திங்கள், 12 அக்டோபர், 2020

லக்ஷ்மி ராமாயணம் - அயோத்தியா காண்டம் - பகுதி 5

 

                       பள்ளிப்படை படலம்

 

‘அவசரக் காரியம் இயற்றுதற் கெனவே

அவசியம் புறப்பட்டு வரவேண்டும்'  எனும்

முத்திரைப் பதித்த ஓலையைத் தூதரும்

புத்திரன் பரதனிடம்  பத்திரமாய் ஈந்தனர் .

120

 

தொழுதான் பரதன் தம் பாட்டனாரை!

‘எழுக சேனை’ என பதட்டத்துடன் சொன்னான்.

தழுவும் சத்ருக்ன தம்பியும் தானுமாய்

பொழுதுடன் தேரினில்  புறப்பட்டு விட்டான்.

121

                  

                            கோசலத்தின் அவல நிலை

பொலிவிழந்த கோசலத்தைக் கண்டதுமே

நலிவுற்ற பரதனும்  கலக்க முற்றான்.

'பெருந்தீங்கு நிகழ்ந்ததோ'வென பயப்பட்டான்.

பெருந்துயரின் பிடியினிலே அகப்பட்டான்.

122

 

அரண்மனை யடைந்ததும் விரைந்தான் தந்தையிடம்.

நல்லிடம் எங்கினும் கண்டிலன்; கலங்கினான்.

அணைத்தாள் தன் மகனை கேகயி அன்னை .

வினவினாள் கேகய நாட்டின் நலத்தினை.

123

 

சுருங்கச் சொன்னான் ‘நலமென்று’

அறிய விழைந்தான் ‘கோ எங்கென்று?’

‘வானகம் எய்தினன்’ என்றவள் சொன்னதும்

பேரிடி தாக்கிட வேரறுந்து வீழ்ந்தான்.

124

 

‘இராமனைக் கண்டேனும் துயர் தணிவோம்’ என்ன

‘இனிதுள்ளான் இளவலோடும், துணைவியோடும் கானகத்தில்

மரவுரியோடும்  சடாமுடியோடும் தவக்கோலத்தில்’ என்றாள்.

நெருப்புண்டாற் போல்  துடித்துப் போனான் பரதன்

125

 

வனத்தினுள் தமையன் சென்றது, தந்தை

விண்ணுலகு எய்தற்கு முன்போ, பின்போ,

எதனாலோ, யாராலோ என்பது போல்

விதவிதமாய்  அடுக்கலானான் வினாக்களை.

126

                 கைகேயி நிகழ்ந்ததைக் கூறுதல்

 

உள்ளது உள்ளபடி கூறலானாள் கைகேயி.

நல்லது ஒன்றுமே இல்லாமைக் கண்டவன்

கரங்களால் காதுகளை அழுத்தமாய் மூடினான்.

விரிந்த விழிகளால் உதிரத்தை உமிழ்ந்தான்.

127

 

‘பூண்டனென் தமையன் திருத்தவக்கோலம்

மாண்டனென் தந்தை நீயேதான் காரணம்.

தாயென உனை நான் கருதுதலே பாவம்.

'உடந்தையாய் இருப்பேன் நான்' என்றதே என் கோபம்’

128

 

                கோசலையின் இருப்பிடம் செல்லுதல்

 

விரைந்து சென்றான் கோசலையின் இருப்பிடம்.

விசும்பிப் பற்றினான் அவளின் மலர்க்கரம்.

‘'கேகயர் கோமகள் இழைத்த கைதவம்

அறிந்திலன் போலும் நீ” வினவினாள்.

129

 

'எனையீன்றவள்  செய்த தீ வினையால்

எனக்கீந்த இவ்வரசை ஏலேன் நானெ’ன்றான்.

'நானிலத்தில் நிகழ்ந்திட்ட இப்பாவத்தால்

நரகத்துள் போவேன் தானெ’ன்றான்.

130

 

தூய வாசகம் கூறிய தோன்றலை

ஆரத் தழுவினாள் கண்ணீர் பெருகிட.

‘மன்னர் மன்னவா’ விளித்துச் சொன்னாள்,

உன்னை நிகர்த்த தன்மையார் யாருள்ளார்?’.

131

                

                      தசரதனது உடலைக் காணுதல்

 

மண்மேல் விழுந்து தந்தையைத் தழுவினான்.

கண்ணீர் சொறிந்து அவருடலைக் கழுவினான்.

‘இறுதிக் காரியம் இயற்றுதற்கு வருக’ வென்று

பரதனை வேதியர் அழைத்ததும் வசிட்டர்,

132

 

‘மகனல்லன் நீ’யென்று மருகினார் நின் தந்தை

தேர்ந்தலன் நீ ஈமச்சடங்கினை இயற்றுதற்கு’ என்றபடி

ஆகம முறைப்படி ஆகவேண்டியதை

முற்றுவித்தார் சத்ருக்ன மகன் கொண்டு.

133

 

அரற்றினான் பரதன்

‘பிரேத பூசனை செய்விப்பதற்கும்

பேறு அற்ற பாவியாய் ஆனேனே!

அரியணை  ஏறிட மட்டும் நான்

உரிமையுள்ளவன் ஆவேனோ? அல்லேன்’அழுதான்.

134

 

தாமரை மலர்செறி தடாகத்தினுள்ளே

தாவிப் பாய்ந்திடும் மயில்களைப் போலே

அறுபதி னாயிரம் அரண்மனை தேவியர்

எரியில் புகுந்தனர் மகிழ்ச்சியினோடே!

135

                           

                              ஆறுசெல் படலம்

 

மந்திரக் கிழவர் வசிட்ட முனியுடன்,

தந்திரத் தலைவரும், நகர மாந்தரும்,

கொற்றவக் குரிசிலை சூழ அமர்ந்து,

‘நாட்டினை ஆண்டிட, முடிசூடிட அழைத்தனர்.

136

 

‘நஞ்சை உண்க’ என்றது போலே,

நடுக்கமடைந்து சோர்ந்தனன் சொன்னான்.

‘மூவுலகாளவே மூத்தவன் இருக்கையில்

ஈன்றவள் செய்தது பெரும் பிழையென்றே

137

‘நன்னெறி இது’வென உரைத்தாலும்,

மன்னுயிர் சுமந்து வாழ்தல் விரும்பேன்.

அன்னதற்குரிய அண்ணலைக் கொணர்ந்து

மண்ணினை ஆண்டிடச் செய்திடுவேன்.

138

அன்றெனின் அவனுடனே யிருந்து,

அருந்தவம் நானும் இயற்றிடுவேன்.

அதுவும் கை கூடாத நிலையென்றால்

இனிதின் என்னுயிர் போக்கிடுவே’னென்றான்.

139

 

அரியணை யேற்று சிறப்புற ஆளினும்

முடியதைத் துறந்ததை அவையோர் வியந்தனர்.

அரசினை மறுத்த பரதனை அமைச்சர்கள்

‘வாழிய நின் புகழெ’ன பாடியே வாழ்த்தினர்.

140

 

முறைப்படி வேந்தனை அழைத்திடுவேனென

நெறிப்படி முரசினை அறையச் செய்தான்.

அன்னையர் மூவர், அமைச்சர் தொடர்ந்திட,

முனைப்புடன் கிளம்பினர் பரத சத்ருக்னர்.

141

                           


 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக