தைலமாட்டுப் படலம்
செம்பொன் தேரேறிப்
புறப்பட்ட மூவரையும்,
கண்ணீர் பெருக்கோடு
கண்டனர் அனைவரும்.
அன்புப் பிராவாகத்தில்
ஆட்கொண்ட குடிமக்கள்.
பின்தொடர்ந்து
நடந்திட உண்டானதோ பெரும்திரள்.
85
இராமபிரான் சுமந்திரனிடம் கூறுதல்
நள்ளிரவு நேரத்தில்
சோலையொன்றை அடைந்தனர்.
கள்ளமற்ற நகரமாந்தர்
கண்ணயர்ந்து உறங்கினர்.
உறக்கமின்றி தவித்தபடி
விழித்திருந்த இராமபிரான்
உரையாடத் தொடங்கினார்
சுமந்திரனெனும் அமைச்சரிடம்.
86
‘உம்மால் செயத்தக்க
செயலொன்று உள.
எம்பால் அன்புகொண்டு
எனைத்தொடர்வார் பலர்!
பூண்டபேர் அன்பினாரை
அனுப்புவது எளிதன்று.
உடனழைத்துச் செல்லுவதும்
முறையன்று.
87
வேண்டுவது யாதெனில்,
இவர் விழிப்பதற்குள்
தூண்டிடணும் வெறும்தேரை
நகர்நோக்கி,
சென்றிடுவோம் அவ்வமையம்
வனம் நோக்கி!
தேர்ச்சுவட்டால்
இவர் மீள்வார் நகர்நோக்கி’ யென்றான்.
88
‘மன்னவர்க்கும்,
அத்தையர்க்கும் அன்பு சொல்லி,
மலரினையும், கிளியினையும்
பேணிடெ’ன்று
திண்தேர் வல்லான்
சுமந்திரன் நோக்கி
கண்ணீர் பெருகிட
மொழிந்தாள் பிராட்டி.
89
.
திருவடி வீழ்ந்து
எழுந்தான் சுமந்திரன்.
‘அரசர்க்கும் அன்னையர்க்கும்
சேதி யாதெ’ன
பெருகிய துயருடன்
இலக்குவன் நோக்கி,
கனத்த மனத்துடன்
வினவியே நின்றான்.
90
இலக்குவன் சினந்து கூறல்
‘வனத்துக்குள்
தன்மகனை அனுப்பிவிட்டும்,
வானகமே சென்றிடா
வலிமையுடை அரச’ரென
சினந்து சிவந்த
தம்பியை அணைத்துத்
தணித்தான் சினத்தினை
தமையன் இராமன். - பின்
91
விரைந்தனர் மூவரும்
கானகத் துள்ளே!
நுழைந்தது தேரொலி
அயோத்தியி னுள்ளே!
திரும்பி வந்தனனோ
வில் வீரனென
வீறுகொண்டெழுந்த
தசரதன் மாண்டுபோனான்.
92
கோசலையின் நிலை
‘பூத்துக் காய்த்த
பின் மடிந்திடும்
மூங்கிலும், வாழையும்
போலே,
மூப்போ, போரோ,
நோயோ யின்றி
இறந்தாரே!’ யெனப்
புலம்பினாள் கோசலை.
93
மயிற் கூட்டமென
மன்னனைச் சூழ்ந்தனர்
அறுபதினாயிரம்
அரண்மனை தேவியர்.
சேதிகேட்டு ஓடிவந்த
மாமுனிவர் வசிட்டரும்
விதிசெய்த வினையெண்ணி
வருத்தமுற்றார்.
94
வசிட்டன் தசரதன் உடலைத் தைலத்தில் இடுவித்தல்
இறுதிக் காரியம்
இயற்றுவதற்கு,
உரியவர் எவரும்
அருகிலில்லை.
பரதன் வரும்வரை
இவ்வுடலை
பத்திரப் படுத்திட
தைலத்தி லிட்டார்.
95
பட்டத்துத் தேவியர்
இருவரது
துக்கத்தை எவ்விதம்
தாம் உரைப்பது?
திக்பிரமை பீடித்த
அவர் மனதை
மாற்றிடத்தான்
எங்கனம் நாம் முனைவது?
96
பரதனுக்கு ஓலை போக்கல்
பாட்டனார் வீட்டிருந்த
பரதனைக்
கூட்டிவர பணித்தனர்
தூதனை! - அவன்
வருமளவும் நகரத்தைக்
காக்கவென்று
கிரணங்கள் விரித்துதித்தான்
கதிரவன்.
97
கங்கைப் படலம்
சோலையிலே கண்ணயர்ந்த
குடி மக்கள்
காலையிலே கண்விழித்துக்
கலக்க முற்றனர்.
மூவரையும் எவ்விடமும்
தேடிப் பார்த்தனர்.
தேர்தடத்தைப் பின்பற்றித்
திரும்பிப் போயினர்.
98
தம்பியும், துணைவியும்
பின் தொடர,
அன்னம் துயிலும்
நந்த வனத்தையும்,
பொன்னைக் கொழித்திடும்
நதிகளையும்,
தாண்டியபடியே கங்கையை
அடைந்தான்.
99
பொங்கும் கங்கைக்
கரைதனிலே,
தங்கியபடி தவம்
செய்துவரும்,
முனிவர்கள் எதிர்கொண்டார்
மூவரையும் – பின்னர்
இலையுண வளித்தே
இன்புற்றார்.
100
குகப்படலம்
இராமன் இருந்த ஆஸ்ரம வாயிலை குகன் அடைதல்
ஓடங்களின் நாயகன்;
வேடர்குல வீரியன்;
இடையினிலே ‘துடி’யென்னும்
பறை உடையான்;
‘இடி’யனைய திடமான
குணமுடையான்;
இருள் கவிந்த நிறமுடைய
‘குகனெ’ன்பான்.,
101
அவன்-
தீரனாம் இராமனின்
காவியம் அறிந்ததவன்
தரிசனம் செய்திட
வேட்கையும் கொண்டவன்.
கானகம் எய்திய
இராமனை இவ்விடம்
கண்டிட கருத்தாய்
உறுதியும் பூண்டவன்.
102
தாம் நித்தம் உண்ணும்
ஊன், மீன், கள்ளின்
நாற்றம் வீசிடும்
நல்லான் இன்று
சீற்றம் துறந்து,
குறுவாள் தவிர்த்து,
நற்றவ சாலையின்
வாயிலை யடைந்தான்.
103
இலக்குவன் வினவினான்,
‘யாரெ’ன்று.
விளக்கினான் குகனும்
இன்னாரென்று.
உள்ளத்தூயவன்,
நல்லவன் இவனென்று
உள்ளே இளவல் அழைத்து
வந்தான்.
104
அண்ணலைக் கண்களால்
கண்டதும் கனிந்தவன்.
மண்ணுறக் குனிந்து,
வாய்ப்பிளந்து பணிந்தான்.
ஒருக்கை நீட்டியபடி
முறுவல் புரிந்து
‘இருக்கையில் இருத்தி’
சுட்டினான் இராமன்.
105
.இருந்திலன் குகனோ,
தாம் அன்புப் பெருக்குடன்
திருத்திக் கொணர்ந்த
தேனையும், மீனையும்,
கருத்தாய் படைத்தான்
நாயகன் எதிரினில்
‘திருவுளம் கனிந்து
ஏற்பீர்’ என்றான்.
106
நீள்பெரும் உலகின்
நீள அகலமாய்
ஆழ் கடல் மூழ்கி
மீனையெடுத்தவன்.
ஆகாயம் தொடும்
சிகரம் வரை சென்று
பாங்காய் தேனையும்
எடுத்து வந்தான்.
107
இராமன் கூற்று
‘அன்புடன் நீ கொணர்ந்த
பொருட்களெல்லாம்
அமுதினும் அரிதான
ஒன்றென நானறிவேன்.
எமையொத்த முனிவர்க்கும்
உரியன. - அவற்றை
யாமும் இனிதின்
உண்டனம்’ என்றான். – பின்
108
‘பொங்கிடும் கங்கையை
யாம் நாளைப்
பொழுதினில் கடந்திட
இருப்பதினால்
இரவினைக் கழித்திடு
நின் கிளையோடு.
விடியலில் வந்திடு
படகோடு’ யென்றான்.
109
‘இங்கனம் உன்னைப்
பார்த்தபின் கண்ணை
எவ்விதம் நானும்
ஈர்த்திடுவேன்?’ என்ன
‘இருத்தி’யென்றதும்
‘துடி’யுடன் குகனும்
துடிப்புடன் காவல்
இருக்கலானான்.
110
நாணலில் துயின்றனர்
நாயகன், நாயகி
நற்காவலிலிருந்தான்
இமைத்திடா தம்பி.
கதிரவன் உதித்தான்
கதிர்களைப் பரப்பி,
கமலமும் விரிந்தது
மனதினால் விரும்பி.
111
‘கொணருதி நாவாய்
சடுதியில்’ இராமன் சொன்னதும்
‘இனிதிரு எம்மொடு’
குகன் சொன்னான்.
‘மீண்டு வருகையில்
இருப்போம்’ என்றே,
ஏறினர் மூவரும்
ஓடத்தின் மீதே!
112
கரையேறினர் மூவரும்!
கண்கலங்கினான் குகனும்!
‘பிரியிலேன் நானும்மை,
உடனிருந்து உதவிடணும்’
‘அன்புள நால்வர்
இன்று ஐவரானோம் – இனிமேல்
உன்கிளை, என்கிளை,
இனிது கா’வென்றான் இராமன்.
113
வனம் புகு படலம்
சிங்கமும், களிரும்
குட்டியும், கன்றுமாய்
அங்கங்கே நடைபயின்று
அலைந்திருந்த
அடர்காட்டின் இடை
புகுந்த மூவரும்
அடைந்தனராம் பரத்வா
சாஸ்ரமம்.
114
அங்கே
சிரமப் பரிகாரம்
செய்த பின்னர்,
‘சித்திர கூடம்’
நோக்கிப் புறப்பட்டனர்.
எதிர்ப்பட்ட சுட்டெரிக்கும்
பாலை யொன்று
மருதமாகிக் குளிரூட்டி
மகிழ்வித்தது சூடுபோக்கி.
115
(சித்திரக்கூடம்
– உத்திரப்பிரதேசத்தில் உள்ள அலகாபாத்துக்கு அருகில் உள்ளது)
சித்திரக் கூடத்தை
அடைந்தனர் மூவரும்.
கண்களை மூடியே
கடவுளை வேண்டினர்.
இளவல் அமைத்தான்
பர்ணசாலையை! – அண்ணன்
உள்ளம் உருகிட
அணைத்தான் தம்பியை!
116
‘மன்னவன் ஆணையைப்
பேணிடும் பொருட்டு,
மரவுரி தரித்து
கானகம் வந்தேன். - நான்
இடருனக் கிழைத்தது
சரியல்ல!’ – நீ
இன்னல்கள் சகிப்பது
முறையுமல்ல!’ கலங்கினான்.
117
‘ஐயனே!
நின் தொண்டு இன்பமே
எனக்கு.
துன்பம் தருவதும்
ஒன்றுணடு - நீ
முன்னம் பிறந்தவன்
என்பதினாலே
மண்ணைத் துறந்திட
நேர்ந்ததே!’ யென்றான்.
118
அணைத்துத் தேற்றினான்
தம்பியை!
அமர்ந்து நேற்றான்
நோன்பினை! – அங்கோ
தலைவனை இழந்த அயோத்தி
மாநகர்
தாயிழந்த கன்றுபோல்
கதறி யழுதது.
119
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக