திங்கள், 11 ஏப்ரல், 2022

லக்ஷ்மி ராமாயணம் - ஆரண்ய காண்டம் பகுதி 2.

 

                          அகத்தியப் படலம்

 

இறுதியை யேற்ற சரபங்கர் பார்த்து,

இரங்கி வருந்திய திண்சிலைக் குமரர்கள்,

அரிதினில் விலகினர் அவ்விடமிருந்தே!

அலைபுனல் நதிகள் மலைகள் கடந்தே!

 

முண்டர் மோனர், பாலகில்லரெனும் யோகியரும்

தண்டகாவனத்திலே தவமியற்றும் யேனையோரும்

அரக்கரின் தீவினைகளைக் களைந்தழிக்கப்

புறப்பட்டான் காகுந்தனென அகமகிழ்ந்தார்.

 

‘புல்லர்கள் பயத்தினைப் போக்கிடல்தான் தம்

பிறந்த பிறவியின் பெரும் பேறு’ என எண்ணி,

விருப்பத்துடன் பத்தாண்டுகள் அவ்வனத்தில் வசித்தான் – பின்

கருத்துணர்ந்து அடைந்தான் அகஸ்திய னாஸ்ரமம்.

(புல்லர்கள் – கீழ்மக்கள்)

 

தென்தமிழ் மொழிக்கு இலக்கணம் வகுத்தவர்

கடத்தினில் காவிரி கொணர்ந்த அகத்தியர் - அவர்

நெடுமால் வந்ததும் வணங்கி யெழுந்தார்.

எம்பிரான் தாள்தனில் வீழ்ந்து பணிந்தார்.

 

அரக்கரை வேர்முத லறுத்து எறிந்திட

பிறந்த மருத்துவன் இவனெனப் புரிந்திட,

உய்த்தனர் தேவர்கள்; உயிர்த்தனர் தவத்தோர்;

அகமகிழ்ந்தனர் அறத்தின் நெறிநின்ற அந்தணர்.

 

‘செருக்குடை அரக்கரை அழித்திட வேணும்

அருளுதி அதற்கெ’ன வேண்டினான் இராமன்.

அரியவாள், வலியஅம்பென ஆயுதங்கள் பலவுடன்

திருமால் வில்லொன்றை, அளித்தான் அகத்தியன்.

 

உலகங்கள் ஏழினும் எவ்விடமும், எந்நாளும்

கலந்து விளங்கிடும் பரம்பொருளான எம்பிரான்

ஆலமரங்கள் ஐந்துடனே பொலிவுடன் விளங்கிடும்

‘பஞ்சவடி வனம்’ செல்லத் தலைப்பட்டார்/

(பஞ்சவடி இப்போது நாஸிக் என்று அழைக்கப்படுகிறது)

 

                         சடாயு காண் படலம்

 

தூய்மையன்; கற்றுத் துணிந்த கேள்வியன்;

வாய்மையன்; குற்றம் துறந்த மதிகூர்மையன்,

தேய்ந்த அங்குசம்போல் நீண்ட நாசிகொண்ட

‘சடாயு’ என்கின்ற கழுகின் வேந்தன் – அவன்

 

ஓங்கி உயர்ந்த மலை மேல் நின்றான்.

தாங்காத அம்மலை அமிழ்ந்து சென்றது.

வீங்கிய வலிமைகொண்ட சடாயு கழுகினை

நோக்கினர் மூவரும் ஐயம் எழும்பிட

(அந்த மலையின் பெயர் ப்ரஸ்ரவணம்)

 

வரிசிலை வீரரை சடாயு பார்த்தான்.

‘மரவுரி தரித்த வினையறு வில்லினர்,

தேவரோ எவரோ அறிகிலேன்’ எனப்பல நினைத்தவன்,

‘உரைப்பீர் எவரென’ வெளிப்படையாய் வினவினான்.

 

‘வீரக் கழலணி தசரதன் மைந்தர்கள்’ என்ன

பெருகிய உவகையால் தரையினை அடைந்தவன்,

‘தசரதர் வலியரோ’ வென விருப்புடன் வினவினான்.

‘இறக்கம் உற்றான்’ என்றதும் ஏக்கம் எய்தினான்.

 

‘நீயுடல் யானாவி’ என்ற தசரதத்தோழன் இறந்ததால்

இனிதுயிர் துறந்திட சடாயு துணிந்தான்.

‘தந்தையின் இடத்தில் இருப்பீர் நீரெ’

அணைத்துத் தேற்றினர் தசரத புதல்வர்கள்.

 

நேசம் நிறைந்த பிராட்டி மணந்ததும்,

நாடு துறந்தபின் காட்டிடை வந்ததும்,

கேட்டுத் தெளிந்த கழுகுத் தலைவன் – 'இக்

காட்டினில் கழிப்பீர்! காக்குவென் நானெ’ன்றான்.

 

‘அகத்தியன் இயம்பிய பஞ்சவடி யடைந்து,

அகன்ற கரைதனில் உறைவம்’ என்ன – அவர்களை

விரித்த சிறகின் நிழலினில் பொருத்தியே

உயர்ந்து விண் வழி சடாயு பறந்தான்.

(இன்னும் இருக்கிறது)

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக