செவ்வாய், 23 அக்டோபர், 2018

நவராத்திரி நாயகிகள்

அரங்கத்திலுள்ள ஆன்றோர்கள் அத்தனை பேருக்கும் லக்ஷ்மி ரவியின் கனிவான மாலை வணக்கங்கள்.

தனம் தரும், கல்வி தரும், ஒரு நாளும்
தளர்வறியா மனம் தரும்.
தெய்வ வடிவும் தரும், நெஞ்சில் வஞ்சம் இல்லா இனம் தரும்
நல்லன எல்லாம் தரும்.
அன்பர் என்பவருக்கே கனம் தரும்
பூங்குழலாள் அபிராமிக் கடைக்கண்களே!

கற்றறிந்த அவையோரே!
சென்ற ஆண்டு 'அம்பிகை கொலுவிருந்தாள்'என்ற தலைப்பில் நவராத்திரி விழா பற்றியும், கொலு வைக்கும் முறை பற்றியும் எனக்குத் தெரிந்த விஷயங்களை உங்களோடு பகிர்ந்து கொண்டேன். இந்த ஆண்டு, 'நவராத்திரி நாயகிகள்' என்ற தலைப்பில், அகிலண்ட நாயகி, அன்னபூரணி, ஆதிபராசக்தியைப் பற்றி பேச வந்துள்ளேன்.

இறைவன் இவ்வுலகத்தைப் படைக்கும்போதே, இச்சா சக்தியையும், ஞான சக்தியையும், கிரியா சக்தியையும் சேர்த்தே படைத்துள்ளார். இந்த மூன்று சக்திகளின் தோற்றம்தான், பராசக்தியின் அம்சமான துர்க்கா, லக்ஷ்மி, மற்றும் சரஸ்வதி ஆகிய முப்பெரும் தேவிகள்.

சக்தியிருந்தால் செய், இல்லாவிட்டால், சிவனே என்று இரு' என்று விளையாட்டாகச் சொல்வதுண்டு. 

உலகம் அனைத்தும் 'சக்தி மயம்' என்பதை விளக்குவதே நவராத்திரியின் தத்துவம்.   '

செய்பவளும், செய்கையும், செய்கையின் பயனும் அவளே! அவளே சக்தி! அவளே மாயை!

மனித வாழ்விற்குத் தேவையான சக்திகளான மன தைர்யம், செல்வச் செழிப்பு, அறிவு வளர்ச்சி ஆகிய மூன்று சக்திகளுக்கும் மூலமான லோக நாயகியை ஒன்பது நாட்களும் பூஜிப்பதுதான்  நவராத்திரி பூஜை.

இந்த நவராத்திரி பூஜையில் முதல் மூன்று நாட்கள்  வீரத்தையும், தைரியத்தையும் வேண்டி, துர்கா பரமேஸ்வரியையும், அடுத்த மூன்று நாட்கள் சகல செல்வங்களை வேண்டி, மகாலட்சுமியையும்,  கடைசி 3 நாட்கள் கல்வி,  அறிவு, கலைகள் வேண்டி சரஸ்வதி தேவியையும் வணங்க வேண்டும். 

ஆவேசப் பார்வையுடன் இருக்கும் துர்க்கா தேவி,  வீரத்தின் தெய்வம். இவள் பார்வையில் நெருப்பின் ஜொலிஜொலிப்பு. இவளை ''கொற்றவை '' , ''காளி'' என்றும் குறிப்பிடுவர்.  சிவபக்தையான இவளுக்கு  கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் தில்லை காளி கோவில் அமைந்துள்ளது.

அருள் பார்வையுடன் அழகாக இருக்கும் லக்ஷ்மி தேவி  செல்வத்தின் தெய்வம். இவள் பார்வையில் கருணையின் மினுமினுப்பு. விஷ்ணு பிரியையான இவளுக்கு, திருப்பதியிலுள்ள திருச்சானூரில் தனிக் கோயில் அமைந்துள்ளது. 

அமைதிப் பார்வையுடன் அடக்கமாக இருக்கும் சரஸ்வதிதேவி, கல்வியின் தெய்வம்.  இவள் பார்வையில் அறிவுப் பிரவாகம். பிரும்மனின் நாயகியான இவளுக்கு,  கூத்தனூரில் தனி கோயில் அமைந்துள்ளது. 

சரி...  'நவராத்திரி' என்று ஒன்பது நாட்கள்  கொண்டாடப்படுவதன் காரணம் என்ன தெரியுமா?
.
முன்பொரு நாள் மகிஷாசுரன் என்ற அசுரன் தேவர்களுக்கும், முனிவர்களுக்கும், இன்னல்கள் பல இழைத்துவந்தான். அவன் தவங்கள் பல செய்து, வரங்கள் பல பெற்று, தன்னை அழிக்க எவருமில்லை என்ற தலை கனத்துடன் இருந்தான். அவன் மேலும் 14,000 ஆண்டுகள்  தவம் புரிந்து இறைவனிடன் இறவா வரம் கேட்டான். 'பிறந்த மனிதர்கள் அனைவரும் ஒரு நாள் இறக்க வேண்டியவர்கள்தான்' என்று கூறி இறைவன் அவ்வரத்திற்கு மறுப்பு தெரிவித்தார்.  சற்று யோசித்த அந்த அசுரன் பூவினும் மிக மெல்லியரான பெண்களால் தன்னை ஒன்றும் செய்யமுடியாது என்று குறைத்து மதிப்பிட்டு,   ஒரு பெண்ணால் மட்டுமே தன் இறப்பு நிகழ வேண்டும் என்று வேண்டினான். இறைவனும் 'ஈந்தேன்' என்று கூறி மறைந்தார்.

வரம் பெற்ற அசுரனின் கொடுஞ்செயல்கள் மேலும், மேலும் அதிகரித்தன. மக்கள் அல்லலுற்றனர். தவசீலர்கள் வேள்விகளைச் செய்யமுடியாது தவித்தனர்.  இதையெல்லாம் கண்டு கலங்கிய தேவர்கள் மஹாவிஷ்ணுவிடமும், சிவனிடமும், பிரும்மனிடமும், முறையிட்டனர்.  மும்மூர்த்திகளும் அவன் பெற்ற வரத்தை எண்ணி ஆலோசித்து ஆதி சக்தியை நோக்கிப் பிரார்த்தித்தனர். அவளும் அழகிய மங்கையின் உரு கொண்டு பூமிக்கு வந்தாள். மும்மூர்த்திகளும், இந்திரனும்,  தங்கள் ஆயுதங்களையும், சக்தியையும் தேவிக்கு அளித்துவிட்டு சிலையென நின்றார்கள். அதைக் குறிக்கும் வகையில்தான் பொம்மைக் கொலு வைக்கும் பழக்கம் வந்ததாம்.


இப்படி, எல்லா ஆயுதங்களையும், பத்துக் கரங்களில் தாங்கியபடி போர்க்கோலம் பூண்டு, ஒன்பது நாட்கள் போரிட்டு, சும்பன், நிசும்பன், மதுகடைபன், ரக்தபீஜன், சண்டன், முண்டன், விசுக்ரன், தும்ரலேசனன் ஆகிய படைத் தளபதிகளையும், மகிஷாசுரனையும்,  வதைத்து விஜயதசமியன்று வெற்றி வாகை சூடி தர்மத்தை நிலைனாட்டினாள் மகிஷாசுரமர்த்தினி. அதனைக் கொண்டாடும்பொருட்டே 'நவராத்திரி' கொண்டாடப்படுகிறது.

ஏன் ராத்திரி கொண்டாட வேண்டும்? பகலில் கொண்டாடலாமே என்ற கேள்வி எழுவது சகஜம். அந்நாட்களில் போருக்கு என்று சில சட்ட திட்டங்கள் உண்டு. சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு போர் புரிய மாட்டார்கள். படைகள் தங்கள் கூடாரங்களில் ஓய்வு எடுத்துக் கொள்ளும்.அப்போது அன்னையின் படைக்கு ஊக்கம் கொடுக்கவும்,மறு நாளைய போரில் உற்சாகமாகப் போரிடவும் வேண்டி, அன்னையைக் குறித்த ஆடல், பாடல் போன்ற கலை நிகழ்ச்சிகள் ஒன்பது இரவுகள் நடைபெறும்.  அதனாலேயே நாம் 'நவ -  ராத்திரி'யாகக் கொண்டாடுகிறோம்.

மகிஷாசுரன்! மகிஷம்' எனில் எருமை என்று பொருள். அதன் நிறம் கருமை, அதன் குணமோ அறியாமை.  மகிஷனை வதம் செய்ததினால், இருளையும், அறியாமையையும் அகற்றிய அம்பிகைக்கு புரட்டாசி மாதம் பிரதமை திதியிலிருந்து ஒன்பது நாட்கள் நவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது. 

பகலும், இரவும் மாறி மாறி வருவதுதான் ஒரு நாள் எனப்படுகிறது.
ஒரு நாளில் பகல் என்பது சிவனின் அம்சமாகவும் இரவு என்பது அம்பிகையின் அம்சமாகவும் கருதப்படுகிறது. பகலில் உழைக்கும் உயிரினங்களை இரவில் அம்பாள் தன் மடியில் கிடத்தி தாலாட்டி உறங்கச் செய்கிறாள்.இரவெல்லாம் விழித்திருந்து உலகைக் காக்கும் அம்பிகைக்காக ஒன்பது நாள் இரவு மட்டும் திருவிழா கொண்டாடப்படுகிறது என்பர்.

சிவனுக்கு உகந்தது சிவ ராத்திரி.
மாலுக்கு உகந்தது வைகுண்ட ஏகாதசி
சக்திக்கு உகந்ததோ நவராத்திரி.

விக்கிரமாதித்யனும், காளிதாசரும், பாரதியாரும் வணங்கிய தெய்வம் சக்தி.  ஒருமுறை பாரதியார், தம் மகளான தங்கம்மாள் கேட்டுக்கொண்டத்ற்கிணங்க,'உஜ்ஜயினி நித்ய கல்யாணி, ஓம்சக்தி, ஓம்சக்தி, ஓம்சக்தி ஓம்சக்தி' என்ற  'நவராத்திரி பாடல்' ஒன்றை எழுதித் தந்திருக்கிறார்.
உஜ்ஜயினி என்றால் 'வெற்றி பெறுபவள்' வெற்றி தருபவள்' என்று பொருள் கொள்ளலாம்.  காளியின் அருள் பெற்ற குப்த வம்சத்து அரசரான விக்ரமாதித்யன், தான் புதிதாக அமைத்த தலை நகருக்கு 'உஜ்ஜயினி' என்று பெயரிட்டன். மத்தியப் பிரதேசத்தில், க்ஷீப்ரா நதிக்கரையில் அமைந்திருக்கும் 'உஜ்ஜையினி' என்ற இந்த நகரம், 52 சக்தி பீடங்களிலும், 12 ஜ்யோதிர்லிங்கத் தலங்களிலும், ஒன்றாக வைத்து எண்ணப் படுகிறது.

பலவகை பொம்மைகளை அடுக்குவதற்கு ஒரு ஆன்மீகக் காரணத்தைக் கூறுகிறார் பாரதியார். அதாவது,  'புல், பூண்டு,  மரம், பசு, புலி, மனிதர் என எல்லாவித உயிர்களுமாக் விளங்குகிறாளாம் பராசக்தி. இதனால்தான் கொலுவிற்கு 'சிவை ஜோடிப்பு' என்றும் பெயருண்டாம்.  சிவை என்றால் சக்தி. சக்தியின் வடிவே பொம்மை அலங்காரமாகச் செய்யப்படுகிறது என்றும், எல்லா உயிர்களையும் தன்னுயிர் போலக் கருதும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளும் தாத்பர்யத்தை உள்ளடக்கியுள்ளது இந்த நவராத்திரி திருவிழா என்றும் விளக்குகிறார் பாரதியார்.

 தகுதியான நபர்களுக்கு  தகுந்த நேரத்தில் தேவி அருள் வழங்குகிறாள் என்பதற்கு காளமேகப்புலவர் ஒரு சிறந்த உதாரணம். சமையல்காரனாக இருந்த வரதன் என்பவனின் வாயில் சரஸ்வதி தேவி தாம்பூலத்தை உமிழ்ந்ததால் அவன் காளமேகப் புலவராகி சிலேடை பாடல்கள், பரப்பிரும்ம  விளக்கம், சரஸ்வதி மாலை போன்ற நூல்களை எழுதியது நாம் அறிந்ததே!

நவம் என்றால் ஒன்பது என்றும் புதிய என்றும் பொருளுண்டு

இந்த நவராத்திரி வழிபாட்டினால் புத்துணர்ச்சி பெருகும். உடல் ஆரோக்கியம் கூடும். நற்பெயர் உண்டாகும், ஐஸ்வர்யம் அதிகரிக்கும், கலை, கல்வி, வளரும்.

முன்காலத்தில் நடந்ததாகக் கூறப்படும் கதை இது. ஒரு காட்டில், குடிசை ஒன்றில், ஒரு கணவனும் மனைவியும் இருந்தனர். நோய்வாய்ப்பட்டிருந்த அந்த கணவன் தன் மனைவியின் மடியில் தலை வைத்துப் படுத்திருந்தார். அந்த மனைவி கிழிந்த உடை அணிந்திருந்தாள். அவள் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது. அப்போது பிக்ஷை கேட்டு வந்தார் ஆங்கீரஸ முனிவர். அவர் இந்தப் பெண்ணைப் பார்த்துவிட்டு, 'யாரம்மா நீ? உன்னைப் பார்த்தால் அரச குடும்பத்தைச் சேர்ந்தவள் போலிருக்கிறதே!  உன் நிலைக்கு என்ன காரணம்?' என்று கேட்டார். 

ரிஷியை நமஸ்கரித்த அப்பெண் தன் கண்ணீரைத் துடைத்தபடி,' உத்தம ரிஷியே! நீங்கள் சொல்வது சரியே! நாங்கள் அரச வம்சத்தைச் சேர்ந்தவர்கள்தான். எங்கள் தாயாதிகள் எங்களை ஏமாற்றி, ராச்சியத்தை அபகரித்துக் கொண்டு, எங்களை விரட்டிவிட்டனர். என் கணவர் உடல் நலம் சரியில்லாமல் இருக்கிறார். அவர் உடல் நலம் தேறவேண்டும். ராஜ்ஜிய பரிபாலனம் செய்ய எங்களுக்கு நல்ல பிள்ளை பிறக்கவேண்டும் நல்வழி கூறுங்கள் மஹப்ரபோ' என்றாள்.

அவளின் துயரக் கதையைக் கேட்ட முனிவர்,'அம்மா. வருந்தாதே! எல்லா துயரங்களுக்கும் ஒரு முடிவு உண்டு. வழி உண்டு. நீ உன் கணவருடன் அருகில் இருக்கும் பஞ்சவடிக்குப் போ. அங்கே எழுந்தருளியிருக்கும் அம்பிகையைப் பூஜை செய். நல்லதே நடக்கும்' என்றார்.

அவளும் அவர் சொல்படி பஞ்சவடியை அடைந்தாள். முனிவரே முன்னின்று, அவளுக்கு, புரட்டாசி மாதம் பிரதமை திதியில் நவராத்திரி பூஜையை செய்வித்தார். பின் அவர்களுக்கு, தன் ஆஸ்ரமத்திலேயே அடைக்கலம் கொடுத்தார். கொஞ்ச நாட்களில் அரசர் உடல் நலம் தேறி நோயிலிருந்து மீண்டார்.  பின்னர் அந்த தம்பதிகளுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது.  அக் குழந்தைக்கு 'சூரியப் பிரதாபன்' என்று பெயரிட்டு மகிழ்ந்தனர். 

ஆங்கீரஸ முனிவரே சூரியப் பிரதாபனுக்குப் பல கலைகளையும், கேள்விகளையும் கற்றுவித்தார். இளம் பிராயத்தை அடைந்ததும், தன் பெற்றோர்களின் வாட்டத்தைப் போக்க முடிவெடுத்த சூரியப் பிரதாபன் முனிவரை வணங்கி, அன்னை, தந்தையரின் அனுமதியுடன், பகைவர்கள் மீது உரிமைப் போர் தொடுத்து, வீரத்துடன் போராடி வெற்றி பெற்றான். ஆஸ்ரமம் அடைந்தபின் முனிவரை வணங்கி, தன் தாய் தந்தையுடன் தன் நாட்டிற்கு வந்து அரியணை ஏறினான். அரசனும், அரசியும், அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. இருந்தாலும் தாம் தொடங்கிய நவராத்திரி பூஜையை தொடர்ந்து செய்து, அம்பிகையின் பாதத்தில் ஐக்கியமானார்கள்.

தேவி பாகவதத்தில் மகரிஷி வியாசர், ராமபிரான் அனுஷ்டித்த நவராத்திரி விரதம் பற்றி விளக்கி உள்ளார். 
சீதையை ராவணன் கடத்திச் சென்ற பிறகு ராமர் மிகுந்த துயரத்துடன் லட்சுமணனுடன் அமர்ந்திருந்தார். அப்போது அங்கே வந்த திரிலோக சஞ்சாரியான நாரதர்  ராமரை நவராத்திரி நோன்பு இருக்கும்படி கூறினார்.

நாரதர் கூறியபடியே, ராமரும், மால்யவான் மலையில் இருந்தபடி, புரட்டசி மாதம் பிரதமை முதல் நவராத்திரி  பூஜைகளை நடத்தினார். எட்டாவது நாள் அஷ்டமி தினத்தில் நள்ளிரவு வேளையில் மால்யவான் மலையின் உச்சியில் அம்பிகை சிம்ம வாகனத்தில் தோன்றி ராமருக்கு தரிசனம் தந்தாள். ராமனின் பூர்வ அவதாரங்களை உணர்த்தியதுடன், ராவணனை சம்ஹாரம்  செய்ய அருள் புரிந்து மறைந்தாள்.

வால்மீகி இராமாயணத்தில் போர் புரியத் தொடங்க உகந்த நாள் என்று, புரட்டாசியில் வரும் தசமி (விஜய தசமி)  நாள்  அன்று இராவணனுடன் போர்புரிய இராமன், புறப்பட்டதாக வருகிறது.  

.இந்த விஜயதசமியன்றுதான் பாண்டவர்களின் அஞ்சாதவாசம் முடிவுற்றது. பிரஹன்னளையாக ஒரு வருட காலம் விராட தேசத்தில் மறைந்திருந்த அர்ச்சுனன், தான் ஒரு வருட காலம் முன்னர் வன்னி மரப் பொந்தில் மறைத்து வைத்திருந்த 'காண்டீபம்' முதலான ஆயுதங்களை மீண்டும் எடுத்து உயிர்பித்துக் கொண்ட நாள் இந்த விஜயதசமி நாள். 

இந்த 9 நாட்களிலும், 
  1. தேவி மகாத்மியம்
  2. அபிராமி அந்தாதி
  3. துர்க்கா அஷ்டகம்
  4. கனகதாரா தோத்திரம்
  5. சகலகலாவல்லி மாலை
  6. சரஸ்வதி அந்தாதி
  7. மஹிஷாசுரமர்த்தினி தோத்திரம்
  8. ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் 
  9. போன்ற ஸ்லோகங்களைப் பாராயணம் செய்து, கொண்டை கடலை, கடலை பருப்பு உள்ளிட்ட பல்வேறு பயறு வகைகளுடன் விதவிதமான நைவேத்தியங்களை நாளுக்கு ஒன்றாக படைத்து வழிபட வேண்டும். பராசக்தியின் பாடல்களை வீடுகளிலும், கோவில்களிலும் பாடி அன்னையை ஆராதிப்பது சிறப்பையும், மேன்மையையும் தரும். பெண்கள், சிறுவர்- சிறுமிகளின் கோலாட்டம், கும்மி, நடனம் போன்றவை நவராத்திரி பண்டிகைக்கு உரிய சிறப்புகளாகும். 
ஒன்பது நாட்கள் போரிட்ட தேவி, விஜயதசமி தினத்தில், அசுரர்கள் அனைவரையும் அழித்து வெற்றிவாகை சூடினாள். ஆணவத்தை -தைர்யத்தாலும், வறுமையை -  செல்வத்தாலும், அறியாமையை -ஞானத்தாலும், வெற்றி கொண்ட தினமாதலால், இந்த நாளில் தொடங்கப்படும் எல்லா செயல்களும் எளிதாக வெற்றி பெறும் என்பது ஐதீகம்.

வாடிய பயிரென வருந்திடும் பக்தரை
வாரியணைத்திடும் நாயகி இவளே
மகேஸ்வரி, கௌமாரி, வராகி பெயர் கொண்ட
தைரியம், நிரம்பிய மலைமகள் இவளே!

செல்வமும், வளங்களும், பெருகிடச் செய்து
வறுமையகற்றிடும்  நாயகி இவளே!
மஹாலக்ஷ்மி, வைஷ்ணவி, இந்ராணி  பெயர்கொண்டு
பாக்கியம் அளித்திடும்  அலைமகள் இவளே!

அறிவையும், இசையையும், கலையையும் அளித்து
அடைக்கலம் தந்திடும் நாயகி இவளே!
சரஸ்வதி, நாரசிம்மி, சாமுண்டி பெயர்கொண்டு
வீணையிசைத்திடும்  கலைமகள் இவளே!


முப்பெரும் சக்திதான், பிற சக்தியின் பிறப்பிடம்
சக்தியைத் தந்திடும் சக்தியின் பாதத்தை
பக்தியாய்ப் பற்றியே பெற்றிடும் சக்திதான்
வெற்றியைத் தந்திடும் மந்திரமாம்! - நாம் 
முக்தியைச் சேர்ந்திடும் தந்திரமாம்! - ஆம்
நாம் முக்தியைச் சேர்ந்திடும் தந்திரமாம்!

ஆத்தாளை எங்கள் அபிராமவல்லியை
அண்டமெல்லாம் பூத்தாளை! மாதுளம்பூ நிறத்தாளை!
புவியடங்கக் காத்தாளை
அங்குசம் பாசம் குசமும் கரும்புமங்கைச் சேர்த்தாளை
முக்கண்ணியைத் தொழுவார்க்கு ஒரு தீங்கும் இல்லையே!

நன்றி வணக்கம்.











    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக