திங்கள், 7 ஆகஸ்ட், 2017

"லக்ஷ்மி ராமாயணம்" பால காண்டம் part II

TUESDAY, JULY 18, 2017


"லக்ஷ்மி ராமாயணம்" part II

"லக்ஷ்மி ராமாயணம்"

(பெயரே புதிதாக இருக்கிறதே, இப்படியொரு ராமாயணமா என்று நினைக்கத் தோன்றுகிறதல்லவா? இது கம்பர் இயற்றிய ராமாயணமேதான், ஆனால் அவரெழுதிய கவிதை வடிவில் இல்லாமல் அவர் கவிதைகளின் சாரத்தை எடுத்து திருமதி லக்ஷ்மி ரவி அவர்கள் தன் சொல் நடையில் (கவிதை வடிவில்) வடித்திருக்கும் ராமகாதை. புதிய முயற்சி, ராமகாதையின் மீதுள்ள காதலால் உருவெடுத்த வரிகள் இதில். திருமதி லக்ஷ்மிரவி அவர்களின் புது முயற்சி என்பதால் பிழைகள் இருந்தால் அதனைச் சுட்டிக்காட்டி, நிறைகளைப் போற்றி வாழ்த்திப் பாராட்டி ஊக்கமளிக்க வேண்டுகிறேன். திருமதி லக்ஷ்மிரவி கல்லூரி நாட்களில் கவி அரங்கங்களைக் கண்டவர்.  நீண்ட நெடுங்காலம் இத்துறையினை மறந்திருந்த அவர் இப்போது கம்பனின் காவியத்தைப் படித்துவிட்டுத் தன் சொல்லால் ராமாயணம் எழுதியிருப்பதை இங்கே தருகிறேன். எளிய நடை, கதைப்போக்கு மாறாமல் கம்பன் சொற்களால் அடுக்கப்பட்ட வரிகள், படியுங்கள், கருத்துக்களைச் சொல்லுங்கள். எழுதிய திருமதி லக்ஷ்மிரவியை ஊக்கப்படுத்தி எழுதத் தூண்டுங்கள். --  வெ.கோபாலன்.)

திருவவதாரப் படலம்.

சிகரமாயிருந்த தசரதனின்
சித்தத்திலே ஒர் கவலை!
சந்ததி இல்லையே தமக்கடுத்து
சிம்மாசனத்திலே அமர்வதற்கு!                 24

வேதமுனி வசிஷ்ட்டரைத்தான்
வேந்தன் தன் அவைக்கழைத்தான் – மன
வேதனையை வெளிப்படுத்தி
‘யாது செய்தல் நலம்?’ என்றான்.                25

அவ்வமையம்…-
முக்காலமு முணர்ந்த
பிரும்ம புத்ரன் வசிஷ்ட்டருக்கு
அக்காலத்திய ஓர் நிகழ்வு
அகக்கண்ணில் தெரிந்ததுவாம்.                  26

"முன்பொருநாள் தேவர் வந்துத்
திருமாலின் தாள்பணிந்து,
அவதி தரும் அரக்கர் தம்மை
அழித்தருள வேண்டி நின்றார்.                   27

தசரதனின் புத்திரனாய்
தரணியிலே உதிப்பதாய்
திருமாலும் மனமுவந்து
தந்திருந்தார் உறுதிமொழி!                      28

இலக்குவனாய் ஆதி சேடனும்,
சங்கு பரதனாய், சக்கரம் சத்ருக்னனாய்
மண் மீது பிறப்பெடுத்து
மற்றோரைக் காப்போமென்று."                   29

நினைவினின்று மீண்ட மாமுனிவர்,
அஸ்வமேத யாகமும், புத்திர
காமேஷ்ட்டி யாகமும் செய்யுங்கால்,
புதல்வர் பிறக்கும் வாய்ப்புண்டென்றார்.          30

‘அன்னதற் கடியவன் செய்வன யாதெ’ன
அரசனுக்கரசன் ஆவலாய் வினவிட
அதற்கான நியமத்தை அவை முனிவர்
அடுத்தடுத்து விளக்க லானார்.                   31

விபாண்டக முனியின் குமாரராய்
மான் கொம்புடன், மான் வயிற்றில் பிறந்த,
'கலைக்கோட்டுமாமுனி' வந்திட
பலன் கிட்டிடும்' எனப் பகன்றார்..                32

(கலைக்கோட்டு மாமுனி – ரிஷ்ய ஸ்ருங்கர்)

தவத்தில் சிறந்த தன் தகப்பனுக்குத்
திருப்பணி செய்வதே சித்தமென்ற
பெண்ணுரு பார்த்திரா முனிவனின் கால்பட
பெருமழை பெய்யும்' என்பது ஐதீகம்             33

பஞ்சம் வாட்டிய 'உரோம பாதர்'
தஞ்சமென்றிவர் தாள் பணிந்து,
'அங்கம்' அழைத்து வந்ததினால்
கொட்டிய மழையால் பஞ்சமழிந்ததாம்           34

(உரோம பாதர் - அங்க தேசத்து அரசர்)

நாட்டின் சுபிக்ஷம் திரும்பியதால்,
'சாந்தை' யென்ற தம் மகளை – கலைக்
கோட்டு முனியுடன் மணம் செய்து - மரு                        
மகனாய்க் கொண்டான் அம் மன்னன்".            35

வசிட்டரின் உரையினால் தசரதனும்
வாட்ட மகன்று அங்கமடைந்தான்.  – கலைக்
கோட்டு மாமுனி யிடத்தில் தன்
நாட்டு நிலவரம் நயமுடன் நல்கினான்.           36

'இரங்கேல் அரசே! யாம் வந்திருப்போம்! 
வருத்தம் களைந்து இயற்றிடுவீர் யாகங்களை!
ஈரேழுலகையும் ஆண்டிடும் புதல்வரை
ஈன்றிடுவீர்! என்றுரைத்தார் அம்முனிவர்       37

ஏவலர்கள் அமைத்தனராம் யாக சாலையை!
வேதியர்கள் மூட்டினராம் வேள்வித் தீயினை!
மகவுஅருள் ஆகுதியை முறையாய் வழங்கியே                
வருடம் ஒன்றானதுவாம் அருள் வேண்டியே!  38       

தீயிடை மீண்ட பூதமொன்று
தூயபொன் தட்டிலே வைத்த – சுவை
மேவிய அமிர்தம் தன்னை
தருவித்து மறைந்ததுவாம்!                   39

அமிர்தத்தில் ஓர் பங்கை கௌசலைக்கும்,
அடுத்தவள் கைகேயிக்கு ஒரு பங்கும்,
எஞ்சிய இரு பங்கினையும் சுமித்திரைக்கும்
ஈந்தனராம் தசரதமா சக்ரவர்த்தி!              40

யாகநியம நிமித்தமாய், கடவுளர்க்குப் பூசையும்,
அந்தணர்க்குப் பொன்னையும், பொருளையும்,
அரசற்குப் பரியையும், தேரையும் ஈந்துவிட்டு
சரயுநதி நீரமிழ்ந்தார் சக்ரவர்த்தி திருமகனார்!  41

ஒருசில நாள் சென்றதும்,
கருவைச் சுமந்தனர் தேவியர் மூவரும்
மசக்கை நோயோடு வருத்தம் துய்த்தனர்.
திருமுக வடிவோடு மதியினை ஒத்தனர்.      42                                                 
புனர்பூசம், கடகத்துடனிணைந்து - பரி
பூரணமாய் பரிமளித்த பகற்பொழுதில்
அரிதான ஆண்மகவை ஸ்ரீ ராமனாய்
அவனிக்குப் பெற்றெடுத்தாள் கௌசல்யை!     43

அரியநல் வேதமே அறிதற் கரியனாய்
கரியமுகில் போன்ற மேனிக் கரியனாய்
திருமாலின் மறுபிறப்பிற் குரியனாய்
அவதரித்தான் அருள்நிறைந்த இராமபிரான்.    44

கைகேயி பரதனையும், சுமித்திரை
லட்சுமணன், சத்ருக்னன் இருவரையும்
புதல்வர்களாய்ப் பெற்றெடுக்க
பெருமகிழ்ச்சி பெருகிற்றாம்.                   45                                                                        
நாட்டினர் அனைவரும் ஆடினர் – கூத்தாடினர்
கூடினர் முனிவரும் ஆசி கூறினர் – பூ தூவினர்
மகிழ்ந்தனர் மன்னரும் வழங்கினர் – வாரி வழங்கினர்.
நீக்கினர் வரியெலாம் கொட்டியே – முரசுகொட்டியே!  46
             
கிளி கொஞ்சும் மொழி பேசித்,                      
தண்டளர் நடை பயின்று வந்து
அனு தினமும் வளர்ந்தனராம்
அரசிளங்குமரர்கள் நால்வரும்,                       47                                                                    
இராம – இலக்குவன், பரத – சத்ருக்னன் என
இணைகள் இரண்டெனவே இருந்தனராம்.
இருப்பினும் அண்ணன் இராமனுக்கே – முதல்
இருக்கையை இதயத்தில் ஈந்தனராம்.                48

யானை, குதிரை, இரதம் ஏனைய
ஏற்றம் பயின்று, வேதம் உணர்ந்து
யாதொரு கலையும் நீக்கல் இன்றி,
யாவினும் தேர்ந்தனர் தசரத புதல்வர்கள்.     49                                      
(இன்னமும் வரும்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக