ஞாயிறு, 13 மே, 2018

இன்றைய பெண்களும், எண்ணெய்க் குளியலும்.


 'அம்மா, கண்ணெல்லாம் பொங்கியிருக்கும்மா. ரொம்ப எரியறது' என்றபடி வந்தாள் என் அருமை மகள்.

'அம்மாடி, வெய்யில் கொளுத்தறது. சூடு தான். இரு, தலைக்கு நல்லெண்ணெய் வச்சு விடறேன். எண்ணெய் தேய்ச்சு குளிச்சு நாளாறது இல்லையா!' என்றது தான் தாமதம்.

'ஐய்யய்ய.. எண்ணெயெல்லாம் வேண்டாம்' என்று, நான் எதோ அருவருப்பான் செயல் செய்ய சொன்னது போல் முகத்தை சுளித்தாள்.

'கண்ணுல ஐஸ் வச்சுண்டா சரியா போயிடும்' என்றாள்.
'இல்லை தங்கம்.. ஐஸும் சூடுதான். வச்சுக்கும்போது சரியா போற மாதிரி இருக்கும். கம்ப்ளீட்டா குணமாகாது' ன்னு நான் சொன்னாலும் அவள் எண்ணெய்க் குளியலுக்குத் தயாராகவில்லை.

             என்ன செய்யறது இந்த காலக் குழந்தைகளை..! எங்க அம்மான்னா விடவே மாட்டாளே!.. வெள்ளிக்கிழமை வரவேண்டியது தான். அன்னிக்கு பெரிய இலுப்பச்சட்டில நல்லெண்ணெய ஊத்தி, அதுல மிளகும், மொத நாளே வாங்கி வச்சிருந்த வெத்தலையையும் கிள்ளிப் போட்டு 'பட பட' ன்னு மிளகு வெடிக்கற வர காய்ச்சி வச்சுடுவா. பின்னாடி கொல்லைகட்டுல பெரிய அண்டால அடுப்பு பத்த வச்சு வென்னீர் போட்டுடுவா. அம்மா இதெல்லாம் ரெடி பண்றதுக்குள்ள நானும் என் அண்ணாவும், அவா அவா டிரெஸ்ஸோட 2 காசித்துண்டை எடுத்து வச்சுடணும், அப்புறம், எண்ணெய் தேய்ச்சு முடிச்சதும் சம்பிராணி போடறதுக்காக, தூபக்கால், சாம்பிராணி டப்பா, மூங்கில் கூடை இதெல்லாம் 2ம் தாவாரத்துல ரெடியா வச்சிருக்கணும். இது எப்போதும் என்னோட வேலை. அண்ணா, அவன் டிரஸ் மட்டும்தான் எடுத்து வைப்பான்.

               எண்ணெய் கை பொறுக்கற சூடு வந்ததும், அம்மா, ''அஸ்வத்தாமா, மஹாபலி, வ்யாஸர், விபீஷ்ணர், க்ருபர், அனுமார், பரசுராமர் என்று  7 சிரஞ்சீவிகள் பேர சொல்லிண்டே எண்ணெயால் தொடையில் ஒவ்வொரு புள்ளியாக வைப்பார். பின் 'கௌரி கல்யாண வைபோகமே...' என்று பாடிண்டே, உச்சந் தலையில் ஒரு கை எண்ணையை வைச்சு சூடு பறக்க தேய்ப்பார். பின் மண்டை முழுதும், மயிர் கால்களில் நன்னா பட்ற மாதிரி உருவி உருவி தேய்ப்பார். அம்மா கைகளில் வழியற  எண்ணெயை முகம், கன்னம், கண், காது மடல், மூக்கு, புருவம் எல்லா இடத்திலும்  மசாஜ் பண்ணி விடுவா. 'மூஞ்சி தேய்ச்சுக்காம இருக்கக் கூடாது' என்று எப்போதும் சொல்லுவார். அப்புறம், எங்கிட்ட ஒரு கிண்ணி, எணணெயைக் குடுத்து, பாத்ரூமுக்குள்ள போய் உடம்பு முழுக்க தேய்ச்சுக்கச் சொல்லுவா. அதுக்கு அரை மணி ஆயிடும்
.'எண்ணெய் வச்சுண்டு அரை மணியாவது ஊரணும்'னு சொல்லிண்டே இருப்பா. நான் உடம்புக்கு தேய்ச்சுக்கறதுக்குள்ள அண்ணாவுக்கு, எண்ணை தேய்ச்சு, சீயக்காயும் தேய்ச்சு, காசித்துண்டால நன்னா, கரகரன்னு துவட்டி விட்டு, 'சாமிக்கு நமஸ்காரம் பண்ணிட்டு வீபூதி இட்டுக்கோ' ன்னு சொல்லி, உள்ள அனுப்பிடுவா.

              அப்புறம் எனக்கு. கரகரன்னு, சீயக்கயெ வச்சு தேய்ச்சுவிடுவா. இப்பொ மாதிரி, நுரை வர்ர சீயக்கா பொடியெல்லாம் கிடையாது. அம்மாவே சீயக்காவ காய வச்சு, என்னவெல்லாமோ அதோட போட்டு அரைச்சு வச்சிருப்பா.

             உடம்பு முழுசும் சொதசொத ன்னு எண்ணைய் தடவிக்கணும் ஆனா, சோப் போட்டுக்கக் கூடாதுன்னு சொல்லிடுவா. சீயக்காயவே உடம்பு முழுக்க தடவிக்காணும். அப்புறம் நல்ல கஸ்தூரி மஞ்சப்பொடிய உடம்பு முழுக்க தேய்ச்சுக்கணும். நல்ல பதமான சூட்டுல வென்னீர அம்மாவே மொண்டு மொண்டு தலைக்கு ஊத்தி நன்னா அலசுவா. அப்புறம் காசித் துண்டால துவட்டி, ஆத்தி விட்டுட்டு,  சாம்பிராணி ரெடி பண்ண போயிடுவா. நான் டிரஸ் போட்டுண்டு வெளில வர்ரதுக்கும், புகை மூட்டத்துக்கு நடுவுல அம்மா வர்ரதுக்கும் சரியா இருக்கும்.

                 பிரம்பு கூடைக்கு அடில சாம்பிராணி தூபக்கால வச்சு, கூடை மேல தல மயிர விரிச்சு படுத்துக்க சொல்லுவா பாருங்கோ.... அப்படியே தூக்கம் கண்ண அழுத்தும். ஒத்த ஒத்த மயிரா நன்னா ஆத்தி விட்டுட்டு, ஸ்வாமிக்கு நம்ஸ்காரம் பண்ணிட்டு, குங்குமம் இட்டுக்கச் சொல்லுவா.

              தல மயிர 'எண்ணைய் தேச்சுக்கற' பின்னல்னு ஒண்ணு பின்னி விடுவா. இந்த கால ஹேர் ஸ்டைல்'லாம் தோத்துப் போயிடும்.

                10 நிமிஷத்துல சாப்பிட வந்துடணும். அன்னிக்கு  நல்ல மிளகு சீரக ரசம், பருப்பு துவையல், சுட்ட அப்பளம் இது தான் பெரும்பாலும் மெனுவா இருக்கும்.  சுட சுட ரசம் சாதம் தொட்டுக்க பருப்பு தொகையலும், சுட்ட அப்பளமும். பக்கத்துல உக்காந்து அம்மா பரிமாருவா...

              ம்ம்ம்ம்.... இதெல்லாம் இந்த காலக் குழந்தைகளுக்கு எங்க தெரியப் போறது. நாமெல்லாம் அம்மா சொன்னா கேக்கணும் னு இருப்போம். இப்போ தான் ஏகப்பட்ட தகவல் தொழில் நுட்பங்கள் இருக்கே. எல்லாமே அவாளுக்கே தெரியும்ங்கற மாதிரியும், அம்மாவுக்கு ஒண்ணுமே தெரியாதுங்கற மாதிரின்னா இருக்கா.

            நான் இப்படி ஏதேதோ நினைச்சுண்டு இருக்கும் போதே, 'அம்மா.... கண் எரிச்சல் இன்னும் சரியாகலியே!' என்றபடி வந்தாள் என் அருமை பெண்.

           ' நான் ஒண்ணு சொல்லட்டா... எங்கம்மா எனக்கு தேய்ச்சு விட்ட மாதிரி உனக்கு எண்ணைய் தேய்ச்சு விடட்டுமா? உன் டூ வீலருக்கு, டைலரிங்க் மிஷினுக்கு  ஆயில் போடறது இல்லையா... அது மாதிரி தான்! உடம்பும் ஒரு மிஷின் தானே! ' என்று கேட்டேன்.

          'சரி' யென்று அரை மனதாக ஒப்புக்கொண்டாள்.

          உடனே மிளகை வெடிக்கவிட்டு எண்ணைய் காய்ச்சினேன். வெத்தலைக்கு நான் எங்க போறது..?

        'அம்மா... எண்ணைய் மட்டும் வச்சுவிடு. சீயக்காய் வேண்டாம். நான் ஷாம்பூதான் போட்டுப்பேன்' என்றாள்.

      'இல்லடா... ஷாம்பு போட்டா, தலை கம்ப்ளீட்டா டிரை ஆயிடும். நான் உனக்கு நுரையும் வர்ர மாதிரி ஒண்ணு தேய்ச்சு விடறேன் பாரு' என்றேன்.

     ' என்னம்மா நீ...' சலித்தபடி குளிக்க வந்தாள்.

      மொதல்ல நான் எங்க அபார்ட்மெண்ட் கீழ இருக்கற  செம்பருத்தி மரத்துலேர்ந்து 10, 15  இலையை பறிச்சுண்டு வந்து  ஊற வச்சேன். அப்புறம், கெய்ஸரை ஆன் பண்ணிட்டு, ஒரு ஸ்டூலை பாத்ரூமுக்குள் போட்டு அவளை உட்காரச் சொன்னேன். தலை முழுக்க என் அம்மாவ நினைச்சுண்டே மசாஜ் பண்ணினேன். அரை மணி நேரம் ஊறணும் னு சொல்லிட்டு உடம்புக்கு தேய்ச்சுக்க சொல்லிட்டு,  அரக்க பரக்க கிச்சனுக்கு வந்து, பருப்பு துவையலுக்கு வறுத்துட்டு, மிளகு ரசத்தை அடுப்பில் ஏத்தினேன். ஊற வச்ச இலைய  மிக்சில போட்டு நன்னா அரைச்சேன். கொழ கொழன்னு பச்சை கலர்ல அந்த பேஸ்ட்டை ஒரு பேசின்ல எடுத்துண்டேன்.

     'அம்மா.... வாம்மா... கண்ணுலேர்ந்து தண்ணியா வர்ரது. என்னம்மா நீ.. கண்ணு இன்னும் நன்னா எரியறது' ன்னு கூச்சல் போட்டதும், ஓடி வந்து கர கரன்னு,  சீயக்காயோட இந்த பேஸ்ட்டையும்  சேர்த்து தேய்ச்சு விடறேன். அந்த கொழ கொழப்புனால  நுரையும் வந்தது. அம்மா மாதிரியே பதமான சூட்டுல வென்னீர ஊத்தி அலசிட்டு நன்னா குளிச்சுட்டு வா' ன்னு சொல்லிட்டு ரசத்தை விளாவப் போறேன்.

       'அம்மா....' அலறல் பாத்ரூம்லேர்ந்து. 'என்னம்மா இது? பாத்ரூம் கண்ணாடி, டைல்ஸ், பக்கெட், டாய்லெட் க்ளாஸெட் எல்லாம் ஒரே சீயக்காயா தெறிச்சு இருக்கு?'

என்ன பண்றது? அபார்ட்மெண்ட்ல சின்ன பாத்ரூம். அப்படிதான் தெறிக்கும். முன்ன பின்ன எண்ணெய் தேய்ச்சிண்டிருந்தாதானே?

'இங்க பாரு.. அப்படித்தான் இருக்கும். எல்லாத்தையும் வாஷ் பண்ணிட்டுதான் வரணும். டைல்ஸ்ல எண்ணையா இருக்கும். அந்த ஃப்ளோர் க்ளீனர ஊத்தி அழுத்தி தேய்ச்சுவிட்டுட்டு வா' ன்னு சத்தம் போட்டேன்.

        அப்பாடி ஒரு வழியா குளிச்சுட்டு வந்தா. தலைக்கு டிரையர்தான் போட்டுண்டா. அப்புறம் 'அம்மா பசிக்கறது மா'ன்னா.

        'போய் ஸ்வாமிக்கு நமஸ்காரம் பண்ணிட்டு குங்குமம் இட்டுண்டு வா. சாப்பிடலாம்.'

       சுடச் சுட ரசம் சாதம், தொட்டுக்க பருப்பு துவையலும், சுட்ட அப்பளமும் போட்டேன். ரசித்து சாப்பிட்ட மகளை வாஞ்சையுடன் பார்த்துக் கொண்டிருந்தேன்.

      கொஞ்ச நேரத்துல அசந்து தூங்கிட்டா.

      சாயங்காலமே 'கலகல' ன்னு உடம்பு இருக்குன்னா.

     அடுத்த நாள் 'அம்மா... கண்ணு பொங்கவேயில்ல மா'ன்னு சொல்லிண்டே வந்து காட்டிண்டாள்.

      எண்ணைய்க் குளியல் மட்டுமா என்ன..? பழமையென்ற பெயரில் நாம் மறந்த பொக்கிஷங்கள் எத்தனை? எத்தனை?  நம் முன்னோர்கள் அறிவு பூர்வமாக நடைமுறையில் வைத்திருந்த பல விஷயங்கள் இன்று அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளன. ஆனால் நாகரீகம் என்று சொல்லிக்கொண்டு, நாம் அவற்றைப் பின்பற்றாமல் இருக்கிறோமே! அவை அடுத்த தலைமுறைக்கு தெரியாமலேயே போகப் போகிறது.

Image result for image of a college girl having hair wash



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக