வியாழன், 28 ஏப்ரல், 2016

நிலவிற்கொரு வேண்டுகோள்.- வரதட்சணைக் கொடுமை


நிலவிற்கொரு வேண்டுகோள்.- வரதட்சணைக் கொடுமை


வெண்ணிலவே...!
ஆடவர் எவருமின்றித்
தோழியர் குழாமிடத்
தனித்திருக்கும் உனக்கு
மணாளன் வேண்டுமெனில் - நீ
மண்ணுக்குத்தான் வரவேண்டும்.
எனவேதான்  நான்
உனக்கொரு கதை சொல்லவந்தேன்.
கவிபாட வந்தேனில்லை...

ஆடுகளே மேய்ப்பான்களாகும்
அவலத்தை சொல்லி
அறிவுறுத்த வந்தேன்..

விலை கொடுத்து வாங்கிய
பொருளொன்று
வாங்கியவரை விரட்டும்
விவரத்தை உன்னிடம்
விளக்க வந்தேன்.
வேண்டுகோள் ஒன்று
விடுக்க வந்தேன்!

தாலிகட்ட கூலியாம்
தன்னையே தருபவளுக்கு
கூலி தந்து குழந்தைபெறும்
இதற்குப் பெயர்
குடும்ப விளக்காம்.
சீசீ....
இதுவும் ஒரு
'சிவப்பு விளக்குதான்'

வேடிக்கை என்னவென்றால்
விலை கொடுத்து வாங்கியும்
விடுதலை எமக்கில்லை
விலங்குதான்!
வேதனைதான்!

இங்கு
எந்த வண்டும்
மலரின் மணம் பார்ப்பதில்லை
பணம் பார்க்கிறது...

மனதின் நிறம் பார்ப்பதில்லை
தேனின் ருசி பார்க்கிறது.

அன்பின் சுடர் பார்ப்பதில்லை
அற்பப் பொருள் பார்க்கிறது.

எனவேதான் நிலவே !
உனக்கொரு வேண்டுகோள்!
தட்சணை எதுவுமின்றி
தனதாக்கிக்கொள்ளும்
மணாளன் வந்தால் மட்டும்
மடல் அனுப்பு!
மனமாற வாழ்த்துகிறேன்!
இல்லையேல்
கன்னிகளாகவே இருப்போம்
நாமிருவரும் காலம் முழுதும்.!


Image result for free image of an independent girl


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக