திங்கள், 7 ஆகஸ்ட், 2017

'ல‌க்ஷ்மி ராமாயணம்' பாலகாண்டம் பகுதி III

ல‌க்ஷ்மி ராமாயணம் பகுதி III

       "ல‌க்ஷ்மி  ராமாயணம்"

(பெயரே புதிதாக இருக்கிறதே, இப்படியொரு ராமாயணமா என்று நினைக்கத் தோன்றுகிறதல்லவா? இது கம்பர் இயற்றிய ராமாயணமேதான், ஆனால் அவரெழுதிய கவிதை வடிவில் இல்லாமல் அவர் கவிதைகளின் சாரத்தை எடுத்து திருமதி லக்ஷ்மி ரவி அவர்கள் தன் சொல் நடையில் (கவிதை வடிவில்) வடித்திருக்கும் ராமகாதை. புதிய முயற்சி, ராமகாதையின் மீதுள்ள காதலால் உருவெடுத்த வரிகள் இதில். திருமதி லக்ஷ்மிரவி அவர்களின் புது முயற்சி என்பதால் பிழைகள் இருந்தால் அதனைச் சுட்டிக்காட்டி, நிறைகளைப் போற்றி வாழ்த்திப் பாராட்டி ஊக்கமளிக்க வேண்டுகிறேன். திருமதி லக்ஷ்மிரவி கல்லூரி நாட்களில் கவி அரங்கங்களைக் கண்டவர்.  நீண்ட நெடுங்காலம் இத்துறையினை மறந்திருந்த அவர் இப்போது கம்பனின் காவியத்தைப் படித்துவிட்டுத் தன் சொல்லால் ராமாயணம் எழுதியிருப்பதை இங்கே தருகிறேன். எளிய நடை, கதைப்போக்கு மாறாமல் கம்பன் சொற்களால் அடுக்கப்பட்ட வரிகள், படியுங்கள், கருத்துக்களைச் சொல்லுங்கள். எழுதிய திருமதி லக்ஷ்மிரவியை ஊக்கப்படுத்தி எழுதத் தூண்டுங்கள். --  வெ.கோபாலன்.)

                   கையடைப் படலம்
            (விஸ்வாமித்ரர் இராமனை காட்டுக்கு அழைத்தல்)

வெண்குடைகீழ் ஆண்டுவந்த அரசன் அவைதன்னில்
விஸ்வாமித்ர முனியொருநாள் வருகை புரிந்தனர்.
பணிந்து, வணங்கி, இனிது இருத்தி, தசரதனும்
பாதபூசை செய்துவினை போக்கிக்கொண்டனன்.       50

மாமுனி தன்மனைதேடி விஜயம் செய்ததில்
மாதவமே செய்துவிட்டே னென்று மகிழ்ந்தனன்.
'யாது பணி? யாம் செய்ய' வென்று வினவியே
காத்திருந்தான் கருத்துடனே கடமை யாற்றவே!       51

உரத்தழைத்தார் முனி, ‘வீரன் தசரதனே!’
இந்திரனின் ராச்சியமாம் அமராவதியை
சம்பரனெனும் அசுரன் வந்து கைப்பற்ற,
கைகேயி தேரோட்ட, போராடி மீட்டவனே!            52

சித்த வனத்தினிலே யான் செய்திடும்
முக்தி வேள்விக்குத் தடையான அசுரர்களை
செருமுகத்துக் காக்க வேண்டி – நின்
கரிய நிறமுடை குமரன் வேண்டுமெ'ன்றார்.           53
(செருமுகம் - போர்முகம்)

அருந் தவத்தோன் கூற்றெல்லாம்
கனல் காதில் விழுந்தாற் போன்றும்;
கண் இலான் பெற்றிழந்தார் போன்றும்
கடுந் துயருற்றான் தசரதமா மன்னவன்!              54

‘மகன் பிரிய உயிரிழப்பான்’ என்றவொரு
முன்சாபம் மனதுள்ளே ரணமாயிருக்க – அதைக்
கூரான கத்திகொண்டு கிழித்த வுடன்
‘கோரற்க இராமனையே!’ கரங்குவித்தான் தசரதன்.     55             

'படைத் தேர்ச்சியில்லா சிறுவனவன்!
சடையுடை பரமனும், ப்ரம்மனும், புரந்தரனுமே
இடையூறு செய்யுங்கால் உடனிருந்து நானே
தடைகளகற்றிடுவேன்! புறப்படுக!' என்றுரைத்தான்     56

சினந்து எழுந்தனராம் மாமுனிவர் – அதைக்கண்டு
பயந்து நடுங்கினராம் இமையோரும், அவையோரும்!
‘மறுத்திடேல்! நின்மகன் பொருத்த முடையான்
பொறுத்திடுவான்.’ உபதேசித்தனராம் வசிஷ்ட்டமுனி.  57

குருவின் திருவாசகத்தைக் கேட்ட தசரதன்
திருவின் வடிவினனாம் சிறுவன் இராமனை
வருவிக்க ஏவலரை வேண்டியவன் – பின்
தருவித்துத் தன்னருகில் இருத்தினான்.           58

தம்பி இலக்குவனுடன் வந்தவனை
முந்தை நான்மறை முனியிடம் தந்து,
'தந்தையும், தாயுமாய் நீயிவர்க்கு
இயைந்ததை செய்க! என்றுரைத்தான்..            59

ஒன்றே போல் அண்ணனும், தம்பியும்
வெற்றி வாளொன்றை இடையிலே கட்டி
குன்று போலுயர்ந்த இடத் தோளினில்
கொற்றம் வில்லுடன், விறைப்பாய் ருந்தனராம். 60
(கொற்றம் வில் - வெற்றி வில்)

சினம் அகன்றிட, குணம் தோன்றிட
அருள் வழங்கினராம் முனி. – பின்
அண்ணன் தம்பி இருவரையும் தன்
உடன் கூட்டிச் சென்றனராம்.                    61

மாதவத் தோனைப் பின் தொடர்ந்திடவே
மாநகர் அயோத்தி பின்னடைந்ததுவாம்,
தந்தை மொழி சொல் ஏற்றபடி
சரயு நதிக்கரை யடைந்தனராம்.                      62

கரும்பும், கமுகும், அரும்பும், தேனும்
அடர்ந்து, குளிர்ந்த சோலை தன்னில்,
இரவுப் பொழுதைக் கழித்த பின்னர்
சரயுவைக் கடந்தனர் உதிப்பதற்குள்!                63

புகை தழுவு சோலை காட்டி,
‘ஈது யாவது’ கேட்டான் இராமன்.
‘காமனாச்ரம்’ இது வென்றும் – அதைச்
சார்ந்ததேசம் ‘அங்கநாடெ’ன்றும் கூறி,             64

யோக நிலையிருந்த பரமேஸ்வரனை
மோக வலைதள்ள காமனவன்
மலரம்பு தொடுத்திட, நுதல்விழியால் ஈசன்
கனல்பறக்கக் காமனை எரித்தயிடம் இதுவென்றார்.  65
(நுதல் விழி - நெற்றிக்கண்)

அடுத்து,,
வெம்மைக்குக் காரணமாம் அக்னியே
வெந்து வருந்திடத் தக்கதும்,
மழைமேக நீரெல்லாம் கொதிப்பேறி
மின்னலும், இடியுமே தகிப்பதும்,                  66

கள்ளியும், மூங்கிலும், வெந்தாற் போல்,
வெடித்தும், சிதறியும்,
மண் தரையும் பேய் பிளந்தாற்போல்,
உலர்ந்தும், பிளந்தும்,                            67

காக்கையும், யானையும், கருகினாற் போல்,
இறந்தும், கிடந்தும்,
காய்ந்திருந்த பாலைவழி சிறுவர்களை
கரம்பிடித்துச் சென்றாராம் தவமுனி.               68                                                
ஆற்றலுடையவ ராயினும் பிள்ளைகள்
பூவின் மிக மெல்லியரே! – அவர்கட்கு
நான்முகன் ஆக்கிய மந்திரங்களாம்
பலை, அதிபலையை போதித்தனராம் அப்பாலையில்!   69

இம்மந்திரங்களால் 
புயவலிமை உயர்ந்தோங்கும்!
குண நலமும் சிறந்தோங்கும்!
உறக்கம் கொள்ளாது! நோய் தாக்காது!
அரக்கர்கள் எதிர்த்திடத் தவிப்பர்’ என்றார்.          70

மந்திரம் இரண்டையும், மனனம் செய்திட – கனல்
துஞ்சிய பாலையும், தண்புனல் ஒத்ததாம்!
‘அறிஞ! சடையுடை சிவனின்
விழிபட இவ்விடம் வெந்ததோ? அன்றி           71

வேறொரு காரணம் இதற்குண்டோ?
பழிபடர் மன்னனின் நாட்டைப் போல
அழிந்ததன் காரணம் கூறிடுக!"
வில்லோன் முனிவனை வினவினனாம்.        72

கொன்று உழல் வாழ்க்கையள்
கொடிய கூற்றின் தோற்றத்தள்
ஆயிர மதயானைகளின் வலுவினள்
அவளின் கதை கேளீர்!’ உரைக்கலானார்.         73

'இயக்கர்தம் குலத்தவனாம் சுகேது – அவன்
மயக்கமில்லா மிகத் தூய்மையனாம்
மகவில்லா குறைபோக்க நான்முகனை
மிகப் பலநாள் கடுந்தவமே புரிந்தானாம்.         74

மெச்சிய பிரம்மனும் வர மளித்தான்
‘லட்சுமியை ஒத்த அழகினளாய்
ஆயிரம் யானைகள் வலியவளாய்
பிறப்பாள் ‘தாடகை’ யெனும் புதல்வி            75                 

பிறப்பினில் புதல்வர்கள் இலை யென்றாலும்
புயலாய் வளர்ந்தாள் தாடகையும் – பூப்
பெய்தபின் அவளுக்கு மண முடிக்க
ஆய்ந்தான் தகப்பன் தக்கவனை!                    76

நான்முகன் அருள்வழி பிறந்த தம் மகளுக்கு
நாயகன் 'சுந்தனை' தேர்வு செய்தான். - அவர்க்கு
புஜபல மாரீசன்,  சுவாகுவென 
புவனமே வருந்திட பிள்ளைகள் பிறந்தன              77

மாயமும், வஞ்சமும் மிகுந்த இப்பிள்ளைகள்
சூதுடன், வலிமையும் பொருந்தியே வளர்ந்திட,
சுந்தன் களிப்பின் உச்சத்தில் ஏறி,
வந்தான் அகஸ்த்திய ஆஸ்ரமம் தேடி,              78

அகஸ்த்தியன் என்பார் ஓர் முனிவர் – அவர்க்கு
பரமன் அருளினார் தமிழ் மொழியை!
அருந்தவம் புரிந்த அம் முனிவருமே
அரும் பெரும் சக்திகள் பல பெற்றார்!             79                                              
விருத்திராசுரன் மற்றும் அசுரர்களை
விரட்டினான் இந்திரன் ஒருசமயம் – தன்
சுற்றத்தோடு அவ்வசுரன்
ஆழ்கடல் புகுந்து ஒளிந்து கொண்டான்.          80

அகஸ்த்திய முனி தம் தவப்பயனால் – அக்
கடல்நீர் முழுதையும் கையில் கொண்டு
ஆச மனம்போலே உட் பருகி
அசுரரை இந்திரன் வசம் தந்தார்.                  81

அத்தகு முனியின் ஆஸ்ரமத்தின்
அத்தனை மரத்தையும் வேரறுத்தான் – சுந்தன்
அழகிய உழைகலை மான்கொன்றான் – முனி
தீயெழ விழித்திட நீர்போல் வீழ்ந்தான்,              82

கணவனைக் கொன்றதைக் கேள்வியுற்று
கனல்போல் கனன்ற தாடகையும் – தம்மிரு
மகனுடன் அவ்விடம் வந்தாள்.
முனிவனை முடிப்பதாய் சூளுரைத்தாள்.         83

அச்சமயம் –
இடியும், காற்றும் பொங்கிற்றாம்!
அமரர்கள் ஒளியும் மங்கிற்றாம்!
கதிரும், நிலவும் அஞ்சிற்றாம்!
மிதக்கும் மேகமும் நடுங்கிற்றாம்!               84                                

விழிவழி கனலுமிழ் அகஸ்த்தியனும்
‘அழிவன செய்தலால் அரக்கராயிழிக’ என்ன
உருக்கிய செம்பென அக்கணமே
மூர்க்கர்களாயினர் மூவருமே!                  85

தவபலம் பொறுந்திய அகஸ்த்தியன் சாபத்தை
எதிர்த்திட இயலா இரு மகனும்
அரக்கனாம் ‘சுமாலி’ யுடன் சேர்ந்து,
‘உனக்குயாம் புதல்வரெ’ன்றுறவு கூர்ந்தார்.       86

‘சுமாலி’ யென்பான் இராவணனின்
தாயாம் கேசகியின் தந்தை – இப்
பாட்டன் தம் தமையர் மாலியுடன் – பல
தீங்குகள் புரிந்தே வாழ்ந்து வந்தான்.             87

தேவர்கள் வேண்டிட, திருமால் செய்த -கடும்
போர் தனில் மாண்டனன் மாலியும்!
எஞ்சிய அசுரர்கள் பதுங்கினராம் – மனம்
அஞ்சியே அதளபாதாளத்தில்                  88

இலங்கையை குபேரன் ஆளுகையில்,
இராவணன் வளர்ந்து வரம் பெற்று – தாம்
இலங்கையின் அதிபதி யானதினால் – அங்கே
சுமாலியும் சுற்றமும் குடி பெயர்ந்தார்.           89

தாடகை புதல்வர்கள் இருவரையும்
தசமுகன் மாமனாய் அணைத்துக் கொண்டான்.
சலுகையும், பலமும் கிடைத்ததினால் - அங்கே
அழித்தும், துவைத்தும் திரிந்தனராம்.          90

சாபத்தால் பாதித்த தாடகையும்,
சந்ததி பிரிந்திட மிகத் தவித்தாள்.
அழலெனப் புழுங்கும் மனத்துடனே – இவ்
வனந்தன்னில் வந்து புகுந்திட்டாள்.. – அவள்    91

மண் உதைத்துப் பெயர்த்திடுவாள்!
விண் உருத்து இடித்திடுவாள்!
கண்ணின்று நஞ்சு உமிழ்ந்திடுவாள்!
‘திண்’னென்று இடிபோல் உறுமிடுவாள்!       92

செம்பட்டை முடியுடையாள்! – பிறைபோல்
கோரைப் பற்களுமுடையாள்!
மலையொத்த தனங்களுடையாள் – இம்
மருதத்தைப் பாலை யாக்கிய தாடகையாள்!   93

இலங்கையரசன் ஏவலினால் – பெரும்
இடையூறிவள் இழைக்கின்றாள் – எம்
வேள்வி, யாகம் கெடுக்கின்றாள் – பல
உயிர்கள் தின்று திரிகின்றாள்.               94

இவளை வதைக்க விலை யென்றால்
இரை யெனவே உயிரெல்லாம்
இட்டு வயிற்றை நிரப்பிடுவாள்; -உயிர்
இல்லாமல் செய்திடுவாள்’ உரைத்திட்டார்.   95                                 

‘எங்கிருக்கிறாள் இத்தொழில் இயற்றுபவள்?’ என்று
சங்கின் இடத்தில் வில்தாங்கிய வித்தோன்
சுருண்டு விழுந்த தன் திருமுடியை – மெல்ல
அசைத்து, அழகுற கேட்டதும்,               96

இருப்பது இம்மலை’ காட்டிய கணத்திலே,
கருமலை எரிந்தே நடப்பது போல
உறுமியபடி அத் தாடகையும்
வருவதை மூவரும் உடன் கண்டார்.                  97 

கடைப்புறம் துடித்திடும் புருவம் இரண்டுடன்
மடித்திடும் கோரப் பற்களிரண்டுடன்,
குகை போல் பிளந்த வாயுடனும் - கனல்
புகைந்திடும் விழியினை உருட்டி விழித்தாள்.        98

‘சுவையுடை ஊன் எனக்கரிதன்றோ? - உன்
தீவினை யழைத்திட கருதியதோ? - பலர்
கடக்கவே நடுங்கிடும் இக் காட்டை
அடைந்ததன் பொருளென்ன?’ நகைத்திட்டாள்.     99

மேகம் சிதறிடும் படி விழித்தாள்;
மலையும் உடையும் படி உதைத்தாள்;
'குறியாய் மார்பில் பொருந்தும்படியே
எறிவேன் சூலத்தை!' சூளுரைத் தாள்.     100

அவள் உயிர் முடித்திடல்தான் - இத்
தவமுனியின் கருத்தெனினும்.- அவள்            
பெண்'ணென்ற காரணத்தால் பெருந்தகையும்
அம்பினைத் தொடுத்திடத் தயங்கி நின்றான்.     101
.                                              
'மாதென்றெண்ணுகிறாய்! மணிப் பூணினாய்!
தீதென்றுள்ளவை யாவையும் செய்பவள்.
உருவத்தில் பெண்ணான அரக்கியவள்!
தருமம் அறிந்திடுவாய் தரணியைக் காத்திடுவாய்!.  102                    

குருவாகிய நின்னுரையை
சிரமேற்று சிரத்தையுடன்,
நிறைவேற்றுவதே முறைமை!
அறம் செய்வதே என் கடமை'                    103                 

றிந்தாள் இராமனின் மனக்கருத்தை – பின்
சொறிந்தாள் கனலைத்தன் கண் வழியே!
எறிந்தாள் சூலத்தை இராமன் மேலே
நிறைமதி மேல்வரும் கோளைப் போலே   104                        

(நிறைமதியாம் இராமனைப் பிடிக்க வரும் கேது எனும் கோள் போலே)   

பெண்ணுடன் போர் செய
அண்ணல் தயங்கினார்! – தான்
முன்னம் எறிந்த சூலத்தால் இராமனை
‘மாசற்ற வீரனா'ய் ஆக்கிட்டாள்.       105                                                        

கோலவில் தரையூன்றி அம்பு தொடுத்ததை
கண்டிலர் எவருமே ஒரு நொடியில்
யமனிடமிருந்து ஏவிய சூலமோ
துண்டாய் வீழ்ந்திட அனைவரும் கண்டார்         106                                    
கடலையும் தூர்த்திடும் வலிமையில் சிறந்த 
கல்மழை யொன்றினை வீசிவிட்டாள்!
வில்லின் வீரன் பாணங்கள் ஏவியே
விரைவினில் அம்மழை விலக்கிவிட்டான். – பின் 107                       

வேகத்துடனே, வீரியம் நிறைந்த – முனி
வாக்கினை ஒத்த ‘சுரம்’ பாணம்!
புல்லார்க்கு கூறும் நல்லார் மொழிபோல்
அவள் மார்பினுள் பாய்ந்து பின்புறம் போனதாம். 108                  

(புல்லர் - கல்லாதவர்)     

ஊழிக் காலத்து மாருதம் தாக்கிட,
கடையுக காலத்தில், மின்னிடும் மேகம்
இடியுடன், மோதுண்டு வீழ்வதைப் போலே
தாடகை தரையினில் வீழ்ந்து விட்டாள்.     109                             

தசைகள் பொருந்திய கோரப் பற்களும்,
பிளந்திட்ட வாயுடன் கூடிய தாடகை
தசமுடி ராவண அழிவுக்கு முந்தி,
படியிடை யற்று கொடியென சாய்ந்தாள். 110                            

குருதிப் பீறிட்டு சூழ்ந்த அக்காடு
இரத்தக் கடலென மாறியதாம்!
பற்றுக் கோடற்று தரைமேல் வீழ்ந்த – செவ்
வானப் பரப்பென ஆனதுவாம்!            111                             

அரக்கர்கள் உயிர் கொள்ள பயந்தபடி
தருணம் நோக்கிடும் யம தர்மனுக்கு
தொடக்கம் ஆனதாம் கன்னிப்போர் – இன்னும்
அரக்கர்கள் பலருயிர் சுவைப்பதற்கு.       112                            

கன்னிப் போரினைக் கண்ணுற்ற தேவர்கள்
‘யாமும் இருக்கை பெற்றிட்டோம்,
உமக்கும் இனியில்லை இடையூறெ’ன்று
உவகை மேம்பட உரைத்திட்டார் - பின்    113                            

பூமழை பொழிந்து இராமனை வாழ்த்தி,
‘கோ மகனுக்குக் கொடுப் பீராக
தெய்வப் படைக்கலம்’ என மாமுனிக் குரைத்து,
வானுலகடைந்தார் விண்ணவர். 
    114.     

(தொடர்ந்து வரும்)                    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக