“லக்ஷ்மி ராமாயணம்.” Part I
“லக்ஷ்மி ராமாயணம்.”
(பெயரே புதிதாக இருக்கிறதே, இப்படியொரு ராமாயணமா என்று நினைக்கத் தோன்றுகிறதல்லவா? இது கம்பர் இயற்றிய ராமாயணமேதான், ஆனால் அவரெழுதிய கவிதை வடிவில் இல்லாமல் அவர் கவிதைகளின் சாரத்தை எடுத்து திருமதி லக்ஷ்மி ரவி அவர்கள் தன் சொல் நடையில் (கவிதை வடிவில்) வடித்திருக்கும் ராமகாதை. புதிய முயற்சி, ராமகாதையின் மீதுள்ள காதலால் உருவெடுத்த வரிகள் இதில். திருமதி லக்ஷ்மிரவி அவர்களின் புது முயற்சி என்பதால் பிழைகள் இருந்தால் அதனைச் சுட்டிக்காட்டி, நிறைகளைப் போற்றி வாழ்த்திப் பாராட்டி ஊக்கமளிக்க வேண்டுகிறேன். திருமதி லக்ஷ்மிரவி கல்லூரி நாட்களில் கவி அரங்கங்களைக் கண்டவர். நீண்ட நெடுங்காலம் இத்துறையினை மறந்திருந்த அவர் இப்போது கம்பனின் காவியத்தைப் படித்துவிட்டுத் தன் சொல்லால் ராமாயணம் எழுதியிருப்பதை இங்கே தருகிறேன். எளிய நடை, கதைப்போக்கு மாறாமல் கம்பன் சொற்களால் அடுக்கப்பட்ட வரிகள், படியுங்கள், கருத்துக்களைச் சொல்லுங்கள். எழுதிய திருமதி லக்ஷ்மிரவியை ஊக்கப்படுத்தி எழுதத் தூண்டுங்கள். -- வெ.கோபாலன்.)
எளிய மொழியில் ‘கம்பராமாயணம்’
ஆக்கம்: திருமதி லக்ஷ்மி ரவி, தஞ்சாவூர்.
அறநெறி வழுவாமல் அரசாண்ட
க்ஷத்ரிய வீரனென இராமனை
விஸ்தரித்து, சித்தரித்து, வால்மீகி
வடமொழியில் படைத்துள்ளார் ‘இராமாயண்’ 1
புவிமீதில் உதித்த இராமன்
அவதாரப் புருஷரென்று
கவிக்கம்பர் தமிழ் மொழியில்
‘இராமாவதாரம்’ அளித்துள்ளார் 2
பின்னாளில் அந்நூலும்,
‘இராமாயணம்’ என்பதாகப்
பேருடன், புகழும் பெற்று,
பார் பிரசித்தம் ஆனதுவாம்! 3
முதல் மூன்று பாக்களிலும்; கம்பன்
பரம் பொருளை வணங்கிவிட்டுப்,
பின்வரும் பாக்களிலே
தன்னிலையை விளக்குகின்றார். 4
ஆக்கல். காத்தல். அழித்தலென
முத்தான தொழில் மூன்றினையும்
தப்பாமல் செய்பவராம்
தலைவனின்தாள் பணிகின்றார். 5
'வால்மீகி யென்றவொரு
மாமேதை இயற்றியதை
எளியேனாம் கம்பனின்று
எழுதிடவே முனைந்திட்டேன்! – அது 6
பேரிரைச்சலும், பேரலையும் கொண்ட
பாற்கடல் நீரினைப் பாலென்றெண்ணி,
நாக்கொண்டு பருகிட விழையும்
பேரவா கொண்ட பூனைக்கு ஒப்பெ'ன்றார். 7
வாழ்த்துப்பா பாடிய பின்
அவை யடக்கம் கூறி விட்டு
‘பாலகாண்டம்’ என்பதிலே
‘ஆற்றுப்படலம்’ ஆற்று கின்றார். 8
ஆற்றுப்படலம்
பாட்டுடைத் தலைவனின்
நாட்டினையும், நதியினையும்,
பாட்டிலே காட்டுதல் – தமிழ்க்
காப்பியத்தின் மரபாகும். 9
ஆற்றின் வருணனையைப் பலரும்
நாட்டின் வருணனைக்குள் அடக்குவர் – ஆனால்
ஆற்றிற்கென ஓர் ‘படலம்’
அமைத்துவிட்டார் கம்பநாடர். 10
இமயத்தில் உருவாகி,
இடைவிடாது உருண்டோடி,
நிலவளம் பெருக்கிவரும்
குல வள்ளல் ‘சரயு நதி.’ 11
தாய்ப்பாலுக் கொப்பான – இவ்
வாய்க்காலின் வெள்ளத்தால்,
நோயொன்றும் தாக்காவண்ணம்
வாழ்ந்தனராம் கோசலத்தார். 12
நாட்டுப் படலம்
மணியும், இரத்தினமும்,
மயிலின் பீலியும்,
அகிற், சந்தனக் கட்டைகளும்,
அனைத்தையும் இச்சரயுநதி, 13
வாரி வழங்கியதால்
வாணிகமும் வளர்ந்ததுவாம் - மும்
மாரிப் பொழிந்ததினால்
நெற்குதிரும் நிறைந்ததுவாம்.. 14
வறுமையும் இங்கில்லை – அதனால்
வள்ளலும் எவரும் இல்லை!
பகையும் இருக்கவில்லை – அதனால்
வீரமும் வெளிப்படவில்லை! 15
கள்வர் எங்குமில்லை – அதனால்
காவலுக்குத் தேவையில்லை!
பொய்யுரை ஏதுமில்லை – அதனால்
வாய்மையும் சிறக்கவில்லை. 16
இத்தகு நாட்டுடை
வித்தகு தலைநகர்,
‘அயோத்தி’ என்பதிலே
வியப்புக்கும் இடமுண்டோ? 17
இயற்கை வளமும், செல்வச் சிறப்பும்
அளப்பதற் கரியதாம் அமரா புரியில்;
அதனினும் உயர்ந்ததாம் அளகாபுரியில்; - அயோத்தியோ
அனைத்திலும் முதன்மையாம் இப்புவியில்! 18
நகரப் படலம்
பளிங்கினை அடுக்கி வைத்தும்,
பசும்பொன்னை அரிந்து பொதிந்தும்,
வெள்ளி விட்டமும், வைரத் தூணுமாய்க்
கண்ணைப் பறித்ததுவாம் வாயிற் கோபுரங்கள்! 19
கப்பப் பொருள் அளப்பதற் கெனவும்,
மாந்தர் நடன மாடுதற் கெனவும்,
வேதமதை ஓதுதற் கெனவும்,
விதவிதமாய் மணி மண்டபங்களாம்! 20
கல்வி விதையொன்று, கேள்விக் கிளையாகி,
தவ இலையும், அன்பரும்பும்,
தருமப் பூக்களும், போகக் கனியும்,
தந்திடுமாம் அயோத்தி மா நகரத்திலே! 21
அரசியற் படலம்
நேர்மையும், பெருமையும் நிரம்பப் பெற்று
நீதிவழிசென்று நல்லாட்சிப் புரிந்தோன்தான் - இச்
சீருடை காப்பியத் தலைவனைப் பெற்ற
பேருடை தவச் சீலனாம் தசரதன் 22
அன்பு செலுத்தலில் அன்னையைப் போலவும்,
நன்மை பயத்தலில் தவத்தை ஒத்தும்
முன்சென்று வழிகாட்டலில் புதல்வனைப் போன்றும்,
துன்பம் தொலைப்பதில் நன்மருந்தும் ஆனவன். 23
(தொடர்ந்து வரும்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக