முன்
பைய
நடைபயின்று பதுங்கி வந்தது இப்பொய்மான்.
மாயமானைக்
கண்டு மயங்கிய மான்விழியாள்.
எம்மானிடம்
இறைஞ்சினாள். தன்மானத்துடன் கெஞ்சினாள்.
‘மாணிக்கம்
பொதிந்த அக்கானகத்துக் கனகமானை
காணத்தகுமெ'ன்றாள்;
‘வேண்டுமெ’ன்று கைதொழுதாள்.
‘இம்மாநிலத்தில்
எங்கும் இல்லை இம்மானெ’ன யாசித்தாள்.
‘எம்மான்
இது’ வென்று எம்பெருமான் யோசித்தார்.
மானிடப்
பிறவியெடுத்த மாலின் மனையாளுக்கு
மானிடம்
ஏற்பட்டது மங்காத மனக்கிறக்கம்.
ஜனகமான்
சொன்ன சொல்லால் சொக்கிப்போய்
விசித்திர
மானைப் பிடிக்கப் புறப்பட்டார் சீமான்.
(வரும் இன்னும்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக