
இந்த சண்டே எப்படி செலிபரேட் பண்ணலாம்..? கேட்டாள் என் சின்னப்பெண்.
ஒவ்வொரு வாரமும் ஞாயிறன்று ஏதாவது புதுமையாக செய்யவேண்டும் என் இரண்டு மகள்களுக்கும், கணவருக்கும். இவர்களுக்கு அன்று ஹாலிடே! ஆனால் எனக்கு அன்று ஓவர்டைம்.
ஒரு வாரம் பிக்னிக் போனோம். ஒரு வாரம் அவர்கள் மூவரும் சமைப்பதாகக் கூறி, சமையலறையைப் போர்க்களம் ஆக்கினார்கள். ஒரு வாரம் கோவிலுக்கு சென்றோம். ஒரு வாரம் லஞ்சுக்கு ஆர்டர் செய்து டீவி பார்த்துக்கொண்டே நால்வரும் சேர்ந்து சாப்பிட்டோம்.
இந்த வாரம் என்ன செய்யலாம்? யோசித்துக்கொண்டிருக்கையில் பொறி தட்டியது போல் அந்த ஐடியா தோன்றியது. கணவரிடம் நான் கூற, அவருக்கும் பிடித்துப் போனதால் மகள்களுடன் குஷியாக கொல்லைப்புறத்திற்குப் போனார்.
கொல்லையில் இரண்டு தென்னை மரங்கள் மட்டுமே உள்ளன. மீதி 10"10 இடம் சும்மா தான் இருந்தது. ரமாவுக்கும், சுமாவுக்கும் உற்சாகம் கரைபுரண்டு ஓடியது. முதலில், மண்ணில் கிடந்த கற்கள், பிளாஸ்டிக் கவர்கள், மட்டை இவற்றை அப்புறப்படுத்தினோம்.
ரமா வாளியில் நீர் கொண்டு வந்து தெளிக்க - சுமா உள்ளே இருந்து மண் வெட்டி கொண்டு வந்து அப்பாவிடம் கொடுத்தாள். அவர் சூரியஒளி நன்கு விழும் இடங்க்ளில் பாத்தி வெட்ட - அதற்குள் நான் வீட்டிலிருந்த மிளகாய் விதை, கீரை விதை, வெண்டை, கத்தரி, அவரை போன்ற விதைகளை எடுத்து வந்தேன். ரமாவுக்கும், சுமாவுக்கும் கொண்டாட்டம் தாங்க முடியவில்லை.
முதலில், கீரையைத் தூவச் சொன்னேன். அதற்கு அருகில் இருந்த பாத்தியில், வெண்டையையும், அதற்கு அடுத்து கத்திரியையும், சிறு குழி செயது அதில் விதைகளை போட்டு மூடச் சொன்னேன். அவரையை பந்தலமைக்க ஏதுவான இடத்தில் ஊன்றினோம். அதற்கு அருகில் இருந்த சதுரத்தில் மிளகாயைத் தூவினோம்.
மீண்டும் நீர் எடுத்து வந்து எல்லா விதைகளிலும் படுமாறு தெளிக்கச் சொன்னேன்.
இதற்குள் மணி 11 ஆகியிருந்தது. பசிவேறு வந்துவிட்டது. டிபனோ, சமையலோ செயது சாப்பிடும்வரை பொறுமையில்லை. பழைய சாதம் இருந்தது அதில் சீரகத்தைக் கசக்கிப் போட்டு,சின்ன வெங்காயத்தையும், பச்சை மிளகாயையும், பொடியாக நறுக்கிப் போட்டு., தயிரையும், உப்பையும் போட்டு நன்கு தளர பிசைந்து நான் தோட்டத்திற்கு எடுத்து வந்தேன். அதற்குள் கை கழுவி விட்டு வந்த மூவரும் கையை நீட்ட, நான் ஒவ்வொருவர் கையிலும், ஒரு ஸ்பூன் சாதத்தை வைக்க..... அடடா.....அமிர்தமாக இருந்தது பழைய சோறு.
இன்றைய ஞாயிறு இப்படிக் கழிய.... இனி எல்லா ஞாயிறும் களையெடுத்தல், நீர்பாய்ச்சுதல், நீராகாரம் உண்ணுதல் என்று கொண்டாடுவோம் என்ற தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.
Great...Super write up, Lakshmi.
பதிலளிநீக்குGreat...Super write up, Lakshmi.
பதிலளிநீக்கு