செவ்வாய், 8 டிசம்பர், 2020

'HISTORY OF 'LAK TEXTILE PALACE'

 

வீட்டை சுத்தம் செய்யும் போது பரணிலிருந்த அந்த பை கண்ணில் பட்டது.. எடுத்து திறந்து பார்த்தேன். பை முழுவதும் அக்கௌன்ட்ஸ் நோட்டுகள், ஒரு விஸிட்டிங்க் கார்ட் ஹோல்டெர், பேனா போன்றவை இருந்தன. கார்ட் ஹோல்டரில் 100 கார்டுகள் இருக்கும். ஒரு பக்கம் ஆங்கிலத்தில், மறு பக்கம் தமிழில், பெயர், விலாசம், ஃபோன் நம்பர் ஈ மெயில் ஐடி, வெப் ஸைட் ஐடி போன்ற விவரங்களுடன் Lak Textile Palace  என்று கொட்டை எழுத்தில் அச்சாகி இருந்தது. இதன் லோகோவை என் பெண்தான் டிசைன் செய்தாள். அதைப் பார்த்ததும் என் நினைவோட்டம் விரியத் தொடங்கியது.

முன்னெல்லாம்… முன் என்றால் ஒரு 2,3 வருடங்களுக்கு முன் யாரை சந்தித்தாலும், அந்த விஸிட்டிங்க் கார்டை கொடுப்பது என் வழக்கம். அவர்கள் புரியாமல், என்ன… என்று கேட்பார்கள். உடனே என் புராணத்தை ஆரம்பித்துவிடுவேன். சில நேரங்கள் நானும் இவரும் வாக் போகும் போது இவருடைய நண்பர்கள் மனைவியுடன் எதிர்ப்பட்டால், உடனே என் கை துறு துறுக்கும். அவர்களின் சம்பிரதாய பேச்சு முடிந்ததும், மெதுவாக என் கார்டை நீட்டி, வீட்டிலிருந்தபடியே புடவை சூடிதார் மெட்டீரியல், நைட்டிகள், போன்றவற்றை விற்பனை செய்வதாகக் கூறுவேன். சில நேரங்கள் என் கணவருக்கு அது தர்ம சங்கடத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

“ஏன் இப்படி எல்லார்கிட்டயும் உன் பிஸினஸைப் பத்தி சொல்றதையே வழக்கமா பண்ற…” என்று கோபிப்பார்.

“அப்படித்தானே ப்ரமோட் பண்ணனும்… உங்க ஆஃபீஸ் இல்லையே அவர் உங்களின் நண்பர்தானே” என்று நானும் அவரிடம் சண்டை பிடிப்பேன்.

ஆனால் அந்த விஸிட்டிங்க் கார்டை பிரின்ட் பண்ணி எனக்கு பிரசண்ட் செய்ததே அவர்தான்.

நான் ஒரு பிஎஸ்ஸி பட்டதாரி. முதல் குழந்தை பிறந்து பள்ளிக்குப் போக ஆரம்பித்தவுடன் எம் ஏ. படித்தேன். ஹிந்தி பிரவீண், டைப் ரைட்டிங்க் ஹையர் எல்லாம் முடித்திருந்தாலும், வேலைக்குப் போகக்கூடாது என்ற கொள்கையை காலேஜ் படிக்கும் போதிலிருந்தே கொண்டிருந்தேன். குடும்பத்தை நாம்தான் பராமரிக்கவேண்டும். ஒருவரால் ஒரு வேலையைத் தான் சரியாக செய்யமுடியும் என்ற ஆணித்தரமான கருத்து எனக்கு இருந்தது. இருந்தாலும் வீட்டிலிருந்தபடியே ஹிந்தி ட்யூஷன் எடுத்துக்கொண்டிருந்தேன். இரண்டாவது குழந்தை பிறந்தது. இருவரையும் கவனிப்பதையும் பல க்ளாஸ்களுக்கு கூட்டிச்சென்று வருவதையும், போட்டிகளுக்குத் தயார் படுத்துவதையும் ஈடுபாட்டுடன் செய்துவந்தேன். பிள்ளைகள் வளர்ந்து தனித்துவமாக இயங்கத் தொடங்க… என் மனம் எதையோ தேடி அலந்தது. ஏதாவது செய்யவேண்டும்… என்ன செய்யலாம்? என்பதே என் மனத் தேடலாகிப் போனது. எதுவாக இருந்தாலும் அது பண வரவு தரக்கூடியதாக இருக்கவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன்.  

அப்போது என் உறவினர் ஒருவர் வீட்டிலிருந்தபடியே புடவை வியாபாரம் செய்து வந்தார். அவரிடம் பேச்சுக்குடுத்துப்பார்த்தேன். அவர்தான் என் பிஸினெஸின் வழிகாட்டி… எனது குரு…

“மொதல்ல இன்வெஸ்ட் பண்ணாத… என் புடவைகள் சிலதை உனக்குத் தரேன்.. உன் வட்டத்தில் முயற்சி செய்.”என்று அவர் கூறியது என் காதில் தேனாய்ப் பாய்ந்தது. அதோடு அவர், “ஒரு புடவைக்கு உனக்கு 5% தருகிறேன்” என்றது இன்னும் அதிகமாய் இனித்தது.

உடனே சுறுப்பானேன். புடவைகள் ஒன்றும் அதிக விலை கொண்டவை இல்லை. 250 லிருந்து 500 வரை இருந்தது. நோட்டில் கோடு போட்டு வாங்குபவர் பெயர், வாங்கும் தேதி, புடவையின் அடையாளம், விலை, பணம் தரும் நாள், 5% வரவு என்று எழுதிக்கொண்டேன். அதிகபட்சமாக ஒரு புடவைக்கு 25 ரூபாய் தான் எனக்கு லாபம் கிடைக்கும். அக்கம் பக்கம், நண்பர்கள், என் பிள்ளைகளின் நண்பர்களின் பெற்றோர் இப்படி எதிர்படுபவர்களிடம் எல்லாம் சொல்லத் தொடங்கினேன். அப்போது எனக்கு டூ வீலர் ஓட்டத் தெரியாது சைக்கிள் தான். சைக்கிளில் பின்னால் பெரிய பையை வைத்துக்கொண்டு பல இடங்களுக்கும் எடுத்துச் சென்று காட்டத் தொடங்கினேன். பலரும் ஆர்வத்துடன் பார்த்தனர். சிலர், “வீட்டில் இன்னும் இருக்கிறதா? வீட்டிற்கு வந்து பார்க்கிறேன்’ என்று சொன்னதுடன் அன்று மாலையே வந்ததும் எனக்குப் பெரும் உற்சாகமளித்தது. உறவினர் முன்னமே எனக்கு சொல்லியிருந்தார். “யாரும் ரெடி கேஷ் கொடுத்து வாங்க மாட்டார்கள். இன்ஸ்டால்மெண்டுதான். 3 இன்ஸ்டால்மென்ட்டில் கொடு” என்று. நானும் அவர் சொல்படி, 3 இன்ஸ்டால்மென்ட்டில் கொடுப்பதை வழக்கமாகிக்கொண்டேன்.

எந்தத் தொழிலும் சொல்வதற்கும், பேசுவதற்கும் எளிதாய் இருக்கலாம். ஆனால் ஒவ்வொரு தொழிலும் அதனதன் அளவில் சிரமமானதுதான். சிறந்த உழைப்பு, முழு ஈடுபாடு, இவை தவிர இந்த புடவை வியாபாரத்தில், முகமலர்ச்சி, முகம்சுளிக்காமை, பொறுமை, வாடிக்கையாளர்கள் சொல்லும் பல கதைகளையும் காது கொடுத்துக் கேட்டல், அவர்களுக்காகவே  நாம் நமது சரக்குகளை வாங்கியதைப் போன்ற பிரமையை ஒவ்வொருவருக்கும் ஏற்படுத்துதல், இப்படி பல தகுதிகள் தேவை என்பதை நான் போகப்போகப் புரிந்து கொண்டேன்.

கொஞ்சம் கஷ்டமான வியாபாரத்தை ஆரம்பித்துவிட்டோமோ என்று உதறல் தோன்ற ஆரம்பித்தது. ஆனாலும் தொடர்ந்து, பார்க்கும் ஒவ்வொருவரிடமும் என் பிஸினெஸ் பற்றி பரப்பிக்கொண்டே இருந்தேன். அப்போது எங்கள் ஊரின் பெரிய தொழிலதிபர் வீட்டு மருமகள் என்னிடம் 4 புடவைகள் வங்கிக்கொண்டு ரெடி கேஷ் கொடுத்துச் சென்றது புத்துணர்வு அளித்தது. அப்போது அவர் பிளவுஸ் பிட்ஸ் இருக்கா என்றதும் ‘இருக்கே’ நாளைக்குத் தரட்டுமா என்றதுடன் உறவினரை ஒரு பண்டில் பிளௌஸ் பிட்ஸ் அனுப்பச் சொல்லி, அடுத்த நாளே அவருக்கு சப்ளை செய்ததும் என் பிஸினஸ் சற்று சூடு பிடிக்க ஆரம்பித்தது.

ஒரு வருடம் அந்த உறவினருடன் சேர்ந்து தொழில் செய்ததில் எனக்குக் கிடைத்த லாபத்தை தினம் தினம் எண்ணிப் பார்த்து பூரிப்பேன். முதல் ரூ.500 ஐ என் கணவருக்கு அவரின் பிறந்த நாளன்று பரிசாகக் கொடுத்ததை இன்று நினைத்தாலும் எனக்கு சிலிர்க்கிறது.

என் முதல் தொழில் அனிவர்சரிக்கு, என் வாடிக்கையாளர்களுக்கு ஒரு சிறிய பரிசு கொடுத்து மகிழ்ந்தேன்.

ஒரு வருடத்திலேயே என் கணவருக்குப் பணி நிமித்தமாய் மாற்றல் ஏற்பட்டுவிட்டது., பழகிய, சொந்த ஊரிலேயே பிஸினெஸ் சூடிபிடிக்க இத்தனை நாளானதால், புது ஊரில் தொடருவது சிரமமாக இருக்கும் என்ற எண்ணத்தில், மனமே இன்றி அத்தனை சரக்குகளையும் உறவினருக்கு கணக்குப் பார்த்து திருப்பிக் கொடுத்துவிட்டு, புது ஊருக்கு வந்தோம்.

புது ஊரில், வீட்டுக்கு எதிரில் ஆர்ட்ஸ் காலேஜ் இருந்தது. காலேஜ் பெண்கள் வாசலோடு போய்க்கொண்டிருப்பதை பார்த்து எனக்கு மீண்டும் ஆசை துளிர்விட்டது. உறவினரிடமே மீண்டும் பேசினேன். உடனே ஒரு செட் எடுத்து வந்து கொடுத்தார். வீடு வீடாக சென்று என்னை அறிமுகப் படுத்திக்கொள்ளும் சாக்கில் என் பிஸினஸ் பற்றிதான் அதிக நேரம் பேசிவிட்டு வந்தேன்.  “நேரே கல்லூரி முதல்வரைப் பார்த்து பேசிப் பாரேன்” என்று ஆலோசனை கூறினார் என் மாமனார். அந்த ஆலோசனைதான் என் முயற்சிக்கு கிடைத்த முதல் படிக்கட்டானது. நானே எதிர்பார்க்கவில்லை முதல்வர் மிகவும் தோழமையுடன், “ரொம்ப நல்லதுமா. இப்படித்தான் ஒவ்வொரு பெண்ணும் முனையணும் நான் உங்களை ரொம்ப பாராட்டறேன். எல்லா டிபார்ட்மென்ட் ஹெச்.ஓ.டி. கிட்டயும் உங்க கார்ட கொடுத்து, அறிமுகப்படுத்திக்குங்க!” என்றதும் ‘ஜிவ்’வென்று பறப்பது போல இருந்தது. அப்போது எனக்கு விஸிட்டிங்க் கார்ட் இல்லை. உடனே கடைக்குப் போய் ஷைனிங்க் சார்ட் வாங்கி வந்து காலேஜிலேயே உட்கார்ந்து, கைப்பட விஸிட்டிங்க் கார்ட் ரெடி பண்ணி எல்லா டிபார்ட்மென்ட்லயும் குடுத்துவிட்டு வந்ததற்க்கு கைமேல பலன் கிடைத்தது. பல பேராசிரியர்கள் வீடு தேடி வந்து வாங்கத் தொடங்கியது உற்சாகத்தைக் கொடுத்தது.

ஒரு டிபார்ட்மென்டல் ஸ்டோர்ஸ் உரிமையாளரிடம் நான் கைப்பட எழுதிய கார்டைக் கொடுத்து பேசிவிட்டு வந்தேன். அன்று மதியமே அவர் காரில் என் வீட்டிற்கு வந்து 2 புடவைகள் வாங்கியது நம்பமுடியாத நிஜமானது.

மாமனார் ஆலோசனை சொல்லி உதவியது போல் என் அப்பா “நான் உன் கூட வரேன். ஹோல்சேல் கடைல நீயே கொள்முதல் செஞ்சு, வியாபாரத்தைப் பெருக்கு” என்றதுடன் ரூ.6,000க்கு புடவை மட்டுமல்லாது சூடிதார் மெட்டீரியலையும் வாங்கிக் கோடுத்தார். அதுதான் எனக்குக் கிடைத்த முதல் பண ஊக்கம் மற்றும் இரண்டாம் படிக்கட்டு. அதன் பின் என் கணவரும் இரண்டாவது சனிக்கிழமை விடுமுறை நாளானதால், அன்று என்னுடன் ஹோல்சேல் கடைக்கு வரத்துவங்கியதும், சைக்கிளில் சென்று கொண்டிருந்த எனக்கு டி.வி.எஸ் 50 ஓட்ட சொல்லிக்கொடுத்து வாங்கியும் கொடுத்தது எனக்குக் கிடைத்த மூன்றாவது படிக்கட்டானது. ஆனால் அவர் தனது அலுவலக கொலீக் அல்லது கொலீகின் மனைவியிடம் என் தொழிலை அறிமுகம் செய்ய அனுமதிக்கவில்லை. அவர்களுக்கு அது ஒரு கமிட்மென்ட் போல் ஆகிவிடும் அது போல தனக்கும் அவருக்குமிடையில் தேவையில்லாத ஒரு அணுகுமுறையை அது ஏற்படுத்திவிடும் என்பார். இதனால் எனக்கு கஸ்டமர்களைப் பிடிப்பதில் சிரமம் இருந்ததும் உண்மை.

எந்தவித விளம்பரமோ, தோதான சூழ்நிலையோ இல்லாதபோதும், ஒரு பெண் சுய தொழில் செய்வதற்கு மிகவும் முக்கியமானது உறவினர்களின் ஒத்துழைப்பும், முகம் கோணாமையும்தான். என் பல உறவினர்கள் என்னிடம் உடைகள் வாங்கி, ரெடி கேஷ் கொடுத்து ஊக்குவித்திருக்கின்றனர். என்  கணவரின் அக்கா, தங்கள் ஊரில் கிடைக்கும் முத்து செட்டுக்கள் வாங்கி எனக்குப் பரிசளித்து, அதையும் விற்பனை செய்ய முயற்சிக்கச் சொன்னது, என் சகோதரி, தங்கள் ஊரில் இருக்கும் ஹோல் சேல் கடைக்கு என்னை அழைத்துச் சென்றது மட்டுமின்றி, டாப்ஸ் வாங்கி எனக்குப் பரிசளித்து அவற்றையும் முயற்சிக்கச் சொன்னது இவற்றையெல்லாம் மறக்கவே முடியாது. 

இப்படி என் தொழில் வளர்ந்து வந்த நிலையில் சொந்த ஊருக்கே மாறுதல் கோரிய என் கணவருக்கு மாற்றல் கிடைத்துவிட்டது. என்னால்தான் சந்தோஷப்பட முடியவில்லை. எத்தனை எத்தனை பள்ளிகள், டிபார்ட்மென்டல் ஸ்டோர்ஸ் முதலாளி, தியேட்டர் முதலாளி, கல்லூரி என்று பெரும் புள்ளிகளாக வாடிக்கையாளர்களை நான் பெற்றிருந்தேன்! அத்தனையையும் விட்டுவிட்டு மீண்டும் சொந்த ஊருக்கே வந்தோம்.

புறப்படும்முன் எனக்கு ஒரு நல்ல வாடிக்கையாளரை அறிமுகப்படுத்தி அனுப்பினார் இங்கிருந்த ஒரு தோழி. “கலையை நீங்க கண்டிப்பா போய் பாருங்க. அவங்க நல்லா வாங்குவாங்க” என்று கூறியிருந்தார். சரி என்று அவர் விலாசத்தைப் பார்த்தால் அது ஊருக்கு வெளியே சற்று தொலைவில் இருந்தது. நான் சற்று அசிரித்தையாக இருந்தேன். அப்போது ஃபோன் செய்த அந்த தோழி, நலம் விசாரித்துவிட்டு, “கலையை நீங்க இன்னும் போய் பாக்கலியா?” என்று கேட்டதை எனது நான்காம் படிக்கட்டாகக் கொள்ளலாம். கலை எனக்குக் கிடைத்த நல்ல வாடிக்கையாளர் மட்டுமல்ல நல்ல தோழியாகவும் ஆகிப்போனார்.

15 நாட்களுக்கு ஒரு முறை பர்சேசுக்கு நான் போய் வருவது, பார்சலைப் பிரித்து ரக வாரியாக அடுக்குவது என்று மிகவும் பிஸியாகிப் போனேன். ஒரு பீரோ இரண்டாகி, மூன்றாகி, நான்காகி, வீட்டின் ஒரு அறையை என் வியாபரத்திற்காக ஒதுக்கும்படி என் தொழில் வளர்ச்சி பெற்றிருந்தது. கல்யாணத்திற்காக, சேலம் வரை சென்ற நானும் என் கணவரும், அங்கிருந்து ‘இளம்பிள்ளை’ என்ற ஊர் வரை சென்று புடவை வாங்கினோம். ஈரோடு, கோயமுத்தூர், ஹைதராபாத் என்று பல ஊர்களிலிருந்து புடவை, சூடிதார் மெட்டீரியல், டிசைன் பிளவுஸ் பிட், நைட்டி, லெகின், டாப்ஸ், முத்து செட், போன்றவற்றை வாங்கி வந்தோம்.

இப்பொழுது இங்கே எனக்கு பல வாடிக்கையாளர்கள் தோழிகளாகிவிட்டனர். அப்பொதுதான் என் கணவர் என் பெயரில் விஸிட்டிங் கார்ட் அச்சடித்து பரிசளித்தார். அதற்கான டிஸைன் மற்றும் லோகோ வை வடிவமத்துக் கொடுத்தாள் என் இளைய பெண். அன்று முதல் கார்டை கையால் எழுதும் வேலை மிச்சம் ஆயிற்று.

ஒவ்வொரு முறையும் என் லாபத்திலிருந்து, அப்பா, அம்மா, மாமனார், மாமியார், மகள்களுக்கு ரூ.500 பரிசளிப்பதை பெருமையாக உணர்ந்தேன். வீட்டிற்கு வரும் உறவினர்களுக்கு கண்டிப்பாக ஒரு புடவை பரிசளிப்பதை வழக்கமாகக் கொண்டேன். இதெல்லாம் எனக்கு பெருமகிழ்ச்சியை அளித்தது. எங்கள் வீட்டு பல மங்கல நிகழ்ச்சிகளுக்கு உறவினர்களுக்குப் புடவை பரிசளிக்க என் பேலஸ் புடவைகளை என்னால் கொடுக்கமுடிந்ததும் எனக்குக் கிடைத்த லாபமாகக் கருதுகிறேன். என் மகள்களுக்கு தங்க நாணயங்கள் வாங்கும் போது என் பங்கு என்று பெருமையுடனும் பூரிப்புடனும் ஒரு தொகையைக் கொடுப்பதையும் வழக்கமாகக் கொண்டிருந்தேன்.

ஒரு வியாபாரம் என்பது இப்படியே நேர் கோட்டில் சென்று கொண்டிருக்குமா என்ன..? எத்தனை சருக்கல்கள்…. எத்தனை வருத்தங்கள்…!

இன்ஸ்டால்மென்ட்டில்தான் நான் புடவை தருகிறேன் என்று தெரிந்தும், சிலர் பணமே எடுத்துவராமல் வாங்க வருவார்கள். அத்தனை புடவைகளையும் பிரித்து, தலைப்பு, ப்ளவுஸ் என்று, விரித்து, விவரித்துக் காட்டினால் ரெண்டு புடவைகளை எடுத்துக்கொண்டு கொஞ்ச கொஞ்சமா பணம் குடுத்துடறேன் என்பர்.

‘ஏதாவது கையில் இருக்கறத இப்ப குடுங்க… மூணு இன்ஸ்டால்மென்ட்ல முடிச்சுக்குடுங்க’ என்று சொல்லி முடிப்பதற்குள் எனக்கு நான் ஏதோ தவறு செய்துவிட்டதைப் போல வியர்த்துக் கொட்ட ஆரம்பித்துவிடும்.  

சிலர் அத்தனை புடவைகளையும் பார்த்துவிட்டு, ‘இந்த புடவை நீலக்கலர்ல இருக்கா? எனக்கு நீலம்தான் வேணும்’ என்று கூறி சென்றுவிடுவர். கோபப்படாமல் அடுத்தமுறை எடுத்து வருவதாகக் கூறவேண்டும்.

விலையைக் குறைக்க சொல்வர். இதே புடவை அந்த கடைல கம்மி விலைல கிடைக்கறதா சொல்வர். 3 இன்ஸ்டால்மென்ட்ல தரவே மாட்டார். நாம் ஏதோ கடன் வாங்கியவர்கள் மாதிரி அவர்கள் எதிரில் நிற்கவேண்டும்.

பல வித்தியாசமான சேலஞ்ச்களையும் நான் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. ஒருமுறை, ஒருவர் வந்து தன் பெண்ணிற்கு என்று ஒரு டாப்ஸ் வாங்கிக்கொண்டு மாலையில் மனைவியை அனுப்புவதாகக் கூறிச் சென்றார். மாலையில் மனைவியும் வந்தார். அவர் புடவையைப் பார்த்தார். பின் “ஓ.. லெகின் டாப்ஸெல்லாம் கூட வச்சிருக்கீங்களா?” என்றார். நான் ஒரு அப்பாவி. வெளி உலகம் புரியாதவள். “இருக்கே… காலைல உங்க ஹஸ்பெண்ட் ஒண்ணு வாங்கினாரே!” என்று சொல்லிவிட்டேன். ‘சடார்’என நிமிர்ந்த அவர், “எவ்வளவு வாங்கினார்? என்னென்னெல்லாம் வாங்கினார்? எவ்வளவு பணம் கொடுத்தார்?” என்று கேட்டதும் வெலவெலத்துப் போய்விட்டேன். “ஏங்க…. ஒரு டாப்ஸ்தான் வாங்கினார்” என்றேன். “எப்போ வந்தார்? யாரோட வந்தார்?” என்றெல்லாம் அவர் கேட்டதும் விழித்துக்கொண்டேன். ரெண்டு குடும்பக்காரர் போலிருக்கிறது. ‘இங்க பாருங்கம்மா… நான் ஜவுளி வியாபாரம் பண்றேன். அவ்வளவுதான். உங்க குடும்ப சண்டையெல்லாம் வீட்டிலயே வச்சுக்கங்க… இங்க வந்தெல்லாம் கேக்கக்கூடாது” என்று சொல்லி அவரை அனுப்புவதற்குள் திண்டாடித்தான் போனேன்.

அதே போல் என்னைவிட வயதில் சிறிய, நகைக்கடை முதலாளி ஒருவர், வாரம் ஒருமுறை வீட்டிற்கு வந்து 2, 3 புடவைகள் வாங்கி ரெடி கேஷ் கொடுத்துச் சென்றுவிடுவார். போனவாரம் வந்தபோது பார்த்த சரக்குககள்தான் இருக்கும், இருந்தாலும் வாங்குவார். இது எனக்கு சற்று பிடிக்காத நிகழ்வாக இருந்தது. பிஸினெஸ் என்றால் எல்லவற்றையும் எதிர்கொள்ளத்தான் வேண்டும் என்று எண்ணிக்கொள்வேன்.

பல பெரிய பணக்கார வீட்டு, படித்த பெண்மணிகள் எல்லாம் கூட, தன் கணவருக்குத் தெரியாமல் புடவை வாங்கி, சிறுக சிறுக எனக்குப் பணம் கொடுத்ததும் எனக்குப் பிடிக்காத ஒரு விஷயம்தான். கணவர் இருக்கும்போது நான் அவர்கள் வீட்டிற்குப் போனால் அவர்களின் சுபாவமே மாறி இருப்பதைப் பார்க்க எனக்கு ஆச்சர்யமாக இருக்கும். அவர்கள் பீரோவை நிரப்பிக்கொள்ள என்னை ஒரு கருவியாகப் பயன்படுத்துகின்றனரே என்று சற்று வருத்தமாக இருக்கும்.

பல நேரங்கள் ‘வேண்டாம் இந்த பிஸினெஸே!’ என்று நான் ஒருவித மன உளைச்சலுக்குச் செல்லும் போது, அன்றுதான் நீண்ட நாட்களாக வராத பணம் வந்து சேரும், யாராவது புது வாடிக்கையாளரோ, பழையவரோ வந்து பர்சேஸ் செய்வர். என் மன அழுத்தத்திற்கு அது சிறந்த மருந்தாகி, உற்சாகப்படுத்தும். 

ஒரு முறை என் தோழி ஒருவருக்காக அவர் வீட்டிற்குப் புடவைகள் எடுத்துக் காட்டும்போது, அவர்கள் வீட்டு வேலைக்காரம்மா ஒரு புடவை எடுத்துவிட்டு, பணமே தராமல் பல மாதங்கள் இழுக்கடித்து விட்டார். என் தோழி வீட்டு வேலையையும் விட்டுவிட்டார். அப்படியும் அவர் வீட்டைக் கண்டுபிடித்து போய் கேட்டேன். இருந்தும் என்னால் முழு தொகையையும் அவரிடமிருந்து வாங்க முடியவில்லை.

வீட்டின் எதிரிலிருந்த ஸ்கூல் ப்யூன் வந்து 2 புடவைகள் எடுத்துக்கொண்டு, ஒத்தை பைசா கூட தராமல் இருந்தார். ஸ்கூல் டீச்சரிடம் சொல்லி அவரின் மனைவியிடம் பேச அவரோ, “இப்படித்தாம்மா பண்றாரு” என்று கூறி முடித்துக்கொண்டு விட்டார்.

அதே போல் ஒரு பெண்மணி புடவையும், மெட்டீரியலும் வாங்கிக்கொண்டு வீடு காலி செய்து மாறிப் போய்விட்டார். என்ன செய்வது என்று தெரியாமல் இருந்தேன். அப்போது ஒரு நாள் அவரின் உறவினரின் வீட்டில் அவரைப் பார்த்துவிட்டு நேரே அங்கே போய்விட்டேன். போனது தவறாக இருக்கலாம். ஆனால் பணத்தைப் பற்றியே நான் பேசவில்லை. ஆனாலும் பணம் தராமலேயே சென்றதற்கு வருத்தம் தெரிவிக்காத அவர் அந்த இடத்திற்கு நான் வந்ததற்கு முகம் சுளித்தார். தீயால் சுட்டது போல் இருந்தது எனக்கு.  என்ன செய்வது இவற்றையெல்லாம் என்று தெரியாமல் மண்டை வெடித்தது.

பல தொழிலதிபர்களும், பெரும் பொறுப்பில் இருப்பவர்களும், ‘நான் “பிஸினெஸ்’ செய்கிறேன்’ என்று கூறினாலே ஒரு மதிப்போடு என்னைப் பார்த்ததை நான் உணர்ந்தேன். ஒருவித தன்னம்பிக்கையை அது எனக்குக் கொடுத்தது. கண்டிப்பாக சாதித்துவிட வேண்டும் என்று என்னை உற்சாகப்படுத்தும்.

அதே நேரம் எங்கள் ஊர் டாக்டர் ஒருவர், “உங்களை நான் வாச் பண்ணிட்டே இருக்கேன். வெரி என்டெர்ப்ரெஸிங் அண்ட் ஸ்டுடியஸ்” என்று கூறி, தான் விரும்பும் புடவை ரகங்களை எனக்கு உள்ளிருந்து எடுத்து வந்து கண்பித்து, அதுபோல் இருந்தால் தாம் எடுத்துக்கொள்வதாகக் கூறியதுடன் வாங்கவும் செய்தார். நானும் தேடிபிடித்து அவருக்கு ஏற்ற ரகங்களை வாங்கிவர மிகவும் பிரயத்தனப்படுவேன்.  மற்றொரு டாக்டரும் வீடு தேடி வந்து பர்சேஸ் செய்வார். இவை எனக்குப் பெருமையாக இருக்கும்.

ஒரு பள்ளித் தாளாளர் என் படிப்பைப் பற்றி விசாரித்தபோது M.A. ஆங்கிலம் என்றதும், தங்கள் பள்ளிக்கு ஆசிரியையாக எனக்கு அழைப்பு விடுத்தார். “மன்னிக்கவும் ஐயா.. இந்த சொந்த தொழில் செய்வது எனக்குப் பிடித்திருக்கிறது” என்று சொல்லிவிட்டு வந்தேன்.

என்னிடம் புடவை வாங்குவதில் ஒரு சௌகர்யம் உண்டு. நான் அவர்கள் இத்தனை நாள் என்னிடம் வாங்கியதை நினைவில் வைத்துக்கொள்வேன். “போன தடவைதானே இதே பச்சை வாங்கினீங்க.. பரவாயில்லையா? என்று குறிப்பிடுவேன். அவர்களே மறந்திருப்பர். “ஆமா… ஆமா… நல்லவேளை” என்பர். அவர்கள் வேறு யாருக்காவது வாங்க வந்தால் “என்ன நிகழ்ச்சி? எந்த வயதினருக்குப் பரிசு” என்பதைப் புரிந்துகொண்டு எடுத்துக்காண்பிப்பேன்.

என் வாடிக்கையாளர்களில் ஒரு பெண் மிகவும் குண்டாகவும், ஒரு பெண் மிகவும் ஒல்லியாகவும் இருப்பர்.  இருவருக்கும் அவர்கள் அம்மா அப்படி தேடி டிரஸ் வாங்க முயற்சிப்பாரோ என்னவோ… நான் எங்கு வாங்கினாலும் அவர்கள் இரண்டு பேருக்கும் சரியான அளவில் இருக்கிறதா என்று கணக்கிட்டு வாங்குவேன். அந்த இரண்டு பெண்களின் அம்மாக்களும் எனக்கு நல்ல தோழிகளாயினர். என் வாடிக்கையாளர்களின் ரசனை எனக்கு அத்துபடி. அவர்களுக்கான ஒரு முந்தைய செலக்ஷனை நான் செய்துவிடுவதால் அவர்களுக்கு வேலை எளிதாகும். நான் எடுத்துச் சென்று காண்பிக்கையில் அவர்கள் வேறு ஏதாவது இருக்கிறதா என்றால் உடனே மீண்டும் வீட்டிற்கு வந்து அத்தனையையும் அப்படியே வைத்துவிட்டு, அவர்களைக் காக்க வைக்காமல் தேவையானதை மீண்டும் எடுத்துச் சென்று காண்பிப்பேன். அப்படியும் வாங்காமல் விட்டவர்களும் உண்டு.

இத்தனை காலமும் வேறு நபர்களை வேலைக்கு வைத்துக்கொள்ளாமல், குடும்பத்தையும் நடத்திக்கொண்டு, செய்ததை இன்று நினைத்தால் சற்று மலைப்பாகத்தான் இருக்கிறது. ஐந்து வருடங்கள் இப்படி சென்று கொண்டிருந்த என் தொழிற் பயணத்தில் மீண்டும் ஒரு இடையூறு ஏற்பட்டது. ப்ரமோஷன் கிடைத்த என் கணவருக்கு மீண்டும் அந்த பழைய ஊருக்கே மாற்றலானது மகிழ்வைத் தந்தது. மீண்டும் பிரியா விடை பெற்று, இந்த ஊருக்கு வந்தோம். 5 வருடத்தில் நிறைய மாற்றங்கள். ஆனாலும் என் மாமி ஒருவர், அந்த ஊரில் இருக்கும் ஒரு தொழிலதிபர் மனைவி தனக்குத் தோழியென்றும் அவரை சென்று பார்க்க அறிவுறுத்தினார். நானும் சென்று பார்க்க அவர் வீடு தேடி வந்து புடவைகள் எடுத்துக்கொண்டதுடன், வரவிருக்கும் புரட்டசி மாதம் அவர்களின் பணியாளர்களுக்கு ஒரு 30 புடவைகள் தேவைப்படும். வாங்கித்தரமுடியுமா என்றதும் எனக்குக் கிடைத்த  அதிஷ்ட்டம்தான். உடனே ஹோல்சேல் கடைக்குச் சென்று அங்கிருந்து, வாட்ஸ் ஆப்பில் அவருக்கு புடவைகளைக் காட்டி அவரை விட்டே தேர்ந்தெடுக்கச் செய்து அடுத்த நாளே தருவித்துக் கொடுத்தேன்.

அப்போதுதான் என் பெண்கள் இருவரும் எனக்கு XL ஷீட்டில் அக்கௌன்ட்கள் எழுத சொல்லிக்கொடுத்தனர். “எவ்வளவு சமத்துடா இந்த க்ம்ப்யூட்டர்’ என்று புகழ்ந்தபடி என்ட்ரி செய்வேன். ஃபேஸ் புக்கில் ஒரு பேஜ் உருவாக்கி அதற்கான முகப்புப்படங்களை சேர்த்தனர். இருவருமாக ஒரு கடைக்குப் போய் ஜவுளிக்கடை பொம்மை (மேனுக்யுன்) எங்கு கிடைக்கும் என்று கேட்க, அவர் தங்கள் கடை பொம்மையையே எடுத்துக் கொடுத்தது ஒரு ஆச்சர்யம்தான். அந்த பொம்மைக்கு டாப்ஸ் போட்டு, புகைப்படம் எடுத்து ஃபேஸ்புக் பேஜில் போட்டனர். நிறைய லைக்குகளும், கமெண்ட்களும் வரத் துவங்கின. அந்த பேஜைப் பார்த்த வெப் சைட் உருவாக்கும் கம்பெனியிடமிருந்து ஆன்லைன் பிஸினெஸ் செய்யும்படி அழைப்புவந்தது. துணிந்து இறங்கிவிட்டோம். அவர்கள் ஒரு கொரியர் கம்பெனியுடன் எங்கள் பேலஸை இணைத்துவிட்டனர். ஆர்டர்கள் குவியத் தொடங்கின. ஆர்டர் வந்ததும் எனக்கும், கொரியர் கம்பெனிக்கும் ஒரு மெயில் வந்துவிடும். நானே கொரியர் கவர் வாங்கி வந்து பேக் செய்வேன். அந்த கொரியர் கம்பெனிக்கு நான் மெயில் அனுப்ப அடுத்த நாள் கலெக்ட் செய்து கொண்டு செல்வர். என் அக்கௌன்ட்டில் கஸ்டமர்கள் செலுத்தும் தொகை சேர்ந்துவிடும். கேஷ் ஆன் டெலிவெரியும் உண்டு. அப்பொழுதும் நான் வேறு ஆள் வைத்துக்கொள்ளவில்லை.

இந்நிலையில் என் இளைய சகோதரி, என்னைப்பற்றியும், நான் செய்யும் பிஸினெஸ் பற்றியும் ஒரு ஆர்டிக்கிள் எழுதி அது ஒரு ஆங்கில நாளிதழில் ப்ரசுரம் ஆனது.  

எனது வெப் சைட் கம்பெனி என்னை பேட்டி கண்டு நானும் என் மகளும் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டது.

இப்படியாக ஒரு வருடம் சென்றது. இந்நிலையில் என் குடும்ப சூழ்நிலை பிஸினெஸில் நான் ஈடுபட முடியாமல் செய்தது. வயதான மாமியாரை நான் கவனித்துக் கொள்ளும் நிலைமை ஏற்பட்டது. என் மகளின் திருமணம், இளைய மகளின் கல்லூரிப் படிப்பு இப்படியாக என் தேவை வேறுவிதமாகத் திரும்பியது. என்னதான் பிஸினெஸெல்லாம் வெற்றிகரமாக செய்தாலும், குடும்பம்தான் எனக்கு முக்கியமாகப்பட்டது. பெரிய பதவியில் என் கணவர் இருந்ததால் பொருளாதாரப் பிரச்சனை ஏதும் இல்லாத போதும், என் காலில் என்னாலும் தனியாக நிற்க முடியும் என்று நிரூபித்துவிட்டதைப் போன்ற பெருமிதம் எனக்கு ஏற்பட்டுவிட்டது.

நல்ல நிலையில், வெற்றிப்படிக்கட்டைத் தொட்டுவிட்டதாக உணரும் அந்த நேரத்தல், என் பிஸினெஸை முடித்துக்கொள்வதாக திடமாக முடிவெடுத்தேன்.  என்னிடமிருந்த சரக்குகளையெல்லாம் என் வழிகாட்டி, என் தொழில் குருவான அந்த உறவினருக்கே அன்பளிப்பாகக் கொடுத்தேன். ஒரு சிறிய புள்ளியில் தொடங்கிய எனது தொழில் பயணம், மீண்டும் அதே புள்ளியில் வந்து சேர்ந்ததை ஒரு முழுமையான – வெற்றிகரமான வட்டமாக நான் உணர்கிறேன்.

முனையுங்கள் தோழிகளே! நம்மாலும் எல்லாத் துறையிலும் சாதிக்கமுடியும்.

(பி.கு) நான் தொழிலை விட்டு விலகிய அதே நேரம், ‘தியாக பிரும்ம சபை’ ஒன்றுடன் எனக்கு தொடர்பு ஏற்பட்டது. எனக்கு எழுதுவதிலும், பேசுவதிலும் கூட ஈடுபாடு உண்டு. இப்போது, அந்த சபையின் எக்ஸிக்யூட்டிவ் கமிட்டி மெம்பராகி, மாதம் ஒருமுறை சொற்பொழிவுகளாற்றி வருவதை பெருமையுடன் கூறிக்கொள்கிறேன்.  

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக