திங்கள், 12 அக்டோபர், 2020

லக்ஷ்மி ராமாயணம் - அயோத்தியா காண்டம் - பகுதி 3

 

                    தசரதனைக் கண்ட கோசலையின் நிலை


‘நாடு காத்தல் பரதனது ஆகட்டும்! - இராமன்

காடு செல்லல் தடைபட வேண்டும்’ என

நாதனை வேண்டிட, கோசலை சென்றாள். – அங்கே

மூர்ச்சித்திருந்த மன்னனின் மார்பினில் மூர்ச்சித்தாள்.               61

 

தெளிவு பெற்றதும் கலங்கிப் புலம்பினாள்.

ஒளிகுன்றி நினைவின்றி மன்னன் கிடத்தலின்,

“இராமா, இராமா’ வென அழுகுரலில் உரத்தழைத்தாள்.

வாராய் மன்னன்தன்மை காண” வென ஓலமிட்டாள்.               62

 

                  வசிட்ட முனிவர் வருகை

 

மங்கலங்கள் நிகழவுள்ள அந்த வேளையில்

அமங்கலமாய் அழும் ஓசை காதில் அறைந்ததும்,

அரசர்களும் முனிவர்களும் அதிர்ச்சியுற்றனர்.

விபரமறிய வசிட்டமுனி விரைந்து வந்தனர்.                       63

                 

                  கைகேயி நிகழ்ந்தவை கூறுதல்

 

மயங்கித் தளர்ந்த கோசலையால்

விளக்கிச் சொல்லல் ஆகா ததனால்

மயங்கிய மாமன்னன் நிலை பற்றி,                       

கேகயர்கோன் மகள் நோக்கிக் கோரினார்.                          64

 

தன்னால் நிகழ்ந்த தனைத்து நிகழ்வையும்

 

தானே தெளிவாய் தெரிவித் தாள்;

தன்னுணர் வெய்திய தசரத மன்னனும்,

‘இராமா.. இராமா’ எனப் புகன்றான்.                                65

 

                 முனிவன் கைகேயியை வேண்டுதல்

 

‘மனுவழி சென்றிடும் பெண்ணே! – நின்

புதல்வனுக் கரசினைப் பெற்றுக்கொள்.

வனத்திடை இராமனை அனுப்புதல் தவிர்த்து

ஏனையோர் உயிரை காத்துச் செல்’ இறைஞ்சினார்.                 66

 

அவளோ..

கொண்ட சொல் மாறாது வீம்பாயிருந்தாள்.

நயந்து கேட்டவர், கடிந்து கொண்டார்.

‘மன்னரும், பிறரும் மாண்டு போயிடின்,

உன்னைத்தான் உலகார் இகழ்வா’ரென்றார்.                         67

 

                 தசரதன் தன் சாப வரலாற்றைக் கூறுதல்

 

முன்பொருநாள்,

யானைகளை வேட்டை யாட,

சுனையோரம் மறைந்திருந்தேன்.

நீரருந்தும் யானையொலி காதில் விழ

‘சப்தபேதி பாண’ மெய்தேன்.                                      68

 

அலறியதோர் மனிதக் குரல் கேட்டு,

அஞ்சி நடுங்கி அவ்விடம் வந்தேன்.

பார்வையிழந்த முனிதம்பதியின் மகனொருவன்,

நீர்மொண்ட ஒலியென்று நானுணர்ந்தேன்.                         69

 

உயிரொடுங்கும் நிலையிருந்த அக்குமரன்

தவித்திருக்கும் பெற்றோர்தம் நீர்வேட்கை

தணித்திட வேண்டுமென கரம்கூப்பி வேண்டினான்.

கணத்துக்குள் கண்மூடி விண்ணுலக மேகினான்.. –                  70

 

மகனைச் சுமந்தபடி நீரெடுத்து நான் வந்தேன்.

அடியோசை கேட்டவர்கள் ஆவலுடன் அளவளாவ,

‘அறியாப் பிழையினால் மகனைக் கொன்ற

கொற்றவன் நானினி உன் மக’னென்றேன்.                          71

 

நீரெடுத்து வந்தவன் தம் மகனல்லன்

‘மகனைக் கொன்ற பாதகன்’ என்றறிந்து

‘ஏவா மகவைப் பிரிந்து எம்போல்

போவாய் நீயும் விண்ணுலகெ’ன சபித்தார்.                        72

 

‘விழிபோயிற்றே!’ யென வீழ்ந் தயர்ந்தார்.

‘மகவை இழந்து இறப்பாய்’ என்னாது

‘மகவைப் பிரிந்து’ என்றதே கடிதன்று.

இராமன் பிரிய நான் இறப்பதுறுதி’யென்றார்.                       73

 

                 வசிட்ட முனிவன் அரசவையில் கூறுதல்

காத்திருந்த அவை முன்னே வசிட்டமுனி

கைகேயி வரம் பற்றி கூறலானார்.

வாய்மையுடை பெரியோனுரை கேட்டதுமே

விதியெண்ணி அனைவருமே கலக்கமுற்றார்.

74               

 

                      இலக்குவனது போர்க்கோலம்

 

‘மணிமகுடம் தமையனது தலை மீது,

அணிவிப்பேன் தடை களைந்து!’ யென்றபடி,

பேரிடியாய் முழக்கமிட்டுப் புறப்பட்டான்.

போர்க்கோலம் பூண்ட இளையான் இலக்குவன்.                   75

 

                         இராமபிரான் நல்லுரை

 

‘மதியின் பிழையோ, மகனின் பிழையோ அன்று!

விதியின் பிழைதான் இங்கனம் நிகழ்ந்தது. - நீ

வெகுண்டு, பயனில்லை’ யெனச்சொல்லி, அவன்

சீற்றத்தை மாற்றிட முயற்சித்தான் இராமன்.                      76                   

 

சினம் தணிந்த இலக் குவனை

இனிது இறுக்கித் தழுவினான். – பின்

சுமித்ரைத்தாயை தரிசனம் செய்ய

தம்பியும், தானுமாய் புறப்பட்டான்.                                77

 

கண்களை ஒத்தத் தன்னிரு மகன்களும்,

தண்டாவனம்வரை செல்வதை யெண்ணி,

தளர்ந்து வருந்திய அன்னையைத் தொழுது,

‘மீள்வோம்! நீ கலங்கா திரு’ யென்றான்.                           78

 

 இலக்குவன் அன்னைபால் தமையனுடன் செல்ல விடை கேட்டல்

 

அன்னையின் திருவடி வணங்கிய இலக்குவன்

“உடன் சென்றிடுவாய் மகனே’ யென

உடன்பட்டு சொல்லிடு தாயே! எனக்கோர,

‘உடனே புறப்படு நீயென்றாள் உளமாற ‘                           79

 

மறுத்துப் பார்த்தான் இராம பிரான்

மரவுரி தானும் தரித்தான் இளையான்.

குமரர்கள் கோலத்தைக் கண்ணுற்ற தேவர்கள்

குமுறிய நெஞ்சுடன் குழம்பித் தவித்தனர்.                         80

 

                    பிராட்டி இராமனிடம் வினவுதல் 

 

சீதையின் அரண்மனை யடைந்தனர் இருவரும்.

நிகழ்ந்தது அறிந்திடா தேவியோ அதிர்ந்தனள்.

நேர்ந்தது யாதென வினவியே வியர்த்தனள்.

தந்தையின் ஆணையை கேட்டதும் வியந்தனள்.                    81

 

            பிராட்டி கூறுதலும் இராமனின் மறுமொழியும்

 

‘மன்னரின் கூற்றினைப் படிவது முறையே!

என்னையும் கூட்டிச் செல்வது சரியே!’ என்ன

‘கானகம் கொடிய அரக்கரின் இருப்பிடம்

கால்களும் சுட்டுப் பொசுக்கிடும்’ என்றான்.                       82

 

‘நின் பிரிவினும் சுடுமோ பெருங்காடெ’ன

நினைத்தவள், நுழைந்தாள் அந்தப் புரத்தினுள்!

துணிந்து புனைந்தாள் மரவுரி அணிகளை

பணிந்து பற்றினாள் கணவனின் கரங்களை!                        83

 

மரவுரி தரித்த திருமகள் பின்செல,

விற்கை வீரனாம் இளையவன் முன்செல,

கார்வண்ண இராமன் கானகம் செல்வதைக்

கண்டவர்  துன்பத்தை, எவ்விதம் சொல்ல!

84

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக